கணவரை இழந்து நின்றவரை இத்தனை வருடத்தில் கொஞ்சமும் சோர்ந்து போக விடாமல் தலைமகனாய் வீட்டையும், ஊரில் அவன் பொறுப்புகளையும் தாங்கி சிறப்பாய் நடத்தி வருபவன்.
எவ்வித குற்றம் குறையும் சொல்லிவிடமுடியாத அளவிற்கு ஊரில் பெரும், புகழும் மகனுக்கு கிடைப்பதில் எவ்வளவு பேருவகையோ, அந்தளவு அவன் எதிர்கால வாழ்க்கையும் நல்லவிதமாய் அமையவேண்டுமே என்ற பயமும் அவருக்குள் பெரிதாய்.
மகனின் வாழ்வின் அடுத்த கட்டத்திற்கான பயணத்தின் ஆரம்பமே ஆட்டம் கண்டிருந்தது.
முதன்முதலாய் ஒரு பெண்ணை காண்பித்து பேச நினைக்க முழுமனதாய் பிடித்திருக்கிறது என வாய்மொழியாய் சொல்லியும் விட்டதன் பின்னான நிராகரிப்பு.
துவண்டு தான் போனார் வடிவு. எத்தனை ஆசை பார்வை? மகன் தன் உணர்வுகளை மறையாமல் வெளிப்படுத்திய காலங்கள் அவை என நினைக்கும் அளவிற்கு இருந்ததே.
அவற்றை ஒட்டுமொத்தமாய் வார்த்தையில் நசுக்கிவிட்ட எழில்மணி மேல் இன்றளவும் தீராக்கோபம் தான் வடிவிற்கு.
பெண்ணை தர விருப்பமில்லை என்பது அவர்கள் உரிமை. என் மகனை பேச இவர்கள் யார் என்ற தார்மீக கோபமும், ஆதங்கமும் மிதமிஞ்சியே இருக்க அது எழில்மணியின் தாயிடம் கூட சில நேரம் முகம் கொடுத்து பேசாதளவிற்கு செய்துவிட்டது.
அதன் பின்னர் எத்தனை வரன்கள், எவ்வளவு அழகான பெண்கள், மதுராவை விடவும் படிப்பில் கூடுதலாக என அத்தனை மெனக்கெட்டு பார்த்துக்கொண்டிருக்க ஒற்றை பார்வையில் மறுத்துவிடுவான் சொக்கநாதபாண்டியன்.
பெருமூச்சுடன் நினைத்தபடி திரும்பி பார்க்க அங்கே வீட்டின் வெளித்திண்ணையில் இருந்த கல் திண்ணையில் வந்தமர்ந்து கால் நீட்டி தூணில் சாய்ந்திருந்தான் பாண்டியன்.
“ஏட்டி எத்தனவாட்டி கூப்புட?…” என கத்திக்கொண்டிருந்தார் காந்திமதி.
வெளியே தென்னைமர காற்றின் சிலுசிலுப்பும், வீட்டின் முன்பகுதியில் இருந்த பூந்தோட்டமும் என இடமே குளுமையாய் இருந்தது.
பகலெல்லாம் வாகனத்தை ஓட்டிவந்த அலுப்பு உடலை அசத்தினாலும் பேச வந்தமர்ந்திருந்தான் பாண்டியன்.
இந்த பேச்சு எதற்கு என அறியாதவனா? முகத்தில் எதையும் காண்பித்துக்கொள்ளவில்லை.
அத்தனை அழுத்தம். அதுவே முகத்தை இன்னும் இறுக்கமாய் காண்பிக்க கற்றை மீசை அவன் இதழ்களை மறைத்திருந்தது.
“நா ஒருத்தி கோட்டித்தனமா…” என தன்னையே நெற்றியில் தட்டிக்கொண்ட வடிவு அந்த புத்தகத்தை எடுத்து வந்தார்.
“அவென்கிட்ட குடுத்தா…” என தன்னிடம் நீட்ட வந்ததை பேரனிடம் தரும்படி காந்திமதி சொல்ல,
“பாருய்யா…” என்றார் வடிவு மகனிடம்.
“நாந்தேன் இப்பதைக்கு வேணாங்கறேன்ல?…” என பாண்டியன் அதனை வாங்காமலே சொல்ல,
‘என்னத்த பேசி வச்சிருச்சு இந்தம்மா?’ என வடிவு கண்டனத்துடன் மாமியாரை முறைத்து பார்க்கவும் தான் காந்திமதிக்கும் தான் பேசியது உரைக்க அவர் பேரனிடம் மேலும் பேசும் முன்,
“சரிவராதுத்தா. வேணா…” என்று சொல்லிவிட்டு எழுந்துகொண்டான் அவன்.
“இந்தா கட்டைய போட்டுட்டியான்ல…” என முணுமுணுத்துக்கொண்டே காந்திமதியும் எழுந்து நின்று பேரனை நிறுத்தும் முன் வெளியே கேட்டில் மோட்டார்பைக் சத்தம்.
“ஜகா வந்துட்டியான்…” என்றார் வடிவு.
உள்ளே செல்ல போன பாண்டியன் மீண்டும் வெளித்திண்ணைக்கு வந்து நின்றுவிட ஜகாவின் துள்ளல் நடை மட்டுப்பட்டு அடக்கமாக மாறியது.
