விரல்கள் மட்டும் மகேஷ்வரியின் ஊசி நுழைந்திருந்த கையின் விரல்களை மென்மையாக பற்றி இருந்தது.
சென்னை வந்து முழுதாய் இரண்டு நாட்கள் கடந்திருந்தது. வந்த அன்று பார்க்க அனுமதிக்கவில்லை.
“சிவியர் அட்டாக் உங்க அம்மாவுக்கு. காப்பாத்திட்டோம். கண் முழிக்கவும் பார்க்கலாம்…” என்று சொன்னலும் பதிலில் அத்தனை திருப்தி இல்லை.
முதல் முறையே பெரிதாய் இருந்திருக்க எந்தளவிற்கு அவரின் மனது காயப்பட்டிருக்கும் என புரிந்து துவண்டாள்.
எழில்மணி வெகுவாக பயந்து போயிருந்தார் இந்த நிகழ்வில். மனைவி இல்லையென்றால் தான் ஒன்றுமே இல்லை.
அவரின் அடிவேர் வரை ஆட்டம் கண்டிருந்தது மகேஷ்வரியின் மாரடைப்பு. எப்போதும் எதிலும் வலுவாக நிற்பவரின் சாய்வு எழில்மணியை சாய்த்திருந்தது.
மகள் பேசவில்லை. மருமகன் பேசவில்லை. ஆறுதல் சொல்ல ஆளில்லாமல் நிராதரவாய் உணர்ந்தார்.
பேசவில்லையே தவிர அவரை சுற்றி ஆட்கள் இருந்துகொண்டு தான் இருந்தார்கள்.
கவனிக்க அவருக்கு தான் நினைவுகள் இங்கில்லை. யாரும் பேசினாலும் ஓரிரு வார்த்தை பதில்கள் தான்.
‘இது எல்லாம் தன்னால் தான்’ அதனை நிச்சயம் எழில்மணியே ஒப்புக்கொள்ளும் அளவில் இருந்தார்.
நிச்சயம் தன்னுடைய செயல்கள் மட்டுமே மனைவியின் இந்த நிலைக்கு காரணம் என நினைத்தவர் அழவும் திராணியற்று போயிருந்தார்.
“நீங்களும் நிம்மதியா இருக்கமாட்டீங்க. என் பொண்ணையும் நிம்மதியா சந்தோஷமா வாழ விடமாட்டீங்க. அப்படித்தானே?…” என அன்று மகேஷ்வரி தன்னிடம் கேட்ட கேள்வியில் அங்கேயே அவர் அதிர்ந்து நிற்க,
“எல்லாரும் நீங்க ஆட்டுவிக்கிற பொம்மையா இருக்கனும். என் பொண்ணோட வாழ்க்கை அப்படி இருக்கனும்னு நீங்க நினைக்கறீங்களா?…” என்ற மகேஷ்வரியின் கேள்வியில் எழில்மணி கோபமாகி இருக்க,
“ஏன் உங்கப்பாட்ட நான் இல்லையா? உன்னை கல்யாணம் செய்யும் போது நானும் தான் அவர் சொன்னதெல்லாம் கேட்டு அவர்கிட்ட பர்மிஷன் வாங்கி ஒவ்வொன்னும் செஞ்சேன். என் மருமகன் என்கிட்ட அப்படி இருக்கனும்னு நினைச்சது நிஜம். ஆனா இப்ப என்ன அப்படியா நடக்குது?…” என்றவர்,
“மதுவுக்கு பிடிச்ச கல்யாணம். செஞ்சுக்கிட்டா. ஆனா எனக்கு அந்த இடத்துலயும் என்னவோ கை கட்டி நிக்கிற மாதிரி அந்த கடன் என்னை நிக்க வைக்குது. அதான் மொத்தமா குடுக்கனும்னு முடிவு பண்ணினேன். அப்பத்தான் என்னால மூச்சு விடமுடியும்…” என்றார் அகங்காரத்துடன்.
“அப்போ எங்க மூச்சை எடுக்கனும். அதானே? இப்பவும் அந்த பணத்தை நாம குடுக்காம விட போறதில்லையே? மாசா மாசம் சரியா போயிட்டு தானே இருக்கு?…”
“என்ன போயிட்டிருக்கு? அந்த மாச மாசம் அனுப்பும் போதும் கடன், கடன் மட்டுமே எனக்கு தோணுது. உறவு இல்லை. எப்ப குடுத்து எப்போ முடிய? எனக்கு வேண்டாம். அதான் ஷேர்ஸ்ல போட்டேன்….”
