மகனின் புகைப்படத்தின் முன்பு கண் கலங்க நின்றிருந்தார் காந்திமதி. அவரருகே வடிவும் தன் கணவரின் படத்தையே கையெடுத்து கும்பிட்டுவாறு இருந்தார்.
அந்த அறையில் உறவுகள் சூழ மத்தியில் நின்ற சொக்கநாதபாண்டியனும் மார்பின் குறுக்கே கை கட்டி நின்றான்.
விடியா பொழுது, இன்னும் நேரமிருந்தது முகூர்த்தத்திற்கு. மணமகன் வீட்டில் சர்க்கரை பொங்கல் வைத்து சாமியை கும்பிட்டு முடித்தனர்.
“நல்லாருக்கனும் சாமி, அம்புட்டுபேத்துக்கும் நல்ல சொவத்த குடுக்கனும். ஒம்புள்ளைய சாமியா கூட இருந்து பாத்துக்கனும்ய்யா…” என தெய்வமாகி புகைப்படத்தில் இருந்த தன் மகனிடம் வேண்டிக்கொண்டிருந்தார் காந்திமதி.
இந்த நாளில் மகன் இல்லாமல் போய்விட்டானே என்ற ஏக்கம் தொண்டையை கவ்வி பிடித்தது.
வடிவு கணவரின் படத்தினருகே அமர்ந்திருந்தார் அமைதியாக. யாரும் அவரின் நிலையை கலைக்க விரும்பவில்லை.
இந்த நாள் அவர்களுக்கு எத்தனை முக்கியமான நாள். கணவரின் இழப்பை இன்னுமே வலிக்க கூறிய நாள்.
அவரில்லாமல் மகனின் திருமணம் என சந்தோஷத்திலும் கூட மருகி அமர்ந்திருந்தார்.
அதனால் அவரை காந்திமதியும் யாரையும் தொந்தரவு செய்ய விடவில்லை. சிறிது நேரம் இருந்து அமைதியாகட்டும் என்று.
“வாரேம் பெரியாத்தா…” என பரமேசு வர,
“இந்தா இதுல சக்கரப்பொங்கலு இருக்கு. போனதும் என்ன செய்யனுமின்னு தெரியுமில்ல. வாழ எலையில அங்கருக்கறவகளுக்கு வெச்சி குடு…” என்றார் சோமுவை ஒரு பார்வை பார்த்துவிட்டு.
“ம்க்கும், என்னமோ இதுதேம் இந்த ஊருலயே மொத கலியாணமாட்டு பேசுதீக. என்ன அய்த்தே? பவுசு பல்லக்குல ஏறுததாட்டமில்ல அம்புடுது….” என கழுத்தை வெட்டி பேச,
“இந்தா பரமு. அங்கன போயிட்டு பலகாரம் சாப்புட்டு, நல்ல நேரத்துக்கு எல்லாம் மண்டபத்துக்கு வந்து சேரனும்…”
“சரியாத்தா…”
“பொறவு எல்லா தெருவுக்கும் நொழஞ்சு நெரப்பிட்டுதேன் பொண்ணு வீடு போவனும்…”
“சரியாத்தா…”
“எதாச்சும் ஒத்த சந்து விட்டுச்சு அம்புட்டுத்தேன், பாத்துக்கிடு…” என்றவர்,
“இந்த சகா வேற நீங்கலாம் கெளம்புததுல இருந்தே லோக்கலு டிவில படமா வருமின்னு சொன்னியான். அவேனுகள வேற காணுமேத்தா?…” என இடுப்பில் சொருகியிருந்த போனை எடுத்து ஜகாவுக்கு அழைத்தார்.
“சொல்லு கெழவி…” என்றவன் பேச்சை விட பாட்டு சத்தமே அதிகம் கேட்டது.
“இவேன் வேற…” என அதில் பேச முடியாமல் துண்டிக்க,
“வருவியான் த்தா. நீயுந்தேன் ரொம்ப பண்ணாத…” என துர்கா கிண்டல் பேச,
“மொத அவென் போனுக்கு எழுதி அனுப்பு. எப்ப வருவியான்னு. எட்டுக்கு முவூர்த்தம்ன்னா எம்பதுக்குத்தேன் வருவானுங்க போல?…” என சலித்துக்கொண்டே,
“என் வாய என்னத்த பாக்கறீயடி. வரிச தட்டெல்லாத்தையும் இன்னொருக்கா பாருங்க. பொறவு வண்டியில சீரு பான, அண்டா எல்லாத்தையும் அடுக்கியாச்சா?…” என அவர்களிடம் விரட்டினார்.
