முதலில் எடுக்கப்படாமல் இருந்து அடுத்த அழைப்பில் தான் மகேஷ்வரி எடுத்தார்.
திரையில் அவர் முகம் கோபத்தை காட்டிக்கொண்டிருந்தது. பின்னணியில் எழில்மணி என்னவோ கத்திக்கொண்டிருந்தார்.
“கங்கிராட்ஸ் மது…” என மகேஷ்வரி மகளின் முகம் கண்டு சந்தோஷமாக சொல்ல,
“நான் என்ன சொல்லிட்டிருக்கேன். நீ என்ன பன்ற மகேஷ்?…” என ஆவேசத்துடன் வந்தார் எழில்மணி.
வந்தவர் மனைவியின் கையிலிருந்த போனை வேகமாய் பிடுங்கி மகளை பார்க்க பார்த்தவர் மகளின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியில் அப்படியே இருந்துவிட்டார்.
“சொல்லுங்கப்பா…” என மதுராவும் கேட்க என்ன பேசுவது என்று தெரியாமல் தடுமாறினார்.
“உங்க மாப்பிள்ளை சொன்னது உங்களுக்கு ஓகே தானே? ஐ மீன், அந்த டேட்…” என கேட்டவள்,
“எனக்கு ரொம்ப சந்தோஷம். அதுவும் இந்த திருவிழா இதை நான் இங்க இருந்து நேரடியா பார்த்ததில்லை. இந்த வருஷம் நல்லா என்ஜாய் பண்ண போறேன். நீங்களும் டைமிருந்தா வாங்கப்பா…” என்றாள் மதுரா.
“எப்படி தான் இத்தனை வருஷம் இதை எல்லாம் மிஸ் பண்ணுனீங்கன்னு தெரியலை. உள்ள வரும் போதே ஒரு பாசிட்டிவ் வைப். ஐ லவ்ட் இட்…” என்றவள்,
“ஆனா இனி வருஷ வருஷம் இங்க வந்து தான் ஆகனும் நீங்க. நான் இங்க தானே இருப்பேன்…” என சொல்ல மகேஷ்வரி எழில்மணி முகத்தை தான் பார்த்தார்.
மகளுக்கு பதில் பேச முடியாமல், அழுத்தமாய் தன் மறுப்பை தெரிவிக்க முடியாமல் அவர் அமர்ந்திருந்த விதம் ஒருபக்கம் பரிதாபமாக இருந்தது.
மறுபக்கம் இதென்ன இத்தனை வறட்டு பிடிவாதம்? தான் சொல்லியதை தான் கேட்க வேண்டும் என்று என தோன்ற ஒன்றும் பேசவில்லை மகேஷ்வரி.
எழில்மணி வாங்கிய போனை மனைவியிடம் தந்துவிட்டு எழுந்து நகர்ந்து நின்றுவிட்டார்.
“என்னம்மா? என்னாச்சு?…” என மதுரா கேட்க,
“ஒண்ணுமில்லைடா. நீ சொல்லு. உனக்கு எல்லாம் க்ளியரா? மாப்பிள்ளை என்ன சொன்னார்?…” என மகேஷ்வரி அந்த பேச்சிற்கு தாவ,
“எல்லாமே ஓகே. நாளைக்கு பாட்டியும், அத்தையும் வராங்களாம் பேசறதுக்கு…” என புன்னகையுடன் சொல்ல,
“கல்யாண களை வந்திருச்சே என் பொண்ணுக்கு…” என சிரிக்க,
“ஆத்தீ இதத்தேம் கேட்டேம்த்தா. மவராசியா இருப்ப, இந்த சிரிப்பு என்னிக்கும் நெலச்சி நிக்கனும்…” என்ற நாயகி,
“ம்மா, நீங்க வரீங்களா? இங்க பாட்டி மட்டும் தான் இருக்காங்க. வாங்களேன்…” என மதுரா அழைக்கவும்,
“இன்னைக்கே ஈவ்னிங் ப்ளைட், இல்லைன்னா நைட் ப்ளைட் புடிச்சு வந்திடுவோம்டா…” என்றார் மகேஷ்வரி.
மேலும் பேசிவிட்டு போனை வைத்தவர் எழில்மணியை பார்க்க அவர் அமைதியாக இருந்தார்.
“வாழ போறவ எவ்வளோ சந்தோஷமா இருக்கா. நம்ம வாழ்த்தலைன்னா எப்படி? பெத்தவங்க நாம தான் பிள்ளைங்க ஆசையை நிறைவேத்தனும்…” என சொல்லியவர்,
“கோபமா வர சொல்ல தானே போனை வாங்கினீங்க? ஏன் எதுவும் சொல்லலை? மதுவோட முகத்தை பார்த்து திகைச்சுட்டீங்க. அந்த சந்தோஷம் தானே உங்களை பேச விடாம செஞ்சது. அவ விருப்பப்படி இருக்கட்டுமே?…” என்றார்.
என்னவோ செய்துகொள் என்பதை போல கையசைத்துவிட்டு எழுந்து உள்ளே சென்றுவிட்டார்.
மகேஷ்வரி அப்போதே டிக்கெட் உள்ளதா என பார்த்து பதிவு செய்துவிட்டார் கணவருக்கும், தனக்கும். அத்தனை சந்தோஷம் மனதெல்லாம்.
