“அதான் சொன்னேனே, மது வீட்டுக்காரனோட தம்பி தான் என்னை பேசினான்னு. அன்னைக்கு தான் பணமும் அவங்களுக்கு கிடைச்சிருக்கு. ஒருவேளை பணத்துக்காக கூட நடத்திருக்கலாம்…”
“அப்படியா சொல்றீங்க?…” என்று வசுந்தரா யோசிக்க,
“அவங்க தான் ஹெல்ப் பண்ணினதா அப்ப ஒரு பேச்சு. அதோட அந்த குடும்பத்துல உரிமையா அன்னைக்கு அவன் வந்து உக்கார்ந்திருந்தானே? மணியே எதுவும் பேசலை. அவன் எவ்வளோ தெனாவெட்டா பேசினான் தெரியுமா?…”
“இதுக்கெல்லாம் திருப்பி தர வேண்டாம். இப்ப என் பிள்ளையும் என்னோட இல்லை. அவ மேல, அந்த குடும்பத்து மேல இருந்த பாசத்துல கொஞ்சமும் நம்ம மேல இல்லை அகிலுக்கு. மது கல்யாணம் முடிஞ்சதுல இருந்து அங்கயும் சரியாவே இல்லை அவன். சௌந்தர்யா சொன்னா…”
வசுந்தராவுக்கு அத்தனை கவலை. கவலைக்கு மேல் கோபம். அதுவும் மதுராவின் மேல் தான் பெருகியது.
“என் பையன் இப்படி உடைஞ்சு போக இவ எப்படி இருக்கான்னு பார்க்க வேண்டாமா? எப்படி இன்னொரு கல்யாணத்துக்கு உடனே சம்மதிச்சா இவ?…” இப்படி வசுந்தராவின் மூளையை குடைய ஆரம்பித்த கேள்விகளுடன் கிளம்பினார்.
பெயருக்கு ஒரு பரிசுப்பொருளையும் வாங்கிக்கொண்டு நாராயணனுடன் எழில்மணி வீட்டிற்கு வர மதுராவும், பாண்டியனுடன் அப்போது தான் உள்ளே நுழைந்தாள்.
மறுநாள் காலை கிளம்ப வேண்டும். நாயகியும் உடன் வருகிறார். வெளியில் சென்றுவிட்டு அப்போது தான் அவர்களும் வீடு வந்திருந்தனர்.
“எப்படி இருக்க மது?…” வசுந்தரா தான் கேட்டார்.
“குட், நீங்க?…” ரத்தின சுருக்கமாய் அவளிடமிருந்த கேள்வியில் வசுந்தரா பாண்டியனை எடை போடும் பார்வை பார்க்க அவன் உள்ளே சென்றுவிட்டான்.
“என்ன உன் ஹஸ்பண்ட்க்கு ஒரு கர்ட்டர்சியே தெரியாதா? வாங்கன்னு கூப்பிடாம போறார்?…” வேண்டுமென்றே பாண்டியனுக்கும் கேட்கும்படி சொல்லி வசுந்தரா உள்ளே வர மகேஷ்வரி பார்த்துவிட்டார்.
“வாங்க வசுந்தரா. வாங்க…” என இருவரையும் வரவேற்க,
“என் புருஷனும் இப்பதான் இங்க வரார். அவர் ஏன் உங்களை வரவேற்கனும்?…” என்றாள் மதுரா.
பாண்டியன் எல்லாம் பார்த்திருந்தாலும் அமைதியாக அமர்ந்துவிட்டான் சோபாவில்.
“என்ன மது?…” என்ற மகேஷ்வரி வசுந்தராவை பார்க்க,
“பொண்ணு மாப்பிள்ளையோட வந்திருக்கான்னு கேள்விப்பட்டேன். அதான் கிப்ட் குடுத்துட்டு பார்த்துட்டு போகலாம்ன்னு வந்தேன் மகேஷ். கல்யாணத்துக்கு என்னால போக முடியலை. அவ்வளோ பிஸி…” என அமர,
“சரி, நான் காபி கொண்டுவர சொல்றேன்…” என உள்ளே சென்றார்.
மதுரா தன் கணவனுக்கருகே சென்று அமர்ந்துகொள்ள மகேஷ்வரி காபிக்கு சொல்லிவிட்டு வந்துவிட்டார்.
“அப்பறம் மகேஷ் எப்படி இந்த சம்பந்தம்? முதல்ல வேண்டாம்ன்னு தானே சொன்னீங்க? பையன் படிக்கலைன்னு…” என வசுந்தரா கேட்க மகேஷ்வரி திடுக்கிட்டு மருமகனை பார்த்தார்.
