“பொறவு, இம்புட்டு வருசம் தொழில் பன்றோம், இந்த நீக்கு போக்கு கூட பாக்கலன்னா? ஆனாலும் கொஞ்சம் செரமந்தேன்…” என்றும் ஒப்புக்கொள்ள கணவனின் ஒப்புதலில் மதுராவின் முகம் மலர்ந்தது.
“நீங்க ஒரு படிக்காத மேதை சொக்….” என சில்லாகித்தாள்.
ஆனாலும் முகத்தில் சிறு புள்ளியாய் ஒரு பதட்டம் அவளிடத்தில் இருக்கத்தான் செய்தது.
“என்ன மதுரா? அதேம், அம்புட்டும் செரித்தான?…” என்று கேட்க,
“இருந்தாலும் ஷேர்ஸ் பத்தி பயமா இருக்கு….” சொல்லும் பொழுதே மதுராவின் விரல்கள் நடுங்க அதனை ஆதரவாக பற்றிக்கொண்டான்.
‘கொஞ்சம் தந்தை புரிந்துகொண்டாலும் போதுமே. இப்படி நடக்குமா? நடந்திருக்குமா? மகேஷ்வரி?’ என நினைக்கும் போதே நெஞ்சறுக்கும் எண்ணத்தை மீறி வெளிவரமுடியவில்லை.
‘எல்லாம் அவரால்’ என்று மதுரா நினைத்தால், ‘அனைத்தும் விதிப்பயன்’ என்றான் அவள் கணவன்.
“வாரத பாத்துப்போம்ப்பா. இப்ப கெளம்புவோம்….” என கூட்டிக்கொண்டு மருத்துவமனை வந்தான்.
“நான் எப்ப வரனும்?…” மதுராவே கேட்க அதில் புன்னகைத்தவன் இழுத்து அணைத்துக்கொண்டான்.
“எங்கிட்டதானப்பா நீயிருக்க….” என்றவன்,
“இங்கயும் பாக்கனுமில்ல. ஒத்த புள்ள நீயி. ஒடனே வான்னு சொல்ல ஆவாது மதுரா….” என பாண்டியன் சொல்ல இறுக்கமாய் அணைத்துக்கொண்டாள் அவனை விட முடியாது என்பதை போல.
“என்னியவா?…” சொக்கநாதபாண்டியன் கண்கள் சிரிக்க மீசைக்கடியில் ஒளிந்து வெளிவரும் அந்த புன்னகை மின்னலடித்தது.
“இல்லையே, உங்களை யாரு மிஸ் பன்றா? நான் மருதுவை சொன்னேன்….”
மதுராவின் வழக்கமான கலகலப்பு மீண்டிருக்க அவளிடமிருந்து வரவிருந்த வார்த்தைகளை சத்தமின்றி தனதாக்கிக்கொண்டவனின் அந்த செயல்களை மீண்டும் மீண்டும் தூண்டினாள் மதுரா.
“ஆத்தே, இத்தோட என்னால போவ முடியாது சாமி. என்ன செய்யுத நீயி?…” என கேட்டு, நின்று, நேரம் தாழ்த்தி கிளம்பவே மனதில்லாமல் கிளம்பி சென்றான் பாண்டியன்.
செல்லும் முன்னரே அவளிடமும், மகேஷ்வரியிடமும் அத்தனை சொல்லி சென்றான் எதுவானாலும் உடனே அழைக்கும்படி.
“பாத்துக்கங்க….” அவ்வளவு தான் எழில்மணியிடம்.
வேறு பேச்சுக்களில்லை. வந்த பொழுது, ‘செரியாகிடும்’ என சொல்லி ஒதுங்கிக்கொண்டான்.
ஒதுக்கத்தை எழில்மணியும் உணர்ந்தார். முன்பு கோபத்தில் தீயாய் எரிந்தது இப்போது துயரத்தில் நத்தையாய் சுருண்டது.
