“ரவைக்கே சொல்லிருக்கலாம்ல. என்ன நீயி?….” என நொந்துபோனான் பாண்டியன்.
“என்ன இப்போ? எனக்கு காய்ச்சல் மார்னிங் தான் வந்துச்சு. அதுவும் நைட்ல கிளம்பும் போது பசிக்கலைன்னு கூழ் கேட்டு குடிச்சேன். அப்பவே பாட்டி சொன்னாங்க நைட்ல குடிக்காத குளிர்ச்சின்னு…” என்றாள்.
முகமெல்லாம் லேசாய் வீக்கத்துடன் சிவந்துபோய் இருந்தது காய்ச்சலின் வீரியத்தில்.
“ஆஸ்பத்திரிக்கி போவோம். கெளம்பு….” பாண்டியன் அவளை எழுப்ப,
“ப்ச், ரெண்டு டேப்லெட் போட்டா சரியாகிடும். எனக்கு குடிக்க பால் மட்டும் ப்ளீஸ்….” என்றவள் மீண்டும் சாய, தூக்கி நிறுத்தினான் பாண்டியன்.
“உள்ள வர சொல்லுங்க. இல்லைன்னா எனக்கு பால் மட்டும் குடுங்க. இன்னொரு டேப்லெட் போட்டுட்டு பத்து நிமிஷத்துல நானே வெளில வரேன்…” என்றவள்,
“அம்மா கால் பண்ணமாட்டாங்க. அத்தைட்ட சொல்லி நாளைக்கு வரேன்னு சொல்ல சொல்லிருங்க…” என்றாள்.
“ஏன் கால் பண்ணமாட்டாங்க?….” பாண்டியன் யோசனையுடன் கேட்க,
“ப்ச், இங்க நமக்கு டிஸ்டர்ப்பா இருக்க வேண்டாமேன்னு தான். அதுவும் இல்லாம நேத்து நடந்த ரகளைக்கு போன் பண்ணவே மாட்டாங்க நானா கூப்பிடற வரைக்கும்…” என்றாள் கண்களை திறவாமல்.
“என்னவோ போ…” என பாண்டியன் அறையிலிருந்து வெளியே செல்ல காந்திமதியும், வடிவும் அவன் முகம் பார்த்தனர்.
“காய்ச்சல் தான் பாட்டி. வேற ஒண்ணுமில்லை. ரெண்டுநாள்ல சரியாகிடும்…” மதுரா சாதாரணமாக சொல்ல,
“செரி, செரித்தா, மெல்ல துணிய மாத்துதியா? போய் ஊசிய குத்திட்டு மாத்தர வாங்கிட்டு வருவோம்…” என்று காந்திமதி அழைக்க வடிவு இரண்டு பெரிய தம்ளர்கள் கொண்டு பாலை ஆற்றியபடி வந்தார்.
“இவ்வளோ பாலா?…” மதுராவின் விழிகள் விரிந்ததில் பாண்டியன் சிரித்துவிட்டான்.
“எனக்கு உடம்பு சரியில்லை. தெரியுமா? என்னால இவ்வளோ எல்லாம் குடிக்க முடியாது…” என்று சொல்ல,
“முடியுத வரைக்கி குடித்தா….” என்று நீட்டியவரை பார்த்தவள்,
“நீங்க இப்ப ஓகே தானேத்தை?…” என மதுரா மாமியாரிடம் கேட்க,
“தப்புன்னு சொல்லலை. நீங்க என்கிட்டையே நேரா கேட்டிருக்கலாம். எங்கப்பா சொல்லி அங்கயே சொல்லியிருந்தா நானே பேசியிருப்பேன். இப்பவும் உங்க பிள்ளை எங்கப்பாவை பேசினது தப்புன்னு சொல்லலை. அவருக்கு தேவை தான். பேச தெரியாம பேசிட்டு வாங்கி கட்டிக்கிட்டாங்க. ஆனா சில விஷயங்கள் இங்க நம்மோட இருக்கனும்னு நினைக்கறேன்…”
“புரியலத்தா…”
“இந்த கடனுக்கும், நம்மோட உறவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு சொல்றேன். அது தொழில். அதை உள்ள கொண்டு வர கூடாது. இப்ப இந்த கல்யாணம் நடக்கலைன்னா பணத்தை திருப்பி தந்திருப்போம் தானே? அதே மாதிரி வெளில யார்க்கிட்ட வாங்கியிருந்தாலும் குடுக்க வேண்டியது அத்தியாவசியம் தானே?….” என்றாள்.
