“சொல்லுங்கப்பா, எங்களை கூட்டிட்டு போக வேண்டாம்ன்னு சொல்றீங்க? அதுக்கு ஒரு ரீசன் சொல்லுங்க. பாட்டியை விட்டுட்டு போகட்டுமா? கூட கவனிச்சிப்பீங்களா? அது சிரமம் இல்லையே?….”
“என்ன மது நீ? பாட்டியுமே முடியாதவங்க தானே? அவங்க எப்படி அம்மாவை பார்த்துக்க?….”
“ஏன் நீங்க இல்லையா ப்பா? பார்த்துக்க என்ன கஷ்டம்? சமைக்க ஆள் இருக்காங்க. பக்குவம் சொல்ல பாட்டி. கூட பேச்சுத்துணைக்கு நீங்க. எந்த நேரமுமா ஆபீஸ்ல இருப்பீங்க? வீட்டுல இருக்கற நேரம் கவனிச்சுக்கோங்க….” என கேட்டவள் அவரின் அமைதியில்,
“மது உனக்கு எப்படி புரியவைக்க? உங்கம்மாவுக்கு ஒரு பீஸ்ஃபுல் சர்க்கிள் வேணும் இப்போ. அவளோட மனசை கஷ்டப்படுத்தற மாதிரி எதுவும் நடக்க கூடாதுன்னு சொல்லியிருக்காங்க….” என்ற எழில்மணி,
“எனக்கு இதெல்லாம் எப்படி தெரியும்? நான் எப்படி தனியா மேனேஜ் பண்ணுவேன்? அதுவுமில்லாம மகேஷ் என்னோட பேசறதே இல்லை. நீ கூட இருந்தா அவளுக்கு சப்போர்ட்டா இருக்கும்….” சொல்லிவிட்டவருக்கு குரலில் அத்தனை இறக்கம்.
“இப்ப கூட நான் பார்த்துப்பேன் உங்கம்மாவை. எனக்கு யாரும் தேவை இல்லைன்னு சொல்ல தோணலைல உங்களுக்கு?…” என்ற மதுரா வேறு எதுவும் கேட்கவுமில்லை, சொல்லவுமில்லை.
மறுநாளே அனைவரும் கிளம்புவதற்கு மருத்துவரிடம் கேட்டுவிட்டு ஏற்பாடுகள் செய்துவிட்டாள்.
“உங்களுக்கு எப்ப வரனும்னு தோணுதோ வாங்க. என்னோட வேலை எப்பவும் போல நான் பார்ப்பேன். அம்மா உடம்பும், மனசும் நல்லா தேறட்டும். பழையபடி அவங்க கம்பீரமா வர வரைக்கும் அங்க ஊர்ல எங்களோட தான் இருப்பாங்க….”
மதுராவின் இந்த உறுதியான முடிவில் எழில்மணி தான் பெரிதாய் உடைந்து போனார்.
இன்னும் பேசி வெறுப்பை ஏன் கூட்டிக்கொள்ள வேண்டும் என எண்ணியவர் அமைதியாகிவிட்டார்.
“நீங்களும் கூட வரீங்களாப்பா? கூட வந்து ரெண்டுநாள் இருந்துட்டு கிளம்புங்களேன். டிக்கெட் புக் பண்ணட்டுமா?…” என மனது கேட்காமல் அவரிடம் மதுரா கேட்கவும் எழில்மணிக்கு கண்கள் பனித்தது.
இந்தளவிற்கேனும் மகள் தன்னையும் நினைத்து பார்க்கிறாளே என்று ஒரு சந்தோசம்.
“இருக்கட்டும் மது. நீங்க போங்க. நானே வரேன். வீக்கென்ட் அங்க தான் இருப்பேன்…” என சொல்லிவிட மதுரா புறப்பட்டாள் அனைவருடன்.
கிளம்பும் பொழுதும் மகேஷ்வரி எதுவும் பேசவில்லை. அமைதியாக நின்றவரிடம்,
“உடம்பை பார்த்துக்கோ மகேஷ். சீக்கிரம் திரும்ப வந்திரு. என்னால ரொம்ப நாள் நீயில்லாம இருக்க முடியாது….” என்றார் விமான நிலையத்தில் வைத்து கண்ணீருடன் எழில்மணி.
மகேஷ்வரி மனதிற்குள் நொறுங்கி போயிருந்தாலும் அப்போதும் கணவரின் பரிதாபமான நிலை கண்டு கண்ணீர் தான் பொங்கியது.
தலையை மட்டும் அசைத்தவர் திரும்பிக்கொண்டார் மேலும் பேசாமல், பார்க்காமல்.
மனது பெரிதாய் தவித்தது. ஆனாலும் எழில்மணி பேச்சுக்களை ஜீரணிக்கவும், கடந்து செல்லவும் முடியவில்லை.
“மரிக்கொழுந்துக்கு சொல்லிட்டேம். வீட்ட சுத்தம் பண்ணி சமைச்சு வெச்சிருவா….” என்றார் நாயகியும்.
காந்திமதி தங்களுடன் வந்து இருக்கும்படி சொல்ல மகேஷ்வரி அதனை ஒப்புக்கொள்ளமாட்டார் என மதுராவே மறுத்துவிட்டாள்.
“நாம பக்கம் தானே பாட்டி. நடந்தா பத்து நிமிஷம். அம்மா பாட்டி வீட்டிலையே இருக்கட்டும்….” என்று சொல்லிவிட காந்திமதியும் வற்புறுத்தவில்லை.