“ம்க்கும், எப்படியும் இந்த வீட்டுக்குத்தான் வர போகுது. இதெதுக்கு கெழவி ஊரெல்லாம் காமிச்சு திரும்ப கொண்டு வரனும்?…” துர்கா கேட்க,
“பருத்திமூட்ட குடோன்லையே இருக்கலாமின்னு சொல்லுதது கெழவிக்கு எங்க புரிய?…” என வந்த ஜகா காந்திமதியின் கொண்டையை பிடித்து ஆட்ட,
“கூறுகெட்டவேன் போடா அங்கிட்டு…” என அவனின் கையை தட்டியவர் தன் தலையை சரி செய்துகொண்டார்.
“இன்னிக்கு நீயி பொண்ணுதேம், பொண்ணுதேம்…” என்று சிரிக்க,
“எங்க அந்த படம் புடிக்கிதவனுங்க? வந்துட்டானுவலா?…” என வாசலுக்கு செல்ல பாண்டியன் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தான்.
“எம்பேரேன் ராசாதேன். சொக்கநாதனில்ல. ராச கள பாரு…” என ரசித்து பார்த்து பாண்டியன் திரும்பி அவரை பார்த்ததும் நின்ற இடத்திலிருந்தே அவனுக்கு கன்னம் வழித்து திருஷ்டி கழித்தார்.
அவரின் செய்கையில் சிரிப்பு தான் மூண்டது பாண்டியனுக்கு. அதிலும் இந்த திருமண பேச்சின் பின் அத்தனை முறை முகம் பார்த்து தன்னுடைய திருஷ்டியே பட்டுவிடும் என்று செய்த அட்டகாசங்கள் கொஞ்சமல்ல.
“மதினி கூட இம்பிட்டு உத்து பாத்திருக்கமாட்டாக. கெழவனுக்கு குடுத்துவைக்கல இந்த கெழவி ரவுச அனுபவிக்க….” என்று ஜகா வைத்து ஓட்டுவான்.
இப்போதும் காந்திமதி அப்படியே செய்ய ஜகாவும் பார்த்து சிரித்தபடி உள்ளே வர,
“செரி, பெரியவேன் நிக்கிதான்…” என மறுபடியும் உள்ளே வந்துவிட்டு மற்றவர்களையும் துரிதப்படுத்தினார்.
வீடு மொத்தமும் உறவு கூட்டம். வீடு பத்தவில்லை. அருகிலிருந்த சிறிய மண்டபம் ஒன்றையும் ஏற்பாடு செய்திருந்தனர்.
வெளியூரில் இருந்து வருபவர்களுக்கு ஊர் நுழையும் பொழுதே நான்கு கார்கள், பைக், வேன் என நின்றிருந்தது.
ஜகாவின் தோழர்கள் அத்தனை பேர் இருந்தனர் அந்த பொறுப்பை ஏற்று நடத்த என்று.
மொத்த ஊரும் சேர்ந்து நடத்தும் திருமணம் போலிருந்தது அந்த வைபவம். ஆளுக்கொன்றாய் தாங்களே முன்வந்து கேட்டு செய்தனர்.
அதிலும் அந்த ஊரிலேயே முதன் முதலில் இப்படி ஒரு திருமணம் என்னும் விதமாய் தயாராகி இருக்க எல்லோருக்கும் தானாகவே உற்சாகம் பெருகியது.
யாரையும் நடந்து வர விடவில்லை. ஊரின் ஆட்டோக்கள், வண்டிகள் எல்லாம் ஊருக்குள் இருந்து மண்டபம் போடப்பட்டிருக்கும் இடத்திற்கு அழைத்து செல்ல இயங்கிக்கொண்டு இருந்தது.
இரு நாட்களும் அனைவருக்கும் உணவு அங்கே தான். அத்தனை கனஜோராக ஏற்பாடுகள்.
காந்திமதி சொல்லிவிட்டார் வீட்டின் முதல் திருமணம் அத்தனை சிறப்பாக இருக்கவேண்டும் என்று.
ஒரு சொந்தத்தையும் விடவில்லை. அத்தனைபேரையும் அழைத்திருக்க அதற்கு ஏற்றார் போல பெரிதாய் மண்டபத்தின் அமைப்பும் இருந்தது.