“இதுல திரும்பவும் பழையபடி தப்பு நடந்தா என் பொண்ணோட வாழ்க்கை?…” மகேஷ்வரி கேட்க,
“என்ன பெருசா வாழ்க்கை? அந்த கிராமத்துக்காரனுக்கு என் பொண்ணை குடுத்ததே பெரிய விஷயம். பணத்தை குடுத்தா பெரியாளாகிடுவானா? இல்ல நம்மளை விட உயர்ந்தவாகிடுவானா? சும்மா வாழ்க்கை வாழ்க்கைன்னு…” என இரைந்தார் எழில்மணி.
மீண்டும் அவரின் அடிமனதில் இருந்த கசப்புகள் எல்லாம் வெளிவர மருமகனை மரியாதை இன்றி விளித்தார்.
“தப்பு தான். உங்ககிட்ட இதை பேச நினைச்சது ரொம்ப தப்பு. கஷ்டத்துல இருக்கும் போது எங்க பணம் கேட்டுடுவாங்களோன்னு உங்க போன் கால் கூட அட்டன் பண்ணாத ப்ரெண்ட்ஸ் மத்தியில இருக்கற நம்மோட அவரை சேர்த்து வச்சு யார் உசத்தின்னு பேசறது ரொம்ப தப்பு…” என்றார் வேதனையுடன்.
எப்போதும் ஒருவித நிமிர்வும், அழுத்தமான குரலோடும் பேசும் மனைவியின் மறுகல் அவருக்கு புரியவில்லை.
“மகேஷ், நான் செஞ்சதுல எந்த தப்பும் இல்லை. போக போக உனக்கே புரியும். ஒருதடவை சறுக்கினா எல்லா நேரமும் அப்படியே நடக்குமா?…”
“நிஜமாவே தப்பில்லை. நீங்க மருமகன்கிட்ட கடன் படக்கூடாது. அது நம்ம பொண்ணுக்கு அங்க மரியாதையா இருக்காதுன்னு நினைச்சு திருப்பி குடுக்க முயற்சி எடுத்திருந்தா கண்டிப்பா அது தப்பில்லை…”
“மகேஷ்…” எழில்மணி முறைக்க,
“ஷ், பேசிட்டிருக்கேன் நான்…” என எழில்மணியை கை நீட்டி அதட்டியவர்,
“ஆனா உங்க வறட்டு கௌரவத்துக்கு திரும்பவும் அந்த குழில விழுந்து கூடவே எங்களையும் சேர்த்து இழுத்து உங்க ஈகோவை திருப்தி படுத்த நினைக்கறீங்களே அது தப்பில்லையா?….”
“போதும் மகேஷ், இன்னைக்கு இப்படி சொல்ற நீ நாளைக்கே ஒன்னுக்கு ரெட்டை லாபமா வரும்போது வேணாம்ன்னு சொல்லிருவியா நீ?…” என வார்த்தையை விட மகேஷ்வரி உணர்வற்று பார்த்தார்.
“குட், உங்களோட ஈகோ இன்னும் என்னவெல்லாம் பேச வைக்குதுன்னு பார்க்கறேன். பேசுங்க. ஆனா கேட்க நான்…” என்றவருக்கு உடலெல்லாம் வியர்த்துக்கொண்டு வர நிற்க முடியாமல் தள்ளாடினார்.
“மகேஷ்…” என எழில்மணி அலறியபடி ஓட,
“என் பொண்ணை இப்படி விட்டுட்டு போக போறேனோ?…” என கண்ணீருடன் நெஞ்சை பிடித்துக்கொண்டவர் கீழே விழுந்ததும் எழில்மணிக்கு உயிரில்லை.
மகேஷ் மகேஷ் என அலறலுடன் தான் மருத்துவமனையில் கொண்டு சேர்க்க அங்கே அவர்களும்,
“மாஸிவ் அட்டாக்….” என்றனர்.