மதுரா அசராமல் அமர்ந்திருந்தாள் ‘எவ்வளவு பேசவேண்டுமோ பேசு’ என்பதை போல.
“தம்பி என்ன வேலை பார்க்கறீங்க? ஏனா மேரேஜ் ரொம்ப கிராண்டா நடந்ததா இவர் சொன்னார். அதான் கேட்கேன்…” இப்போது பாண்டியனிடமே கேட்டவர்,
“எவ்வளவு வருமானம் வரும். படிக்க வேற இல்லை. விவசாயம் தானா?…” அத்தனை நக்கல் அவரின் குரலில்.
இவன் என்ன தான் செய்கிறான் தன் சம்பந்தியும் அப்படி தூக்கி வைத்து பேசும் அளவிற்கு என அத்தனை எள்ளல்.
‘நான்கு வாழை மரங்களை வைத்து வியாபாரம் செய்துவிட்டால் பெரியாளா?’ என நக்கலாக துவேசத்துடன் பார்த்து பாண்டியனிடம் கேட்க,
“நீங்க படிச்சவங்க தானே?…” என்றான் பாண்டியன் அலட்டிக்கொள்ளாமல் சாதாரண குரலில்.
“எஸ், அப்கோர்ஸ். வெல் எஜுகேட்டட்…” என பெருமையாக சொல்லிய வசுந்தரா,
“உங்க ஸ்லாங் இப்ப நார்மலா இருக்கு. அன்னைக்கு வேற மாதிரி பேசறதா சொன்னாங்களே என் வீட்டுல. பேசினதும் புரியலைன்னு…” என்றும் குத்தலாக கேட்டார்.
“எனக்கு நெருக்கமானவங்களை தவிர மத்த முன்னபின்ன தெரியாத மூணாவது மனுஷங்கட்ட நான் அப்படி பேசறதில்லை. அதோட உங்களுக்கு புரியுதா இல்லையான்ற கவலை எனக்கு அவசியமில்லை…” நறுக்கென்று அவன் பதில் கொடுக்க மதுராவின் முகத்தில் ஏகத்திற்கும் சந்தோஷம்.
“தென் என்ன கேட்டீங்க? இன்கம்மா? மந்திலி ஆர் இயர்லி?…” என அவன் தெளிவான நடையில் பேச வசுந்தராவின் முகம் கறுத்தது.
“ஒரு விஷயம் புருஞ்சுக்கோங்க, யார்கிட்டயும் அவங்க வருமானம் பத்தி இப்படி கேட்கவே கூடாது. அது நாகரீகம் கிடையாது. வெல் எஜுகேட்டட் பெர்சனாலிட்டிக்கு இந்த மேனர்ஸ் தெரியாதது ரொம்ப ஆச்சர்யமா இருக்கு…” என மூக்கை உடைத்தான் சொக்கநாதபாண்டியன்.
“மிஸ்டர்…” வசுந்தரா முகம் ஜிவுஜிவுக்க,
“ஷட்அப். வேற எதாச்சும் கேட்கனுமா?…” என்று கேட்டவன் தோரணையும், பார்வையும் வசுந்தராவை இன்னும் அவமதித்தது.
“இப்ப புரியுது மகேஷ், ஏன் பொண்ணை அவசரமா இங்க கட்டி குடுத்தன்னு. இவங்கட்ட பணம் வாங்கித்தான பண பிரச்சனையை சமாளிச்சிருக்கீங்க? பணத்துக்கு பதிலா…”
“ஏய்…” என்று ஆக்ரோஷமாக எழுந்துவிட்டான் பாண்டியன்.
அவன் எழுந்த வேகத்தில் மத்தவர்களும் அதிர்ந்து எழுந்து நிற்க மதுராவின் கைப்பிடியின் அழுத்தத்தில் சற்றே தணிந்தான்.
“மதுரா மாதிரி ஒரு பொண்ணுக்கு சொத்தை கூட குடுத்து கல்யாணம் பண்ணி பொண்டாட்டியாக்கிக்கலாம். அது என் இஷ்டம். இப்பலாம் காலம் மாறிடுச்சு. மகனை வரதட்சணைக்கு விக்கிறவங்க மத்தியில பொண்ணுக்கு வரதட்சனை குடுத்து கட்டிக்கற காலம் வந்திருச்சு….” என்றவன்,
“அதெல்லாம் அந்தந்த அருமை தெரிஞ்சவங்களுக்கு. கழுதைக்கு கற்பூர வாசம் தெரியாத மாதிரி சிலருக்கு சில விஷயங்கள் தெரியாமலே போயிருது. தெரிஞ்சாலும் பிரயோஜனம் இல்லை…” என்றான்.
