இப்போது அவன் வந்திருக்கும் வேகமும், வண்டியின் வேகமும் என உள்ளே என்னவோ உலுக்கியது.
“ஆத்தாட்ட என்ன சொன்னீக?….” என்றான் மற்ற யாரையும் பொருட்படுத்தாமல் எழில்மணியின் முன் வந்து நின்று.
வேஷ்டியை மடித்து கட்டியவன் கைகளால் சட்டையின் கை மடிப்பை புஜங்கள் தெரிய ஏற்றினான்.
பல்லை கடித்துக்கொண்டு கனலை உமிழ்ந்த விழிகளின் வீரியத்தில் எழில்மணி பொசுங்காதது தான் குறை.
“மாப்பிள்ளை….” எழில்மணி குரல் தந்தியடிக்க மகேஷ்வரி அதிர்ச்சியாய் பார்த்தார்.
கணவர் என்னவோ செய்துவிட்டார் என்று புரிந்துபோக அவருள்ளம் பெரிதாய் துடிக்க ஆரம்பித்தது.
மகளை பார்க்க மதுராவின் அசைவற்ற தன்மையும், பயந்த பார்வையும் மகேஷ்வரியை மகளை நெருங்க செய்தது.
“மது…” என தாயின் தொடுகையை கூட கவனிக்காமல் மதுரா பாண்டியனையும், தகப்பனையும் மட்டுமே பார்த்திருந்தாள்.
“எங்கம்மாக்கிட்ட என்ன சொன்னீங்க? இப்ப தெரிஞ்சாகனும்…” என்றவனின் அழுத்தம் திருத்தமான குரலும், அவனின் பேச்சும் உள்ளத்தை குலுங்க செய்தது.
“என்னோட சொந்தங்களை, எனக்கு நெருக்கமானவங்களை தவிர மத்த மூணாவது மனுஷங்ககிட்ட என்னோட பேச்சு இப்படித்தான் இருக்கும்….” என அன்றொரு நாள் வசுந்தராவிடம் சொல்லியது மதுராவிற்கு மட்டுமல்ல மகேஷ்வரிக்குமே ஞாபகத்தில் வந்தது.
“மது…” என்ற மகேஷ்வரியின் அழைப்பில் தவிப்புடன் அவரை பார்த்தவள்,
“என்னம்மா இது?…” என்றாள் விழிகள் கலங்க.
ஒரு வினாடியில் எழில்மணியை மூன்றாம் மனிதனாக்கிவிட்டானே என்ற எண்ணத்துடன், இவர் என்ன செய்தாரோ அதற்கு என்ற எண்ணமும் வியாப்பித்தது.
அப்போது தான் மதிய உணவிற்கு வடிவு சமைத்து எடுத்து வந்ததும், வரும்பொழுது இருந்த சந்தோஷம் செல்லும் பொழுது இல்லாததும் ஞாபகத்தில் பதிந்தது.
என்னவோ உடல்நிலை முடியவில்லை செல்கிறார் போல என நினைத்தவளுக்கு அப்போது தெரியவில்லை.
இப்போது கணவனின் ஆக்ரோஷமான கேள்வியில் கண்டுகொள்ளமுடிய தொய்வுடன் தகப்பனை பார்த்தாள்.
‘இன்னும் எனக்கு என்னவெல்லாம் செய்ய போறீங்கப்பா?’ என ஆற்றாமையுடன் அவள் மனது அழுதது.
“உங்களைத்தான் கேட்கறேன். என்ன சொன்னீங்க எங்கம்மாக்கிட்ட?…” என இன்னும் நெருங்கியவனை தாண்டி எங்கும் செல்ல முடியாமல் சுவற்றில் பதிந்துவிட்டார் எழில்மணி.
“என் நிலைமையை எடுத்து சொன்னேன் மாப்….”
“மூச், மாப்பிள்ளைன்னு ஒருவார்த்தை வந்துச்சு, கொதவளை அத்து எரிஞ்சிருவேன். மாப்பிள்ளையாம், மாப்பிள்ளை. என்னை என்ன உங்களை மாதிரின்னு நினைச்சீங்களா?…” என்று கத்திய கத்தலில் நாயகி பயந்து அவனை நெருங்க செல்ல,
“வேணாம் அப்பத்தா….” மரிக்கொழுந்து பிடித்து நிறுத்தினாள்.
“அண்ணே கோவத்துல இருக்காக. கிட்ட போனா அம்புட்டுத்தேன். பொறுங்க….” என பிடிக்க,
“எம்மவேன்….” என்றார் நாயகி.
எழில்மணி பார்வை மகளை, தாயை, மனைவியை என அனைவரையும் பார்த்துவிட்டு,
வயதுக்கும், உறவுக்குமான மரியாதை எல்லாம் பாண்டியனை விட்டு எங்கோ சென்றிருந்தது.
