“நெசமா அது பேசுதது இல்லையாப்பா?…” என்றான் அடக்கப்பட்ட சிரிப்புடன்.
“அநியாயம் சொக்…” மதுரா
“அப்படித்தான் இருக்கேன்ப்பா. செத்த கம்மினிரு. மொத தாலிய கெட்டிக்கிதேம்…” என்று சொல்ல,
“எப்படியாம்?…” என மதுராவும் பூவை வாங்கி ஐயர் சொல்லியதை செய்துகொண்டிருக்க இருவருக்குமான பேச்சுக்கள் நிற்கவில்லை.
“ஹ்ம்ம், சொக்கிப்போயிருக்கேன்…” என்றவன்,
“இந்த சேலைய நீயி கெட்டினா எப்படியிருக்குமின்னு நெனச்சத விட கெட்டிருக்கப்ப அள்ளுது…” என சொல்ல வெட்கம் பிடுங்கியது மதுராவை.
கிசுகிசுப்பாய் இருவருக்குமான உரையாடல். சுற்றம் எல்லாம் மறந்தது. தலையை குனிந்தபடி ஒருவரை ஒருவர் சார்ந்து பூக்களை வாங்க, அக்னியில் போட என்று தனி உலகி சஞ்சரிக்க,
“கோவிலுக்கு போயி கும்பிட்டு வாங்கன்னு சொன்னேன்…” என்ற ஐயரின் சத்தத்தில் இருவருமே அவரை பார்த்தனர்.
அடுத்து அக்னியில் போட பூவை கேட்டு நீட்டியபடி இருவரின் கைகளும் இருந்தது.
“அண்ணே புள்ளையார சுத்திட்டு வர சொல்லுதாக அப்பதருந்து. போவோமா?…” என ஜகா கிண்டலாக கேட்க முன்னால் கவனித்துக்கொண்டிருந்த மொத்த கூட்டமும் இவர்களை தான் பார்த்திருந்தது.
“ஆத்தாடி…” என பாண்டியன் மாலையை சரி செய்வதை போல சொல்ல,
“ஸோ வாட்? பார்க்கட்டும்…” என்றாள் மதுரா கண் சிமிட்டி.
இதுவும் நேரலையில் பதிவாக அமர்ந்திருந்த இடத்தை விட்டு அசையாமல் பார்த்துக்கொண்டிருந்தான் அகிலன்.
திருமணம் முடிந்து பத்து நாட்களில் புறப்பட்டிருந்தவன். வீட்டில் ஒருவரின் பேச்சையும் கேட்கவில்லை.
அவர்கள் முகத்திலேயே முழிக்க கூடாது என்று சொல்லியே கிளம்பி சென்றிருந்தான். அவனை புரிந்த மனைவி தான்.
வாழ்கிறான். ஒன்ற முடியவில்லை. மனைவியை முழுமையாக மனதில் நிரப்ப முடியவில்லை. ஆனாலும் அவளுக்கான கணவனாக கடமையுடன் இருக்கிறான். அவ்வளவே.
இங்கே மதுராவின் முகத்தில் மகிழ்ச்சி அப்பட்டமாய் தெரிய எந்தளவு இந்த திருமணத்தில் அவள் மகிழ்ச்சியாக இருக்கிறாள் என புரிந்தது.
‘லவ் மேரேஜாம். அதான் உடனே முடிக்கிறாங்க போல?’ என பேச்சுக்கள் எழில்மணி அலுவலகத்தில் இருந்தவர்கள் மூலம் தெரியவந்தது.
இருக்குமோ என்று தான் தோன்றியது. அதனை பூரிப்பு, சந்தோஷம் என ஜொலித்தது அவளின் மதுரமுகம்.
மணமக்கள் இருவரும் எழுந்து அருகிருந்த பிள்ளையார் சன்னிதிக்கு சென்று தரிசித்து அர்ச்சனை செய்துவிட்டு மீண்டும் மண்டபம் வந்தனர்.
எழில்மணி ஓரிடத்தில் நிற்கவில்லை. அவரின் நண்பர்களில் பெரும்பாலானோர் வந்து சேர்ந்திருந்தனர்.
வந்தவர்கள் கண்களில் தெரிந்த வியப்பே எழில்மணியை திருப்தியாக்கியது. இது போதுமே.
எழில்மணி மகளின் திருமணம் இப்படி நடந்தேறியது என காலத்திற்கும் பேசும் பேச்சு ஒன்றே போதுமே.
மனது குளிர்ந்துவிட்டது. பேசியவர்கள் வாயெல்லாம் பேச்சுடன் அடிபட்டு போனது போல,
“மணி அன் பிலீவபிள்…” என்றனர்.
