“ரெண்டுநாளு பட்டினி கிடந்தா உங்க பேரன் ஒன்னும் இளைச்சிட மாட்டாரு பாட்டி…” என மதுரா சொல்ல இரு நாட்களுக்கு பிறகான அவளின் பேச்சில் பாட்டிகள் இருவருக்கும் கண்கள் கலங்கியது.
“நாங்கூட வந்த எடத்துல வாய தச்சிக்கிட்டியோன்னு பயந்துக்கிட்டேன்…” என காந்திமதியும் கிண்டல் பேசி,
“செரித்தா, மொத அவக சாப்புட்டு வரட்டும்…” நாயகியும் மனம் நிறைந்து சொல்ல மதுராவின் பார்வை தந்தையை பார்த்தது.
“அவேன நா பாத்துக்கிடுதேம். நீயி மொத போத்தா….” என்ற நாயகி பாண்டியனை பார்க்க தலையசைத்துவிட்டு மதுராவுடன் நடந்தான்.
அவர்கள் செல்வதை பார்த்தபடி தான் அமர்ந்திருந்தார் எழில்மணி. உணவை கொண்டுவரவுமே நாயகி உண்ண சொல்ல மறுத்துவிட்டார் நேரமாகட்டும் என்று.
இப்போது செல்பவர்களையே பார்த்துக்கொண்டிருந்தவர் மனதெல்லாம் அத்தனை வலி.
‘இது தனக்கு தேவை தான்’ என தோன்ற இன்னும் எத்தனை முட்டாள்த்தனங்கள் செய்திருக்கிறோம் என யோசித்தபடி இருந்தார்.
அந்த அறைக்குள் நுழைந்த மதுராவிடம் ஒரு துவாலையை நீட்டிய பாண்டியன் அவளுக்கான உடையையும் எடுத்து வைத்தான்.
“இந்த ரூம் எப்போ வாங்கினீங்க?…” என மதுரா கேட்க,
“வந்தன்னிக்கே கேட்டிருந்தேம். ஆனா நேத்து ரவைக்குத்தேன் கெடச்சது. இங்கருந்து போறவரைக்கு நமக்குத்தேம். வெளில பக்கத்துல போக வரன்னா செரமந்தான…” என சொல்லி உணவு பாத்திரத்தை பிரித்தவன்,
“மொத போயி குளி. ரெண்டுநாளா ஒத்த உடுப்புலயேதேம் இருக்க…” என்று அவளை அனுப்பி வைக்க பத்து நிமிடத்திற்குள் வந்துவிட்டாள் மதுரா.
அவள் வரும்முன் உணவுகள் பிரித்து எடுத்து வைக்கப்பட்டிருக்க மெல்லிய புன்னகையுடன் அமர்ந்தவள்,
“நீங்களும் உட்காருங்க. சேர்ந்தே சாப்பிடுவோம்….” என தனக்கும் அவனுக்கும் எடுத்து வைக்க பாண்டியனின் பார்வை மதுராவின் முகத்தை அங்குலம் அங்குலமாக துளைத்தது.
“என்ன பார்வை எல்லாம் இவ்வளோ பலமா இருக்கு? என்னவாம்…” என கேட்டுக்கொண்டே சாப்பிட ஆரம்பித்தவளுக்கு அந்த உணவு இறங்கவில்லை.
முயன்று இரண்டு மூன்று கவளம் விழுங்கியவளுக்கு அதோ தொடர முடியாமல் தொண்டை வலிக்க ஆரம்பிக்க செருமலுடன் தன்னை சரி செய்துகொண்டாள்.
“என்னவோ பசியே இல்லை. காபி குடிச்சது இன்னும் ஃபுல்லா இருக்கு போல?…” என்றாள் அவளாகவே தட்டை தள்ளி வைத்து.
விழியிலிருந்து கொட்ட காத்திருந்த கண்ணீரை அடக்க முயல தொண்டை விக்கும் போலிருந்தது.
அவளின் முயற்சிகளை அவளால் கூட தாளமுடியாமல் சட்டென முகமெல்லாம் செந்நிறம் பூச இதழ்களை பற்களுக்குள் இழுத்தவள் தன் முகத்தை இடதுகையால் மறைத்தாள்.
சில நொடிகளில் பாண்டியனின் அருகாமையில் மெல்ல அவனின் தோளில் தானாய் சாய்ந்தவள் கையால் வாயை பொத்திக்கொள்ள,
“ம்ஹூம், தூக்கம் வரலை….” மதுராவின் முகம் மீண்டும் வாடியது.
“கம்பெனிக்கும் போகனும் மதுரா. செத்த நேரம் ஒறங்கி எந்திச்சேனா ஒரு எட்டு போயிட்டு வரலாம். ஒங்கூட வாரேம். ஒங்கப்பா அங்க போகவே இல்ல…” என சொல்லவும் மீண்டும் மதுராவின் முகம் இறுகியது.
மதுரா வரும் வழியில் விஷயத்தை அவனிடம் ஏற்கனவே சொல்லியிருந்தாள் என்பதால் நிலவரம் பாண்டியனுக்கும் தெரிந்தது.
“அங்க என்ன செய்யனுமின்னு தெரியாது மதுரா. ஜகா அங்க கேட்டுக்கிட்டு இருக்கான். இருந்தாலும் நீயும் பாக்கனுமில்ல….” என்றதும் மதுரா யோசனையானாள்.
“அத்தேய ரவைக்கு ரூமுக்கு மாத்திருவாக. அப்ப கூட இருப்பா. இப்ப வா போவோம். இல்ல ஒறங்கி எந்திச்சு போவனுமின்னாலும் போவோம்…” என்றான்.
நிஜம் தானே? தானும் போய் பார்க்கவில்லை என்றால் அங்கே என்ன நிலவரமோ? எல்லாம் செய்துவிட்டு இப்போது இங்கே அமர்ந்திருக்கும் தகப்பனை நினைத்தாள்.
இதுவரை தாயின் கவலை மட்டும் தான் பெரிதாக இருந்தது. அவரின் உடல்நிலை முன்னேற்றத்துடன் சீராக இருக்கிறது என்றும் சொல்லியிருக்க அந்த நிம்மதியை குலைப்பதை போல இந்த பிரச்சனை.
பணம், நினைக்கையில் கண்ணை கட்டியது மதுராவிருக்கு. எத்தனை நம்பிக்கையுடன் திருமணத்தின் முன் சொல்லியிருந்தாள் மீட்டு தந்துவிடுவேன் என.