அதுவரை வேறு பேசிக்கொண்டு நின்றிருந்தவர்கள் மதுராவிடம் எப்படி பக்குவம் சொல்ல என ஒருவர் முகத்தை ஒருவர் மாற்றி மாற்றி பார்க்க,
“அட யாராச்சும் சொல்லைத்தான?…” என்றார் காந்திமதி.
என்னதான் பேசி வருகிறார்கள் பார்ப்போம் என்று அவளும் மௌனமாக வேடிக்கை பார்க்க சட்டென அவளிடம் பேச இதில் தயக்கம் காட்டத்தான் செய்தனர்.
“அது வந்தும்மா…” என்று பரமேசு சொல்லும் முன்,
“அட இதுக்கு போய் நீட்டி நிமித்து, நெளிச்சு சுளிச்சின்னு?…” என்ற கேலிக்கார பெண்,
“இந்தா மெட்ராசு பொண்ணு. எல்லா சொல்லும் வெளங்கனுமின்னு இல்ல. நீயி உள்ள போ. மத்தத அவகளே பாத்துக்கிடுவாக. எல்லாத்துக்கும் செரின்னு சொல்லு. பயப்படாத…” என்று வீறுகொண்டு பேச மதுரா பக்கென்று சிரித்துவிட்டாள்.
‘பயப்படாதடா, பயப்படாத’ என்னும் காட்சி தான் இதற்கு ஞாபகம் வர இன்னுமே சிரித்தாள்.
“இதென்ன பொக்குன்னு போச்சு? உசுரக்குடுத்து வெக்கப்படாம நா சொன்னா, சிரிச்சிப்போடுச்சு? நா செரியாத்தான சொன்னேன்?…” என அந்த பெண்ணே கேட்டுக்கொள்ள,
“இவ வேற…” என்று தலையிலடித்துக்கொண்டார் காந்திமதி.
“நானே பேசிக்கிடுதேம் எம்பேத்திக்கிட்ட…” என்றவர் கொஞ்சம் தள்ளி மதுராவை அழைத்து வந்தார்.
“ம்க்கும், ஊரறிஞ்ச ரகசியந்தேம்….” என காந்திமதியின் செயலை சொல்லி அந்த பெண்கள் சிரிக்க,
“தாவங்கட்டய தவிட்டுக்கு கூட வாங்கமுடியாதுடி. கம்மின்னிரு…” என வரிந்து கட்டினார் காந்திமதி.
“நீங்க என்கிட்ட கோவப்படாம சொல்லுங்க பாட்டி…” என மதுரா அவரை பிடித்து நிறுத்தவும்,
“அதேம் த்தா. இன்னிக்கு விசேசம்…” என சிரிக்க,
“ஆமா விசேஷம். கல்யாணம் முடிஞ்சிருக்கே…” என மதுரா.
“இது ஆவறதில்ல. இந்தாருத்தா, இன்னிக்கு சூதானமா நடந்து வெரசா நாலு புள்ளைய பெத்து எங்கையில குடு. அத்த வளத்துவிட்டுப்போட்டு அக்கடான்னு போவேன் நானு…” என காந்திமதி சொல்லவும்,
“இப்பத்தான் பர்ஸ்ட் நைட் ரூம்க்கே போறேன். அதுக்குள்ளே அமேசான்ல ஆடர் குடுக்கற மாதிரி புள்ளை வேணும்ன்றீங்க? அதுவும் ஒண்ணில்ல ரெண்டில்ல. நாலு?…” மதுரா கிண்டலாக கேட்க,
“அமேசானா? அது பெரிய்ய காடு தானத்தா?…”
“அங்க புள்ளை எல்லாம் இருக்காது பாட்டி…” என்றவள்,
“எனக்கு ரெண்டுவருஷத்துக்கு பிள்ளையெல்லாம் வேண்டாம்ன்னு இருக்கேன்….” என ரகசியம் போல மெல்ல சொல்லி அவரை வம்பிழுத்தாள்.
“அதேம் சொல்லுதேன்த்தே. வளத்துவிட்டுட்டு போய் சேருவேன்னு சொன்னீகள. அப்ப புள்ள வாரவரைக்கு நல்லா இருப்பீகன்னு தான் சொல்லிட்டு போறா. இதுக்கு போயிட்டு…” என வடிவு சிரிக்க,
“பாரேன், இந்த பட்டணத்துப்புள்ள பேச்சுல கூட எம்பிட்டு சூதானமின்னு. எங்கிட்டயேவா?…” என்றார் காந்திமதி.
