“நாரா? அம்புட்டையும் புடுங்கி கேப்பைய நட்டுப்புடுவேன். சொல்லி வெய்யி…” என்று மிரட்டலாக சொல்ல,
“நான் கிளம்பறேன்….” என்று எழுந்தேவிட்டார் நாராயணன்.
எறிந்த எரிச்சலுக்கெல்லாம் சேர்த்து இப்போது வாங்கிக்கொண்டு செல்ல வேண்டியதாக அதற்குள் சம்பந்தியும் வர கோபத்தை கூட காட்ட முடியாமல் கிளம்பிவிட்டார் அவர்.
“கெழவி கலக்கிட்ட நீயி…” என மீண்டும் அவரை தூக்கி சுழற்றியவன் இறக்கிவிட்டான்.
“செரி செரி. மொத நம்ம வீட்டுக்குத்தேன் பொண்ணு, மாப்புள்ள வரனும். ஆகவேண்டிய சோலிய பாப்போம்…” என்று அவர்களை முடுக்கினார்.
பந்திகள் நடந்துகொண்டிருக்க மதிய உணவு நேரம் கடந்திருந்தது. மதுராவும் பாண்டியனும் உண்டு முடித்திருந்தனர்.
ஒருபக்கம் அசைவ விருந்து, இன்னொருபக்கம் சைவ விருந்து, அத்தனை வகையில் அமர்க்களப்பட்டது.
மண்டபத்திலிருந்து முதலில் பாண்டியன் வீடு சென்று விளக்கேற்றி சம்பிரதாயம் முடித்து மறுவீடு கிளம்புவதாக இருந்தது.
இருவரையும் அழைத்துக்கொண்டு குடும்பங்கள் சொந்தங்களுடன் கிளம்ப, ஜகாவுடன் எழில்மணி இருந்துகொண்டார் அவனுக்கு துணையாக.
முதலில் வீட்டருகே உள்ள கோவில் கிணற்றில் தண்ணீர் இறைத்து இருவரும் கால்களை கழுவிவிட்டு சாமியை கும்பிட்டு ஒரு குடத்தில் நீரை நிரப்ப அதனை தூக்கி மதுராவின் இடுப்பில் வைத்தான் பாண்டியன்.
“சின்ன கொடந்தேன்ப்பா. சொல்லியே வாங்குனது…” என்று ஒரு கையால் அவளுக்கு கனத்தை தராமல் பிடித்துக்கொண்டான்.
ஏற்கனவே இவை எல்லாம் நடக்கும் என நாயகி சொல்லியிருந்தாலும் மணக்கோலத்தில் செய்ய மதுராவால் முடியவில்லை.
ஆனாலும் மனமுவந்து ஒவ்வொன்றையும் விரும்பியே செய்தாள். இதனை பார்த்ததும் இல்லை. தெரிந்ததும் இல்லை.
மகேஷ்வரிக்கே இது எல்லாம் மறந்திருந்தது. இப்படி தனக்கு நடந்ததா என யோசித்து பார்க்க ஞாபகம் வரவில்லை.
“இந்த சம்பிரதாயமெல்லாம் நிறைய மறைஞ்சுட்டே வருது மது. இன்னும் சில இடங்கள்ல தான் செய்யறாங்க. ஒன்னொன்னுலையும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கும். மலைக்காம செய். காலத்துக்கும் குடும்பத்துக்கு நல்லது…” என்றிருந்தார் மகேஷ்வரி.
கூட்டத்தில் அத்தனைபேரும் பாண்டியனை கிண்டல் செய்ய முடியாமல் மதுராவிடம் தான் திரும்பினார்கள்.