“எங்க சுத்திட்டு வருத நீயி?…” பாண்டியன் கேட்கும் முன் காந்திமதி ஆரம்பிக்க,
“கெழவி நானு…” ஜகாவும் அதற்கு பதில் சொல்ல போக,
“இன்னிக்கு சோழவந்தான்ல என்னாலே ஒனக்கு சோலி?…” என அம்பாய் கேள்வி வந்தது தம்பி ஜகவீரபாண்டியனை நோக்கி சொக்கநாதபாண்டியனிடம் இருந்து.
அவனின் கேள்விக்கு பின் பொய்யுரைக்க முடியாது, சமாளிக்கவும் முடியாதென்று தம்பியே ஒப்புக்கொடுத்தான்.
“கலையரசன் வீட்டுல நக திருட்டு போச்சிண்ணே. களவாணிப்பயலுக களவாண்ட்டாய்ங்கே. கொள்ளநாளுக்கு பொறவு இப்பத்தேன் ஆள் அம்புட்டான். அதேம் போலீஸ்கிட்ட புடிச்சு குடுத்தேம்….” என்று எல்லாம் சொல்ல,
“சூதானமா இருந்துக்க ஜகா. அவேன் கோக்குமாக்கானவேன். பாத்துக்கிடு…” என எச்சரித்த பாண்டியன்,
தம்பி அங்கிருந்து நகர்ந்ததுமே அவன் சென்ற திசையிலிருந்து பார்வையை திருப்பிய பாண்டியன்,
“செத்த அவேன் என்ன செய்யுதியான், போறது, வாரதுன்னு வெசாரிக்க தான? மொத ஜகா படிச்சி முடிக்கட்டும். பொறவு எனக்கு குடும்பத்துக்கு வழி செய்யலாம். வெளங்குச்சா?…” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டான்.
காந்திமதி மருமகளை பார்க்க அதற்காக காத்திருந்தவர் போல இதோ என்று ஆரம்பித்துவிட்டார் வடிவுமே.
“கால கெரகத்துல அந்த புள்ளைய காமிச்சி இப்ப வரைக்கி எம்மவன் வேற ஒருத்திய கண்கொண்டு பாக்காமா இருக்கியானே? எம்மவனுக்கு ஒரு நல்லது பண்ணாங்காட்டி எங்கட்ட வேவுமாத்த?…” என அனத்த ஆரம்பித்துவிட்டார் வடிவு.
இத்தனை பேச்சுக்களும் பாண்டியன் அறைக்குள் செல்லும் வரை கேட்டிருக்க உள்ளே நுழைந்து கதவை சாற்றியவன் சட்டையை கழற்றிவிட்டு படுத்துவிட்டான்.
ஒற்றை கையை பின்னந்தலையில் முட்டுக்கொடுத்தவன் இன்னொரு கையால் நெற்றியை நீவியபடியே இருந்தான்.
இப்போதைக்கு திருமணத்தில் நாட்டமில்லை. வேண்டவும் வேண்டாம் என்ற முடிவில் உறுதியாய் இருந்தாலும் மனதினோரம் முணுக்கென்று முள்ளாய் தைத்துக்கொண்டிருந்தது ஒரு உணர்வு.
வெகுநேரமெல்லாம் யோசிக்காமல் உள்ளே வந்து படுத்த ஐந்து நிமிடத்தில் உழைப்பின் களைப்பில் உறங்கியுமிருந்தான்.
————————————————
சல்வாருக்கான துப்பட்டாவை தவிர்த்துவிட்டு அதற்கு கான்ட்ராஸ்ட் துப்பட்டா இரண்டை எடுத்து மேலே போட்டு பார்த்தவள் ஒற்றை தேர்வு செய்துவிட்டு தலையை பனானா க்ளிப்பில் அடக்கிக்கொண்டாள்.
கீழே வரும் பொழுதே மகேஷ்வரி சாப்பிட்டபடி இருக்க அவருக்கருகே அமர்ந்துகொண்டாள் மதுரா.
“குட்மார்னிங் டா. ஆபீஸ் கிளம்பியாச்சா?…” என்ற தாயிடம்,
“ஆபீஸ் போகறதுக்கு முன்னாடி அகில் வர சொல்லியிருக்காங்க. பார்த்துட்டு போகனும் ம்மா…” என்றபடி பூரியை எடுத்து கிழங்கை கொஞ்சமும், காரமான தக்காளி சட்னியையும் எடுத்து வைத்துக்கொண்டாள்.
சிறு சிறு விள்ளல்கலாய் பிய்த்து பேசிக்கொண்டே ரசித்து மெதுவாய் உண்டு முடித்தவள் வேலையாள் தந்த பாலை வாங்கி குடித்துவிட்டு,
“பை ம்மா. நான் போய்ட்டு கால் பன்றேன்…” என்றாள்.
“பறக்காம மெதுவா போகனும் மது. இல்லைன்னா ட்ரைவரை வர சொல்லவா?…” என கேட்ட தாயின் கன்னத்தில் முத்தமிட்டவள்,
“ஸ்வீட் மம்மி. அதெல்லாம் நான் பார்த்துப்பேன். நீங்க லன்ச்க்கு எனக்கு பிடிச்ச இறால் பிரியாணி செஞ்சு அனுப்பி வைங்க…”