அத்தனை தூரம் கண்மண் தெரியாத ஆத்திரத்தில் அக்னி குழம்பாய் நின்றிருந்தான் அவன்.
“எங்கம்மாவுக்கு மூணு புள்ளை இருந்தா ஒன்னை உனக்கு தாரவாத்து குடுக்கனும்னு என்ன தலையெழுத்தா? எவ்வளோ பேசியிருக்க நீ?….” என்று கேட்க நெஞ்சில் கை வைத்துவிட்டாள் மதுரா.
“வீட்டோட மாப்பிள்ளை பார்க்கறதும், எதிர்பார்க்கறதும் உன் விருப்பம். என்னவும் செய். ஆனா எங்கம்மாக்கிட்ட உங்க மகனை பெருசா ஆளாக்கறேன், இன்னும் கௌரவமா வாழ வைக்கறேன்னு சொன்னியாம்…”
“நீயும் உன் கௌரவமும். அதான் உன்னை ஆளாக்கினதை தான் பார்த்தேனே? அப்பறம் என்ன? என் பொண்ணு இங்க இருந்து வேலைன்னு இருந்து கஷ்டப்படறா. சொத்தை மருமகன் பேர்ல இப்பயே எழுதி வச்சிடறேன். அவர் முதலாளியா இருந்து அங்க வந்து எல்லாம் பார்த்துக்கட்டும்ன்னு சொல்லியிருக்க….”
“என்ன என்னை விலை பேசறியா நீ? என்னை என்ன உன்னை மாதிரி நினைச்சியா? பாசத்துக்கு எம்புட்டு வேணா செய்வேன். ஆனா உன்னோட வெட்டி கௌரவத்துக்கு என் தலைமுடி ஒன்னு அசையாது பார்த்துக்க…”
“புருஷன் போன பின்னாடி பிள்ளைங்க தான் எல்லாம்ன்னு இருந்த மனுஷியை துள்ள துடிக்க அழ வச்சிட்டியே? அதான் மூணுக்கு ரெண்டு பிள்ளை கூட இருக்குமே? ஒத்த பிள்ளை போனா என்னன்னு சொல்லியிருக்கியே…”
“எனக்கும் ஒத்தை பொண்ணு, பிரிஞ்சு இருக்க கஷ்டமா இருக்கு. எங்களை பார்த்துக்க அவங்க வேணும்ன்னு சொல்லியிருக்கியே. அம்புட்டு உன் பொண்ணை பிரிஞ்சிருக்க கஷ்டமா இருந்தா….” என்றவன் வார்த்தைகள் அந்த இடத்தில் நின்றுவிட மதுராவின் உயிர் துடித்தடங்கியது.
அதுவரை அத்தனை கோபமாக பேசிக்கொண்டிருந்தவன் உணர்வுகள் மனைவிக்காக சற்று நிதானிக்க திரும்பி மதுராவை பார்த்தான்.
கண்ணீர் குளம் கட்டி நின்றிருந்தது அவளின் விழிகளில். அதற்கு பின்னான சீற்றத்தையும் அவனால் உணர முடிந்தது.
“இங்க வா….” என்று அவளை அழைக்க பிடிவாதமாக நின்றிருந்தாள் மதுரா.
அவள் வரமாட்டாள் என தெரிந்து மதுராவை வந்து கைபிடித்து எழில்மணியிடம் இழுத்து சென்றவன்,
“என்னிக்கு தாலி கட்டினேனோ அன்னைக்குல இருந்தே இவ எங்கவீட்டு பொண்ணு. என்கூட தான் இருப்பா ஜென்மத்துக்கும். பேச்சுக்கு கூட பொண்ணை கூட்டிட்டு போங்கன்னு சொல்லமாட்டேன்…” என்றான்.
“ஒன்னொண்ணுக்கும் பொறுமையா போனா இளிச்சவாயனா? பேச வாயிருக்காது. அவ்வளோ தான். மரியாதை எல்லாம் பொண்டாட்டி அப்பான்ற ஒன்னுக்கு மட்டும் தான்…..” என விரல் நீட்டி எச்சரித்தவன் மதுராவை பிடித்திருந்த கையை விட்டான்.
எழில்மணியை இன்னும் பேசிவிட வார்த்தைகள் வரைமுறையின்றி வேலி தாண்ட முயன்றது.
மனைவி, மாமியார் முகம் கண்டு நிதானமானவன் தலையை கோதிக்கொண்டான் நீண்ட மூச்செடுப்புடன்.
“தம்பி….” என மகேஷ்வரி அழைக்க அவரிடம் திரும்பியவன்,
“சொல்லுங்க….” என்றவனின் உணர்வற்ற அழைப்பில் அடிபட்ட பார்வை பார்த்தாள் மதுரா.