பாண்டியனுக்கும் அதற்கு மேல் அவரிடம் என்ன பேச? பேச ஒன்றுமில்லை. அவன் ஒதுங்கி நின்றாலும் ஜகாவை உடன் இருக்க வைத்திருந்தான் ஜகா கிளம்பும்வரை.
இப்போதும் எதுவும் பேசாமல் கிளம்பி செல்ல எழில்மணி தான் வார்த்தையிழந்து நின்றார்.
இந்த குடும்ப இந்த சூழ்நிலையில் தங்களுடன் இல்லை என்றால் தான் என்னவாகியிருப்போம் என நினைத்தும் பார்க்க முடியவில்லை.
அத்தனை ஆறுதலாய், ஆதரவாய், அனுசரணையாய் அவர்கள் உடன் இருக்க பெரும் பலமாக இருந்தது அதுவே.
மதுரா நிறுவனத்திற்கு சென்றுவந்த பின் மறுநாளில் இருந்து தானும் சிறிது நேரமேனும் செல்ல ஆரம்பித்திருந்தார் மனைவியின் உடல்நலன் தேறிவிட்டதனால்.
நிறுவனத்தில் மகளுடன் உறுதுணையாக இருந்த மருமகனின் செயலில் மனம் கனிந்து போனார்.
‘எத்தனை தூரம் இகழ்ச்சியாக பேசி இருப்போம்? தவறு தவறு’ என தன்னை அடித்துக்கொள்ளாத குறை தான்.
படிப்பும் பகட்டும் மட்டுமே அறிவை கொடுத்துவிடாது என்பதை சத்தமில்லாமல் உணர்த்தி சென்றிருந்தான் சொக்கநாதபாண்டியன்.
இப்போது கிளம்பி செல்லும் பொழுதும் நிறைகுடமாக நிற்பவனை காண்கையில் மனதிற்குள் அத்தனை நன்றியும், அன்பும்.
மகளுடன் மெல்லிய குரலில் பேசியபடி வாசலுக்கு சென்றவனையும், மகளையும் பார்த்து சந்தோஷப்பட்டார்.
“ஒங்கப்பா நம்மளையே பாக்குதாரு…” மதுராவிடம் பாண்டியன் சொல்ல,
“இப்ப பாசமா பார்ப்பாங்க. அப்பறம் திரும்ப நான் புடிச்ச முயலுக்கு முக்கால் கால்ன்னு நிப்பாங்க. அட போங்கப்பா….” என்றாள் மதுரா சலிப்புடன்.
“செரி விடு, நாளைக்கு ஆத்தாவோட துர்காவும் வருவாங்க. ஜகாதேன் கூட்டிட்டு வருவியான். அனத்திக்கிட்டே கெடந்திச்சு ஆத்தா நா இன்னும் பாக்கல, வெசாரிக்கலன்னு. நா போகவும் அனுப்புதேம். பாத்துக்கிடு…”
“ஓகே ஓகே. நான் கவனிச்சிப்பேன். என்னையும் சேர்த்து தான் சொன்னேன்…” அவன் சொல்லாமல் விட்டதையும் சேர்த்தே சொல்லிவிட புன்னகையுடன் கிளம்பி சென்றான்.
காந்திமதியும் நாயகியும் அங்கே சென்னையில் இருக்க மறுநாளே சொல்லியதை போல மூவரையும் அனுப்பி வைத்தான் பாண்டியன்.
“சமைக்க, சாப்பிட என்ன பன்றீங்க?….” மதுரா கவலையானாள்.
“அதெல்லாம் ஆத்தா ஏற்பாடு செஞ்சிட்டாக…” என அவளின் கவலையை குறைத்தான் பாண்டியன்.
பரமேசை இருநாட்கள் வந்து சமைக்கும்படி சொல்லி தான் சென்றிருந்தார் வடிவு.
இரு நாட்களில் வடிவு கிளம்பிவிட, அடுத்த பத்து நாட்களில் மதுரா பாட்டிகளுடன் மகேஷ்வரியை அழைத்துக்கொண்டு அலங்காநல்லூர் வந்து சேர்ந்தாள்.