“சூட்டுக்கு நல்லதுப்பா. காரணமா தான் குடுப்பாங்க. குடி…” என காரணத்தையும் சொல்லி தர,
“ப்ளீஸ் நான் மேனேஜ் பண்ணிப்பேன். நல்லா தானே இருக்கேன்…” என்றவளை பாதியை குடிக்க வைத்துவிட்டு விலகியவன்,
“வெந்தையக்கஞ்சி வரும் கொஞ்ச நேரத்துல. அதுக்குள்ளே ஒறங்கி எந்தி…”
“என்னது? இதுவே வயிறு ஃபுல்லாகிருச்சு. என்னால முடியாது…” என்றவள்,
“இதெல்லாம் ஒரே நாள்ல எப்படி முடியும்? டயர்ட், தூக்கமில்லை, இதோட சாப்பிட முடியுமா? ஆளை விடுங்க…”
“அப்ப இத்த என்ன செய்யிததாம்?…”
“நீங்களே குடிப்பீங்கலாம். இல்லைன்னா வைங்களேன். தாகமெடுத்தா குடிச்சிப்போம்…” என சொல்லிவிட்டு,
“நான் வேற ட்ரெஸ் மாத்திக்கட்டுமா? அம்மா என்னை எழுந்ததும் சேரி கட்டிக்க சொன்னாங்க. வெளில போறப்போ வேற சேரி கட்டிக்கறேன். இளநீ சிந்தி ஈரமாகிருச்சு. பிசுபிசுன்னு…” என்று சொல்ல தலையசைத்தான் பாண்டியன்.
இரவு உடையில் முகம் கழுவிவிட்டு தலையை நன்றாக விரித்து ஒரு கையால் விசிறிக்கொண்டே வர பாண்டியன் ஒரு கையை தலைமேல் வைத்து படுத்திருந்தான்.
“அந்த கதவ சாத்திட்டு வாப்பா…” என்று சொல்ல மதுரா அடைத்துவிட்டு வரவும் விளக்கை அணைத்தவன் இன்னொரு கையால் அவளையும் அணைத்தான்.
மீண்டும் விழிக்கையில் இளநீரோடு நின்றவனை முறைத்து பார்க்க பாண்டியன் முகத்தில் குறுஞ்சிரிப்பு.
“இப்ப குடிக்கலாந்தான?…” என்றவனை பார்த்தவளுக்கும் தேவையாய் இருக்க இப்போது தெளிவாய் போனியில் வாங்கிக்கொள்ள அட்டகாசமான சிரிப்பு பாண்டியனிடத்தில்.
“எத்தனை தடவை உங்களை நல்லா சிரிங்க சிரிங்கன்னு நான் கேட்டு இப்ப நான் பல்ப் வாங்கறேன்னு இப்படி சிரிக்கறீங்க? வச்சிக்கறேன்…” என்று அவனிடம் காலி போனியை நீட்டிவிட்டு உறக்கத்தை தொடர ஒருமணி நேரம் கழித்து கதவு தட்டப்பட்டது.
பரமேசு தான் நின்றிருந்தார் கையில் இரு தம்ளர்களுடன். வெந்தையக்கஞ்சி சூடாக இருந்தது அதில்.
“இத குடிச்சிட்டு ஒரு அரைமணிநேரம் போவ ரெண்டுபேரும் வருவீயலாம்…” என சொல்ல,
“நாங்க வாரோம். இத்த அங்கயே வெய்யிங்க த்தே…” என அனுப்பிவிட்டு கதவை அடைத்துவிட்டு வர மதுராவும் துரிதமாக குளித்துவிட்டு வந்திருந்தாள்.
“வர சொன்னாங்களா? எல்லாருமா இருக்காங்க?…” என கேட்டுக்கொண்டே தலையை வார,
“பாக்கலப்பா. நீயி சேல மாத்து. வாரேம்…” என தன்னுடைகளை எடுத்துக்கொண்டு குளித்துவிட்டு வர மதுரா தயாராக இருந்தாள்.
