“நான் தூக்கிடுவேன். அப்பறம் நீங்க தான் தோத்துபோவீங்க…” மதுரா கொஞ்சமும் அசராமல் பேச,
“நான் ஏன் தோக்க போறேம்?..” என்றவன் அவளை தன்னருகே கைகளுக்குள் கொண்டுவந்தவன்,
“புருசென், பொஞ்சாதிக்குள்ள ஆரு செவிச்சாலும் சந்தோசம்தேன். நீ செவிச்சா நா செவிச்சதா இல்லையாக்கும்?…” என கேட்டவனை இன்னும் இன்னும் பித்துப்பிடிக்கும் அளவிற்கு பிடிக்கத்தான் செய்தது மதுராவிற்கு.
“பேசாம நீங்க என்னை பர்ஸ்ட் டைம் பொண்ணு கேட்டப்பவே நாம கல்யாணம் பண்ணியிருக்கலாம். வேஸ்ட் வேஸ்ட்…” என முணுமுணுக்க அவள் சொல்லியதை கேட்டவன் முகத்தில் அப்படி ஒரு சிரிப்பு.
ஆளை கவிழ்க்கும் புன்னகை என்று தான் கூற வேண்டுமோ? தோரணையும், தோற்றமும், கண்கள் குளிர்ந்த புன்னகையும் பார்ப்பவளையும் சில்லிட செய்தது சுகமாய்.
“உங்களுக்கு யார் இந்த பேர் செலெக்ட் பண்ணினா? சொக்கநாதபாண்டியன். சொக்கவைக்கும் பாண்டியன்…” என்றாள் கண் சிமிட்டி.
“பேச்சை மாத்தற பாரேன்? தூக்குன்னு சொன்னேம்…”
“நிஜமாவே தூக்கிருவேன்…”
“அதான நானும் சொல்லுதேன்ப்பா…” என்றான் மீசையை நீவியபடி தயாராக நிற்பதை போல.
‘வா வா’ என தன் இரு கைகளை உயர்த்தி அருகே மனைவியை அழைத்தான் பாண்டியன்.
சிரிப்புடன் சற்று தள்ளி நின்றவள் கையை தயார் நிலைக்கு கொண்டுவந்து இலகுவாய் அவள் தூக்க எதுவாய் நின்றிருந்தவனை லேசாய் தூக்கி இறக்கிவிட்டாள் அவனை.
தூக்கினாள் என்பதை விட அசைத்து நகர்த்தி என்றும் சொல்லலாம். ஆனால் அந்த நொடிக்கும் குறைவான மணித்துளியில் பாண்டியனின் பாதங்கள் நிலத்திலிருந்து நழுவி உயர்ந்து மீண்டும் நிலம் பதிந்தது என்னவோ உண்மை.
நிஜமாகவே அவளின் உடல்பலமும் அத்தகையதாக இருக்க அசந்து பார்த்தவன் இப்போதும் இலகுவாய் நின்றிருந்தான்.
“எப்படி? ஜெயிச்சாச்சா? தூக்கிட்டேன்ல….” என்றாள் சந்தோஷத்துடன் அவனிடம் தன் புஜபலம் காண்பித்து.
“ஹ்ம்ம்…” என தலையாட்டினான்.
“ஜெயிச்சதுக்கு என்ன தருவீங்களாம் சொக்கரே?…”
“இப்ப ஜெயிச்சது நான்தானே?…” என்றவன் முடிக்கும் முன்,
“அப்ப நானே தரேன். எனக்கொண்ணும் பயமில்லை…” என்றவள் அவனை கண்ணிமைக்கும் நொடிக்குள் இழுத்து அணைத்து இதழணைத்து விடுத்தவள் வசம் தன்னை ஒப்புவித்திருந்தவன் தெளியும் முன் மதுராவின் போன் அழைப்பு விடுத்தது.
“டூ மினிட்ஸ்…” என்று அவள் நகரவும் தான் கண்ணை சிமிட்டி நிதானமானான் பாண்டியன்.
அடுத்த மூன்று நாட்களும் சென்ற நேரம் தெரியவில்லை. காலை கிளம்பி தோப்பு, தோட்டம் என்று மதுராவையும் அழைத்துக்கொண்டு கிளம்பி விடுவான் அவன்.
அப்படித்தான் அங்கிருந்த நாட்கள் கழிந்தது. மறுவீடு என்றாலும் தினமும் காலையும், மாலையும் தன் புகுந்த வீட்டிற்கு சென்று வராமல் இருந்ததே இல்லை.
வந்த இடத்திலும் அங்கேயே மதுரா அதிகமாக ஒட்டிக்கொள்வதை போலிருக்க எழில்மணிக்கு பொறுக்கவில்லை.
“இது என்னமோ மறுவீடு மாதிரியா இருக்கு? எங்க இன்னும் காணும்? ஊருக்கு போற வரைக்கும் கூட இருக்கலாம்ன்னா இப்படி பன்றா. எங்க போனா?…” என மகேஷ்வரியிடம் பொறுமுவார்.
அவரின் ஆசை புரிந்தாலும் கூடவே இருந்தால் மட்டும் என்ன பெரிதாய் பேசி, சந்தோஷப்பட்டுவிட போகிறார் என்று எண்ணிய மகேஷ்வரி மகளிடம் கேட்காமலும் இல்லை.
“எங்க வீட்டுக்கு போய்ட்டு வந்தோம்மா…” என மதுராவிடமிருந்து இலகுவாய் பதில் வரும்.