ஐயோ என மனதிற்குள் அலறியவருக்கு எல்லாம் சூன்யமான உணர்வு. ஒருவித மாயையிலிருந்து வெளிப்பட்டதை போல எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக விளங்க தலையில் அடித்துக்கொண்டார்.
மகளுக்கு அழைத்து சொல்ல சொல்லி அவர்களும் வந்து இதோ இப்போது வரை எதுவும் பேசவில்லை தன்னிடம். அருகிலும் வரவில்லை. நிமிர்ந்து பார்க்கவும் இல்லை.
“மது….” என்ற அழைப்பில் வெறுமையான பார்வையை தான் தந்தாள் மதுரா.
நிச்சயம் அவர் இதனை எதிர்பார்க்கவில்லை. அதுவே அவரை எட்ட நிறுத்தியதை போலானது.
மகேஷ்வரி பிழைத்துவிட்டார் தான். ஆனால் இன்னும் கண் திறக்கவில்லை. அதிலேயே இரு நாட்களாக வெறும் திரவ உணவு மட்டுமே மதுராவிடம்.
அன்று பகலில் தான் கண் விழித்திருந்தார் மகேஷ்வரி. மகளை பார்த்ததும் மீண்டும் கண்ணோரம் நீர்த்துளி உருண்டோட உடல்நிலையில் ஒரு போராட்டம்.
“ம்மா….” என பதறியவளிடம்,
“சரியாகிடுவாங்க. டோன்ட் வொரி…” என சொல்லிய வார்த்தைகள் எல்லாம் மதுராவை அசைக்கவில்லை.
‘என் அம்மா என்னை விட்டு அப்படி சென்றுவிட முடியாதே? செல்லவும் மாட்டார்.’ அத்தனை நம்பிக்கையுடன் இருந்தாள் மதுரா.
இருமுறை விழித்து பார்த்தவர் அடுத்தமுறை நிதானமாக மகளையும், அருகிருக்கும் மருமகனையும் விழிகள் கலங்க பார்த்துவிட்டு என்னவோ சொல்ல உதடசைக்க,
“உங்களுக்கு ஒண்ணுமில்லை. சரியாகிட்டு வாங்கம்மா. நிறைய பேசுவோம். உங்களுக்காக வெய்ட் பண்ணுவேன். ஞாபகம் இருக்கட்டும்…” என்றவள் தைரியம் தாயையும் அடைந்தது.
அவர் விரல்கள் மகளின் கையை வருடி கொடுக்க மறுபடி ஒரு மயக்கம். ஆனால் அதற்குள் உருக்குலைந்து போயிருந்தார் மகேஷ்வரி.
மதுரா வந்து அமர்ந்து வெகுநேரமாகியிருந்தது. மருத்துவர்கள் அன்றாட பரிசோதனை நேரத்தில் வரவும் எழுந்து வெளியே வந்தாள்.
எழில்மணி வெளியே இருக்கையில் அமர்ந்திருக்க சற்று தள்ளி பாண்டியன் நின்றிருந்தான் நாயகியுடனும், காந்திமதியுடனும் பேசிக்கொண்டு.
இருவரும் உணவு கொண்டுவந்திருந்தனர் மதுராவிற்கும், எழில்மணிக்கும் சேர்த்து.
“ராசா புள்ள வருது பாரு…” நாயகி சொல்லவும் பாண்டியன் திரும்பி பார்க்க அவர்களை நெருங்கியிருந்தாள் மதுரா.
“என்ன செய்யுதாக அத்தே? கண்ணு முழிச்சாகளா?…” பாண்டியன் கேட்க,
“மொத சாப்புடட்டும்ய்யா…” என்ற காந்திமதி,
“இந்தாத்தா மொத ஒருவாயி உள்ள தள்ளு. அப்பத்தேன் ஒனக்கும் சொவப்படும். ஒங்கம்மா எந்திச்சு வரவும் பேச தெம்பு வேணுமில்ல. அந்த ரூமுக்கு போங்க…” என்று கூற மறுக்காமல் தலையசைத்து புன்னகைத்தாள் மதுரா.
“இவேனும் ஒன்னோட சேந்துக்கிட்டு வெறும், சூசு, டீயி, காப்பின்னு பொழுத ஓட்டுறியான். பாத்துக்கிடு….” என பேரனையும் சேர்த்து சொல்ல இருவருக்குமே புன்னகை.