எழில்மணி ஏற்பாடு செய்திருந்த கார் வந்துவிட வாசலில் நின்று அழைத்தார் ட்ரைவர்.
யாரேனும் தன்னிடம் பேசுவார்களா என்று பார்க்க ஒருவரும் பேசவில்லை. நாயகி அழுதபடி மூலையில் அமர்ந்திருந்தார்.
மதுரா சுவற்றில் சாய்ந்து நிற்க, மகேஷ்வரி அமர்ந்த இடத்தில் தலையை பிடித்திருந்தார்.
“மகேஷ்….” என மனைவியை அழைத்தவர்,
“நான் இப்படி ஆகும்ன்னு நினைக்கலை மகேஷ். தன்மையா தான் கேட்டேன். நமக்கும் நம்ம பொண்ணுக்கும் எல்லாம் மாப்பிள்ளை தானேன்னு. அதுவும் இல்லாம அங்க இருந்தப்ப மாப்பிள்ளை கம்பெனியை பார்த்துக்கிட்டது எல்லாம் சொன்னாங்க….” என்றவர்,
“அதை வச்சு தான் நான் இதை கேட்டேன். அவங்களும் புரிஞ்சுப்பாங்கன்னு கேட்டேன். ஆனா…” என்றவர் உள்ளுக்குள் நடுங்கிக்கொண்டிருந்தார்.
மனைவியிடம் பிரதிபலிப்பு எதுவும் இல்லை என்றானதும் மெல்ல மகளின் பக்கம் வந்தார்.
“மது….” என்ற அழைப்பில் சாதாரணமாக திரும்பியவள்,
“சிறுத்தைகள் அதுகளோட புள்ளியை எப்பவும் மாத்திக்காது. இப்பதான் எனக்கு முழுசா புரியுது. நீங்க கிளம்புங்க. கார் வெய்ட் பண்ணுது….” என்று சொல்ல,
“மதும்மா அப்பா சொல்றதை கொஞ்சம் புரிஞ்சுக்கோ. நான் வேணும்னா மாப்பிள்ளைட்ட வந்து…”
“எனக்கு எல்லா வெளங்கிருச்சு. நீங்க ஒன்னத்தையும் புரிய வைக்க வேணா. ஒங்க பொறப்பாடு நேரத்துக்கு போனாத்தேம் ஒங்கூருக்கு போவ ஆவும். கெளம்புங்க….” என்ற மதுராவின் பேச்சில் வாயடைத்து போனார் எழில்மணி.
“எம்புருசன பாத்துக்க எனக்கு தெரியும். அத்த நா பாத்துக்கிடுதேம். ஒங்களுக்கு கொள்ள சோலி கெடக்கும். பொறப்படுங்க…” என்றவள் பேச்சில் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை எழில்மணி.
கோபமாய், மனம் வருந்தி ஆற்றாமையுடன் அமர்ந்திருந்த மகேஷ்வரி மகளின் பேச்சையும், அதை கேட்டு அதிர்ந்திருந்த எழில்மணியின் பேயறைந்த முகத்தையும் கண்டு சட்டென சிறு புன்னகை பூத்துவிட்டது.
“ஸார்….” வெளியே ட்ரைவர் அழைக்க எழில்மணி மெல்ல நகர்ந்தார்.
நாயகி முகம் திருப்பிக்கொண்டார் மகனை பாராமல். எத்தனை பெரிய காரியத்தை செய்திருக்கிறான் என்று.
இனி அங்கிருந்தால் இன்னுமே வருத்தம் தான் மிஞ்சும் என்றவர் கிளம்பிவிட்டார் எழில்மணி.
என்னவோ நினைத்து பேச போய் இப்படி ஒரு திசையில் அது திருப்பி தாக்கும் என நினைக்கவே இல்லை.
வடிவை தவறாகவும் எண்ணவில்லை அவர். அந்தளவிற்கு கொஞ்சமேனும் சிறு புரிதல் இருந்தது.
மருமகனின் பேச்சில் தன்னையே வெட்கிக்கொண்டார். இந்த எண்ணம் எப்படி தனக்கு தோன்றாமல் போனது என சுய ஆலோசனையில் தான் சென்றார்.
அவர் கிளம்பியதும் மதுரா அவளின் அறைக்குள் சென்று நுழைந்துகொள்ள சிறிது நேரம் கழித்து தான் மகேஷ்வரி உள்ளே சென்றார்.
“மது நீ உன் வீட்டுக்கு கிளம்பு….” என்று சொல்ல,
“எதுக்கு?….” என்றாள் மதுரா.
