“பின்ன எப்படி இந்த வார்த்தை வந்துச்சு? நான் சொல்லித்தந்துட்டேன்னு தப்பா நினைக்காதன்னு ஏன் கேட்டீங்க நீங்க?…” என்றவள்,
“ஆமா, நான் தான் கல்யாணத்துக்கு முன்னாடியே சொல்லியிருந்தேன் கடன் எப்பவும் கடன் தான். அதை திருப்பி தரவேண்டியது அவங்க மகளா என் கடமைன்னு. அதை உங்க மகன் தானே உங்ககிட்ட சொல்லனும்….” என்று கேட்க வடிவு திகைக்க பாண்டியன் முறைத்தான்.
“கல்யாணத்துக்கு பின்னாடியும் கூட நீங்க என்கிட்டயே கேட்டிருக்கலாம். நான் அந்த உரிமையை உங்களுக்கு தரலையா? எனக்கு புரியலைத்தை. இந்த குடும்பம் எனக்கும் முக்கியம்ன்னு நான் நினைக்கிறேன்….” என்றவள்,
“ஆனா நீங்க என்ன நினைக்கறீங்க? வெறும் மருமகளா மட்டும் இரு அப்படின்னா? அதான் எங்கப்பா உங்ககிட்ட பேசவும் என்கிட்ட சொல்லாம உங்க கஷ்டத்தை உங்கக்குள்ளையே வச்சுக்க நினைச்சீங்களா? அப்ப இந்த வீட்டுக்கு நான் யாரு?….” என்று கேட்டுவிட்டாள் மதுரா.
அவள் கேட்ட நொடி வடிவும், காந்திமதியும் அவளை அணைத்துக்கொண்டு அழுதுவிட துர்கா மதுராவின் கையை பிடித்துக்கொண்டு,
“இப்பிடிலாம் பேசாதீக மதினி. ஆத்தாவுக்கு பொறவு நீங்க தான எல்லாமே…” என்று அழ ஜகா துளிர்த்த நீரை சுண்டிவிட்டவன் கைகட்டி நின்றான்.
“சாமி, எவ்வீட்டு மவராசியை கலங்க வெச்சிட்டேனே? ஒன்னிய அப்புடி நெனைக்கலத்தா. நீயும் வெசனப்பட வேணாமின்னுதேம் சொல்லல சாமி. என்ன வார்த்த கேட்டுட்ட?….” என வடிவும், காந்திமதியும் மாற்றி மாற்றி அரற்றினார்கள்.
“அப்படித்தான் சொல்லுவேன். நான் இங்கயே வேலை செய்ஞ்சு ஏன் கஷ்டபடனும்? உங்க மகனை கூட்டிட்டு அங்க போறேன்னு நான் சொன்னா அனுப்புவேன்னு சொன்னீங்களாம்? எவ்வளோ தைரியம் உங்களுக்கு? அனுப்புவீங்களோ? அதான் எங்கிட்ட சொல்லலை….”
மதுராவும் கோபமும், கண்ணீருமாய் இதனை கேட்க கேட்க அங்கிருந்தவர்கள் மனதெல்லாம் கரைந்துவிட்டது.
“தெரியாம பேசி போட்டேன்த்தா. அத்தையே மன்னிச்சிக்க சாமி….”
“பார்த்தீங்களா? ஸாரி கேட்கறீங்க இப்பவும்….” என வடிவை மதுரா முறைக்க,
“கேக்கல சாமி, நெசாமா கேக்கல. சத்தியமா…..” என்று வடிவு அதையே சொல்லவும் அவரின் பதட்டத்தில் உருகிவிட்டாள் மதுரா.
“அழுவீங்களா?…” என சிறு பிள்ளையாய் பாவித்து மாமியாரை மிரட்ட,
“மாட்டேம்த்தா….” என்றார் வடிவு அப்பாவியாய்.
“எங்கப்பா இனிமே கேட்டா கெத்தா சொல்லனும் எம்மருமகளை எங்கயும் அனுப்ப மாட்டேன்னு. வேணும்னா அவரை வீட்டோட மாமனாரா வர சொல்லி கூப்பிடுங்க…” என சொல்லி தர,
“செரித்தா செரித்தா….” என்றார் உடனே மருமகள் எது சொன்னாலும் தலையாட்டும் பாவனையுடன்.
“இத்த விட்டு வேற பேசி அழுதீக பொறவு கெட்ட கிறுக்காகிரும் பாத்துக்கிடுங்க….” என்று மதுரா சொல்ல அத்தனைபேர் முகத்திலும் கண்ணீர் வழிய தித்திப்பாய் புன்னகையும்.
சூழ்நிலையின் கணம் குறைந்து இலகுவாகிவிட அனைவருடனும் பேசியவள் மகேஷ்வரியிடமும் அழைத்து வடிவை பேச செய்தாள்.
மகேஷ்வரி வருத்தம் தெரிவிக்க வடிவு சமாதானம் பேச புரிதல் கொண்ட மனங்களுக்கிடையில் மன்னிப்பு மதிப்பிழந்து நின்றது.
பேசி முடித்த பின் மதுரா எழுந்து அவளின் அறைக்குள் செல்ல அதுவரை விலகி நின்ற பாண்டியனும் உடன் சென்றான்.
அறைக்குள் வந்தவனை கண்டுகொள்ளவே இல்லை மதுரா. தன்னை பார்வையால் தொடருபவனை அலட்சியம் செய்து அவள் வேலையை பார்க்க பொறுமை கடந்தது.
