இரு வீட்டினரின் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் மதுரை மீனாட்சியம்மன் திருக்கல்யாணத்தன்று என்று முடிவானது.
“பாட்டி என் கிப்ட் எப்படி இருக்கு? எனக்கு போட்டே காமிக்கலை?…” என மதுரா கேட்கவும் காந்திமதி இடுப்பில் சொருகியிருந்த கண்ணாடியை எடுத்து போட,
“வாழ்வு தான் கெழவிக்கு…” என ஜகா கிண்டலடிக்க,
“பொறவு ஏன் தண்டட்டிய குடுக்காது கெழவி?…” என துர்காவும் கேலி செய்தாள்.
அப்போதே மதுரா வாங்கி கொடுத்த கண்ணாடியை போட்டுக்கொண்டு இங்குமங்குமாய் நடக்க, பார்க்க, பேச என்று வசனங்கள் அள்ளி வீசியவர்,
“பேரன்னு நீயுந்தேன் இருக்கியே. ஒத்த ரப்பர் கண்ணாடியாச்சும் வாங்கி தந்திருப்பியாலே?…” என்று வேறு சொல்ல அதனை அப்படியே காட்சியாக பதிவு செய்து அவரின் கைபேசியில் இருந்தே ஜகாவும், துர்காவும் பாண்டியனுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த முறை எதுவும் முன்னமே சொல்லவில்லை காந்திமதியிடம். அன்று இரவே வந்து பிடிபிடியென பிடித்தான் பாண்டியன்.
“சின்ன புள்ளையா கெழவி நீயி? கண்ணாடிய போட்டுக்கிட்டு எம்புட்டு பேச்சு?…” என்று கேட்டதும் தான் காந்திமதி முழித்தார்.
“கேளுங்கண்ணே, அங்கன வெச்சிக்கிட்டு எம்புட்டு ஸ்டெயிலு காமிக்குது…” என துர்கா வேறு போட்டுக்கொடுக்க,
“ஒனக்கு தண்டட்டிய தரவே மாட்டேன்டி…” என பேத்தியை முறைத்து அவளிடம் மெல்லிய குரலில் சொல்ல,
“அண்ணே…” என அவள் சொல்லும் முன் பாண்டியன் ஒரு அழைப்பில் எழுந்து சென்றுவிட்டான்.
இப்படி நித்தமும் ஒரு கலாட்டாவென களைகட்டியது. திருமண நிச்சய விவரம் கொஞ்சம் கொஞ்சமாக ஊருக்குள் பரவியது.
அதனை பேரும் சந்தோஷப்பட்டனர். நாயகி பாட்டியிடம் வந்து ஆச்சரியமும், ஆனந்தமுமாக பேசினார்கள் பேத்தி கொடுத்துவைத்தவள் என்று சொல்லி.
பாண்டியனின் சித்தப்பா அழகருக்கு இது அதிர்ச்சியாக இருந்தது. எதிர்பார்க்கவும் இல்லை இதனை.
“நெசந்தானாய்யா? நம்ம வளசல்ல பாத்துருக்கலாமுன்னு ஒஞ்சின்னம்மா கூட சொல்லிட்டு கெடக்கா…” என்றவருக்கு தன் மனைவி வழியே ஒரு பெண்ணை பார்த்து வைத்திருக்க இதனை எதிர்பார்க்கவில்லை.
“இதுவுந்தேன் நம்ம வளசலு பொண்ணு. என்ன சின்னய்யா நீங்க? நிச்சயத்துக்கு ஆத்தா நேருக்கா சொல்ல வரும். வந்துருங்க….” என்று சொல்லிவிட்டான் பாண்டியன்.
முடிவான பின்பு வேறு பேசுவதை அழகரால் நினைக்க முடியவில்லை. சரி நடக்கட்டும் என இருந்துகொண்டார் சிறு ஏமாற்றத்துடன்.
வீட்டில் அத்தனை புலம்பல் எப்படி பாண்டியனுக்கு அந்த பெண் ஒத்து வரும் என்று முதல் முறை மதுராவை பார்த்த விதத்தில் சொல்லி சொல்லி புலம்பினார் அழகர்.
“அவென் சொன்னா செரியாத்தேன் இருக்கும். அங்கயே வெச்சிக்கிடுவோம்…” என்றார் காந்திமதியும்.
நாயகியிடம் சொல்ல அன்றே ஆட்களை வரவழைத்து சுற்றிலும் செப்பனிட்டு அந்த இடத்தை தயார் செய்தார் நாயகி.
அவர்களின் சொந்தங்கள் அத்தனை இருக்க நிச்சயத்திற்கே சுற்றுவட்டார ஊர் மொத்தமும் கூடிவிட்டனர்.
“வரிசை தட்டோட ஊரு சுத்தி நடந்துதேம் போவனும்…” என சொல்லிவிட்டார் காந்திமதி.
பாண்டியனும் அதை தான் நினைத்துக்கொண்டிருந்தான். சில வழக்கங்கள் இப்போது மாறிக்கொண்டே இருக்க இதை எல்லாம் தன் திருமணத்தில் நடத்த வேண்டும் என நினைத்திருக்க காந்திமதி சொல்லியதில் அத்தனை சந்தோஷம்.
