ஆனால் அந்த முடிவிற்கு வரும்முன் அவர் எத்தனை யோசித்திருப்பார் என அவளால் புரிந்துகொள்ள முடிந்தது.
அத்தனை பெரிய இக்கட்டில் கூட தன்னுடைய அடையாளமான அந்த நிறுவனத்தை விலை பேசும் யோசனைக்கே செல்லாதவர் இப்போது முடிவெடுத்து சொல்கிறார் என்றால்?
நினைக்கும் பொழுதே நெஞ்சை அறுத்தது மதுராவிற்கு. என்னதான் நிறுவனத்தை எழில்மணி பார்த்துக்கொண்டாலும் அதன் அடையாளம் மகேஷ்வரிக்கானது.
அத்தனை பெருமையாக சொல்லிக்கொள்வார் தனக்கான தன் குடும்பம் விட்டு சென்றிருக்கும் மிகப்பெரிய பொக்கிஷம் என்று.
இப்போது அதை உதறி தள்ள நினைக்கும் அளவிற்கு என்றால் எத்தனை தூரம் அவர் காயப்பட்டிருப்பார் என கண்டுகொண்டவள் அவருக்காக வருந்தினாள்.
“அமௌன்ட்டை முதல்ல உங்கப்பாக்கிட்ட குடுத்து மாப்பிள்ளைக்கு தர சொல்லிட்டு நிம்மதியா இருக்கனும் மது. அப்ப தான் நீயும் சந்தோஷமா இருப்ப…”
“ம்மா, இப்ப என் சந்தோஷத்துக்கு என்ன? நான் ரொம்ப நல்லா இருக்கேன். என்ன ஒன்னு இன்னும் கொஞ்சம் நாளாகி காசை குடுக்கவேண்டி இருக்கும். அதனால என்ன?…” என்றாள் கனத்துவிட்ட குரலுடன்.
மகளை அறியாதவரா தாய்? அவள் எண்ணங்கள் புரியாமலா இருப்பார் மகேஷ்வரி?
“இருக்கட்டும் மது. இது எனக்காக. என்னோட நிம்மதிக்காக….” என்று பிடிவாதமாக சொல்லியவர் அதற்கான ஏற்பாட்டை கவனிக்க வேண்டும் என்றதும் தான் மதுரா காந்திமதியிடம் வந்தாள்.
“அம்மா ரொம்ப கஷ்டப்படறாங்க பாட்டி. என்ன செய்யன்னே தெரியலை…” என தலையை பிடித்துக்கொள்ள,