“பொண்ணை மண்டபத்துல விட்டுட்டு மாப்பிள்ளையை அழைக்க போகனும்ன்னு பேசினாங்க. நீ முன்னாடி போ. வந்திருவோம்…” என்று மகளை மனதார அனுப்பி வைத்தார்.
ஒருவிதமாக படபடவென்று வந்தது. சொந்தங்கள் சூழ மணப்பெண் ஊர்வலம் கிளம்பியது மண்டபம் நோக்கி.
அதற்குள் அங்கே நிறைந்திருந்தனர் உற்றார் உறவினர்கள். பின்னோடே எழில்மணி, மகேஷ்வரி என அனைவருமே கிளம்பி வந்துவிட்டனர்.
மண்டபத்தின் முன் வாயிலில் நின்று அனைவரையும் வரவேற்க ஜகாவும் உடன் நின்றான்.
வெயிலின் தாக்கம் ஏற்படாதவாறு எல்லா இடத்திலும் ஏர்கூலர் வைக்கப்பட்டிருக்க அடிக்கும் குளிர்ந்த காற்றில் பன்னீரும், சந்தனமும், ரோஜாவும் என வாசனைகள் மணம் பரப்பி அவ்விடத்தை ரம்யமாக்கியது.
துர்கா மதுராவை விட்டு எங்கும் நகரவில்லை. அங்கேயே அவளுடனே பேசிக்கொண்டு இருந்தார்.
மணமகள் வரவும் மேடையில் சம்பிரதாயங்கள் துவங்க மணமகனான சொக்கநாதபாண்டியனும் அங்கே வந்து சேர்ந்தான்.
மேடையில் இருந்த மதுராவின் பார்வை பாண்டியனிடத்தில் தான் அழகாய் சிறைபட்டது.
முறுக்கு மீசையும், ஆஜானுபாகுவான தோற்றமும் என அந்த பட்டு வேஷ்டி சட்டையில் நெற்றியிலிட்ட சந்தன கீற்றுடன், துளி விபூதி என அவளை நெருங்கி வந்துகொண்டிருந்தான்.
இன்னும் நெருங்கி மேடை அருகே வரும் முன் மதுராவிற்கு முகூர்த்த புடவை தரப்பட மாற்றி வர மணப்பெண்ணை அழைத்து சென்றனர்.
அவ்விடத்தில் வந்து பாண்டியன் அமர பார்வை வருபவர்களை வரவேற்க தலையசைப்பதும் மந்திரம் சொல்வதுமாக இருந்தது.
தூரத்தில் நின்றிருந்த எழில்மணி பார்வை பாண்டியனிடத்தில் இருக்க அவரின் பார்வை உறுத்தலில் நிமிர்ந்து பார்த்தான்.
‘என்ன பார்த்துட்டார்’ என்று நினைக்க என்னவென்று தலையசைத்து கேட்டதும் இல்லை என்றுவிட்டு திரும்பிக்கொள்ள பாண்டியன் இதழ்களில் புன்னகை.
அவனுக்கும் முகூர்த்த உடை வழங்கப்பட வாங்கிக்கொண்டு உடைமாற்றிவர சென்றவன் மாற்றி முடித்து வந்துவிட இன்னும் மதுரா வந்திருக்கவில்லை.
“ஏலே சகா, ஒந்தங்கச்சிக்கி போன போடு. அந்த சிமித்திர நா போட்டா எடுப்பேனாங்கறா…” என்றார் காந்திமதி.
வடிவு சோமு, பரமேசுடன் பேசியபடி வந்தவர்களை கவனிக்க மும்மரமாக இருந்தார். உடன் மகேஷ்வரியும்.
காந்திமதிக்கு தான் அது எதுவும் கவனத்தில் இல்லை. பேரனின் திருமணத்தை பார்த்தபடியே தான் இருந்தார்.
மேடையில் மட்டுமே அவரின் கண்கள் நிலைத்திருக்க மற்றதெல்லாம் பின்னுக்கு சென்றது.
இன்னும் பேத்தியை வேறு காணாததால் நேரமாகுகிறதே என படபடத்து ஜகாவிடம் கேட்க,
ராமர் நீலவண்ண பட்டில், வாடாமல்லி நிறத்தில் கரையிட்ட தங்க சரிகை மின்னும் பட்டு புடவையில் அலங்கார சிலையாய் அசைந்து வந்தவள் மீது மையலானவன் பார்வையில் மதுராவின் பதட்டம் தணிந்து சிலிர்த்தது.
அவள் தேடி தேடி நெய்ய சொல்லி தேர்ந்தெடுட்ட பட்டு. அத்தனை அழகாய் பாந்தமாய் அவளை தழுவி இருந்தது.
பார்ப்பவர்களின் மனதிலும் அது ஒட்டிக்கொண்டது அந்த நிறமும், வேலைப்பாடும்.
பாண்டியனின் கவனம் அவளின் முந்தானையில் தான். தன் முகம் தெரிகிறதா என கண்கள் சுருங்க பார்த்தவன் மீசை கீழுதட்டில் பதிந்தது அழுத்தமாக.
லேசாய் குனிந்திருந்தவன் இமைகள் மட்டும் அவ்வப்போது உயர்ந்து இதனை பார்க்க மதுராவின் முந்தானை பின் செய்யப்பட்டிருந்தது.
‘என்னிய கெட்டி வெச்சிட்டா’ மனது கும்மாளமிட்டது அவன் எண்ணிய வார்த்தையின் பொருளில்.
“எப்படித்தான் கலர் காம்பினேஷன் சூஸ் பன்றியோ? இந்த கான்ட்ராஸ்ட் உனக்கு ஆப்ட்டா இருக்கு மது. பாரு எல்லாரும் பார்க்கறதை…” என தோழி சொல்ல பார்வையை சுழற்றினாள் மதுரா.
இத்தனை கூட்டம் சென்னையிலும் பார்த்திருக்கிறாள் தான். பார்ப்பவர்கள் முக சிறப்பு, தலையசைப்பு, கையசைப்புடன் கடந்துவிடுவார்கள்.
இங்கானால் அருகில் வந்து அத்தனை முறை ‘இதுதான் பொண்ணா?’ என நெருங்கி தொட்டு பார்த்து, இது என்ன அது என்ன, நான் இந்த முறையாகவேண்டும் என்று தானாகவே அறிமுகம் செய்துகொண்டு பேச ஆரம்பித்துவிட்டனர்.
அதில் திணறி தான் போனாள் மதுரா. அவர்களின் அன்பும், பாசமும் தெரிந்தாலும் அதற்கு எதிர்வினையாற்ற முடியாமல் ஒருவித பரபரப்பு அவளுடன் தங்கிவிட்டது.
புன்னகையுடன் தலையசைத்து ஓரிரு வார்த்தைகள் பேசி என அதற்கே முடியவில்லை.
இப்போதும் அவளுடனே அத்தனைபேரும் சேர்ந்து வர மேடைக்கு சென்று அவனருகே அமர்ந்தாள் மதுரா.
பாண்டியன் அமைதியாக ஐயர் சொல்லிய மந்திரங்களை சொல்லியும், அவர் கொடுத்த பூவை அக்னியில் போடுவதும் என்றிருக்க,
“குட் மார்னிங் மிஸ்டர்.சொக்….” என்றாள் வழக்கமான குரலில் பதட்டம் குறைந்து.