“அதெல்லாம் ஒண்ணுமில்ல ப்பா. செரியா போவும்….” என்று சொல்ல இங்கே காந்திமதி போனிலிருந்து ஊருக்கே தாக்கலை சொல்லியிருந்தார்.
ஒரு இடத்தில் நிற்கவில்லை. இங்குமங்கும் நடந்து அப்போதே பழக்கடைக்கு சொல்லி, உண்டாகியிருக்கும் பெண்கள் சாப்பிடவேண்டிய அனைத்தையும் வரவழைக்க ஆவன செய்ய ஆரம்பித்திருந்தார்.
“கெழவி…” பாண்டியன் அழைக்க,
“கோவிலுக்கு பூசைக்கு சொல்லுதேம்….” என்றவர் ஊரில் உள்ள அனைத்து கோவிலுக்கும் பூஜைக்கும், பொங்கலுக்கும் சொல்லிவிட்டார்.
“இந்த கெழவி அலும்புதேம் தாங்கல…” என ஜகா சத்தமாக சொல்ல காந்திமதியிடமிருந்து ஒரு குச்சி பறந்து வந்து ஜகாவின் மேல் விழுந்தது.
“பாத்தியா இது குசும்ப. இந்தா வாரேன்….” என செல்ல,
“விடுடா. அத்த போயி ஒரண்டை இழுத்துட்டு….” என தம்பியை பிடித்து நிறுத்தினான் பாண்டியன்.
ஜகா காந்திமதியை பார்க்க இடுப்பை வளைத்து ஒரு ஆட்டம் போட்டார் காந்திமதி அவனை வெறுப்பேற்ற.
“கெழவி….” என கத்த காந்திமதி போடா என்றார் கையசைத்து.
“இன்னிக்கு கெழவி தலகீழாத்தேம் நடக்கும் பாத்துக்கிடு….” என ஜகா கிண்டலாய் சொல்ல,
“செரி விடுடா….” என்ற பாண்டியன் மதுராவை பார்த்தான்.
“வீட்டுக்கு பேசிட்டு வரேன்….” என தன்னுடைய போனுடன் உள்ளே சென்றாள்.
மகேஷ்வரியும், எழில்மணியும் பார்க்க வருவதாக சொல்லி தங்களின் வாழ்த்துக்களையும் இருவருக்கும் தெரிவித்தனர்.
அதன் பின்னர் வடிவிடம் வந்த மதுரா அவரை சாப்பிட அழைக்க குடும்பமாய் சேர்ந்து உணவருந்தினர்.
பாண்டியனை எங்கும் செல்ல வேண்டாம் என்றுவிட்டனர் வீட்டில். அவனை அன்று ஓய்வெடுக்கும் படி சொல்லிவிட்டனர்.
“இல்ல எப்பவும் இங்கவே தானே இருப்பான். இப்ப காணுமா. அதான்….” என சொல்லியவள்,
“மருது கூடவா ஜல்லிக்கட்டுக்கு போவான்?…” என கேட்டு சிரித்தாள்.
“அவன பாத்தா ஒனக்கு காளையா தெரியலையாக்கும்?….” என்று கேட்டவன் யூட்யூப்பில் மருது ஜல்லிக்கட்டில் ஆடியதை எடுத்து தனியாக காண்பிக்க அவனுக்கென்று அவனின் ஆட்டத்தை பார்க்க என்று பெரிய ரசிக பட்டாளமே இருந்தது.
பார்க்க பார்க்க மதுராவால் வியப்பை தவிர்க்க முடியவில்லை. ஒற்றை காளையாய் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை மட்டுமல்ல செல்லும் இடமெல்லாம் சிதறடித்திருந்தான் மருது.
“வீட்டுல ஒன்னும் தெரியாத பிள்ளையாட்டம் தலையாட்டி கூப்பிட்டு விளையாடிட்டிருந்த மருதுவா? வாவ்….” என்றாள்.
அடுத்தடுத்த வீடியோக்கள் வந்துகொண்டே இருந்தது மருதுவின் விளையாட்டு துணுக்குகள்.
“நான் நினைக்கவே இல்லை. ரொம்ப பார்த்ததில்லை. ஆனா இப்ப இதை பார்க்கும் போது எனக்கு நேர்ல இதை பார்க்கனும்ன்னு ஆசையா இருக்கே….” என்றாள் கண்ணில் ஆர்வம் மின்ன.