“நீங்க ரெண்டுபேரும் பகல்ல வேலைன்னு லேப்டாப்போட இருக்கேங்க. நானும் அவங்களும் எவ்வளவு நேரம் வீட்டுக்குள்ள இருக்க? அதோட என்னையும் இன்னும் ஒருமாசம் எதையும் பார்க்க வேண்டாம்ன்னு சொல்லிட்டீங்க…” என்பாள்.
அதுதான் உண்மையும் கூட. மகேஷ்வரி, எழில்மணி இருவரும் அப்படித்தான் இருந்தனர்.
பட்ட அடி அப்படி இருக்க, எல்லாவற்றையும் கண் முன் கண்காணிக்கவேண்டிய கட்டாயம்.
பொறுப்பில் நியமித்திருந்தவர் ஜகாவிற்கு தெரிந்தவராக இருப்பினும் கூட கவனமாகவே இருந்தனர். எல்லாமே அவர்கள் மேற்பார்வையில் தான்.
மகளை இப்போதைக்கு இந்த வேலையில் ஆழ்த்த முடியாது. தாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்றாலும் கேட்கமாட்டாள்.
ஒருமாதம் போகட்டும் என்று சொல்லியிருக்க மதுராவும் மறுக்கவில்லை அவர் சொல்லியதை.
நான்காம் நாள் அவளுக்கான சீர்வரிசைகள், அரிசிப்பெட்டி, பலகாரங்கள் சகிதம் மடி நிரப்பி புகுந்த வீட்டில் கூட்டிக்கொண்டு விட்டுவிட்டு வந்தனர்.
மனதெல்லாம் பொங்கிய வருத்தத்தை மறைத்துக்கொண்டு மகளிடம் பிரியாவிடைபெற்று மறுநாளே மகேஷ்வரி, எழில்மணி, நாயகியுடன் சென்னை கிளம்பி இருந்தனர்.
மகேஷ்வரி தான் மாமியாரை அழைத்திருந்தார் தங்களுடன் ஒரு பத்து நாளேனும் இருக்குமாறு.
மருமகள் கண் கலங்கி போய் கேட்க மறுக்கமுடியவில்லை நாயகியால். மகளை கட்டிக்கொடுத்து விட்டு செல்லும் அவரின் மனது அனைவருக்குமே புரிந்தது.
இதில் எழில்மணி வாய்விட்டே அழுதுவிட்டார். எப்போதும் மகளை பிரிந்து இருந்ததில்லை அவர்.
அதற்கு அஞ்சியே வீட்டோடு மாப்பிள்ளை பார்த்தவர், இப்போது மகளை விட்டு செல்வதில் கண்ணீர் வந்துகொண்டே இருந்தது.
மது மது என ஓயாமல் மகளின் முகம் பார்த்து, அவளின் கை பிடித்து, தலையை வருடி, கண்ணீர் விட்டு என அட்டகாசம் செய்துவிட்டார்.
மகேஷ்வரி, மதுரா இருவரும் விழிகள் கலங்கி இருந்ததே தவிர பெரிதாய் பேசிக்கொள்ளவோ, ஆறுதல் சொல்லிக்கொள்ளவோ இல்லை.
இருவரில் ஒருவர் உடைந்துவிட்டாலும் யாராலும் தாங்க முடியாதென மனதை இறுக்கிக்கொண்டு கையை பிடித்தபடி மெல்லிய புன்னகையுடன் நின்றனர்.
அவர்களை வழியனுப்ப வடிவை தவிர அத்தனை பேருமே விமான நிலையத்திற்கு வந்திருந்தனர்.
“ஒனக்கு என்னத்துக்குடா? எங்களுக்கு அதேம் அவசியங்கேன்…” என்று தோள் பட்டையை குலுக்கி சொல்ல,
“என்னிய மட்டும் உள்ள விட்டா ஒன்னிய அந்த டயருல கெட்டி ஏத்திருப்பேன். பேச்சா பேசுத? அம்புட்டு பேரும் அழுதுட்டுருக்காக. ஒனக்கு வியாக்கியானம் கேக்குது…” என வம்பிழுத்தான்.
“இந்தாருக்க ஊரு, கால அங்கன சாப்புட்டு வண்டில ஏறுனா மத்தியானம் இங்க நம்ம வீட்டுக்கு சாப்புட வந்துரலாம்…” என்று அத்தனைபேரிடமும் சொல்ல,
“ம்க்கும், ஒங்கய்யங்கிட்ட சொல்லி வண்டி வாங்கி விடு. டவுன்பஸ்ஸா கெழவி இது, ஒ இஷ்டத்துக்கு விட?…” என்று காந்திமதியின் நெற்றியை முட்டிக்கொண்டு நின்றவன் இரு கைகளும் தண்டட்டியில் இருந்தது.
“கை எடுலே, இல்ல அந்தாருக்கு பாரு போலீசு…” என்று சொல்ல,
“எம்புட்டு ஏத்தம்த்தா ஒனக்கு…” ஜகா காந்திமதியை இன்னும் பிடித்து இழுக்க,
இருவரின் கலாட்டாவில் இறுக்கங்கள் குறைந்து மனதில் நெகிழ்ச்சியுடன் விமானம் ஏற கிளம்பினார்கள் மகேஷ்வரி, எழில்மணி, நாயகி மூவரும்.
வீடு வந்து சேர்ந்ததும் வியாபாரம் விஷயமாக திண்டுக்கல் செல்லவேண்டியதிருக்க மதுராவை வீட்டில் விட்டுவிட்டு கிளம்பி சென்றான் பாண்டியன்.
நள்ளிரவு வீடு திரும்பியதும் உறங்கும் மதுராவை எழுப்பி கிளப்பிக்கொண்டு வீட்டில் யாருக்கும் தெரியாமல், சொல்லாமல் வெளியே அழைத்து வந்தான் சொக்கநாதபாண்டியன்.