“இல்ல பெரியவேன் இன்னும் வரலியே. ரவைக்கு வீட்டுக்குத்தனா?…” என கேட்டார்.
“அத்த அண்ணேங்கிட்ட போன போட்டு கேக்கத்தான? இம்புட்டு நோவெடுத்து எனக்கு நீயி சோறு போடனுமாக்கும். அப்பக்கூட எம்மேல ஒனக்கு இம்பிட்டு இணுக்கு பாசமில்ல. ஒழுங்கா எந்திச்சு போத்தா…” என்றவனை எப்படி தாஜா செய்வது என பார்த்தார்.
“அவேன் தான் கடுப்பாவறான்ல. இங்கிட்டு வாங்கத்தே…” என்றார் வடிவு மாமியாரிடம்.
“யாத்தே கொன்னுட்டியான் என்னிய. வடிவு…” என அவர் போட்ட கூச்சலில் அவர் வெளியே வந்துவிட்டார்.
“என்னத்தடா பண்ணுத? போயி சோலிய பாக்காம…” என மகனின் முதுகில் அடித்தவர்,
“இங்கிட்டு வாங்கத்தே. அவேன்கிட்ட வம்பு வெக்காதீகன்னா கேக்குததே இல்ல…” என மாமியாரையும் கடிந்தார்.
“கெழவி ஆட்டம் ரொம்பத்தேன் போவுதுத்தா. இன்னுமேட்டு தான் பேசி முடிச்சு நிச்சயத்த பண்ணனும். அதுக்குள்ளே மாலக்கழுத்தாம். அதேம் கழுத்த புடிச்சி இறுக்குனேம்…” என்று சொல்லி காந்திமதியை முறைக்க அவர் கண்டுகொள்ளவே இல்லை.
இரும்பு கேட்டை திறந்துகொண்டு புல்லட்டில் சொக்கநாதபாண்டியன் உள்ளே நுழைந்துகொண்டிருந்தான்.
காந்திமதியின் முகத்தில் அத்தனை வெளிச்சம். உள்ளே வந்து புல்லட்டை நிறுத்திவிட்டு வரும் வரை ஆவலுடன் அவர் அவன் முகம் பார்த்து நிற்க,
“ஆத்தா சாப்பாட்ட எடுத்து வெய்யி. வாரேன்…” என சொல்லிவிட்டு அவனறைக்கு சென்றுவிட்டான்.
“என்னடி இது பொக்குன்னு போச்சு? ஒன்னுமே அம்புடலையே?…” என்றவர் நாயகிக்கு போனை போட்டார்.
“ஏட்டி நாயகி கெழவி, நீயி சொன்னது நெசந்தான?…” என கேட்க,
“என்னத்த கேக்க?…” என்றார் அவர்.
“அதேம், பேத்தி சொன்னான்னு சொன்னேல?…” என பொய்யோ என்பதை போல கேட்க,
“ஆமாங்கேன். நெசமாதேன். மகேசுட்ட பேசிட்டு எங்கிட்டயும் சொன்னாளே. இப்ப வேலையா அந்த பொட்டிய தெறந்துவச்சிட்டு ஒக்காந்திருக்கா. இன்னும் சாப்புட கூட வரல…” என்றார் நாயகி.
“இங்கனாப்புல? மருதைக்கு போய்ட்டு இப்பத்தேன் வீடு மொழையுதான் (நுழையுதான்)…” என்று சலித்தவர்,
“ஆனா இவேன் கம்மின்னிருக்கானே? ஒத்த வார்த்த புடுங்க முடியலத்தா…” என நாயகியிடம் சொல்ல,
“ஆம்பளப்புள்ள ஆறமர சொல்லுமாருக்கும். ஒனக்கேம் இம்புட்டு வெடுவெடுப்பு. பொறுத்தா. மகேசு மணி கூட கெளம்பிட்டா. இன்னும் செத்த நேரத்துல வந்துருவாக…” என்றார்.