அத்தனை நிறுத்தி நிதானமாக உண்ணும் பழக்கம் என்றும் இருந்ததில்லை அவனுக்கு. பசிக்கு உணவு. அதுவும் ருசியாக எனும் பொழுது கூடுதலாய் உள்ளே செல்லும்.
“எப்பவும் வாளக்கருவாடு வறுக்கறதுதேன். எடுத்தார மறந்துட்டா போல?…” என சமாதானமாய் சொல்ல அதை எல்லாம் பெரிதாய் அவன் எடுத்துக்கொள்ளவில்லை.
வடிவு எடுத்துக்கொண்டு ஓடிவர இறுதியாய் இரு கவளம் மட்டுமே களி உருண்டை இருந்தது.
அதில் கொஞ்சமாக வறுத்த வாளைக்கருவாட்டு தொக்கை வைத்துவிட்டு நகர்ந்து நின்றார் வடிவு.
“சின்னவன் எங்கம்மோவ்?…” என உடைந்த கண்ணாடியின் கூர்மையுடன் வந்து விழுந்தது அந்த கேள்வி தாயை நோக்கி.
“ஜகாவா? ஜகா…” என வடிவு திணற,
“வெளில போனியான். வார நேர்ந்தேன்…” காந்திமதி அதையும் சமாளித்து,
“மெட்ராசுல கலியாணமெல்லாம் நல்லா சொவமா முடிஞ்சதாய்யா?…” என பேச்சை மாற்ற அவர் கேட்டதும் பாண்டியனின் கை ஒரு நொடி வேலை நிறுத்தம் செய்ததை போல நின்று பின் வாய்க்கும் தட்டிற்கும் பாலமமைத்தது.
“இன்னிக்கு ரவைக்கித்தேன் நீ அங்கருந்து கெளம்புவன்னு நெனச்சோம். நீ வாரேன்னு போன் போடவுந்தேன் களிய கிண்டி வெச்சேன்…” என்றார் காந்திமதி.
“ஹ்ம்ம்ம், முடிஞ்சது…” என்று மட்டும் சொல்லியவன் மனதிற்குள் கையில் காயத்துடன் எழுந்து நின்ற மதுராவின் முகம்.
அடர்ந்த புருவங்கள் நெரிய அந்த எண்ணத்தை விரட்டியவன் காரமான பச்சை மிளகாயை எடுத்து கடித்து மென்று விழுங்கினான்.
எப்போதும் மிளகாய் சாப்பிடுபவன் தான். ஆனால் கருவாட்டை விட்டுவிட்டு அதனை மட்டுமே இன்று அதிகமாய் உண்ண வடிவுக்கும், காந்திமதிக்கும் உள்ளுக்குள் பதட்டம்.
எங்கேயோ என்னவோ சரியில்லை போல என்று தோன்ற பாண்டியனின் முகத்தையே பார்த்துக்கொண்டு இருந்தனர்.
உண்டு முடித்தவன் சொம்பில் இருந்த தண்ணீரை ஒரே மடக்கில் குடித்துவிட்டு கை கழுவ எழுந்தான்.