“இங்க பாருங்க தம்பி…” வசுந்தராவும் கோபமாய் பேச வர,
“ஒரு வார்த்தை எதாச்சும் பேச்சு வந்துச்சு உசுரோட வீடு போய் சேரமாட்டீங்க. சங்க திருகிருவேன், அவ்வளோ தான்…” என்றவன்,
“மகேஷ் நானும் பொறுமையா இருக்கறேன். பணத்தை குடுத்துட்டோமே? கோர்ட்ல சொல்லியிருக்காங்கலேன்னு. எல்லாம் மறந்துட்டு விஷ் பண்ண வந்தா இப்படித்தான் நடந்துப்பாரா உன் மாப்பிள்ளை?…” என கேட்க,
“ஏம்மா நீ இன்னும் போகலையா?…” என்றவன்,
“முனியாண்டி…” என போட்ட சத்தத்தில் நாராயணன் அரண்டுவிட்டார்.
ஏற்கனவே பயந்து பயந்து அமர்ந்திருந்தவருக்கு இப்போது பாண்டியன் அழைப்பில் இன்னும் பிரச்சனையாகிவிட்டால் என்று வசுந்தராவை இழுக்காத குறையாக இழுத்துக்கொண்டு வெளியேறினார்.
“எவ்வளவு பேச்சு பேசறான் இவன், கேட்க துப்பில்லை உங்களுக்கு? நீங்க என்ன ஆம்பளை?…” என்று நாராயணனையும் கத்திக்கொண்டு வெளியேறினார்.
அவர்கள் வெளியேறும் வரை உக்கிரத்துடன் நின்றிருந்தவன் ஆழ்ந்து மூச்செடுத்து திரும்ப,
“தப்பா நினைக்காதீங்க தம்பி. நானே இப்படி பேசுவாங்கன்னு நினைக்கலை…” என்றார் மகேஷ்வரி.
“மது நீ மாப்பிள்ளையோட ரூம்க்கு போ. நான் காபி அனுப்பறேன்…” என்றார்.
பாண்டியன் அங்கே வைத்து எதுவும் பேசவில்லை. அறைக்கு வரவும் மதுரா அவனை கட்டிக்கொண்டு சந்தோஷத்தில் அப்படி ஆர்பாட்டம்.
“தள்ளி போ மதுரா. பயங்கர கோவத்துல இருக்கேன்…” என்றவனுக்கு இன்னும் கோபம் மட்டுப்படவில்லை.
“கழுத்த சேத்து நாலு விட்டேன்னா சந்தோசமா இருந்திருப்பேன், தப்பிச்சிருச்சுங்க….” என தன் விரல்களை முறுக்கினான்.
“எங்க இங்க விடுங்க பார்ப்போம்…” என மதுரா தன் கன்னத்தை காண்பிக்க அவள் முகத்தை பற்றி இழுத்தவன்,
“இவ்வளவு தானா? வலிக்கவே இல்லை. நான் சொல்லி தரேன் சொக்….” என்றவள் அவனுக்கு வலிக்க செய்ய சுகமாய் தாங்கிக்கொண்டவன் தன் பிடியை வலிமையாக்கி இறுக்கிக்கொண்டான்.
மறுநாளே மதுரை அலங்காநல்லூர் வந்து சேர்ந்தனர் சொக்கநாதபாண்டியனும், மதுராவும்.
அவர்களின் இயல்பு வாழ்க்கை அழகாய் இருவரையும் அள்ளிக்கொள்ள எந்தவித சங்கடங்களும் இன்றி சந்தோஷமாகவே நாட்களை நகர்த்தி சென்றது.
அன்று இரவு வீடு வந்து சேர்ந்த பாண்டியனுக்கு வீட்டின் வெளியேவே அத்தனை கூச்சல்கள்.
உள்ளே நுழையும் முன்னரே அத்தனை பேச்சுக்கள். எதிர் எதிராக மதுராவும், காந்திமதியும் இடுப்பில் கை வைத்து முறைத்துக்கொண்டு நின்றிருந்தனர்.
வடிவும், துர்காவும் கன்னத்தில் கை வைத்து பாவம் போல பார்த்துக்கொண்டு நிற்க அங்கு பேசிய பேச்சில் நெஞ்சில் கை வைக்காத குறையாக திகைத்து போய் நின்றான் சொக்கநாதபாண்டியன்.