நேரம் செல்ல செல்ல மதுராவும் பயம் விலகி நீந்த துவங்கினாள். இருவருமாக போட்டி போட்டு ஒரு எல்லை வைத்து இங்குமங்கும் நீந்த பொழுதும் கடந்தது.
வெகுநேரம் கடந்த பிறகு தான் அங்கிருந்து கிளம்ப வேண்டுமே என்றிருந்தது மதுராவிற்கு.
“நாளைக்கும் வருவோமா?…” என அவனிடம் கேட்க ஈரத்துடன் மனைவியின் கை பிடித்து கரை ஏறியவன்,
“மொதல்ல வரமாட்டேன்ன?…”
“எனக்கு பிடிச்சது. அதான் இப்ப வரேன்னு சொல்றேன்…”
“என்ன பிடிச்சதாம்?…” என கண் சிமிட்டியவன் கேள்வியில்,
“எனக்கென்ன வெக்கம்? உங்களையும் பிடிச்சது, இங்கயும் பிடிச்சது, எல்லாம் பிடிச்சது. போதுமா? எங்க நீங்க சொல்லுங்க…” என கேட்டவளுக்கு பதில் சொல்லாமல் பாண்டியன் தலையசைப்புடன் மெல்லிய சிரிப்பொலி சிந்த ஜீப்பிற்கு சென்றான்.
“இதான் கேட்கறதுக்கு முன்னாடி யோசிக்கனும்…”
“செரிப்பா…” என மீண்டும் அவன் சிரிக்க,
“அப்பப்பா, நீங்க சரியான சொக்குபொடி டப்பா…” என அப்போதும் கேலி பேசினாள்.
“ஆமா இங்க எப்பவும் இந்த தண்ணி இருக்குமா?…” என கேட்க,
“இல்ல மதுரா. தண்ணி வத்திரும். காலு கூட நனையாத மாரி இத்துனூண்டாதேன் போவும்…”
“அப்ப இனி நான் குளிக்க?…” என மதுரா கவலையாக கேட்கவும்,
“அதுக்கென்ன? நம்ம தோப்புலதேம் பம்புசெட்டு இருக்கே…” என்று அவளுக்கு ஒரு துவாலையை எடுத்து நீட்டினான்.
“ஏனாம்?…” பாண்டியன் ஈரமான சட்டையை களைந்து பனியனை மட்டும் மாற்றிக்கொண்டான்.
“இங்க இல்லைன்னா அங்கன்னு ப்ராமிஸ் பண்ணிட்டீங்க. நான் கூட்டிட்டு போக சொல்லி டார்ச்சர் பண்ணுவேன்ல. அதான் சொன்னேன்…”
“நானும் சேர்ந்து குளிக்கிறதுன்னா கூட்டிட்டு வந்துட்டு போறேம். இது ஒரு விசயமாப்பா?…” என்று கிளம்பினான்.
“நீங்க மட்டும் ட்ரெஸ் மாத்தியாச்சு. எனக்கு குளிருது…” என ஜீப்பில் அமர,
“இந்தாருக்க வீடு. வா வா…” என கிளப்பிக்கொண்டு வீடு வந்து சேர அதற்குள் குளிரில் நடுங்கிவிட்டாள் மொத்தமாக.
மறுநாள் காலை எழுந்து சாப்பிட்டவளுக்கு இரவு சுத்தமாய் உறங்காததில் காலை உணவு முடிந்து அமர்ந்ததும் உறக்கம் சுழற்ற நடு வீட்டில் சோபாவிலேயே தலை சாய்ந்து உறங்கி இருந்தாள்.
வீட்டில் துர்காவும் இல்லை, ஜகாவும் இல்லை என்பதால் மதுராவை யாரும் தொந்தரவு செய்யவில்லை.
போன் முதற்கொண்டு எடுத்துக்கொண்டு வெளியில் வந்துவிட மதிய உணவு நேரம் பாண்டியன் வரும்பொழுதும் வெளியே அமர்ந்து தான் பேசிக்கொண்டிருந்தனர் வடிவும், காந்திமதியும்.
“என்னத்தா வெளில?…” கேட்டபடி பாண்டியன் உள்ளே செல்ல அங்கே மதுராவின் அயர்ந்த உறக்கம்.
“என்ன இப்புடி தூங்குதா?…” என பார்த்தவன் வெளியே வாசலை பார்க்க காந்திமதி முகமெல்லாம் பல்.
“தூங்கட்டும்ய்யா ராசா…” என்றார் கிசுகிசுப்பாய் காற்று குரலில்.
அதில் அத்தனை கேலி பொதிந்திருக்க பாண்டியனுக்கு எங்கேயும் ஒளிந்துகொள்வோமா என்றிருந்தது.
வடிவு மகனின் முகம் பார்க்கவே இல்லை. வேலை இருப்பதை போல மருது பக்கம் செல்ல காந்திமதியும் வாசலில் அந்தபக்கம் திரும்பி அமர்ந்துகொண்டார்.
“இங்கயே தூங்கிட்டேனா?…” என உலர்ந்த கூந்தலை அள்ளி சுழற்ற,
“உள்ள போயி ஒறங்கு மதுரா…”
“ப்ச், அதெல்லாம் வேண்டாம். பேசிக்கிட்டே இருந்து எப்ப தூங்கினேனே தெரியலை…” கண்கள் சிவந்து முகமெல்லாம் பூரித்து இருந்தது.
“செரி இந்த வார கடேசி ஊருக்கு போவோமா? வர சொன்னாகல்ல?…” என கேட்க,
“நிஜமாவா?…” மதுரா விழி விரிக்க,
“ஆமா, வீட்டுல சொல்லிட்டு கெளம்புவோம்…” என்றவன் வடிவிடமும், காந்திமதியிடமும் சொல்லிவிட்டு ஜகாவிடம் பொறுப்பை ஒப்படைத்து அந்த வார இறுதியில் சென்னை கிளம்பினான் மனைவியுடன்.