“ஆமா, நான் வரப்ப மண்ணை குத்திட்டிருந்துச்சே. ஏன்?….”
“இதெல்லாம் பயிற்சிப்பா. இதுக்குன்னு தேனில இருந்து பசங்க வந்திருக்காய்ங்க. நீச்சல் பழகும், மண்ணுல தலையை குத்தும், ரொம்ப தூரம் நடக்க விடுவோம். சுத்தி வரும், சும்மா நம்மூர் மாடுபுடி பசங்கள வெச்சி மருதுவ கெட்டி போட்டு புடிக்க விடுவோம்…”
பாண்டியன் ஒவ்வொன்றாய் விளக்கிக்கொண்டு இருந்தான் மருதுவுக்கு கொடுக்கும் பயிற்சிகள் பற்றி.
“இதுக்கு தனியா ட்ரெயினர்ஸ் எல்லாம் இருக்காங்களா?…” அத்தனை ஆச்சர்யம் மதுராவிற்கு.
“ஆமா, நெறைய. இங்க இருந்து சல்லிக்கட்டுக்கு போறப்ப ரவைக்கே அங்கன கொட்டில கொண்டுபோய் கெட்டிருவோம். ஆளுகள கூட அனுப்பி. மறுநாத்து வரிசைக்கா ஒன்னொன்னா வாடிவாசல்ல தெறந்து விடுவாக பாக்கனும். நமக்கு சிலுக்கும்….”
சொக்கநாதபாண்டியன் சொல்லும் பொழுதே அவனின் முகத்தில் அப்படி ஒரு தோரணையும், ஆளுமையும்.
இதனை ரசித்து விளக்கும் பொழுது ஒருவித கர்வம் மிளிர புன்னகையுடன் பார்த்திருந்தாள் மதுரா.
“என்னடா இப்பிடி பேசுதானேன்னு பாக்குதியா? அதெல்லாம் பொறந்ததுல இருந்து ரத்தத்துல ஊறினது. சல்லிக்கட்டுன்னு சொன்னாலே ஒடம்புல ஒரு முறுக்கு. அதுவும் அங்கன வாடிவாசக்கிட்ட ஒத்த ஒத்த காளையும் அவுத்துவிட்டு வாரப்ப. ப்பா, அதெல்லாம் அனுபவிக்கனும்ப்பா….”
“அதான் கூட்டிட்டு போகலைன்னு சொல்லிட்டீங்களே? அதுவும் ஜல்லிக்கட்டுன்னா டக்குன்னு அலங்காநல்லூர்ன்னு சொல்ற இடத்துல, தி பேமஸ் மருதுவோட இருந்துட்டு என்னால பார்க்க போக முடியாது….” என்றதும்,
“நா சொன்னது வெளங்குச்சா இல்லியா மதுரா?….” என்றான் பாண்டியன் கண்டிப்புடன்.
“இல்ல அங்க வர ஒருமாதிரி இருக்கு மகேஷ். அதான் இங்க வர சொல்லலாமேன்னு….”
“இருக்கற பிரச்சனை பெருசாகனுமா? அதுவும் இல்லாம நாம போய் பார்க்கறது தான் முறை. உங்களை மாதிரி அங்க இருக்கறவங்க யாரையும் நோகடிக்கிற ஆளுங்க இல்லை. மனுஷ தன்மையோட இருக்கறவங்க…” என்றவர்,
“இஷ்டம்ன்னா வாங்க. இல்லைன்னா இருங்க. ஒன்னும் பிரச்சனை இல்லை. நான் போய்ட்டு வரேன்….” என சொல்லிவிட்டார்.
“சரி சரி வரேன். சேர்ந்தே போகலாம்….” என எழுந்துகொண்டார்.
மகளுக்கான சீர்வரிசைகளுடன் வரப்போகும் வரவை வரவேற்று வாழ்த்த என்று எல்லாம் கைநிறைய வாங்கிக்கொண்டு காலையே வீடு சென்றனர்.
பாண்டியன் வாசலில் தான் நின்றிருந்தான். மகேஷ்வரியிடம் பேசியவன் எழில்மணியிடம் வாங்க என்றதோடு முடித்துக்கொண்டான்.
அதுவும் முகம் பார்க்காமல் அந்த வரவேற்புமே. அப்படியே கிளம்புவிடுவோமா என எண்ணியவர் தயங்கி நிற்க,