அந்த வார இறுதியில் எழில்மணி வந்திருந்தார். வந்தவரிடம் ஓரிரு வார்த்தைகள் மகேஷ்வரியும் பேச இன்னுமே சந்தோஷம் அவருக்கு.
மனைவி முகம் திருப்பாமல் பேச அதுவே பெரிதாய் தெரிந்தது. இது போதுமே. இந்தளவிற்கு மட்டுமே நினைத்தவர் மனதிற்குள் இன்னொரு ஆசையும் இந்த பிரிவில் முகிழ்த்திருந்தது.
பேசுவதற்கு தான் சரியான ஆளையும், சரியான தருணத்தையும் எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்.
“இப்ப நீ ஓகே தானே மகேஷ்?….” என மனைவியிடம் கேட்க,
“உடனே என்னால ஊருக்கு வர முடியாது….” என்றார் மகேஷ்வரி அடுத்ததாய் அவர் என்ன கேட்பார் என தெரிந்து.
“சரி சரி. நான் ஒன்னும் சொல்லலை. உனக்கு எப்ப முடியுதோ அப்ப வா. ஆனா என்னையும் கொஞ்சம் யோசி. தனியா இருக்க ரொம்ப கஷ்டமா இருக்கு…” என சொல்லியவர் மதுரா அங்கே வாரவும் பேச்சை மாற்றினார்.
“என்ன செய்யலாம்ன்னு இருக்க? இங்கயும் வீட்டுக்குள்ளயே அடைஞ்சு இருக்க போறியா நீ?…” என கேட்டு அக்கறை காண்பிக்க,
“முதல்ல இன்னும் உடம்பு தேறட்டும் ப்பா. அப்பறமா வெளில அழைச்சிட்டு போறதை பார்க்கலாம். சும்மா இங்க வாக்கிங் இப்படித்தான் போறாங்க. இப்போதைக்கு அது போதும்….” என்றாள் மதுரா.
“சரிம்மா…” என்ற எழில்மணி,
“செக்கப் இருக்கே இன்னும் நாலு நாள்ல…” என அடுத்த கேள்வியை ஆரம்பிக்க,
“இங்க மதுரையில ஒரு ஹாஸ்பிட்டல் டாக்டரை சஜஸ்ட் பண்ணியிருக்காங்க நம்ம டாக்டர். அங்க பார்த்துப்போம்….” என்றதும் எழில்மணி முகம் மாறியது.
“சரிம்மா…” குரல் கம்மிவிட்டது.
“வேற எதுவும் கேட்கனுமாப்பா?….” என மதுரா கேட்கவும் ‘இல்லை’ என தலையசைத்தார்.
“ரெண்டு கம்பெனியையும் சேர்த்து கவனிக்க உனக்கு சிரமமே மது?…” மகளிடம் அடுத்து கேட்க,
“அப்படி எதுவும் இல்லையேப்பா? நான் இங்க இருந்து சும்மா பார்த்துக்கறேன். அவ்வளோ தான். இதுல என்ன கஷ்டம்?….” அடுத்த கேள்விக்கும் அவர் எதிர்பார்த்த பதிலில்லை.
“இருந்தாலும் உன் புருஷன் வீட்டுல எதுவும் சொல்லலையா?….”
“இப்ப என்னப்பா? என்ன தெரியனும் உங்களுக்கு? எனக்கு புரியலை. எனக்கு இது கஷ்டமா இருக்கான்னு கேட்டா சத்தியமா இல்லை. கொஞ்சமும் கஷ்டமில்லை. சொல்ல போனா எனக்கு அவரும், ஜகாவும் ரொம்பவே சப்போர்ட்டிவா இருக்காங்க. என் பேமிலியுமே…” என்றவள்,
“அதுவும் அம்மா இங்க வந்ததுல இருந்து பகல்ல இங்க வந்திடறேன். அம்மாவும் சேர்ந்து கொஞ்சம் கொஞ்சம் அதை கவனிக்கறாங்க. வேற என்ன வேணும்? நத்திங்….”
பட்டென்று நறுக் தெறித்தார் போன்ற பதிலில் எழில்மணியின் வாயடைத்த மதுரா மகேஷ்வரியை பார்த்தாள்.
அவருக்கும் இவர் எங்கே சுற்றி எங்கே வருகிறார் என்ற எண்ணம் தான் யோசனையுடன் துளிர்த்தது.
இருவரின் பார்வையில் எழில்மணி அமைதியாகிவிட அன்று அந்த பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.
ஆனால் இருநாட்கள் கழித்து ஊருக்கு கிளம்பும் அன்று அவர் செய்துவைத்த வேலையில் பாண்டியனின் பொறுமை எல்லை கடந்திருந்தது.
“வாய தொறந்து என்னன்னு சொல்லுத்தா. இப்ப நீயி சொல்லல அந்த மனுசென சங்கோட சொவத்துல ஏத்தி கேப்பேன் பாத்துக்கோ….” என அழுதுகொண்டிருந்த வடிவிடம் பாண்டியன் கேட்க பயந்து போனார் அவர்.
“அவரு ஒனக்கு மாமனாரு சாமி. என்ன பேசுத நீயி?….” வடிவு அழுகையை நிறுத்தி மகனை கண்டிக்க,
“மதுவுமா?….” வடிவு அவனை நிதானப்படுத்த மதுராவின் பெயரை எடுத்தார்.
“அவ இந்த வீட்டு புள்ள. நீ வேற, கெழவி வேறன்னு என்னிக்கும் சொன்னதில்ல. சாமிக உருவமும், ஒறவுந்தேன் வேற. ஆனா சாமி என்னிக்கும் சாமிதேம்…” என்ற மகனை மெச்சிக்கொள்ளும் சூழ்நிலை அப்போதில்லையே.
“நீயி அவகட்ட கேட்டா நம்ம புள்ள என்ன நெனைக்கும்? எம்புட்டு இருந்தாலும் அவளுக்கு அவரு அப்பா. அவள ஒனக்கும், அவருக்கும் நடுவுல சங்கட்டத்தோட நிக்க வெக்காத ராசா. ஆத்தா சொல்லுதேம் கேளு….” என மகனை நிறுத்திவைக்க எவ்வளவோ போராடினார்.
“எத்தே சொல்லுங்களேன், கேட்டுக்கிட்டு நிக்கிதீய?….” என்று காந்திமதியை துணைக்கழைத்தார் வடிவு.
“அவேன் சொல்லுததுல என்ன தப்புங்கேன்? அந்த கோளாறு புடிச்சவேன் அவம்பாவத்த இன்னிக்கி அத்தெரியனும், அம்புட்டுதேம்….” என அதற்கு மேல் கொதித்துக்கொண்டு நின்றார்.
“இப்ப பெரியவேன் போனா அங்க சலம்பலா போவும். நமக்குத்தேம் அசிங்கம்….” என்ற வடிவு,
“ஆத்தா சொல்லுதேம் நீயி அங்க போவாதய்யா. மது புள்ள வெசனப்படும்…” என்றார் மருமகளுக்காக.
“பேசாம இங்கினவே இருக்கனும். வாசப்படி தாண்டி வந்தீய அம்புட்டுத்தேன். போன போட்டு என்னத்தாச்சும் தாக்கல் சொல்லுதேமின்னு ஒண்ணுத்தையும் செய்யக்கூடாது…” என எச்சரித்துவிட்டே கிளம்பினான் பாண்டியன்.
மகனின் கோபத்தில் மிரண்டு போயிருந்தார் வடிவு. மாமியாரும் அதற்கு மேல் தன்னை தீப்பார்வை பார்த்துக்கொண்டிருக்க,