நிச்சயத்திற்கே இத்தனையா என வியக்குமளவிற்கு ஊர் மொத்தமும் ஊர்கோலம் சுற்றி நாயகியின் வீடு வந்து சேர்ந்தனர்.
மேளச்சத்தம் காதை பிளக்க பட்டு வேஷ்டி சட்டையில் சொக்கநாதபாண்டியன் தோரணையே மதுராவின் மனதை அள்ளி சென்றது.
ஜகா தன் நண்பனை வைத்து இதனை மதுராவிற்கு நேரலையாக காண்பித்துக்கொண்டிருக்க மணப்பெண் அலங்காரத்தில் மதுரா அதனை பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.
“வீட்டு வாசலுக்கு வந்துட்டாங்க மது…” என்று உள்ளே வந்த மகேஷ்வரியிடம்,
“நானும் வந்து வெல்கம் பண்ணட்டுமா?…” என கேட்டாள் மதுரா.
“அதுசரி, என்னால உன் பாட்டியை சமாளிக்க முடியாதுப்பா…” என்று சிரித்தவர் வெளியே செல்ல லேப்டாப்பில் தெரிந்த அவனின் உருவத்தை தனது போனில் படம் பிடித்தவள் அவனுக்கு அனுப்பி வைத்தாள்.
கூட்டத்தில் நடுநாயகமாக நாயகனாக அமர்ந்திருந்தவன் கை பேசி அதிர்வில் எடுத்து பார்க்க அவனின் புகைப்படம்.
ஒருபக்கம் தலை சாய்த்து கன்னக்கதுப்புகள் லேசாய் மீசையுடன் மேல் நோக்கி இருக்க பாண்டியனின் கண்கள் சிரித்தது.
“நீங்க மிஸ்டர். சொக் இல்லை. மீசைக்கார சொக்…” என்று வேறு அனுப்பி வைக்க இதழ்விரியா புன்னகை பாண்டியன் முகத்தில்.
தன் மனதின் காத்திருப்பு கை கூடிவிட்ட களை பாண்டியன் முகத்தை இன்னுமே ஒளிர செய்தது.
சம்பிரதாய பேச்சுக்கள் எல்லாம் நடந்துகொண்டிருக்க எழில்மணி சம்பிரதாயமாக ஒட்டவைத்த புன்னகையுடன் இருந்தார்.
இன்னொருபக்கம் மலைத்து போய் அமர்ந்திருந்தார் அவர். சீர்வரிசை தட்டில் அவர்கள் வைத்திருந்த நகைகள் வேறு திகைக்க செய்தது.
அவரறியாமலே ஒருவித கர்வம். தன் பெண்ணுக்காக இதனை செய்கின்றனர் என்று.
அதுவே ஒரு மிதப்பை தர இன்னும் நிமிர்ந்து அமர்ந்தார் எழில்மணி. அவர் உடல்மொழி மாற்றத்தில் மகேஷ்வரி அலுத்துக்கொண்டார்.
அவர் மனதில் ஓடுவதை கண்டுகொள்ள தெரியாதவரா அவர். என்னவோ நல்லவிதமாய் நடந்தால் சரி என்று எண்ணிக்கொண்டார்.
நிச்சயப்பத்திரிக்கை வாசிக்க இருக்க பெண்ணை அழைத்து வரும்படி சொல்லவும் துர்கா எழுந்து உள்ளே சென்றாள் மதுராவை அழைக்க.
வெளியே வந்த மதுராவின் பார்வை சொக்கநாதபாண்டியனிடம் தான் சென்று நின்றது.
இருவரின் நொடிநேர பார்வை பரிமாற்றத்துடனான புன்னகையின் சம்மதங்கள் சந்தங்களை சேர்த்தது.
நிச்சயபத்திரிக்கை வாசிக்கப்பட்டு தட்டை மாற்றிக்கொண்டனர் இருவீட்டாரும். மீனாட்சியம்மன் பாதத்தில் வைத்து வாங்கப்பட்ட பச்சை நிற நிச்சய புடவையை மாற்றி வந்து மதுரா இருக்கையில் அமர வைக்கப்பட பாண்டியனின் கையில் பூ மாலை.
“தாய்மாமனில்ல. அதேம் மாபிள்ளையே மாலைய போடத்தான…” என்று சொல்லி பாண்டியனை அனுப்ப மாலையுடன் மதுராவின் முன்னால் பாண்டியன்.
மேளச்சத்தம் முழங்க நிச்சய மாலையை தன் மதுரநாயகிக்கு அணிவித்தான் சொக்கநாதபாண்டியன்.
இருவரின் பார்வைகளும் விலங்கிட்டுக்கொள்ள இதோ அவள் விரும்பிய புன்னகை, இதழ் விரிந்த புன்னகை சொக்கநாதபாண்டியனின் முகத்தில்.
அதில் சொக்கி நின்ற மதுரா ஆகாயமாய் விழிவிரிக்க அந்த பாவனை அவனை அலைகடலாய் அள்ளி செல்ல நுரையாய் ததும்பும் நேசம் தேன் சிந்தும் விழிகளில் உறவியல் கோலமிட்டது.