தூக்கிவாரி போட்டது மகேஷ்வரிக்கு. மகளை அதிர்ந்து போய் பார்க்க தாயின் திகைப்பில்,
“ப்ச், ம்மா. கூல்டவுன். எதுக்கு இவ்வளோ ஷாக்? இப்ப போகலைன்னு தான் சொன்னேன். எப்பவும் போல நைட் போய்ப்பேன்….” என்று சமாளிக்க,
“அது மத்தநாள் மது. இன்னைக்கு வேண்டாம். ப்ளீஸ், கிளம்பு. மாப்பிள்ளை ரொம்ப கோபமா இருக்கார். நாமளும் அப்படி இருக்க கூடாது. நீ கிளம்பு….” மகளை சமாதானம் செய்தார்.
“ம்மா, எனக்கு யார் மேலையும் கோபமே இல்லை. நார்மலா தான் இருக்கேன்…” என்று சொல்லியவிதமே மகேஷ்வரியை கலவரமூட்டியது.
“மது அம்மா சொன்னா கேளும்மா….”
“நான் சொல்றதை நீங்க கேளுங்க. நான் பார்த்துக்கறேன்….” என்றவள்,
“ம்மா, அதுக்கு மேல என்னை சொல்ல வைக்க வேண்டாம்….” என்றாள்.
தாயின் உடல்நிலை ஒருபக்கம் இருந்தாலும் ஒரு அளவிற்கு மேல் அவரை தன் விஷயத்தில் அனுமதிக்க முடியவில்லை.
வீட்டிற்கு சென்ற பாண்டியனின் கோபம் மட்டுப்பட மறுத்தது. இன்னும் ஒருவரும் மதிய உணவு உண்ணவில்லை.
ஆளாளுக்கு பட்டினி கிடக்க வீடு திரும்பிய பாண்டியன் அதன்பின் வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை.
காந்திமதி ஜகாவிற்கு போன் செய்து விஷயத்தை சொல்லி வர சொல்ல அவனும் வந்து சேர்ந்தான்.
“அங்கன என்ன ஆச்சின்னே தெரியல சகா. எங்கள போவ கூடாதுன்னியான். நாயகிக்கு போன போட்டா அந்த கெழவி எடுப்பேனாங்கறா. ஒரு எட்டு போயிட்டு வா ராசா….” என்றார் காந்திமதி இறைஞ்சுதலாக.
“என்ன கெழவி மொதவே சொல்லமாட்டியா?…” என கேட்டு கிளம்பும் முன் வெளியே வந்த பாண்டியன்,
“எங்கடா கெளம்புத?….” என அதட்டினான்.
“அண்ணே….” ஜகா தயங்க,
“இவகளுக்கு சொன்னதுதேம் ஒனக்கும்….” என்று நிறுத்திவிட்டான்.
அதன் பின் அவனின் பேச்சை மீறி எங்கே செல்ல? துர்காவும் வர விஷயம் தெரிந்தது.
அறைக்குள் இருந்தவன் இரவாகியும் வெளியே வரவில்லை. வடிவு அழுது அழுது ஓய்ந்துபோய் மாமியாரின் மடியில் தலை சாய்ந்திருந்தார்.
தன்னால் இந்த பிரச்சனையோ என எண்ணி குமைந்து பிள்ளைகளின் சமாதானத்திற்கும் மனது அமைதியடையவில்லை.
வழக்கமாக மதுரா வரும் நேரம் கடந்தும் இன்னும் வந்து சேரவில்லை. அதுவே இன்னும் வீட்டினரை பதட்டம் கொள்ள வைத்தது.
“என்ன சகா?….” என்ற காந்திமதியின் புலம்பலில்,
“இரு கெழவி பேசுதேம்….” என மதுராவிற்கு அழைத்தான்.
“சொல்லுங்க ஜகா….” என சாதாரணமாக கேட்டவளிடம் என்ன பேச முடியும்?
“ஜகா, லைன்ல இருக்கீங்களா?….” என்றதும்,
“இருக்கேம் மதினி. இன்னும் ஒங்கள காணுமேன்னு கேட்க தான்….” என அவன் தடுமாற,
“காணாம எங்க போக போறேன். என் வீடு அதுதானே? வருவேன்….” என்றவள் எப்போது என்று சொல்லவில்லை. வைத்துவிட்டாள்.
“என்ன சகா?….” என கேட்க பாண்டியன் வெளியே வந்தான்.
சிவந்து தடித்திருந்த இமைகள் மனைவியை காணாது தேடியபடி வாசலுக்கு சென்றது.
மதுராவும் வாசல் கேட்டை திறந்துகொண்டு உள்ளே நடந்து வந்துகொண்டிருந்தாள்.
முகத்தில் அத்தனை கோபம். முறைப்புடன் உள்ளே நுழைந்தவளை பாண்டியனுமே முறைக்க சளைக்காமல் எதிர்கொண்டாள்.
“மது, அம்மாடி….” என அவளை பார்த்ததுமே எழுந்து ஓடி வந்தார் வடிவு.
அழுது அழுது, முகமெல்லாம் வீங்கி இருந்தது அவருக்கு. உடலில் அவ்வளவு நலிவு அந்த ஒற்றை நாளில்.