இத்தனை நாட்களில் காந்திமதி இல்லாத அந்த வீடு உயிர்ப்பில்லாததை போல தானே இருந்தது பாண்டியனுக்கும்.
ஒளிந்து நின்று பார்ப்பதும், ஏதேனும் வாயை கொடுத்துவிட்டு வம்பிற்கு நிற்பதும், அதனை மறைக்க இல்லாத சேட்டைகள் செய்வதும் என எப்பொழுதும் கலகலப்புடன் இருந்த வீடு.
யாருக்கும் பொழுது கரையவில்லை. துர்கா சொல்லவும் மதுராவிற்குமே அப்படித்தான் என தோன்றியது.
இவ்வளவு நேரம் அவர்களுடன் நாயகியின் வீட்டில் இருந்த பொழுதிருந்த சலசலப்பு இங்கில்லையே.
வடிவின் முகத்தில் கூட எத்தனை வாட்டம்? எப்போதும் மருமகளை அன்பாய் கடிந்து இதை செய், அதை பார் என பேசிக்கொண்டே இருப்பவர் இல்லாது இருக்கமுடியவில்லை.
“செரித்தா ரெண்டுமூணு நா செல்லட்டும். வருவாக…” என்று உண்டுமுடித்தவன்,
“அம்புட்டுத்தேம்….” என தன்னுடைய புத்தகங்களை எடுத்துக்கொண்டு துர்கா செல்லவும் வடிவும் அன்று வீட்டிற்கு வந்து பணம் தந்தவர்கள் பற்றி சொல்லிக்கொண்டிருக்க நோட்டை எடுத்து வரவு வைத்து பணத்தை வாங்கி சரிபார்த்தான்.
“பணத்த ஒம்பெட்டில வெய்யித்தா. காலேல ஜகாட்ட சொல்லி பேங்குல போட்டுடுவோம்…” என்றான்.
பாலை காய்ச்சி எடுத்து வந்தவர் மருமகளுக்கு, மகனுக்கும் தர வாங்கிக்கொண்டவன் அங்கே மதுராவருகே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தான்.
வடிவும் மதுராவிடம் மகேஷ்வரிக்கு என்னென்ன உணவுகள் தரலாம் என மருத்துவர் சொல்லியதை விசாரித்துக்கொண்டிருந்தார்.
“இப்ப இதேம் நேரமாத்தா? போயி ஒறங்குவியா…” பாண்டியன் சொல்ல,
“சின்னவேன் இன்னும் வரல. செரி கதவ அடச்சிட்டு போறேம். வந்து தட்டட்டும்…” என எழுந்து செல்லவும் பாண்டியனும் நோட்டை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றுவிட்டான்.
“நான் ஜகாவுக்கு சொல்றேன்த்தை. வந்திருவாங்க….” என ஜகாவிற்கு அழைக்க,
“மதினி அஞ்சே நிமிசந்தேம். அங்க இருப்பேன்….”
“நேரமா வாங்க ஜகா. அத்தை தூங்க வேண்டாமா?….” என்று சொல்லி வைத்துவிட்டாள்.
“அஞ்சு நிமிஷத்துல வருவாங்க….” என்று அவருடன் ஜகா வரும் வரை பேசிக்கொண்டிருந்தவள் அவன் வரவும் எழுந்து உள்ளே வந்தாள்.
அங்கே பாண்டியன் கட்டிலில் அமர்ந்திருந்தான் கணக்கு நோட்டை வைத்துக்கொண்டு.
“இன்னும் கணக்கு பார்த்து முடிக்கலையாக்கும் சொக்கரே?…” என்றவள் போனை ஓரமாக வைத்துவிட்டு அவனின் தோளில் சாய்ந்த நொடி மொத்தமா தனக்குள் அவளை சாய்த்திருந்தான் சொக்கநாதபாண்டியன்.
“சொக்கா….” என்றவளின் குரல் கிறங்கி திணற அவளின் பேச்சுக்கள் பாண்டியனின் மூச்சுக்குள் கலந்தது.
மெல்ல மெல்ல அவனின் ஆளுகை ஆளுமையாக மாற, முயன்று தன் வலிமையை திரட்டி அவனை தள்ளிய மதுரா மறுபுறம் உருண்டு வந்து எழுந்தமர்ந்து மூச்சு வாங்கினாள்.
மதுராவின் விலகலில் பாண்டியனின் முகம் செம்மை பூச அவள் முகம் பார்த்தவன் கண்கள் சிரித்தது.
“அப்பப்பா, ஆனாலும் இவ்வளோ வேகம் என்னால ஆகாதுப்பா…” என லேசாய் முறைப்பும், சிரிப்புமாக சொல்லி தலையணையை அவன் மேல் வீச சொக்கநாதபாண்டியனும் வெட்கம் கொண்டான்.
“மதுரா….” என்றவன் சிரிப்புடன் தலையணையில் முகம் கவிழ்த்து புதைக்க அதில் மதுரா தான் இன்னுமே சிரித்தாள்.
“செரி வா….” என்றவன் இழுப்பில் அவன் தோளில் விழுந்தவள்,
“ரொம்ப தேடிட்டீங்க போல? ஆனா சரியான கல்லுளிமங்கன். ஒருவார்த்தை தேடுதுப்பான்னு சொல்லியிருப்பீங்களா? ஆணவம், ஆணவம். எல்லாம் நானே சொல்லனும். எத்தனைதடவை சொல்லியிருப்பேன் மிஸ் பன்றேன்னு….” என கேட்டு அவனின் மீசையை பிடித்து இஷ்டத்திற்கு இழுத்து வைத்தாள்.
மதுராவின் இழுப்பிற்கெல்லாம் சென்றவன் இதழ்கள் அவளின் முகத்தில் கோலமிட,
“என்ன சொன்னீங்க? இப்ப என்னப்பா? அதுக்கென்னப்பா? இருக்கட்டும்ப்பா? இருந்துட்டு வாப்பா. எத்தனை அப்பா போட்டீங்க? இப்பல தெரியுது….” என அவனின் தேடலின் வேகத்தில் கேலி பேச,
“போதும்ப்பா….” என்றவன் ரகசிய சிரிப்போடு அவளிடம் தஞ்சம் புகுந்தான்.
“போதாதேப்பா….” என்ற மதுராவின் வார்த்தைகள் மேலும் ஜாலம் கொள்ளும் முன் அவள் வதனத்தில் வர்ணங்களை இறைத்தான்.
தன் கைகளுக்குள் துவண்டு பாகாய் உருகியவளிடம் மெழுகாய் தானும் உருகிக்கொண்டிருந்தான் சொக்கநாதபாண்டியன்.
மனதின் தேடலின் பிரதிபலிப்புகள் உணர்வின் மூலம் மிச்சமில்லாமல் பகிரப்பட்டது ஆழிச்சுழல் சுவாசங்கள் ஆசுவாசம் கொண்டு ஆறுதலாக இளைப்பாறும் வரை.
“நீயி சொக்கனுக்கு வாச்ச சுந்தரி தான்ப்பா…” என ராகம் பாடி அச்சாரங்களின் இடையில் அர்த்தங்களை புகுத்தினான் மதுராவின் நாயகன்.