“ஆனாலும் புள்ள வேகந்தேம். எம்பேரன் என்ன செய்யுவியானோ?…” என சத்தமாக சொல்ல மற்றவர்கள் அதில் சிரித்துவிட்டனர்.
அறைக்குள் நுழைந்த மதுரா கதவை அடைத்துவிட்டு திரும்ப பாண்டியன் கட்டிலில் அமர்ந்திருந்தான்.
கட்டிலருகே புதிதாய் ஜமுக்காளம் பெரிதாய் விரிக்கப்பட்டிருக்க அதில் பூவை தூவி தலையணைகள் போட்டு அருகே பழங்கள், அகர்பத்தி, பூக்கள், இனிப்புகள் என்று இரண்டு மூன்று தாம்பாளங்கள் நிறைந்திருந்தது.
“இப்ப கூட இதுவும் ஃபாலோ பண்ணுவாங்களா?…” என கேட்டுக்கொண்டே கொண்டுவந்த பாலை அதனருகே வைத்துவிட்டு பாண்டியன் முன் வந்தமர்ந்தாள்.
“வெளில என்னப்பா கலாட்டா?…” என பாண்டியன் கேட்க,
“சும்மா, பாட்டியை கிண்டல் பண்ணிட்டிருந்தேன்…”
“ஹ்ம்ம்…” என்றவன் அவள் முகத்தை பார்த்துகொண்டிருக்க இலகுவாய் இருப்பதை போல் மதுரா இருக்க அவளின் விரல்களை பற்றினான் .
“ஏன் சேலைய மாத்திட்டப்பா?…” என்று கேட்க மெல்லிய விரல்களின் நடுக்கம் அவன் உணர்ந்தான்.
“இன்னைக்கு இப்ப இதுதான் கட்டனும்ன்னு சொன்னாங்க. வேணும்ன்னா சொல்லுங்க. போய் அந்த புடவையே மாத்திட்டு வரேன்…”
“வேணாம், இதுவும் நல்லாயிருக்கு…” என சொல்லியபடியே அவனின் விரல்கள் மதுராவின் வளையல்களை உருட்டியது.
“கேட்கனும்ன்னு நினைச்சேன். ஆமா ஏன் பாலை என்னை குடிக்க சொன்னீங்க? எல்லாரும் எவ்வளோ கிண்டல்?…” என பேச்சை மாற்றினாள்.
பேச்சினூடே கையை லேசாய் தன் பக்கம் இழுத்துக்கொண்டவள் பார்வை அந்த அறையை சுற்றி வந்தது.
“இது மீனாட்சி ஆட்சி செய்யுதா ஊருப்பா. எங்க வீட்டுலையும் மீனாட்சி ஆட்சிதேம். இப்ப நீயி வந்திருக்க. என்னதேன் நா சோலின்னு பாத்தாலும் ஆத்தா, அப்பத்தாதேம் எனக்கு முன்னால. அதேம் மொத உரிமை ஒனக்கு…” என்று சொல்ல புன்னகையுடன் பார்த்தாள்.
இன்னுமின்னுமே அவனை அத்தனை பிடித்தது மதுராவிற்கு. பாண்டியனின் முகத்தையே பார்த்துக்கொண்டிருக்க,
“இன்னொன்னுமிருக்கு…” என்றவன் கைகள் மீண்டும் அவளின் கையை எடுத்து வருடிக்கொண்டே,
“அன்னிக்கு தோப்பு பம்புசெட்டுல தண்ணிய அள்ளி குடிச்சியே. ஒங்கையால எனக்கும் குடிக்க தோணுச்சு. அதேம் திரும்பிக்கிட்டேன் தப்புடான்னு. இன்னிக்கு அத்துக்கும் சேர்த்து தேத்திக்கிட்டேன்…” என்று சொல்ல,
“நெனச்சா தப்பில்லையாமா?…” என கிண்டல் பேசினாள் மதுரா.
“இன்னிக்கு, இனிமே எதுக்குமே தப்பில்ல….” என சொல்லியபடியே நெருங்கி வர,
“உங்க ரூம் நல்லாயிருக்கு. பர்ஸ்ட் டைம் வரேன்…” பதட்டத்தை குறைக்கும் பொருட்டு சட்டென எழுந்து நின்றுகொண்டாள்.
பாண்டியனும் எழுந்துவிட மெல்ல பாதங்கள் முன்னேற அவளை தொடர்ந்தது அவனின் பாதங்களும்.
“இது என்ன?…” என்று கேட்டு ஒவ்வொன்றாய் அவனிடம் விளக்கம் கேட்க பொறுமையாய் சொல்லி முடித்தான் பாண்டியன்.