“போலாம்…” என்றவளுடன் வெளியே வர அங்கே ஒரு கும்பலே காத்திருந்தது.
“இன்னைக்கு தான் கல்யாணம்ன்னு நினைச்சிட்டாங்களோ?…” என மெல்லிய குரலில் கிண்டல் பேச,
“அவகளாம் நமக்கு சொந்தக்காரங்க…” பாண்டியன் அதட்டலுடன் சொல்ல,
“அப்பப்பா பயந்துட்டோம்…” என்று அவனின் அதட்டலை பெரிதுபடுத்தவில்லை மதுரா.
வடிவையும் காந்திமதியையும் காணவில்லை. மற்றவர்கள் அனைவருமே இருக்க பரமேசு தான் சாமியை கும்பிட்டு வரும்படி சொல்லி அவர்களுடன் இருந்தார்.
சாமி கும்பிட்டு முடிக்க யாரோ அழைத்ததன் பேரில் பாண்டியன் பார்க்க செல்லவும் மதுரா பரமேசுடன் பேசியபடி வந்தாள்.
“எங்க பாட்டியை காணும்?…” மதுரா கேட்க,
“உள்ள இருக்காகத்தா. இப்ப வரைக்கி இங்கினதேம் சுத்திக்கிட்டே கெடந்துச்சு, என்னாச்சோ என்னன்னு தவிச்சிக்கிட்டு. இப்ப வெளில நீங்க வரவும் உள்ள போயிருக்கு…” என சிரித்தவர்,
“மொத ராத்திரி ஆகவும் மொதல்ல அந்த புள்ள வெளில வாரப்ப யார பாக்குதான்னு ஒரு சடங்கு இருக்குத்தா. அதேம் அவகளா உள்ள போயிட்டாக…” என்று சொல்ல மதுராவிற்கு அத்தனை வருத்தம்.
“ஓகே, நான் பார்க்கறேன்…” அவள் உள்ளே செல்ல போக,
“வருவாங்கப்பா. அதேம் இத்தன பேத்த பாத்துட்டேல? வருவாக. நீயி வந்து ஒக்காரு…” என அழைக்க,
“இல்ல இல்ல. நான் பார்த்துட்டு வரேன்…” என அடுக்களைக்கு சென்றாள் மதுரா. உடன் பரமேசும் கூடவே வந்தார்.
அங்கே அடுப்பின் அருகில் வடிவு ஓரிடத்தில் நிற்க காந்திமதி கீழே காலை நீட்டி அமர்ந்திருந்தார்.
“ஏம்த்தா ஆர பாத்துருப்பா பேத்தி? எல்லா சொவமா முடிஞ்சதுன்னு சொன்னியே. எம்பேரன நா பாக்காம போனேம்பாரு?…” என்று வெற்றிலையை இடித்துக்கொண்டே,
“ரெட்ட புள்ள பொறக்குமா? ரவைக்கு ஒறக்கமே வல்லத்தா. இந்த புள்ள வெளாட்டுக்கு சொல்லிட்டு போனாலும் மனசு கெதக்குன்னுச்சு. புள்ள பெக்குததுக்குள்ள என்னிய கொண்டுபோயிடாதம்ய்யான்னு வேண்டிகிட்டே கெடந்தேம்…” என்று சொல்ல மதுரா சப்தம் எழுப்பவே இல்லை அவர் பேச கேட்டு.
“மண்டைக்குள்ள ஒரே கனப்பு. ஒறக்கமில்லாம கனத்து கெடக்கு. ரவையில ஒரு வடியா வேற வந்துச்சா, இந்தா உசுரு போச்சோன்னு பயந்து போயிட்டேன் பாத்துக்கிடு…” என்றார் காந்திமதி.
“அப்ப பிறக்கற பிள்ளை உங்களை மாதிரி, என் அத்தையை மாதிரி தைரியமா இருக்க வேண்டாமா? எந்த சூழ்நிலையிலையும் எல்லாத்தையும் தாங்க வேண்டாமா? இப்படி ஒளிஞ்சிக்கிட்டா எப்படியாம்?…” என்று சொல்லவும் கண்களை திறந்தார்.