“என்னவோ சொல்லுற? ஆனா நீயி வருத்திக்க வேணாமின்னு நெனச்சேம். அதுமட்டுந்தேம். ஒங்கப்பா எங்கிட்ட எம்மவ வாழ வந்தும் வேலை வேலைன்னு அதுலயே இருக்கா. எங்க தொழில மட்டும் பாத்தா இம்புட்டு செரமம் எதுக்குன்னு கேட்டுட்டார்….”
“அவருக்கென்ன? எல்லா மனுஷங்களுக்குள்ளையும் ஒரு சுயநலம் இருக்கும். எங்கப்பாவுக்கு மக, மருமகனோட அவங்களோடவே இருக்கனும். அவரை தப்புன்னும் சொல்லமாட்டேன். ஏனா ஆரம்பத்துல இருந்தே வீட்டோட பார்க்கனுன்றது தான் அவர் ஆசை…”
“எனக்கு அப்படி இல்லை. இங்க இருக்க பிடிச்சிருக்கு. இந்த சூழ்நிலை பிடிச்சிருக்கு. இங்கயும் எனக்கு எந்த கஷ்டமும் இல்லைன்னு நினைக்கறீங்களா?…” என கேட்டதும் வடிவும், காந்திமதியும் திகைத்தனர்.
“நான் சிட்டில வாழ்ந்ததுக்கும், இங்கைக்கும் நிறையவே வித்தியாசம் இருக்கு. ஆனா நிறைவா நினைக்க நிறைய விஷயங்கள் இருக்க அந்த சின்ன சின்ன சிரமம் கூட எனக்கு பெருசா தெரியலை. அதோட இந்த குடும்பம் இந்த சூழ்நிலை….” என்றவள்,
“எல்லாத்துக்கும் மேல, இந்த மனுஷனை கல்யாணம் செஞ்சுக்கனும்னு நினைக்கிறதுக்கு முன்னவே அவ்வளோ பிடிச்சது. என்ன மாதிரி மனுஷன் இவர்ன்னு….” என ரசித்து அவள் சொல்ல காந்திமதியும், வடிவும் எழுந்துகொண்டனர்.
வடிவும், காந்திமதியும் எப்போது எழுந்து வெளியில் சென்றனர் என்று தெரியவில்லை.
“கம்மின்னிருப்பா….” என்ற பாண்டியன் அருகே வந்தமர்ந்ததும்,
“என்னை கல்யாணம் செஞ்சுக்க கூட நீங்க தைரியமா கேட்கலை தானே?…” என்று ஆரம்பிக்க,
“நேத்துல இருந்தே என்கூட சண்ட கட்டனுமின்னு முடிவா இருக்கியாப்பா?…” என்றான் பாண்டியன்.
“அப்படியும் வச்சுக்கலாம். உண்மை அது தானே?….”
“எது உண்மை?…”
“நான் உங்களை மாப்பிள்ளை பார்த்தது. உங்களை தேடி இந்த ஊர் வரை வந்தது. நான் கேட்டும் நீங்க மாட்டேன்னு தயங்கி நின்னப்போ அழுத பிள்ளையை சமாதானம் செஞ்சு ஒத்துக்க வச்சது இதெல்லாம் நிஜம் தானே?…”