“சாப்பிடலைன்னா போகட்டும். அதனால என்ன குறைஞ்சிடும்?…” என்ற மகேஷ்,
“மது ப்ரெண்ட்ஸ் எல்லாம் ஊரை சுத்தி பார்க்கனும்னு சொன்னாங்கன்னு அத்தை மரிக்கொழுந்தோட அனுப்பி வச்சிருக்காங்க. இன்னும் அந்த பசங்களையும் காணுமே? வந்து ஊருக்கு கிளம்பனும் அவங்க…” என சொல்லிக்கொண்டிருக்க மணமக்கள் வந்துவிட்ட செய்தி.
“வாங்க வாங்க…” என மகேஷ்வரி சொல்ல எழில்மணி எழுந்து வேகமாய் சென்றார் மகளை பார்க்க.
மாலையும் கழுத்துமாக மணக்கோலத்தில் நின்றவர்களை ஆலம் சுற்றி உள்ளே அழைத்து பால், பழம் இங்கேயும் கொடுக்க பாண்டியன் எதுவும் சொல்லாமல் வாங்கிக்கொண்டான் முதலில்.
“அங்க மட்டும் என்னை குடின்னு சொன்னீங்க…” என மதுரா கேட்க,
“அதுக்கு காரணமிருந்துச்சுப்பா. அதான் குடிக்க சொன்னேன். இங்கின கூட குடிச்சிட்டு குடுக்கேன்னா குடியேம். நீ குடிச்ச மிச்சம் போதும்ப்பா எனக்கு…” என்று சொல்ல குப்பென்று சிவந்துவிட்டது அவனின் பார்வைகளின் ரகசியங்கள்.
“ஒன்னும் வேண்டாம் எல்லாரும் பார்க்காங்க…” என மதுரா அவனிடமே தர சம்பிரதாயம் முடிந்தது.
அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட மற்றவர்கள் எல்லாம் பேசிக்கொண்டிருக்க பாண்டினிடம்,
“இப்ப வந்திடறேன். இருங்க…” என சொல்லிவிட்டு எழுந்து மகேஷ்வரியிடம் வந்தாள்.
“என்ன மது வந்துட்ட? அங்க அவர் தனியா உக்கார்ந்திருக்கார்…”
“ம்மா, இது அவங்க ஊர். யாரும் புடிச்சிட்டு போயிடமாட்டாங்க…” மதுரா கிண்டலாக சிரிக்க,
“இதுக்கு முன்ன வந்தது இருந்தது வேற மது. அப்பவே அவர் ரெண்டு நிமிஷம் இங்க உக்கார்ந்து நான் பார்க்கலை. நீ போ. கூட இரு. நான் சொல்றேன்ல…” என மகேஷ்வரி சொல்ல மெல்ல எட்டி வெளியே பார்த்தாள் மதுரா.
உண்மை தான் என்பதை போல விரைப்பாய் அமர்ந்திருந்தான் சொக்கநாதபாண்டியன்.
“ஆமா தான் ம்மா…” என சிரித்தவள்,
“எனக்கு இந்த கடலை மட்டும் வேணும். டீ வேண்டாம். காபி தாங்களேன். தூங்காதது தலை வலி. இதுல துர்கா ரூம்ல ரெஸ்ட் எடுக்க சொன்னாங்க. ஆனா முடியலை…”
“ஏன் மது? அங்க கொஞ்ச நேரம் தூங்கிருக்க வேண்டியது தானே?…” மகேஷ்வரி மகளுக்கு காபி கலக்க பாலை வைத்துவிட்டார்.
“அப்படித்தான் நினைச்சேன். ஆனா ஆள் மாத்தி ஆள் வந்துட்டே இருந்தாங்க. அவங்க வரவும் பேச, ஒரு சிலர்ட்ட ஆசிர்வாதம் வாங்கன்னு நேரம் போயிருச்சு…”
“ஓகே ஓகே, அப்படித்தான் இருக்கும். அடுத்த மாசம் உன்னை கண்டுக்க கூட மாட்டாங்க. புது பொண்ணு கவனிப்பை எல்லாம் இப்பவே என்ஜாய் பண்ணிக்கோ…” என மகளிடம் சொல்லி சிரித்த மகேஷ்,
“நீ போய் உட்கார். நான் கொண்டுவரேன்…”
“அப்படியே அவங்களுக்கும். பால் மட்டும் தான் குடிச்சார். டீ வேண்டாம்ன்னு சொல்லிட்டாங்க…” என்றுவிட்டு வெளியே வந்தாள் மதுரா.