“தம்பி….” மகேஷ்வரி அழுகைக்கே சென்றுவிட தலையில் அடித்துக்கொண்டவன்,
“தப்பா நெனைக்காதீகத்தே. மனசு கொதிக்குது. என்னிய என்ன செய்ய சொல்லுதீய?…” என்றவன்,
“ஆத்தா வந்தப்ப இவரு அம்புட்டு பேசிருக்காரு. அது கலங்கி போயி எங்கப்பத்தாட்ட சொல்லி அழுதுக்கிட்டு கெடக்கு. ஒத்த வார்த்த எங்கிட்ட சொல்லல. ஆனா மூஞ்சியே செத்துருச்சு அதுக்கு….” என்றவன் விழிகளிலும் நீர் திரையிட்டுவிட்டது.
“மன்னிச்சிடுங்க தம்பி. அவர் பேசினதே எங்களுக்கு தெரியாது…..” என்றார் மகேஷ்வரி குறுகி போய் கையெடுத்து கும்பிட்டு.
“ஆத்தீ, என்ன காரியத்த செய்யுதீய? அந்த சாமியே மன்னிக்காது என்னிய. கைய எறக்குங்க….” என்றவன் மகேஷ்வரி அப்படியே நிற்பதை கண்டு கையை தானே பிடித்து இறக்கிவிட்டான் பதட்டமாக.
“நீங்களும் புள்ளைய பெத்தவக தான? ஒரு அம்மாவுக்கு ஒத்த புள்ளன்னாலும், பத்து புள்ளனாலும் ஒன்ன விட்டு இருக்குமா? எல்லா சமந்தான? ஒருத்தன அனுப்பிட்டு மத்ததுங்க கூட ஒறவாட ஆவுமா? உசுர விட்டுடும் எங்காத்தா….” என்றான் குரல் தழுதழுக்க.
“கிராமத்துக்காரங்க, இங்கின உறவு ஜனம்ன்னு அம்புட்டு பேர் இருக்காங்க. உங்களுக்கு ஒன்னும் தெரியாதுன்னு சொன்னியாமே? யோவ், இத எங்கிட்ட சொல்லிருக்கனும்….” என்றவன் பல்லை கடித்து மூச்சு வாங்க மதுராவை பார்த்தான்.
“வேணா, வேணா. நா மனுசனா இருக்க நெனைக்கேன். எங்குடும்பத்துல சலம்பல கூட்டுன ஆருன்னு பாக்கமாட்டேன். அம்புட்டுத்தேன்….” என்று மீண்டும் எழில்மணியை பார்த்து நாக்கை மடித்து எச்சரித்தவன்,
“இங்காருங்கத்தே அந்த சொத்து ஒங்க மவளுக்கு. அத்த வேணாங்கற உரிமை எனக்கில்ல. ஆனா எனக்கு அது வேணா. எங்கிட்ட கொண்டாராதீக. வெளங்குமின்னு நெனக்கிதேம்…” என மகேஷ்வரியிடம் சொல்ல,
“எனக்கு என்ன சொல்லன்னு தெரியலை தம்பி. ஆனா….” மகேஷ்வரி பேச வர,
“வேணாம்த்தே. பொறப்படுதேம். இருந்தா என்னதாச்சும் பேசி போடுவேம். எம்பொண்டாட்டிக்கு தாய், தகப்பன் வேணுமில்ல. தகப்பனில்லா அருமை இல்லாதவகளுக்குத்தா தெரியும்…” என்றான் தொண்டை அடைக்க.
“அம்புட்டு கஷ்டத்துலையும் எங்கம்மா அந்த கொற தெரியாம வளக்க பாத்துச்சு. ஆனாலும் இல்லாதது இல்லாதது தான? அத்த நெரப்ப ஆவுமா? கலியாணம் முடியவும் அந்த ஒரு ஒசந்த எடத்துலதேன் இந்த மனுசென வச்சேம். அவரு செய்யுததுக்கு எல்லாம் அந்த ஒத்த நெனப்புதேம் பொறுக்க வச்சிச்சி….”
“எங்கப்பத்தா கால கட்டிக்கிட்டு கதறுது எங்காத்தா எம்மவன என்னியவே பேசி அனுப்ப சொல்லுதாகளே, எம்புள்ள என்ன பாடுபடும் இத்த நா சொன்னா? மத்த சின்னதுங்க ரெண்டும் தவிச்சு போவாதுகளான்னு கேட்டுக்கிட்டு சொல்லுது. ஆனா எம்மருமவ கேட்டா நெசத்துக்கு போயிட்டு வா ராசான்னு அனுப்பத்தேம் செய்யுவேன்னு சொல்லுது….”