“அப்பத்தா மொத எந்திச்சி நில்லு. ஒங்காலுல விழனும். அப்பதவே தேடுனேம்…” என பாண்டியனும் வந்து அதட்ட,
“கெழவி இப்ப என்னத்துக்கு பொண்ணாட்டம் வெக்கப்பட்டுக்கிட்டு இருக்க? எந்தி மொத…” என ஜகா துர்காவிடம் கண்ணை காண்பிக்க இருவருமாக காந்திமதியை பிடித்து எழுப்பினார்கள்.
“அட விடுங்கடா. எல்லாம் ஒரு காரணமாத்தேம். இதெல்லாம் வழக்கமா நடக்குதது தான? மொதநாலு மங்களமா ஆரம்பிக்குததுதேம் புதுசா கலியாணமானவகளுக்கு நல்லது…” என்றவர் முகம் வாடி இருந்தது.
“எல்லாத்துக்கும் மனசு தான் வேணும்ன்னு சொல்ற நீங்களா பாட்டி இப்படி பேசறீங்க? உங்களை விட, அத்தையை விட மத்தவங்க வாழ்த்தும், ஆசிர்வாதமும் எப்படி உயர்ந்திருக்கும்? எனக்கு புரியலை. நாளைக்கு இதேதான் எனக்குமா?…” மதுரா பட்டென்று கேட்டுவிட்டாள்.
“ஆத்தீ, ஆத்தீ. என்ன வார்த்த சொல்லிட்ட?…” என்று கதறிவிட்டார் காந்திமதி.
“ஒவ்வாயால, ஐயோ ஐயோ. நா என்ன செய்யுவேன். வடிவு? கேட்டியா? இத கேக்கவா? இதுக்கா இம்பிட்டு பாடு?…” என மருமகளையும் இழுத்துக்கொண்டார்.
“என்னப்பா?…” பாண்டியன் மதுராவை வருத்தமாக பார்க்க,
“நான் தப்பா எதுவும் சொல்லலைங்க. பெத்த தாயை விட, பெத்த தாய்க்கு மேல இந்த குடும்பத்தை பார்த்தக்கற பாட்டியை விட, அவங்க மனசை விடவா பெருசு இந்த சம்பிரதாயம். ஃபுல் ஷிட்…” என்றாள் மதுரா.
“அடி தூள்…” ஜகா கைதட்டி ஆர்ப்பரிக்க,
“அழாத கெழவி, ஒம்பேத்திக்கு இப்ப தண்டட்டியவே நீ கழட்டி குடுத்திருக்கனும். சும்மா எல்லாத்திலையும் ஒதுங்கினா? ஒங்க ரெண்டுபேத்த தாண்டி தான மத்தவக…” பாண்டியனும் அதட்டி சொல்ல கண்ணீர் கசிந்துகொண்டிருந்தது அவருக்கு.
“நெருப்புன்னா வாய் வெந்துராது கெழவி…” என மீண்டும் ஆறுதலாக சொல்லி,
“வாப்பா…” என்றவன் மதுராவுடன் காந்திமதி, வடிவின் காலில் விழுந்து எழுந்தான்.
“இன்னிக்கு காலையில இருந்து எங்களை பார்க்க நீங்க தேடுவீங்கன்னு நினைச்சா தேடவே இல்லை நீங்க. இதுல நாலு பிள்ளை வேணுமாக்கும்? அதெல்லாம் முடியாது முடியாது…” என கோபம் போல சொல்லியவள்,
“நாளைக்கு முதல்ல உங்க முகத்துல தான் முழிப்பேன் பாட்டி. இன்னைக்கு கணக்குக்கு தான் பிள்ளை பிறக்குமா என்ன? நாளைக்கு கணக்குல பிள்ளை உருவாச்சுன்னா?…” என்று காந்திமதி காதில் சொல்ல அவர் அழுகையை நிறுத்திவிட்டு ஆவென்று பார்த்தார் மதுராவை.