“இங்காருப்பா….” என்று அவளின் கையை பிடித்து தன் முன் நிறுத்தியவன்,
“அப்பறம் இந்த தொட்டு பேசற வேலை வேண்டாம். கையை எடுங்க….” என அவனின் பிடியை தட்டிவிட்டாள்.
“ஓய் என்ன? வெளில என்னன்னா ஒங்க மவேன்னு சொல்லுத. ஒம்புருசன் தான? அத்த சொல்ல என்னவாம்?…” என்ற பாண்டியனின் புருவங்கள் இடுங்கியது.
“என்ன என்ன? உங்க இஷ்டத்துக்கு எல்லாம் பேச முடியாது. ஏன் ஸாருக்கு மாமனார்கிட்ட பேசினது மறந்து போச்சோ?…” என கேட்க,
“மாமனாரா?….”
“பின்ன வேற யாராம்? என்னானாலும் அதை மாத்த முடியாதுல. அவர் தான் இந்த ஜென்மத்துல உங்களுக்கு மாமனார். இல்லைன்னு சொல்லுங்க பார்ப்போம்….” என மல்லுக்கு நின்றாள் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு.
பாண்டியனின் கோபம் எங்கோ சென்று அவள் நின்ற விதத்தில் பனியாய் கரைய மீசையை நீவியபடி அடிப்பார்வை பார்த்தான்.
“கண்ணை நோண்டிடுவேன் பி கேர்ஃபுல் மிஸ்டர்.சொக்….”
“சொக்கானுக்கும், சொக்கரேக்கும் என்ன நோக்காடாம்? மிஸ்டர்.சொக் வருது?….” கடுப்பாய் கேட்டான் பாண்டியன்.
“அது அப்படித்தான். இதெல்லாம் பேசறதுக்கு முன்னாடி தெரிஞ்சிருக்கனும். எவ்வளோ தைரியமிருந்தா எங்கப்பாக்கிட்ட பிரிஞ்சிருக்க கஷ்டமா இருந்தான்னு கேட்டு என்னை பார்த்து அடுத்த வார்த்தையை நிறுத்துனீங்களே. எங்க இப்ப சொல்லுங்க, அதை கேட்போம்….”
கை கட்டிக்கொண்டு அவன் முன்னால் தீயாய் நின்றவளின் மேல் துளியும் கோபம் கொள்ளமுடியாமல் தலையை கோதியபடி நின்றான் பாண்டியன்.
“சொல்லுய்யா…” மதுரா அவனை சீண்ட,
“என்னய்யா?…” என்றவன் பார்வையில் கிஞ்சித்தும் ஆத்திரமில்லை.
“சொல்ல வந்தீங்களே. இப்ப சொல்லுங்கன்னு கேட்கறேன்…” என இன்னும் அவனை நெருங்கவிடாமல் நியாயம் கேட்க,
“அதான் வாய் வரைக்கும் வந்திருச்சே. ஆனாலும் எவ்வளோ உஷார் நீங்க? டக்குன்னு பேச்சை மாத்தி சொல்ல வந்ததை சொல்லாம நிறுத்தி ஆனா கேட்கிறவங்க சட்டுன்னு புரிஞ்சுக்கற மாதிரி சொல்லி. சரியான ஆள்…” என்றவள்,
“சண்டை போட்டவங்க அங்கருந்து என்னை கூட்டிட்டுல வந்திருக்கனும்? அதை செஞ்சீங்களா? இல்லையே. எனக்கென்ன போச்சுன்னு விட்டுட்டு தான வந்தீங்க….”
“ஒனக்கு அங்க சோலி இருக்குமேன்னு தான வந்தேம்….”
“அது மத்த நாளைக்கு. இன்னைக்கு ஏன் சண்டை போட்டு விட்டுட்டு வந்தீங்க? அப்போ நான் வேண்டாமா?….” வேண்டுமென்றே வம்பிழுத்தாள்.
பாண்டியனுக்கு தலை சுற்றியது. இதென்ன இத்தனை சுழற்றியடிக்கிறாள் என்று இடையில் கை ஊன்றி பார்த்து நின்றான்.
“பேசுங்க, அங்க அவ்வளோ பேசினீங்க. அம்மாவுக்காக பொங்குனீங்க. பொண்டாட்டி என்ன கிள்ளுக்கீரையா?….” என்றாள்.
“யாத்தே ஒனக்கு இதெல்லா பேச வருமா மதுரா?…” என வாயில் கைவைத்து நின்றவன் தோற்றத்தில் மதுராவின் கண்கள் லேசாய் சிரிக்க கண்டுகொண்டான் கள்ளன்.
“கிள்ளு கீரையான்னு கேட்ட தானே? கிள்ளி பாத்தா தான தெரியும்?….” என சொல்ல முறைத்தாள் மதுரா.
கைகளை உயர்த்தி மேல் நோக்கி நெட்டி முறித்தவன் மதுரா எதிர்பாராத நேரம் பிடித்து இழுக்க அவனின் கையிலிருந்து நழுவி ஓடினாள்.
“கிட்ட வாப்பா…” என பாண்டியன் துரத்த,
“கிட்ட வந்தா கடிச்சு வச்சிருவேன். வராதீங்க….” என மிஞ்சினாள் மதுரா.
அவன் அவளை தாவி பிடிக்க, இவள் அவனின் கைகளுக்குள் வெடிக்க என மீசை முடிகள் கொய்யப்பட்டு அங்கொரு சடுகுடு ஆட்டம் முத்தக்களத்தை உருவாக்கியது வன்மையாய், திண்மையாய், நேரங்கள் கடந்து மென்மையாய்.