“உங்க மருமகன் மேன்லி…” என்றனர்.
“அருமையான சம்பந்தம்…” என்றனர்.
“பொருத்தம் அப்படி இருக்கு. இதுக்கு தான் வலைபோட்டு மகளுக்கு மாப்பிள்ளை தேடினீங்களா? எங்ககிட்ட வீட்டோட மாப்பிள்ளை பார்க்கறேன்னு சொல்லிட்டு இங்க அருமையான இடத்துக்கு பொண்ணை குடுத்துட்டீங்க…” என்றனர்.
“சத்தமில்லாம முடிச்சிட்டீங்க. நான் கூட என்னவோ நினைச்சேன். என்னோட வார்த்தைகளை நான் திரும்ப வாங்கிக்கனும் போல?…” என்றனர்.
“டெக்கரேஷன் யார்? எந்த ஈவன்ட் மேனேஜ்மென்ட்? எனக்கு இன்ட்ரோ குடுக்க சொல்லுங்க உங்க மருமகனை…” என புகழ்ந்து தள்ளிவிட்டனர்.
எல்லாவற்றிற்கும் மேல் நாராயணன் தன் சம்பந்தியுடன் வந்திருந்தார். வந்தவர் முகத்தில் ஈயாடவில்லை.
வரமுடியாது என்று சொல்ல நினைத்த நாராயணன் அவரின் சம்பந்தி சேர்ந்து போவோம் என்று சொல்ல வழியின்றி கிளம்பி வந்திருந்தார்.
வந்தவருக்கு அத்தனை ஆற்றாமை. பார்க்க பார்க்க பொறுக்கவில்லை. அதிலும் எழில்மணி பார்வையில் தெரிந்த கர்வம் சுட்டது.
வசுந்தரா அழைக்க இதனை புகைப்படம் அனுப்பி போனில் சொல்லி சொல்லி மாய்ந்து போனார் நாராயணன்.
அவரின் சம்பந்தி நேராக சென்று பாண்டியனிடம் பேசிவிட்டு வர அவர் செல்லவில்லை.
அவ்வப்போது எழில்மணியின் பார்வை நாராயணனை துளைத்தது. பணமும் போய், நட்பும் போய், நன்மதிப்பும் போய் இப்போது பார்த்து பார்த்து புகைந்துகொண்டு இருந்தார் அவர்.
“ஹ்ம்ம் இருக்குப்பா எக்கச்சக்கமா…” என சொல்லி புன்னகைக்கும் பொழுதே மீண்டும் திருமாங்கல்யம் மேடைக்கு வந்தது.
அனைவரின் ஆசிர்வாதங்களை தாங்கி வந்திருந்த மாங்கல்யத்தை மதுரா பார்க்க சொக்கநாதபாண்டியனின் கைகளை சேர்ந்தது.
“கங்க்ராட்ஸ் மிஸ்டர்.மதுரயாழினி…” என மதுரா சொல்லவும் அந்த பூரிப்பும், கர்வமும் கிஞ்சித்தும் குறையாமல் அவள் வார்த்தைகளை மெய்ப்பித்தான் சொக்கநாதபாண்டியன்.
“ஒனக்குந்தேம் வாழ்த்துக்கள்….”
“என்னை மாதிரி சொல்லுங்க ஒருதடவை….” என்று கேட்க குங்குமத்தை எடுத்தவன் கைகள் அவள் கழுத்தை சுற்றி வகிட்டை தொட்டது.
“கங்க்ராட்ஸ் மிஸஸ்.சொக்கநாதபாண்டியன். மீசைக்கார சொக்கரின் மீனாட்சி…” என்ற கம்பீர குரல் அவளின் செவிமடலை உரசி சென்றது.
“வாவ்…” அவ்வுணர்வுகளை ஒற்றை வார்த்தையில் வெளிப்படுத்தியவள் முகமும் குங்கும நிறம் பூண்டது.
வடிவும் சந்தோஷமாய் மகேஷ்வரி கையை பற்றிக்கொள்ள, காந்திமதி நாயகியை பார்த்து சிரிக்க,
“கெழவி சாதிச்சிட்ட நீ…” என மேடையிலேயே காந்திமதியை தூக்கி சுற்றிவிட்டான் ஜகா.
“ஆத்தீ பொத்துன்னு போட்டுடாதடா…” என அவர் பயத்திலும், சந்தோஷத்திலும் அலற அவ்விடமே கலகலப்பானது.
“போட்டா வெடிக்கிற பொத்துச்சொரக்காவா நீயி?…” என இறக்கிவிட்டவன் அவரின் கன்னத்தை கடித்துவிட்டு,