சுவாசத்தில் அந்த சுகந்தத்தை இழுத்து நிரப்பியவர் மனைவி, மகளுடன் சேர்ந்து நடந்தார்.
மதுரா சிறுவயதாக இருக்கும் பொழுது வந்தது. அதன் பின் ஊர் வந்தாலும் இங்கே வந்ததில்லை. வர தோன்றியதும் இல்லை.
இப்போது வந்திருக்கவேண்டுமோ என மனைவி, மகள் முகம் பார்த்து எண்ணிக்கொண்டார்.
கையில் ஒரு பையும், பூஜை தட்டும் என சென்றவர் சந்நிதானத்தில் பெரிய தாம்பாள தட்டில் பட்டுப்புடவை வைத்து மற்ற பொருட்களும் சேர்த்து எடுத்து வைக்க,
“இதெல்லாம் எதுக்கும்மா?…” என்றார் மணி.
“அம்மனுக்கு புடவை சாத்தறதா வேண்டியிருந்தேன். அத்தை தான் சொன்னாங்க. அதான் ஊருல இருந்து இங்க வரப்பவே புடவை எடுத்துட்டு வந்துட்டேன்….” என்றார் மகேஷ்வரி.
“இப்ப தான் வந்தீங்களா?…” என கேட்டபடி ஜகா வர,
“ஆமா தம்பி…” என்றவர் ஜகாவின் பின்னால் தேட,
“அண்ணே உள்ளே ஆபீஸ் ரூம்ல பேசிக்கிட்டிருக்காங்க. இப்ப வந்திருவாங்க…” என சொல்லியபடி ஜகா மதுராவை பார்க்க அவள் முகத்தில் பளிச் மின்னல்.
“என்கிட்ட சொல்லவே இல்லையே?…” என்றாள் ஜகாவிடம்.
“சொல்லிருந்தா இப்பிடி லைட்டெரியுமா மதினி?…” என கேட்டவன்,
“அப்பத்தா அத்தன ரூல்ஸ். பரிசம் போட்டாச்சு, சும்மா அங்கிட்டு போவ கூடாதுன்னு…” என்றவன் அப்போது தான் மணியை பார்த்தான்.
“மாமோவ், நீங்களும் வந்திருக்கீகளா?…” என கேட்க தலையை அசைத்தவர்,
“மகேஷ் அவ்வளவு தானே? கிளம்புவோமா?…” என்று கேட்டார்.
“இருங்க, மாலை வரட்டும். தட்டுல வச்சு பூஜைக்கு குடுத்து சாமி கும்பிட்டு போகலாம்…” என்று சொல்ல முனியாண்டி மாலையுடன் வந்துவிட்டான்.
“நீங்க பூசைய ஆரம்பிப்பீகளாம்…” என்றுவிட்டு கிளம்ப பூஜை ஆரம்பித்தனர்.
பட்டை அம்மனுக்கு சாற்ற அனைவரின் பார்வையும் அம்மனின் அலங்காரத்தில் பனித்தது.
தீபாராதனை வரவும் தொட்டு கண்ணுக்கு ஒற்றிக்கொள்ள வந்து சேர்ந்தான் சொக்கநாதபாண்டியன்.
“இப்பதான் வர முடிஞ்சதா?…” என அவனிடம் கேட்டுக்கொண்டே நெற்றியில் பிரசாதத்தை இட்டுக்கொண்டவள் கேட்க,
“அதான் வந்திட்டேனில்ல. பொறவென்ன?…” என மெல்லிய குரலில் அவளிடம் சொல்லிவிட்டு மகேஷ்வரி, மணியை பார்த்தான்.
“வாங்க மாப்பிள்ளை…” என்ற மகேஷ்வரி,
“நாங்க பிரகாரத்தை சுத்திட்டு வரோம். நீயும் வா மது…” என்று சொல்லி எழில்மணியை கூட்டிக்கொண்டார்.
“போயாச்சு, இப்ப சொல்லு…” என்றான் பாண்டியன்.
சட்டென அவனின் கை பிடித்து தன் உள்ளங்கையில் இருந்த பிரசாதத்தை அவன் உள்ளங்கையில் இடம் மாற்றியவள்,
“இதை நெத்தில வச்சுக்கோங்க…” என சொல்லி நடக்க ஆரம்பிக்க பாண்டியனும் புன்சிரிப்புடன் அவளுடன் நடந்தான்.
“என்னப்பா, கெளம்புதப்ப கோவமெல்லாம்?…” என கேட்டு நெற்றியில் தீற்றிக்கொண்டவன் அதனை ஒரு பேப்பரில் மடித்து சட்டை பையில் வைத்துக்கொண்டான்.
“இந்த வேண்டுதல் நம்ம ரெண்டுபேருக்காக. நீங்க பூஜை ஆரம்பிக்குமுன்னவே வந்திருக்கலாம்ன்னு ஒரு தாட். ஆனா கோவம் எதுவுமில்லை…” என்றவள்,
“ஈவன் ஜகாவை பார்க்கற வரைக்கு நீங்க வருவீங்கன்னு கூட எனக்கு தெரியாது. கட்டுப்பாடு, தடை உத்தரவுன்னு ஏகப்பட்ட ரிஸ்ட்ரிக்ஷன்ஸ். அதனால இப்போதைக்கு பார்க்க முடியாதுன்னு தான் நினைச்சேன்…” என்றாள்.
“நான் இல்லைனா என்ன? அதான் நீ இருந்தியேப்பா? வேறென்ன?…” என்றான் இலகுவாக.
தலையசைத்து ஆமோதித்துக்கொண்டவள் அவனிடம் வேறு எதுவும் பேசவில்லை.
அமைதியாய் நடந்துகொண்டிருக்க பாண்டியனும் அவள் மனமறிந்து எதுவும் தொந்தரவு செய்யவில்லை.
சில நிமிட மௌனங்கள் அவர்களுடன் நடை பழக இதோ கிளம்பவேண்டும் கோவிலில் இருந்து.
“வரவா…” என கேட்டவள் பார்வையில் தலையசைத்தவன்,
“ஒரு நிமிசம்ப்பா…” என அவளை நிறுத்திவிட்டு சென்றான்.