“இங்காருப்பா, ஒழுங்கா பொழப்ப பாத்துக்க. ஒன்னியவும் பாத்துக்க. பொழுதானா வீடு வந்து சேரு. ஒம்பொண்டாட்டி நல்லா இருப்பா. அவகள நெனச்சிட்டு அடுத்த சோலிய பாரு…” என எழில்மணியிடம் கூறிய காந்திமதி,
“மனுசனா பொறந்தா எல்லாருக்கும் தனக்குன்னு ஒரு ரோசம் இருக்கத்தேன் செய்யும். தப்பில்லங்கேன். அதே நேரத்துல புள்ள, பொண்டாட்டி சொவத பாத்துக்கிட்டு நீயி அடுத்த எட்டு வெக்கனும். அதுதேம் ஒரு குடும்பஸ்தனுக்கு அம்சம். வெளங்குச்சா?….” என்றார்.
எழில்மணி தலையை மட்டுமே ஆட்டினாரே தவிர்த்து அதற்கான எதிர்வாதத்தை வைக்கவில்லை.
தன்னுடைய செயல் தானே இவர்களை பேச வைக்கிறது என்று யோசித்துக்கொண்டு நின்றார்.
“பார்த்துக்கோ மது. சீக்கிரம் மகேஷை இங்க அனுப்பி வை. அவ இல்லைன்னா எனக்கு இங்க ஒண்ணுமே இல்லை….” உருக்கமாக சொல்ல,
“வீக்கென்ட் வாங்கப்பா. கிளம்பறோம்…” என சொல்லிவிட்டு விமானம் கிளம்பிவிட்டாள் மதுரா.
மதுரை விமானநிலையத்தில் ஜகா தயாராக இருக்க வந்தவர்களை விசாரித்துவிட்டு அழைத்து சென்றான்.
மகேஷ்வரி உடல்நிலை குறித்து வண்டியை வேகமாக செலுத்தாமல் மிதமான வேகத்திலேயே அவன் செல்ல,
“இதேம் சூதானமாக்கும்? கொசு வெரட்டுதவேன் கூட வேகமா கையாட்டுவியான். போறியான் பாரு வேக்காட்டுல வேவாம வெறுங்காலுல நடக்குததாட்டம்…” என தோளை இடித்துக்கொண்டு வழக்கம் போல பேச மகேஷ்வரி முகத்தில் மிதமான புன்னகை.
“கம்மின்னு வரமாட்டியா கெழவி. ஒருநா ஒன்னிய இந்த காரு முண்ணுக்கா ஏத்தி கட்டி வண்டிய வெரட்டல?…”
“பறக்கும்ந்தேன். போடா போ….” என காந்திமதி சிரிக்க கடுப்பான ஜகா ஒற்றை கையால் ஜன்னலோரம் பிடித்து தள்ளினான்.
“மொத ஒன்னிய உருட்டி விட்டுபோட்டு ஊரு போயி சேருதேம் பாரு….” என தள்ளுமுள்ளாக,
“பாட்டி உங்களுக்கு அவங்களோட வம்பிழுக்கலைன்னா தூக்கம் வராதே? இது தான் லேட்டாகுது…” என்றாள் மதுரா.
கையை எடுத்துவிட்டு மீண்டும் ஜகா காரை செலுத்த காந்திமதி இன்னும் வசதியாக அமர்ந்துகொண்டார்.
“வேகமா ஓட்ட முடியல. பேச்சு கிழியும்….” என்று சொல்லி இன்னும் பேரனின் முறைப்பை வாங்கிக்கொள்ள பதிலுக்கு ஜகா பேச என மகேஷ்வரி வீடு வரும் வரை வாய்விட்டு சிரித்துக்கொண்டே தான் இருந்தார்.
நாயகிக்கு கண்கள் கலங்கி விட்டது மருமகளின் மலர்ந்த முகத்தில். அளவான பேச்சு, எதையோ யோசித்தபடியே வாடி இருக்கும் முகம் என்று நலுங்கி இருந்தவர் இப்போது தான் வாய்விட்டே சிரிக்கிறார்.
வீடு வரவும் மரிக்கொழுந்து ஆரத்தி கரைத்து தயாராக இருக்க மகேஷ்வரிக்கு சுற்றப்பட்டு உள்ளே அனுப்பி வைத்தனர்.
அவர்கள் வீடு வந்ததுமே பாண்டியனுடன் வடிவும் அங்கே வந்துவிட்டார் பார்ப்பதற்கு.
சொக்கநாதபாண்டியன் உள்ளே நுழைந்ததில் இருந்தே மதுராவை விழிகளால் அலச அவள் அங்கே இல்லை.
பாண்டியனுடன் ஜகாவும், காந்திமதியும் பேசிக்கொண்டிருந்தனர் அங்கே நடந்ததை பற்றி.
ஏற்கனவே மதுரா போனில் இதனை சொல்லியிருக்க காந்திமதி சொல்லும் பொழுதும் கேட்டுக்கொண்டான் அமைதியாக.
“அவர மாத்த முடியாதுன்னா விடேம் கெழவி. புடிச்சு இழுத்துக்கிட்டே திரிவியோ? போற எடத்துல எல்லா ஒரண்டைய கூட்டுதது…” என அவரின் காதை பிடித்து இழுத்து வம்பு செய்தான்.