மதுரை மீனாட்சியம்மன் திருக்கோவில். சித்திரை திருவிழா நிறைவாய் சிறப்பாய் நடந்தேறி முடிந்திருக்க இதோ மதுராவும் சென்னைக்கு புறப்பட்டிருக்க ஊர் செல்லும் முன் கோவிலுக்கு வந்திருந்தனர்.
நிச்சயதார்த்தம் முடிந்ததில் இருந்து ஊருக்கு கிளம்பும் வரை பாண்டியனை காண முடியவில்லை.
“ம்மா, அன்னைக்கு மாதிரி அவங்க வீட்டுக்கு போய் சொல்லிட்டு கிளம்புவோமே?…” மதுரா சொல்ல,
“இல்ல மது, இனிமே கல்யாணம் வரைக்கும் அப்படி போக வர இருக்க கூடாது. இன்னும் நாப்பதே நாள் தானே? அப்பறம் என்ன?…” என சிரித்தார் மகேஷ்வரி.
“ஹ்ம்ம், ஓகே. நல்ல செண்டிமெண்ட் போங்க…” என்றவளுக்கு அவனிடம் சொல்லாமல் செல்ல மனதும் வரவில்லை.
‘இதென்ன இத்தனை யோசிக்கிறேன் நான்?’ என்று கூட தன்னை குறித்து நினைத்துக்கொண்டாள்.
ஆனாலும் ஒருசில ஆசைகள், எதிர்பார்ப்புகள் அவளுள் பொங்கியபடி தான் இருந்தது.
எல்லாவற்றையும் எடுத்து ஒவ்வொன்றாய் காரில் கொண்டு வைத்துவிட்டு வந்தாள்.
பார்வை வாசலை பார்க்கவும், திரும்பவுமாக இருந்தது. முதல்நாள் மாலையே பாண்டியனின் வீட்டிலிருந்து அனைவருமே வந்துவிட்டனர்.
கூடுதலாக மகேஷ்வரிக்கு அத்தனை அறிவுரை மாலை கழுத்து, பார்த்து, பத்திரம் என சொல்லி மாய்ந்துவிட்டார் காந்திமதி.
“நான் பார்த்துக்கறேன் ம்மா. நீங்க கவலைப்படாதீங்க…” என மகேஷ்வரியும் நிறைந்த மனதுடன் சொல்லிவிட்டு எழில்மணியை பார்த்தார்.
இதுதானே அவரும் எதிர்பார்த்தது. பார்த்து கவனித்து, பேசி, உடன் இருக்க உறவுகள்.
இதனை தன் பெண்ணுக்கு கிடைக்க செய்துவிட்டோம் என அத்தனை சந்தோஷம்.
இதுவே இந்த விஷயத்தில் மகளுக்கு விருப்பம் இல்லை என்றால் வற்புறுத்தி இருக்கமாட்டார் தான்.
மதுராவின் மனது அறிந்து தான் தானாகவே இதனை பேசியது. இப்போது எல்லாம் கை கூடி வர இன்னும் நாற்பதே நாட்கள்.
இந்த திருமண தேதியை விட்டால் இன்னும் மூன்று மாதங்கள் காத்திருக்க வேண்டுமே என அந்த தேதியிலே வைத்துவிட்டனர்.
வைகாசி கடைசி வாரம் திருமணம். அதற்குள் மற்ற அனைத்தும் தயாராக வேண்டும்.
ஆனால் எழில்மணி நிச்சயத்தன்று சபையில் இருந்ததை போல மற்ற நேரங்கள் இருக்கவில்லை.
அதன்பின் பழையபடி முகத்தை இறுக்கமாக்க அங்கே ஒருவரும் எழில்மணி ஒதுக்கத்தை பெரிதுபடுத்தவில்லை. இருந்து கொள்ளட்டும் என்று விட்டுவிட்டனர்.
இப்போதும் அவர் கிளம்பிக்கொண்டிருக்க ஒரு பார்வை மகள் மீது மட்டுமே இருந்தது.
ஊருக்கு கிளம்புகிறோம் என்ற சந்தோஷம் ஒருபுறமிருந்தாலும் அவள் முகத்தில் தெரிந்த அந்த எதிர்பார்ப்பு.
