மகேஷ்வரி கூட மறுப்பு தெரிவிக்கவில்லை இதில். இருவரின் மௌனமும் எழில்மணியை என்னவோ செய்ய,
“நான் வரலைன்னா ஒண்ணுமில்லை போல? சண்டை போட்டு கூட கூப்பிடாம இருக்காங்களே?…” என தனியே குழம்பி போனார் எழில்மணி.
அந்த குழப்பத்தோடே மறுநாள் காலை எழுந்து வர ஹாலில் அமர்ந்து மகேஷ்வரியுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தவனை பார்த்து கனவோ என கண்ணை கசக்கினார் எழில்மணி.
கனவில்லை, நிஜமே தான். அவனே தான். அங்கே அமர்ந்திருந்தவன் சொக்கநாதபாண்டியனே தான்.
சென்னைக்கு அந்த நேரம் ஒரு வேலையாக வந்திருந்தவனை மதுரா அழைக்க, மகேஷ்வரியும் அழைத்திருக்க மறுக்க முடியாமல் கிளம்பி பார்த்துவிட்டு செல்ல வந்திருந்தான்.
அது தெரியாமல் எழில்மணி ஆணியடித்ததை போல அங்கேயே நின்றுவிட வெளியே வெளிவாசலில் முனியாண்டி வேறு முதுகு காண்பித்து அமர்ந்திருந்தான்.
‘கூட்டிட்டு போக வர சொல்லியிருப்பாங்களோ?’ என நினைத்தவர், ‘போனாலும் இவனோட போறதா?’ என எண்ணிக்கொண்டு கீழே இறங்கினார்.
பாண்டியனின் பார்வை இப்போது மாமனாரிடம் இருக்க எழில்மணி மருமகன், முனியாண்டி இருவரையுமே பார்த்தார்.
“குட்மார்னிங் ப்பா…” என்று மதுரா சொல்லவும் வெளியில் இருந்த முனியாண்டியும் சத்தத்தில் எழுந்து நின்றுவிட்டான்.
“அதான் வந்துட்டேன்லம்மா மெதுவா சொல்லு…” என்றவர்,
“வாங்க…” என்றார் கைகூப்பி பாண்டியனிடம்.
“நல்லாயிருக்கீங்களா?…” என்றவன் கேள்விக்கு,
“ஹ்ம்ம், இருக்கேன்…” என்றுமட்டும் சொல்ல,
“இப்படித்தான் இருக்கனும் பெண்ணழைப்பு. மாப்பிள்ளையே வந்து அழைக்கும் பெண்ணழைப்பு பேஷ், பேஷ். என்னப்பா?…” என்று மதுரா எழில்மணியிடம் சொல்ல பாண்டியனின் அதரங்களில் புன்னகை ஒளிர்ந்தது.
‘அப்ப கூட்டிட்டு போகத்தான் வந்திருக்கானா? நெவர்’ என உள்ளுக்குள் கொந்தளித்தவர்,
“நாம தான் ப்ளைட்ல போறோமே மது? அதுவும் மாப்பிள்ளையே பொண்ணை அழைச்சுட்டு போறது முறை இல்லை…” என சொல்லிவிட்டு,
“டைமாச்சே. கிளம்புவோம். நானும் போய் ரெடியாகிட்டு வரேன்…” என்றார்.
“செரிங்க…” என பாண்டியனும் சொல்ல விட்டால் போதும் என்று சென்றார் எழில்மணி.
“நா சொன்னேனாப்பா உன்னை அழைக்க வந்திருக்கேமின்னு?…” என்று கேட்க,
“இதெல்லாம் டைமிங் டயலாக்ஸ். காரணமில்லாம யூஸ் பண்ண மாட்டோம்…” என்று சொல்லி மகேஷ்வரியுடன் ஹைபை அடித்துக்கொண்டாள் மதுரா.
எழில்மணி மீண்டும் வரும் பொழுது பாண்டியன் இல்லை. எங்கே என கேட்க கூட தோன்றவில்லை எழில்மணிக்கு.
“போகலாமா?…” என கேட்டுவிட்டு வாசலில் ட்ரைவரிடம் சொல்லி காரை எடுக்க சொல்லி கிளம்பியாகிற்று.
“சென்னை ஏர்லைன்ஸ் இனி அலங்காநல்லூர்ல தான் லேண்டாகும்…” மகேஷ்வரி சொல்ல மதுராவின் முகத்தில் குறும்பு புன்னகை.
ஊர் சென்று சேர்ந்த மறுநாளே முகூர்த்த கால் ஊன்றி பூஜையை முடித்தாகிற்று.
இன்னும் நான்கு நாளில் திருமணம். ஆனால் பெண் வீட்டினருக்கு ஒரு வேலையும் இல்லை.
தான் வரும் முன்னரே நாயகி வீட்டை சுத்தம் செய்து வெள்ளையடித்து அலங்கரித்து என எல்லாம் முடித்துவிட்டார்.
இப்போது அதனை பாராட்டவும், ஏன் தனியாக செய்தாய் என கேட்கவும் கூட தோன்றவில்லை. நாயகியே எல்லாம் பார்த்துக்கொண்டார்.
“ஒனக்கு அங்கன சோலிய போட்டுட்டு வந்துருக்கோமேன்னுட்டு இருக்குமில்ல. நீயி அத்த பாருய்யா. இங்கின எல்லாம் தானா நடக்கும்…” என்றார்.
