“என்னாச்சுப்பா, தல நோவுதா?…” என கேட்டு அவள் உச்சந்தலையில் பாண்டியன் கையை வைக்கவும் சோர்வுடன் அவனின் வயிற்றில் தலைசாய்ந்தவள் அவனிடுப்பில் தன்னிரு கைகளால் கோர்த்துக்கொண்டாள்.
மதுராவின் கண்கள் அவனின் அருகாமையில் தாமாக மூடிக்கொள்ள மெதுவாய் அவளின் கூந்தலை கோதிவிட்டான் பாண்டியன்.
“சொக்கரே நம்ம வீட்டுக்கு போவோமா?…” என்ற கேள்வியை சில நொடி அமைதிக்கு பின் மதுரா கேட்க சற்றும் எதிர்பார்க்கவில்லை அவன்.
“என்ன மதுரா?…” என அவள் கையை விலக்கி அருகில் அமர்ந்துவிட்டான்.
“ப்ச், உடனே டென்ஷனா? நத்திங். அங்க போகனும்னு தோணுச்சு. எல்லாரும் இங்க இருக்கோம். அங்க பாட்டியும், அத்தையும் மட்டும் தனியா இருப்பாங்க. ஜகாவும் வீட்டுல இல்லை…” என்றவள் முகத்தில் அவனின் அழுத்தமான பார்வை படர்ந்திருக்க,
“அப்ப நான் இழுத்துட்டு வந்தா பிரச்சனை இல்லையா பாட்டி? அவங்க தான இழுத்துட்டு வர கூடாது?…” என்று கிண்டலாக அவள் கேட்கவும் காந்திமதி முழித்தார்.
“இப்ப இதுக்கு நா என்னத்த சொல்லுவேன்?…” என தாடையில் கவலையாய் கை வைக்க அடக்கமாட்டாமல் சிரித்துவிட்டாள் மதுரா.
“என்னை தூக்குவேன்னு சொன்ன உங்க பேரன் அதை கூட செய்யலை. இப்ப இதை செஞ்சிடுவாரா? பெருமை தான் உங்களுக்கு…” என வம்பிழுக்க,
“ம்க்கும், தான கனியட்டுமின்னு ஏ ராசா விட்டு வெச்சா ரொம்பத்தேன்…” என்றார் அவரும் நீட்டி முழக்கி.
“இப்பவும் உங்க பேரனை நான் தான் ஸ்கெட்ச் போட்டு தூக்கிருக்கேன். அது ஞாபகம் இருக்கட்டும் பாட்டி…”
“என்னது? எங்க சொல்லு சொல்லு?…” என வேகமாய் வந்தார்.
“என்ன சொல்ல? அதான் எல்லாருக்கும் தெரியுமே? நான் தான் வந்து பேசினேன். எனக்கு பிடிச்சிருக்குன்னு சொன்னேன். அப்பவும் உங்க பேரன் சரிப்பட்டு வரலையே. கடைசில அவர் மண்டையை நான் தான் கழுவினேனா பார்த்துக்கோங்க…”
“அட ஆமா…” என்றவர் முகம் போன போக்கில் மதுரா இன்னும் சிரிக்க,
“இப்ப என்ன? ஆரு ஆர தூக்குனாலும் கலியாணம் முடிஞ்சதுல. எனக்கு போதும்த்தா. ஆமா அந்த காட்டுல புள்ளையளுக்கு ஆடரு சொல்லிட்டியா?…” என்று கேட்கவும்,
“கேடி பாட்டி…” என கட்டிக்கொண்டாள் மதுரா.
சற்று நேரத்தில் காந்திமதி கிளம்பவும் வீட்டில் இருந்த அக்கம்பக்கத்து சொந்தங்களும் கிளம்ப வீட்டினர் மட்டுமே எஞ்சி இருந்தனர்.
“மதுரா அவருக்கு மாத்து ட்ரெஸ் எடுத்து குடுத்துட்டு வா. நான் பாலை காய்ச்சி வைக்கறேன்…” மகேஷ்வரி சொல்லி அனுப்ப உள்ளே பாண்டியன் போனில் பேசிக்கொண்டிருந்தான் ஜகாவிடம்.
அவனை தொந்தரவு செய்யாமல் அவனுக்கான லுங்கியையும், பனியனையும் எடுத்து கட்டிலில் வைத்தவள் சைகையில் அவனிடம் காண்பித்துவிட்டு கிளம்ப போக,
“பொறவு கூப்புடுதேன் ஜகா…” என சொல்லி மதுராவை கைபிடித்து சுழற்றி பின்னிருந்து அணைத்தவன் தன் போனை கட்டிலில் தூக்கி போட்டான்.
“என்னவாம் சொக்கருக்கு?..” என வாகாய் பொருந்தி நின்றவள் தன் முகத்தை அவன் பக்கம் லேசாய் திருப்பினாள்.
“எக்கச்சக்கமா இருக்குப்பா…” சன்னமான புன்னகையுடன் கிசுகிசுப்பாய் அவன் பதில்.
“போய் பாலை மட்டும் வாங்கிட்டு வருவேனாம்…” மதுரா கொஞ்சலாக.
“கெழவிக்கிட்ட என்னமோ சொன்னியே? என்ன சொன்ன?…” என்றதும்,
“பாட்டி என்னவோ என் பேரன் அப்படி இப்படின்னு சரியான பெருமை பீத்தல் களஞ்சியம். அதான் அப்படி எதுவுமில்லை. இப்பவும் உங்க பேரனை நான் தான் தூக்கிருக்கேன்னு சொன்னேன்…” என்றாள் கேலி புன்னகையுடன்.