“நீங்க நடுஜாமத்துல வந்து நிப்பீங்க. நாங்களும் வாங்க ராஜான்னு கம்பளம் விரிக்கனுமாக்கும்?…” என்று முறைத்தாள்.
சொல்லிய நேரம் தாண்டி அவன் வந்திருக்க, வந்ததோடில்லாமல் எழுப்பியும் விட கடுப்பாகி போனாள்.
“ஏன்? என்ன தப்புங்கறேம்?…” என்று மயக்கும் புன்னகை செய்தவனை ஒரு நொடி பார்த்துவிட்டு,
“இப்படி சிரிச்சு என்னை பிளாட்டாக்காம இருங்கன்னு ஏற்கனவே வார்ன் பண்ணியிருக்கேன். ஞாபகம் இருக்கட்டும்…” என்றவள் மீண்டும் கவிழ்ந்து படுக்க அவள் இடையில் கைகொடுத்து தூக்கி நிறுத்தினான் பாண்டியன்.
“எனக்கு தூக்கம் வருது சொக்?…” என அவனின் மேலேயே சாய்ந்து நின்றாள்.
“இன்னும் கோவமாப்பா…”
“ஆமா, ஆமா…” என்று சொல்ல சொல்ல அப்படியே தூக்கி தோளில் போட்டுக்கொண்டவன் அறையை விட்டு வெளியேற,
“ஹேய் என்ன பன்றீங்க?…” மதுராவின் குரல் ஹஸ்கி வாய்ஸிற்கு சென்றுவிட்டது.
இப்படி நடு வீட்டிற்குள் தூக்கி வருகிறானே என்று. யாரும் பார்த்துவிட்டால் என அவள் அவனிடமிருந்து இறங்க முயல விடவில்லை அவன்.
வெளி கதவையும் திறந்துகொண்டு வெளியேறி அதனை அடைத்துவிட்டு ஜீப்பிற்கு செல்ல,
“என்ன பன்றீங்க?…” என்றாள் மொத்த தூக்கமும் கலைந்து.
“சும்மா காத்தாட வெளில போயிட்டு வரலாமின்னுதேம்…” என சொல்லி ஜீப்பை கிளப்பி செல்ல,
“பார்ரா, வீட்டுக்கு மூத்த பிள்ளை செய்யற வேலையா இது? இதுல வயசுக்கு வந்த ரெண்டு பிள்ளைங்க வீட்டுல இருக்காங்க. ஒரு பொறுப்பு வேண்டாமா மிஸ்டர் ஜென்டில் மேன்?…” என வம்பிழுத்தபடி தான் வந்தாள் அவனுடன்.
வரும் வழியெங்கும் அவளின் பேச்சுகளில் பெரிதாய் பதில் கூறவில்லை என்றாலும் முகம் முழுவதும் புன்னகை தேனாய் நிரம்பி வழிந்தது.
“இறங்கு…” என அவன் ஜீப்பை நிறுத்த அவ்விடத்தை வரும் வழியை வைத்தே கண்டுகொண்டிருந்தாள் மதுரா.
“என்ன இந்நேரம்? அதுவும் இங்க? எனக்கு ஒண்ணுமே தெரியலை தண்ணி ஓடற சத்தத்தை தவிர….” என்றாள் மதுரா இருட்டில் பாண்டியனை பார்த்து.
லேசாய் நள்ளிரவின் குளிர் உடலை துளைக்க மெல்லிய காற்றின் வேகத்தில் உடல் சிலிர்த்தாள்.
“ஆனா செம்ம சீனரி சொக். நிலா வெளிச்சம். இப்ப கொஞ்சம் இருட்டு பழகுது. அழகா இருக்கு போங்க…” என கூற,
“நீதான இங்கின குளிக்கனுமின்ன? அதேம்…” என அவளின் தோளில் கை போட்டு அணைத்தபடி படியில் இறங்கினான்.