“இவள சொல்லி என்னத்த? எல்லாத்துக்கும் காரணம் எளையவேன்தேன். கெடுத்து வெச்சிருக்கியான். சொல்லொன்னு போட்டா சொரையோன்னா மொளைக்கும்?…” என தன் கழுத்தை வெட்டினார் காந்திமதி.
“இப்ப என்னத்துக்கு பழச தூக்கிட்டு வாரியாம்? இரு அண்ணே வரட்டும். சொல்லுதேம்…”
“அவேன் பெரிய இவேன்? ஒரு இடிக்கு தாங்கமாட்டான். கொமட்டுல ஒரே குத்துதேம்…”
“ஆத்தீ நீயெல்லாம் ஒவ்வயசுக்காத்தா பேசுத? குஸ்தி வாத்தியாராட்டம் கைய பாரு. இன்னிக்கு மேடையில தூக்கினவேன் ஒன்னிய பொத்துன்னு போட்டுருக்கனும். இந்த கொமரி கெழவியான்னு அம்புட்டுருக்கும்…” என சண்டை ஆரம்பித்துவிட்டது இருவருக்கும்.
“அட கம்மின்னிருங்களேன்…” என்ற வடிவு,
“ஏத்தா நீயி போயி ஒறங்கு…” என மகளை சொல்ல,
“இந்நேரத்துக்கேவா?…” என்ற துர்கா வடிவின் முறைப்பில்,
“இங்கின என்ன வாயாடவாடி வந்தீக? மறுவீடு போயிட்டு வாராக. வாசல்ல நிக்க வேணாமா? போங்க. அங்கின போயி நின்னு பேசினா ஆவாதாக்கும்?…” என சத்தம் போட்டுக்கொண்டிருந்தார்.
வடிவுக்கு தலையே கிறுகிறுத்தது காந்திமதி எல்லோரையும் இப்படி ஆட்டிக்கொண்டிருப்பது.
யாரும் அவரை ஒன்றும் சொல்ல போவதில்லை தான். ஆனால் இத்தனை அதட்டி சொல்லவும் தேவையில்லையே என நினைத்தவர்,
“நீ போ பரமு…” என அவரை அனுப்பினார்.
“செரி, நா போயி ஆரத்திய கரைக்கிதேன்…” என பரமேசு எப்போதும் போல சிரித்த முகமாக வாசலுக்கு செல்ல சோமு முணுமுணுத்துக்கொண்டே சென்றார்.
அதனையும் இடுப்பில் கைவைத்து முறைத்துக்கொண்டே தான் பார்த்தார் காந்திமதி.
“ஏம்த்தா பேசாம நாளைக்கி மறுவீடு அனுப்பிருக்கனுமோ? இருட்டுன பொறவு வர சொல்லிப்பிட்டோம்…” என காந்திமதி வடிவிடம் கேட்க,
“சடங்கு இங்க தான த்தே நடக்கனும். இப்ப என்ன நாலு தெரு தாண்டி இருக்கு. வாரப்ப கோவிலுக்கு போயிட்டு வர சொல்லிருக்கேம்…” என்றார் வடிவு.
அவர்கள் பேசிக்கொண்டிருக்கையில் மணமக்கள் வீடு வந்துவிட்டனர். அடுத்தடுத்ததாய் இருக்கும் உறவுகளுக்கு இரவு உணவு என்று நேரம் செல்ல பாண்டியன் வெளியில் ஆண்களுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தான்.
“எம்புட்டு நேரம் பாரு. இருக்கறவனுங்களுக்குத்தேன் புத்தியில்லன்னா இவேனுமில்ல ஒக்காந்திருக்கியான்?…” என அப்பத்தா தான் இங்குமங்குமாய் பார்த்துக்கொண்டிருந்தார்.
மதுராவிற்கு புடவை தந்து மாற்றிவர சொல்லிவிட்டு மற்றவர்களை எல்லாம் சாப்பிட வைத்து அனுப்பிக்கொண்டிருந்தார்.
இருந்ததில் பெரும்பாலானோர் சென்றுவிட இருபது பேர் போலதான் இருந்தார்கள் அங்கே.
பாண்டியனும் எழுந்து உள்ளே வர பேரன் வந்ததும் குடுகுடுவென்று ஓடினார் அவனிடம்.
சென்ற வேகத்தில் நிற்கமுடியாமல் அவன் மீதே விழ பிடித்து நிறுத்தினான் பாண்டியன்.
“மெல்லத்தான் வாயேம்த்தா நா எங்கிட்டாச்சும் ஓடியா போறேன்?…” என கடிய,
“எங்க, நீதேம் அவேனுங்க கூட பாடு பேசுதியே? இன்னிக்கு என்ன நாளுன்னு நெனப்பிருக்கா?…” என சொல்லும் பொழுதே காந்திமதி முகமெல்லாம் பல்லாய் மாற,
“அப்பத்தா…” என்று சிரித்துவிட்டான் பாண்டியன்.
“ஒனக்கிருக்க குசும்புக்கு. போ கெழவி…” என்று அவனறைக்கு செல்ல போக,
“அட நில்லுய்யா ராசா…” என அவனின் கையை பிடித்து நிறுத்தினார்.
“உள்ள ஒனக்கு உடுப்பு வெச்சிருக்கேம். குளிச்சு மாத்திக்கி வா. நல்ல நேரம் ஆரம்பிக்குது…” என்று நாணி கோணி சொல்ல,
“ஒழுங்கா நின்னு சொல்லத்தான. மறுக்கா விழுந்து வெக்காத…” என சொல்லி சென்றான் அவன்.
உடைமாற்றி வருகையில் மதுரா தயாராகி அமர்ந்து பேசிக்கொண்டிருந்தாள் அங்கிருந்த பெண்களுடன்.
பாண்டியன் வந்ததும் அவன் முதல் பார்வை அவள் அணிந்திருந்த புடவையை தான் பார்த்தது.
“மாத்திட்டாளா?…” என முணங்கியபடி வர இருவரையும் சாமி கும்பிட வைத்து முதலில் அவனை உள்ளே அனுப்பினார்கள்.