அது அவனுக்கானது என்பதை அப்பட்டமாய் பறைசாற்றியது மகள் அங்கே சென்றுவிட்டு செல்லலாமா என்றது.
இந்தளவிற்கா மகளுக்கு இந்த ஊரும், அவனும் பிடித்தம் என யோசனையுடன் தான் வலம் வந்தார்.
தான் மாப்பிள்ளை பார்த்ததற்கு நிர்தாட்சண்யமாக மகள் மறுத்தது கூட இதனை மனதில் வைத்து தான் இருக்குமோ என்றொரு எண்ணம் வேறு அவரை குடைந்தது.
இப்படி பலவாறு யோசித்தபடி கிளம்பி வாசலுக்கே வந்தனர். முனியாண்டி தான் வந்திருந்தான் அவர்களை மதுரை விமான நிலையத்தில் கொண்டு விடுவதற்கு.
“போலாங்களா?…” என மகேஷ்வரி கேட்க,
“இன்னும் நேரமிருக்கே மகேஷ். அங்க ஏர்போர்ட்ல போய் வெய்ட் பண்ணனுமா?…” எழில்மணி கேட்க,
“போற வழில கோவிலுக்கு போய்ட்டு போவோமே? ஒரு வேண்டுதல் இருக்கு…” என்றார் மகேஷ்வரி.
“என்ன வேண்டுதல்? என்கிட்ட சொல்லவே இல்லை?…”
“அதான் வேண்டுதல். யார்க்கிட்டயும் சொல்லாம வரேன்னு…” என சொல்லியவர்,
“நீங்க என்ன நினைக்கறீங்க? சாமி கும்பிட, கோவிலுக்கு போக கூட பர்மிஷன் கேட்கனுமா நான்?…” என ஆரம்பிக்கவும்,
“இப்ப என்ன சொல்லிட்டேன்? முதல்லையே சொல்லியிருக்கலாமேன்னு சொன்னேன்…” என எழில்மணி குரலை இறக்கினார்.
“சொன்னா ஏன் எதுக்குன்னு இப்ப கேட்டதை விட அதிகமா கேட்பீங்க. அதோட ஊருக்கு போறப்பத்தான் போகனுமான்னு வேற பேசுவீங்க…” என்றார் மகேஷ்வரி.
“என்னத்துக்குய்யா அவ கூட மல்லுக்கு நிக்கித? கோவிலுக்கு எல்லாம் அந்த ஆத்தாவா நம்மள கூப்புட்டா தான் உண்டு. நீயி நெனைக்காமலே போவ போற. போயி மனசார வேண்டிக்க எம்பேத்தி கலியாணம் நல்லா நடக்கனுமின்னு….”
நாயகி மருமகளுக்கு பரிந்துகொண்டு வர மதுரா எதுவும் சொல்லாமல் தகப்பனை மௌனமாக பார்த்தாள்.
“என்னிய பார்த்துக்கத்தேன் காந்தி குடும்பமிருக்கே. போயிட்டு வா ராசா. காலியான தேதி வெச்சாச்சு. முவூர்த்தக்காலு ஊனமின்ன வரனும், சொல்லிட்டேன்…” என்று சொல்லியே தான் அனுப்பினார்.
“ம்ம்ம், ம்ம்…” என்ற எழில்மணி மனதில் வேறொரு யோசனை.
இங்கே வைத்து பேசினால் அதையும் இவர்கள் மாற்ற நினைக்கலாம் என முடிவெடுத்து வாயை இறுக்க மூடிக்கொண்டார்.
இதிலாவது தன் பேச்சை கேட்க வேண்டுமே என எண்ணியபடி இருந்தவர் இப்போது கோவிலுக்கு கிளம்பினார்.
நாயகியையும் அழைத்த மகேஷ்வரி அவர் வரவில்லை என்றதும் மூவருமாக கிளம்பிவிட்டனர்.
இந்த முறை முனியாண்டி அருகே அமரவில்லை எழில்மணி. பின்னால் வந்து அமர்ந்துகொள்ள மதுரா முன்னிருக்கைக்கு சென்றாள்.