மதுராவிடம் ஆழ்ந்த உறக்கம் சுத்தமாய் இல்லை. இங்குமங்கும் புரண்டு மீண்டும் கணவனின் தோளில் தலையை வைத்துக்கொண்டாள்.
தரையில் படுத்து பழக்கமில்லாதவளுக்கு முதல் அனுபவமும், அதுவும் திருமணத்தின் முதல்நாள் அனுபவமும் என உறங்கா இரவை பரிசளித்திருந்தது.
சொக்கநாதபாண்டியனின் தோளில் தலையை வைத்ததும் சட்டென விழித்துக்கொண்டவன் பார்வை மனைவியை தொட சுளித்த புருவங்களுடன் அவள் முகத்தில் அசௌகர்யம்.
அயர்வு கூட அவளை ஆழ்ந்த தூக்கத்தை அளிக்கவில்லை. மீண்டும் மறுபக்கம் திரும்பி படுக்க எழுந்துவிட்டான் பாண்டியன்.
“மதுரா…” என எழுப்ப,
“ஹ்ம்ம், கொஞ்சம் தூங்கனும் சொக்கரே…” என்ற சிணுங்கல் மட்டுமே அவளிடம்.
நேரத்தை பார்த்தான். நான்கு மணி என்றது. அதற்கு மேல் எதற்கு என மதுராவை கைகளில் அள்ளிக்கொண்டவன் கட்டிலில் படுக்க வைக்க அரை தூக்கம் இன்னும் கொஞ்சம் கலைந்தது.
“என்னாச்சு?…” என கேட்டு அவள் விழித்தாள்.
“விடிய போகுதுப்பா…”
“எந்திக்கனுமே? அஞ்சு மணிக்கே குளிச்சிடனுமாம். சொன்னாங்க…” என அமர்ந்து கண்ணை கசக்க சிரிப்பு தான் வந்ததும் பாண்டியனுக்கு.
“போதும்த்தா, இப்பிடி எந்திச்சு ஒக்காந்தா நாம இன்னிக்குள்ள வெளில போவ முடியாது. நேரமிருக்கு. நானே எழுப்புதேம். இப்ப செத்தநேரம் இங்கின ஒறங்கு…” என்றவன் கழுத்திலிருந்த சங்கிலியை பிடித்து தன் முகம் நோக்கி இழுத்தவள்,
“நீங்களும் வாங்க…” என்றாள்.
“வாரேம், வாரேம். நீயி ஒறங்குவியாம்…” என்று சொல்லி குளியலறையை பார்க்க, சரி தலையசைத்துவிட்டு கண்ணை மூடிக்கொண்டாள்.
அத்தனை நேரமில்லாத உறக்கம் பஞ்சுமெத்தையில் சட்டென்று அவளை அள்ளிக்கொள்ள நொடியில் கண்ணயர்ந்தாள்.
மதுரா ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றதும் கீழே விரித்திருந்த பாய், ஜமுக்காளத்தை எடுத்துக்கொண்டான்.
குளியலறையில் எல்லாவற்றையும் நனைத்து தங்கள் அறைக்குள் பின்னாலிருந்த கொடியில் உலர போட்டவன் தானும் குளித்துவிட்டு வர வெளியே மருதுவின் சத்தம்.
பின்பக்க வழியாகவே சென்றுவிட்டான் அவன். ஐந்து மணிக்கு வந்து மதுராவை எழுப்பிக்கொள்ளலாம் என வந்தவன் மருதுவுடன் இருக்க அதற்குள் பாலை கறக்க ஆட்கள் வந்துவிட்டனர்.
வீட்டோடு பசுக்களும் இருக்க மாட்டு கொட்டகையை சுத்தம் செய்ய ஒருவரும், பாலை கறக்க ஒருவரும் என வேலையை பார்த்தனர்.
பாண்டியன் இருளில் மருதுவோடு அங்கே நின்றிருக்க வந்தவர்களும் கவனிக்கவில்லை இவனை.
பாலை கறந்து முடித்து முன் வாசலுக்கு செல்ல சத்தமில்லாமல் நாசியை நிறைத்தது அவள் வாசனை.
மெல்ல பூனை நடையிட்டு வந்தவளை கண்டுகொண்டவன் இருளில் இன்னும் மறைந்தான்.
“மிஸ்டர்.சொக் இங்க தான் இருக்கீங்க. நான் பார்த்துட்டேன். நீங்களே வந்திருங்க…” என மதுரா மெல்லிய குரலில் அழைக்கவுமே வெளியே வந்தவன் கைகள் அவளை சுற்றிக்கொண்டது.