வந்தவள் பாண்டியனருகே வந்து அமர்ந்ததும் யாரும் பார்க்காவண்ணம் அவனின் கையை லேசாய் கிள்ளி வைக்க,
“என்ன பன்ற?…” என்று கேட்டான் கையை அசைத்துக்கொண்டு.
“சும்மா, இப்படி உக்கார்ந்திருக்கீங்க? அதான் நீங்க டீக் வுட்டா, ப்ளைவுட்டா செக் பண்ணேன்….” என்றாள் மீண்டும் கிள்ளி.
“எனக்கென்ன? ஒண்ணுமில்ல…” என தோளை குலுக்கினாள் மதுரா.
“ஆமாப்பா…” பாண்டியனும் அவளின் பாவனையில் சிரிக்க,
“கொஞ்சம் ஓவரா தான் போறேனோ?…” என அவனிடம் கேட்டு,
“அதான் ஹஸ்பண்டாகிட்டீங்களே? போய்த்தான் பார்ப்போம்…” என்று சொல்லி தன் புடவை தலைப்பை வீச பாண்டியனின் மடியில் விழுந்தது.
ஏற்கனவே அவனருகே அவளின் ஒரு கை இருக்க சட்டென பற்றிக்கொண்டான் பாண்டியன்.
“அவுச், இதென்ன இறுக்கமா? விடுங்க…” என்று உருவிக்கொள்ள பார்க்க முடியவில்லை.
முகம் மாறாமல் புன்னகையுடன் அவன் தான் அமர்ந்திருந்தான். ஆனால் அவனின் பிடியில், ஒற்றை விரல் கொண்டு நகத்தால் அவள் உள்ளங்கையை அவன் சுரண்டியதிலும் மதுராவின் முகத்தில் அவஸ்தை.
“யாராச்சும் பார்க்க போறாங்க…” மதுரா கெஞ்சவே செய்ய,
“அத்த நீயி ரோசிக்கலையேப்பா…” என்றான்.
பாண்டியனின் பேச்சு சாதாரணமாக இருக்க அவள் நெளிந்துகொண்டு இருந்தாள் கையை விலக்க முடியாமல்.
சட்டென புடவை தலைப்பை எடுக்க அப்போதும் பிடித்திருந்த கையை அவன் விடவில்லை.
“இது நீங்களே தானா? கையை விடுங்க கிளம்புவோம்…”
“வா இப்பிடியே போவோம்…”
“அப்பப்பா ரொம்பப்பா….” என்று மதுரா மேலும் பேசும் முன் மதுராவின் தோழிகள் வந்துவிட்டனர்.
மகேஷ்வரியும் காபியுடன் வர தானாக கையை விலக்கிக்கொண்டான் பாண்டியன்.
“தேங்க்ஸ் ம்மா…” என்று சொல்லி அதனை எடுத்துக்கொள்ள பாண்டியனும் எடுத்துக்கொண்டான்.
“இப்ப பிடிச்சிருக்கலாம். தப்பில்ல…” மீண்டும் சீண்டல் மதுராவிடம்.
“தப்பாவே பிடிப்போம். என்னவாம் இப்ப?…” என்றதுமே மதுரா விழிகள் விரிய அதற்குள் அவள் தோழிகள் அருகே வந்துவிட்டனர்.
“உங்க ஊர் சூப்பர் மது. இனி அடிக்கடி வரலாம் போல…” என வந்துவிட்டனர் பேசுவதற்கு.
அதில் சில நிமிடங்கள் கரைய பாண்டியனும், மதுராவும் மீண்டும் அவர்கள் இல்லம் புறப்படவேண்டிய தருணம்.