“வந்தேன், நறுக்குன்னு ஒரு குட்டு. என்னை அப்பறம் கிண்டல் பேசலாம். இப்ப எங்கனு சொல்லுங்க. இங்க மருதுவும் இல்லை….” என்று சொல்ல,
“ஜல்லிக்கட்டு வர போவுதுல மதினி…”
“ஆமா, இன்னும் நாள் இருக்கே….”
“அதுக்கு தான் மருதுவுக்கு ட்ரெயினிங் போகுது….” என்றான்.
“எங்க? என்கிட்ட சொல்லவே இல்லை….” என்றவள் இடத்தை கேட்டு தெரிந்துகொண்டாள்.
“பாட்டி நான் மருதுவை பார்த்துட்டு வரேன்….” என மதுரா சொல்ல,
“இப்ப என்னத்துக்குத்தா அங்கன?…” என்ற காந்திமதி,
“செரி சூதானமா போ. நா ஒம்புருசெனுக்கு சொல்லுதேம்…” என சொல்ல சுடிதாரை மாற்றிக்கொண்டு கிளம்பினாள் மதுரா.
தனது ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு ஜகா சொன்ன இடத்திற்கு சென்றாள். ஸ்கூட்டி அவளின் உபயோகத்திற்காக வாங்கியிருந்தான் பாண்டியன்.
பெரும்பாலும் காந்திமதியை, வடிவை என எங்கும் செல்லவேண்டும் என்றாலும் அழைத்துக்கொண்டு செல்ல பழகி இருந்தாள் மதுரா.
இப்போதும் பாண்டியனையும், மருதுவையும் காண கிளம்பி இருக்க சொல்லிய இடத்திற்கு வந்து சேர்ந்திருந்தாள்.
வரும் வழியிலேயே பாண்டியனும் மதுராவின் அழைப்பை கண்டு மறு அழைப்பு விட எடுத்தவள் தான் அங்கே வந்துகொண்டிருப்பதாக சொல்லவும் சரி என்று வைத்துவிட்டான்.
வந்ததும் அவள் பார்த்ததில் விழிகள் விரிந்தது. வீட்டில் இருந்த மருதுவிற்கும், அங்கே அவள் பார்த்த மருதுவிற்கும் அத்தனை வேறுபாடுகள்.
நிலத்தில் கொட்டியிருந்த மணலில் கொம்பை குற்றி குற்றி தலையை சிலுப்பிக்கொண்டு நின்றான் மருது.
பாண்டியன் சட்டையின்றி கையில்லாத உள்பனியன் மட்டும் அணிந்து மடித்துக்கட்டிய வேஷ்டியும் என வியர்வை சொட்ட நின்றிருந்தான்.
ஸ்கூட்டியின் சத்தத்தில் திரும்பி பார்த்தவன் மதுராவின் வரவினை கண்டு நெற்றி வியர்வையை விரலால் வழித்து போட்டபடி அவளை நோக்கி நடக்க அவனுக்கு முன்னால் மருது திமிறிக்கொண்டு மதுராவை நோக்கி ஓடினான்.
“டேய் மருது. நில்லு…” என கத்தியவன்,
“புடிங்கடா….” என மற்றவர்களையும் அழைத்துக்கொண்டு ஓடிய பாண்டியனின் சத்தத்தில் மதுரா திகைத்து நின்றுவிட்டாள்.
மதுராவுக்கு முன்பை போல மருதுவிடம் பயமில்லை. அவளாகவே தனியாய் மருதுவோடு இருந்திருக்கிறாள் தான்.
ஆனாலும் இன்று அந்த வேகம். மருது வேகமாய் அவளை நெருங்கும் முன் பாண்டியன் கயிற்றை பிடித்து இழுக்கவும் சிலுப்பியதில் மருதுவின் கூர்மையான கொம்பு பாண்டியனின் தோள்பட்டையை பதம் பார்த்தது.
“ஆ…” என்ற அலறலுடன் மருதுவை பிடித்திருந்த கயிற்றையும் விடவில்லை பாண்டியன்.
“அச்சோ….” என பாண்டியனிடம் வேகமாய் மதுரா வர அங்கிருந்தவர்கள் மருதுவை கத்த கத்த பிடித்து சென்று கட்டி வைத்தனர்.
“என்னங்க இது? இவ்வளோ ப்ளட்?…” என மதுராவிற்கு கண்ணீர் வந்துவிட்டது.
“ச்சே ச்சே, அதெல்லாம் ஒண்ணுமில்ல. விடு, செரியா போவும்….” என சொல்ல அங்கிருந்த மருத்துவர் பாண்டியனுக்கு மருந்திட்டு காயத்தில் கட்டு போட்டுவிட்டார்.
“ரொம்ப ஆழமில்லை. கொம்பு கூர்மையில கிழிச்சிருக்கு…” என்று சொல்லி கட்டு போட்டவர்,
“ஹாஸ்பிடல் போங்க…” என கூறினார்.
“இவர் மருதுவுக்கு செக்கப் பண்ண வந்த டாக்டர்…” என மதுராவிடம் சொல்லியவன்,
“டாக்டர், மருதுவுக்கு செக்கப்…” பாண்டியன் கேட்க,
“நாளைக்கு திரும்பவும் வரேன். முதல்ல கொம்போட கூர்மையை குறைங்க. அதை சொல்லத்தான் இருந்தேன். ஷார்ப்பை கம்மி செஞ்சா தான் ஜல்லிக்கட்டுல விட சரியா இருக்கும். இவ்வளோ ஷார்ப் இருந்தா உயிர் சேதமாகும்….” என்று சொல்லி கிளம்பினார்.
