“அப்பான்னா எல்லாமேத்தான பாக்கனும். அதுவும் கலியாணமின்னா சும்மாவாப்பா?…” என்றான் பாண்டியன் மென்னகையுடன்.
“இல்லை தான்…” என்றவளுக்கு இருவருமே முக்கியமே.
எத்தனை தான் தவறான புரிதலில் எழில்மணி ஆயிரம் பேசினாலும், நடந்துகொண்டாலும் தன் தந்தையின் மரியாதை புகுந்தவீட்டில் எத்தனை முக்கியத்துவம் என அவள் உணர்ந்தே இருந்தாள்.
“என்னாச்சுப்பா?…” பாண்டியன் கேட்க,
“ப்ச், நத்திங்…” என்றவள்,
“அப்பாவுக்கு ஒரு நம்பிக்கையான ஒரு ஆளை இண்டர்வ்யூ பண்ணி அப்பாயிண்ட் பண்ணனும். அதுவும் மைண்ட்ல ஓடுது…” என சொல்ல,
“ஆள் தானே புடிச்சிட்டா போச்சு…”
“கோழி புடிக்கிற மாதிரி சொல்றீங்க மிஸ்டர்.சொக்…”
“இப்ப எல்லா யாவாரத்துலையும்(வியாபாரத்துலையும்) நல்ல மனுச, மக்கள தேடுதது கோழி புடிக்கித மாரித்தேன்….” என்றவன்,
“பரிச சேல பச்சையில எடுத்தாச்சு. கல்யாணத்துக்கு ரோசனையாச்சா? என்ன நெறத்துல எடுக்க போறப்பா?…” என ஆர்வமாக கேட்டான்.
“இன்னும் இல்லையே. இப்பவே திங் பண்ணிட்டா அங்க போய் அதுமாதிரி கிடைக்கலைன்னா கஷ்டமாகிடும். என்னதான் வேற நல்ல புடவை எடுத்தாலும் மனசு நாம எதிர்பார்த்ததையே தான் தேடும். ஒரு திருப்தி இருக்காது…”
“அதிருக்கட்டும். நீங்க வருவீங்களா?…” என அவனிடம் கேட்க பதில் சொல்லாமல் ஜீப்பை செலுத்தியவன் வேகம் சட்டென மட்டுப்பட்டு ஓரிடத்தில் நின்றது.
“என்னாச்சு?…” என திரும்பி பார்க்க ஏர்போர்ட் வந்திருந்தது.
இன்னும் விமான சுற்று சுவற்றுக்குள்ளே கூட நுழையவில்லை. வெளியே ஓரிடத்தில் ஜீப்பை நிறுத்தியிருந்தான் பாண்டியன்.
“ஓஹ் வந்துட்டோமா? சீக்கிரம் வந்தது கூட தெரியலை. உங்க முகத்தை பார்த்து பேசிட்டே வந்ததுல…” என்றதும் பாண்டியனும் அவளை திரும்பி பார்த்தான்.
“நா பாக்கலையே?…” என்ற பாண்டியன்,
“அப்போ இன்னொருக்கா கோவில் வாசலுக்கு போயிட்டு வாரப்ப பாத்துட்டே வரலாம்…” என்று சொல்ல,
“அப்பப்பா, இதென்ன பதிலுக்கு பதிலா? இன்னொருதடவை நான் ட்ரைவ் பன்றேன். பார்த்துட்டே வருவீங்களாம். இப்ப போவோம்…” மதுரா சொல்ல பாண்டியன் முகத்தில் குறுஞ்சிரிப்பு.
“நைஸ் ஒன்…” என்றவள்,
“உள்ள போகலையா?…” என கேட்க,
“இன்னும் நேரமிருக்கே?…” என்றான் தனது கை கடிகாரத்தை பார்த்து.
அரைமணி நேரமிருந்தது உள்ளே செல்ல. அதற்குள் ஜகா பாண்டியனுக்கு அழைத்துவிட,
“சொல்லு ஜகா…” என்றதும்,
“அண்ணே அங்கன ஒம்மாமனார் எங்க என் பொண்ணுன்னு கேட்டுக்கிட்டே இருக்காரு. இன்னுமா போவல நீங்க?…” என கேட்க,
“போவோம்டா, அங்கனதேன் வெளில இருக்கோம்…” அசால்ட்டாக பாண்டியன் சொல்ல,
“எனக்கு போன போட்டு கேட்டுக்கிட்டே இருக்காரு. நானும் சொல்லி சொல்லி ஓஞ்சிட்டேன். இந்த முனியாண்டி வேற சல்லுன்னு காத்தா பறந்து அங்க போயி நின்னுட்டியான் போல…”
“செரிடா, அவகட்ட சொல்லு, வருவோமின்னு…”
“ஒங்களுக்கு கூப்புட சொன்னா மாட்டேன்னு நிக்கிறாரு. நீ பேசி கேட்டு சொல்லுன்னு. என் பொண்ணு இல்லைன்னா ப்ளைட் ஏறமாட்டேன்னு சொல்றார்…” என சொல்ல சத்தமில்லாமல் சிரித்துவிட்டான் பாண்டியன்.
“செரி ஏறவேண்டாம்…” என அவன் சொல்ல மதுரா முறைத்து பார்த்தாள் அவனை.
“நான் ஒன்னும் கூட்டிட்டு வரலையே? நீங்க தான் கூட்டிட்டு வந்தீங்க. உள்ளையும் போக விடலை. அப்ப நீங்களே பேசுங்க…” என அழைப்பை ஏற்று அவனின் கையில் திணித்துவிட சிரிப்புடன் காதில் வைத்தான்.
“இன்னுமா மது வந்திட்டிருக்க? இன்னும் கால் மணி நேரத்துல நாம உள்ள போகனும்…” என்றார் எழில்மணி கோபத்துடன்.
“கால்மணி நேரமில்ல மாமோவ், இருவத்தஞ்சு நிமிஷமிருக்கு…” பாண்டியன் சொல்லவும் அந்த பக்கம் பேச்சு மூச்சே இல்லை எழில்மணிக்கு.
“என்னங்க?…” மகேஸ்வரி கேட்கவும்,
“நான் பேசமாட்டேன். நீயே கேட்டு சொல்லு…” என மனைவியிடம் போனை தந்துவிட்டு அமர்ந்துகொண்டார்.
“தஸ்ஸு புஸ்ஸுன்னு மூச்சுவாங்க பேச ஆரம்பிசிச்ட்டு என்கிட்டே குடுக்கீங்க?…” என்றவர்,
“மது…” என்றார் மகளிடம்.
“கிட்ட வந்துட்டோம். இப்ப வாரோம்…” என மகேஷ்வரியிடம் தன்மையாக சொல்லிவிட்டு மதுராவிடம் நீட்டினான்.
“ஆனா நெசத்துக்கு ஒங்கப்பாவ வச்சு செய்யிதது நீதேம்…” என்று பாண்டியன் ஜீப்பை கிளப்ப,
“நான் கேட்டதுக்கு பதில் சொல்லவே இல்லையே?…” என மதுரா.