இன்னும் இருநாளில் திருமணம் என்றிருக்க மகேஷ்வரி தான் அவர் அப்படியே இருப்பதை கண்டு,
“வாங்க அந்த மண்டபம் ரெடி பன்ற இடத்தை போய் பார்த்துட்டு வருவோம்..” என்றார்.
“ம்க்கும், இந்த கடைசிக்கும் அந்த கடைசிக்கும் நாலு கம்பை ஊனி கூரை வேய்ஞ்சு தட்டியை கட்டிருப்பானுங்க. இது நான் வேற போய் வேடிக்கை பார்க்கனுமா? நான் என்ன சின்ன பிள்ளையா? வேணும்னா நீ போ…” என்றார் கடுப்புடன்.
“அப்பா நீங்க வாங்க. எனக்கும் பார்க்கனும். போய்ட்டு வருவோமே?…” என மதுரா சொல்ல,
“அதெல்லாம் நீ வேண்டாம். விசேசத்துக்கு இன்னும் ரெண்டுநாள் முழுசா இல்ல. பேசாம வீட்டுக்குள்ள இருக்கனும்…” என்றுவிட்டார் நாயகி.
“நாம போய் எப்படி இருக்குன்னு பார்த்துட்டு மதுவுக்கு பிக்சர்ஸ் எடுத்துட்டு வருவோம். வீட்டுக்குள்ளயே எப்படி இருக்க?…” மகேஷ்வரி அழைக்க,
“நீ வீட்டுக்குள்ளயே இருந்தியா? அதான் எந்நேரமும் கும்பலா அங்க போறதும், கும்பலா அவங்க இங்க வரதும். எல்லாம் பார்த்துட்டு தான் இருந்தேன்…” என்றார்.
பேசி பேசி மாலையாகிவிட்டது. வேறு வழியின்றி விருப்பமே இல்லாமல் கிளம்பி சென்றார் எழில்மணி மகேஷ்வரியுடன்.
“அங்க பார்த்ததும் பார்த்துட்டு டக்குன்னு கிளம்பிடனும். என்னால ரெண்டு நிமிஷம் மேல அங்க இருக்க முடியாது. புரியுதா?…” என சொல்லியே அழைத்து வந்திருந்தார்.
திருமணம் வரை அடக்கி வாசிக்கலாம். கத்தினால் கத்திவிட்டு போகட்டும் என்னும் மனநிலையில் மகேஷ்வரியும் கண்டுகொள்ளவில்லை. கிளம்பவும் மகேஷ்வரி ஜகாவுக்கு அழைக்க போக,
“யாருக்கு?…” என்றார் எழில்மணி.
“இல்ல எந்த இடம்ன்னு வழி கேட்க ஜகாவுக்கு கூப்பிட போனேன்…”
“எனக்கு தெரியும். அவன் எதுக்கு? பேசாம வா…” என்றார்.
“ரொம்பத்தான் அதிகாரம்…” என்று சொல்லி காரில் அமர அங்கே சென்ற எழில்மணியின் பார்வை நிலைகுத்தி நின்றுவிட்டது.
“இதுதானா? வாவ்…” என மகேஷ்வரி சொல்லிவிட்டார்.
எழில்மணி வாய்விட்டு சொல்லவில்லை. அவ்வளவு தான் வித்தியாசமே தவிர முகத்தில் அத்தனை ஆச்சர்யங்கள் வந்து போனது அவருக்கு.
எழில்மணி எதை எல்லாம் சொல்லி சொல்லி பாண்டியனை மட்டம் தட்டினாரோ அது ஒவ்வொன்றையும் அவன் சொல்லாமலே உடைத்துக்கொண்டிருந்தான்.
பந்தல் தான். ஆனால் அதன் வேலை பாட்டுகள் எல்லாவற்றையும் மிஞ்சியிருந்தது.
பாரம்பரியம் மாறாமல், அதே நேரம் ரசிக்கும்படி மனதை கவரும்படி மண்டபம் போலவே எல்லாமே தயாராகிக்கொண்டிருந்தது.
மேடை அமைத்து இருக்கைகளுக்கு தனி, உணவு கூடத்திற்கு தனி என்று நேரம் போதவில்லை எழில்மணிக்கு.
இரண்டு நிமிடம் என சொல்லிவிட்டு வந்தவர் ஒவ்வொரு இடத்தையும் நின்று கவனித்து, அருகே சென்று, ஆராய்ந்து என நிதானமாக பார்த்துக்கொண்டிருக்க மகேஸ்வரி வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார் அதனை.
இங்கே மற்றவற்றை அவன் விவரித்துக்கொண்டிருக்க முகூர்த்த புடவையை எடுத்து தர வீடு சென்றிருந்தவன் கையில் மதுரா நெய்ய சொல்லி தந்திருந்த அந்த புடவை நெகிழ்ந்தது.
புடவையின் வேலைபாடுகளும், அதன் நிறங்களும் என மதுராவிற்கு பொருத்தமாய் இருக்கும் என எண்ணியவன் மனக்கண்ணில் மதுரா அப்புடவையில் மிளிர்ந்தாள்.
புடவையின் முந்தானையில் மீசையுடன் சொக்கநாதபாண்டியனின் முகம் தங்க ஜரிகையால் நெய்யப்பட்டிருந்தது தத்துரூபமாக.
கூடுதல் சிறப்பாய் மிஸ்டர்.சொக் வேறு அவனை சொக்கவைக்க பாண்டியன் மீசைக்குள் ரகசிய புன்னகை.
அலங்காநல்லூரில் திருமண கொண்டாட்டம் இனியே ஆரம்பம். துவங்கியது சொக்கன், மீனாள் (மதுரா) வைபவம்.