மதுராவிற்காக பட்டுப்புடவை, சில நகைகள் என எல்லாம் உடனடியாக எடுத்து வைத்துக்கொண்டார்.
நாளை பெண் பார்ப்பதாக இருந்தால் நிச்சயம் வரை அங்கே தான் மதுரா இருப்பதனால், இன்னும் சில உடைகளும், நகைகளும் என்று எடுத்துவைத்துக்கொண்டார்.
மனதிற்குள் திருமணத்திற்கு மகளுக்கு நகைகள் எடுக்கவேண்டுமே என ஒருபக்கம் யோசனைகள் ஓட அதனையும் சிந்தித்தபடி வேலைகளை கவனித்தார்.
நாயகி பாட்டி விஷயத்தை காந்திமதிக்கு போனை போட்டு சொல்ல அங்கே ஆனந்த கூத்தாட்டம் தான்.
“எங்க எம்பேத்திய காமி…” என பார்த்து பார்த்து அவர் சிரிக்க மதுராவிற்கு காந்திமதியின் வெக்கத்தில் சிரிப்பு வந்தது.
“பாட்டி நான் தான் வெக்கப்படனும்…” என மதுரா கிண்டலடிக்க,
“ஆமாத்தா. எங்க வெக்கப்படு?…” என கேட்டார் அவர்.
“அதை உங்க பேரன்கிட்ட பட்டுக்கறேன்…” என சில நிமிடம் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தாள்.
பேசி முடித்து வைக்கவும் நாயகி பாட்டி பேத்தியை அருகே அமர வைத்து வாஞ்சையுடன் வருடியவர்,
“என்ன பாட்டி நீங்க?…” என மதுரா அவரின் கண்ணீரை துடைத்தாள்.
“இங்காருத்தா அந்த புள்ள படிக்கலன்னு சொல்லி எம்புட்டு பேச்சு பேசி ஒங்கப்பன் கலியாணத்த வேணாமின்னான் தெரியுமா? அன்னிக்கு ஒருவாக்கஞ்சி எறங்கல எ தொண்டக்குழியில….” என விசும்பியவர்,
“பத்து படிக்க முன்னவே அப்பன எழந்துட்டு நின்னுச்சு அந்த குடும்பம். என்னதேன் அவக ரெண்டு பொம்பளைங்களும் கவனிச்சிக்கிட்டாலும் அந்த புள்ள நா இருக்கேமின்னு சோலிய பாக்க முன்ன வந்துச்சு. அன்னிலருந்து இன்னிக்கு வரைக்கு ஒத்த சொல்லு கொற சொல்ல முடியாது…”
“ஆனா அந்த புள்ளைய பாத்து ஒங்கப்பேன் பேசின பேச்சு என்னாலேயே சீரணிக்க முடியலத்தா. இப்ப எல்லாத்துக்கும் சேத்து எம்மனச குளிர வெச்சிட்ட…” என்று சொல்லி சொல்லி பேத்தியை கொண்டாடினார் நாயகி.
————————————
காந்திமதி ஒரு இடத்தில் நிற்காமல் இங்குமங்கும் நடப்பதும், வாசலை பார்ப்பதுமாகவே இருந்தார்.
விஷயம் கேள்விப்பட்டதில் இருந்தே ஒரே பரபரப்பு தான் அவருக்கு. பேரனை தேடி வழிமேல் விழி வைத்திருந்தார்.
இன்னும் பாண்டியன் வீட்டுக்கு வந்து திருமணம் குறித்து எதுவும் பேசியிருக்கவில்லை.
மதுராவின் வீட்டில் இருந்து நாயகி பாட்டி தான் அழைத்து இதனை பற்றி பேசியிருந்தனர்.
கேட்டதில் இருந்து அத்தனை சந்தோஷம். எப்போதடா பேரன் வீட்டுக்கு வருவான், இதை பேசுவான் என்றிருக்க மதிய உணவிற்கு கூட பாண்டியன் வீடு வந்திருக்கவில்லை.
“மெல்லத்தேன் சொல்லட்டுமேத்தே. என்னத்துக்கு போட்டு அனத்திட்டே கெடக்கீக?…” என சிரித்துக்கொண்டே கேட்டுவிட்டார்.
“ம்க்கும், அனத்தாம? நல்லகாரியத்த சூட்டோட சூட்டா பேச வேணாமா? அவேன் அந்த ஆக்க பொறுக்காதவேன் வேற வேலைமெனக்கெட்டு இத்த ஆவாதுன்னு நிக்கியானாம்…” என எழில்மணியை வேறு குறை சொல்லிக்கொண்டார் காந்திமதி.
“பொண்ண பெத்தவக, வேணாமின்னா என்ன செய்யுதது?…” வடிவுக்கு அந்த கவலையானது.
“அவேனும் இப்ப என்னத்த செய்யுவியான். மொத வேணாமின்னுட்டு இப்ப கேட்ட ஒடனே செரின்ன வெக்கமாயிருக்குமில்ல? அதேம் மருவுதியான். நா பேசுதேம்…” என மார் தட்டி சொல்லிக்கொண்டிருந்தார்.
“யார்க்கிட்ட பேச போற கெழவி? இன்னும் ஒனக்கு ஒறக்கம் ஒட்டலையாக்கும் ஒங்கண்ணுல?…” என அவரின் கொண்டையை பிடித்து ஆட்டிவிட்டு உள்ளே வந்தான் ஜகா.