“ஆணவம், ஆணவம். அவ்வளவும் ஆணவம்….” என சாவியை வாங்கியவள்,
“ஸ்கூட்டியை வீட்டுல கொண்டுவந்து நிப்பாட்ட சொல்லுங்க….” என்று சொல்லி அவனுடன் ஜீப்பை நோக்கி செல்ல மருது விடாமல் கத்தி கூப்பாடு போட்டான்.
“என்னடா உன் பிரச்சனை? நாங்க வர வரைக்கும் பேசாம நிக்கனும். செய்யறதையும் செஞ்சிட்டு. உன்னை ஜீப்ல கூட்டிட்டு போக முடியுமா?….” என அவனை அதட்டியவள் கைகள் அதற்கு மாறாக தடவி கொடுத்தது.
சொல்லியது புரிந்தது போல மருதுவும் மடங்கி அமர்ந்து படுத்துக்கொண்டான் தலையை தரையில் வைத்து. பார்த்ததும் பாண்டியன் சிரித்துவிட,
“சோகம், சோகம். போடா டேய். எவ்வளோ சந்தோஷமான ஒரு விஷயம் சொல்ல வந்தேன். இப்படி பண்ணிட்டியே?..” என அவனின் தலையை பிடித்து ஆட்டி அதன் கொம்பில் ஒரு குட்டு வைத்தவள்,
“உன் முரட்டுத்தனத்தை குறைச்சுக்கோ. என் பிள்ளை வந்தா இப்படி எல்லாம் விளையாட கூடாது நீ. புரியுதா?….” என்று மருதுவிடம் கேட்டவள் பாண்டியனை பார்க்க அவன் முகத்தில் அத்தனை திகைப்பு.
“சொக்கா புரியுதா?….” என்று பாண்டியனிடமும் தலையசைத்து மதுரா கேட்க,
“எப்பா, மதுரா….” என்று அவளை நெருங்கியவன் மற்றவர்கள் இருப்பதை கவனித்து இடைவெளி விட்டு நின்று,
“பிள்ளை வர போறதை இப்பிடித்தான் சொல்லுவியாப்பா?…” என கேட்டான் மூச்சு முட்டும் சந்தோஷத்தை முகமெல்லாம் நிறைத்தபடி.
“சொல்லிட்டு ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போகனும்னு நினைச்சேன். ஆனா இப்படி ஆகும்ன்னு நினைக்கலை. எல்லாம் இவனால….” என மருதுவை காண்பித்தவள்,
“வந்து பேசிக்கறேன் உன்னை….” என சொல்லிவிட்டு கிளம்பினாள்.
இருவருமாக சென்ற மருத்துவமனை மதுரையில் மகேஷ்வரிக்கு பார்த்த மருத்துவமனை.
வரும் வழியெல்லாம் எப்படி எப்படி என கேட்டு ஆளில்லாத இடத்தில் அச்சாரங்கள் பகிர்ந்து இதழணைப்புகளில் சுமூகமாகி மருத்துவமனைக்கு வந்து சேர்ந்திருந்தனர்.
“இங்கின இருக்கனுமா?….” பாண்டியன் கேட்க,
“வரும்போதே எனக்கு அப்பாயின்மென்ட் வாங்கிட்டேன். முதல்ல உங்க காயத்துக்கு ட்ரீட்மென்ட் முடிச்சிட்டு செக்கப் போவோம்…” என்று அவனுடன் உள்ளே சென்றாள்.
பாண்டியனுக்கு போட்டிருந்த கட்டை பிரித்து சுத்தம் செய்து மீண்டும் கட்டு போட்டுவிட்டவர், மறுநாள் வரும்படி சொல்லிவிட்டு மாத்திரைகள் எழுதி தந்தார்.
இருவரும் வெளியே வந்து மதுராவிற்கு பார்க்கவிருந்த மருத்துவரை காண செல்ல,
“வெய்ட் பண்ணுங்க மேம். உள்ள ஒரு பேஷன்ட் இருக்காங்க….” என்றாள் ஒரு பெண்.
“ஓகே, தேங்க் யூ…” என மதுரா அமர்ந்ததும் பாண்டியனும் அமர அதற்குள் அவனின் போனில் அழைப்பு வந்துவிட்டது.
“ஜகா தான். தெரிஞ்சிருச்சு போல…” என சொல்ல,
“மேடம் உங்களை கூப்பிடறாங்க….” என்ற பெண்ணிற்கு தலையசைத்தவள்,
“வந்து பேசலாம். வாங்க….” என்று பாண்டியனுடன் உள்ளே சென்றாள்.
“உட்காரும்மா…” என்ற மருத்துவர் மீனலோசினி,
மதுராவிடம் வழக்கமான கேள்விகள் எல்லாம் கேட்டு முடித்து அடுத்த பரிசோதனைக்கு,
“வைதேகி இவங்களை அழைச்சிட்டு போ….” என்றார் அந்த பெண்ணிடம்.
“வாங்க….” என அவளும் மதுராவுடன் செல்ல மருத்துவ அறிக்கை நிஜம் என்றது.
“வாழ்த்துக்கள்….” என்று மருத்துவர் மட்டுமல்ல வைதேகியும் புன்னகையுடன் கூறினாள்.
“இதுல நீங்க எப்பப்ப இங்க செக்கப் வரனும்ன்ற டீட்டெல்ய்ஸ் இருக்கு. எதுவும் சந்தேகம் இருந்தா மறக்காம கால் பண்ணுங்க….” என்று அனுப்பி வைத்தார்.
மதுராவும் பாண்டியனும் இனிப்புகளை வாங்கிக்கொண்டு வீடு நோக்கி கிளம்பினார்கள் புதுவரவின் வரவை தெரிவிக்க.