மற்றவர்களை கூட சமாளித்துவிடலாம், காந்திமதியிடம் முடியாதென உள்ளே சென்றுவிட்டார் வேகமாக.
“என்னய்யா, கொஞ்சம் நல்லாத்தேன் பேசேம். எம்புட்டு சங்கட்டப்பட்டு நிக்கிதாரு ஒம்மாமனார்…” என மகனிடம் வடிவு பேச,
“என்னவோ ஆவலாத்தா. அந்த மனுசேன் என்னிய என்னவும் பேசட்டும். அப்பனா நெனச்சு செரின்னு கேட்டுக்கிடுதேம். அவருக்கு அந்த உரிமை இருக்குதேம். அதுக்காண்டி ஒன்னிய பேச அவருக்கு ஒண்ணுமில்ல….” என்றான் கடுமையுடன்.
“செரி சாமி, ஆனா நீரடிச்சி நீரு வெலகாதுய்யா. நாளப்பின்ன நீயும் ஒரு அப்பனாவ போற. அன்னிக்கு ஆத்தா சொல்லுதது வெளங்கும். இதுவும் நம்ம மதுவுக்காவன்னு நெனையேம்…” என்று சொல்லி உள்ளே சென்றுவிட்டார்.
வடிவு சொல்லியது புரிந்தாலும் பாண்டியனால் அத்தனை சுலபமாக எழில்மணி செய்ததை தள்ளி வைக்க முடியவில்லை.
ஆனால் அதனை கடந்து செல்ல பார்த்தான். உள்ளே செல்ல அங்கே மனைவியின் பூரித்த முகமும், அதனை பார்த்து ரசிக்கும் எழில்மணியின் விகசிக்கும் புன்னகையும் தான் கண்ணில் பதிந்தது.
தகப்பன், அதனை அவன் பரிபூரணமாக உணர அவர் மேலிருந்த வருத்தத்தின் கனல் கொஞ்சம் அடங்கியது.
“இருந்து சாப்புட்டு போங்க…” என சொல்லி கிளம்பிவிட்டான் அவன்.
எழில்மணிக்கு இது போதுமானதாக இருந்தது. வாழ்க்கை சில நேரங்களில் அனுபவப்பட்டு தான் பாடம் தேடி தரும் என்பதை போல இருந்தது.
“நாராயணனுக்கு அடுத்த மாசத்துல பணத்த செட்டில் பண்ணிடலாம்ன்னு இருக்கோம் மதுரா. ஏற்கனவே சொன்னது தான் உன்கிட்ட. இருந்தாலும் நேர்ல சொல்லனுமே?…” என்றார் எழில்மணி.
“நான் அமௌண்ட் செக் பண்ணி லிஸ்ட் பண்ணிட்டேன் ப்பா. உங்களுக்கு மெயில் அனுப்பறேன். அதை மட்டும் அனுப்புங்க….” என்றாள்.
“பிரச்சனை பண்ணுவான்….”
“பார்த்துப்போம். என்னதான் பன்றாங்கன்னு. இல்லன்னா இதுவும் கிடைக்காது. நம்ம கம்பெனில கையாடல் பண்ணியிருக்காங்கன்னு ஆதாரம் இருக்கு. வந்தா நல்லா பேசிவிடுங்க….” என்றாள் மகள்.
“சரிம்மா….” என்றவர் அன்று மாலை வரை இருந்துவிட்டு தான் கிளம்பினார்.
“இது தலைப்பொங்கல். சீர் கொண்டுவருவோம்…” மகேஷ்வரி சொல்ல,
“ஆமாம்மா, மருதுவும் ஜல்லிக்கட்டுக்கு போவான். நான் வரமுடியாது. நீங்க எல்லாரும் போய்ட்டு வாங்க…..” என்று சொல்ல எழில்மணி மாட்டவே மாட்டேன் என்றார் வந்திருந்த பொழுதில்.
முதல்நாளே மாலையிட்டு அலங்கரித்து மருதுவிற்கு சாமி கும்பிட்டு என அவனை அழைத்து செல்ல மதுராவிற்கு அத்தனை உற்சாகம்.
கிளம்பும் முன் கன்றுக்குட்டியாய் மதுராவின் தோளில் சாய்ந்து, அவளை விட்டு நகரவே இல்லை.
பாண்டியன் அடிபட்டு வந்த பொழுதிலும் கண்ணீர் விட்டு அழுது, கத்திக்கொண்டு தான் ஆர்ப்பாட்டம் செய்தான் மருது.
“அதுக்கு தெரியுது பாருங்களேன், நாம தான் பண்ணிட்டோம்ன்னு. உங்க காயத்தையே தேய்க்குது முகத்தால….” என உருகிப்போய் மதுரா சொல்ல,
“அதெல்லாம் நல்லா செய்யுவியான். ஆள் மயக்கி. சகவாசம் அப்பிடி. எல்லா இந்த சகாவால. அவேன் சங்காத்தந்தேம். சொல்லி வளத்திருக்கியான் பாரு…”
“ஒங்கய்யால வெறுந்தண்ணி கூட வெள்ளாவி தண்ணிதேம். போவியா….” என காந்திமதியிடம் ஒரு அடியை பெற்றுக்கொண்டு ஜகாவும் அந்த குட்டியானை வண்டியில் ஏறி புறப்பட்டான்.
மகேஷ்வரி, எழில்மணி, நாயகி கூட அங்கே தான் இருந்தார்கள். மறுநாள் ஜல்லிக்காட்டு துவங்கும் முன்னரே காலையே ஜகா வந்துவிட்டான் அவர்களை அழைத்து செல்ல.
“நான் மதுவோட இருக்கேன் தம்பி. நீங்க இவரை கூட்டிட்டு போங்க….” என்று மகேஷ்வரி எழில்மணியை கோர்த்துவிட மறுக்கமுடியாமல் கிளம்பினார் அவர்.
ஆடுகளத்தில் நின்று ஆடினான் மருது. வாடிவாசலில் இருந்து வெளியே வந்தவன் உடலை சிலிர்த்து பார்த்த பார்வையே நடுக்கம் கொடுத்தது.
ராஜ தோரணையுடன் கூர்மையான கண்களால் அங்கிருந்தோரை ஓரடி பின்வாங்க செய்தவன் சுற்றி சுற்றி விரட்டியதில் ஒருவராலும் மருதுவை நெருங்கமுடியவில்லை.
‘முடிந்தால் வந்து தொட்டுப்பார்’ என்ற கம்பீரமும், மீறி நின்ற திமில்களிலும் என அவன் அரசனாக வளைய வர பின்னிருந்து தொட வந்த வீரனையும் சுழற்றி சாய்த்தான் மருது.
“மாடு பிடிபடவில்லை. சூப்பர் மாடுப்பா. மாட்டுக்காரன் வந்து ப்ரைஸ வாங்கிட்டு போங்கப்பா…” என்றதோடு அன்றைய ஜல்லிக்கட்டில் சிறந்த காளை என்ற முதல் பரிசையும் தட்டிக்கொண்டு வந்தான் மருது.
“செல்லக்குட்டி….” என திரையில் அவனை முத்தம் கொடுத்து கொஞ்சி தீர்த்தாள் மதுரா.
“அவனவன் மிரண்டு ஓடுறான், இவளுக்கு கொஞ்சலை பாருங்க….” என மகேஷ்வரி சிரிக்க, மாலை வீடு வரும் பொழுது எழில்மணியையும் கந்தல் கோலமாக தூக்கி வந்தனர்.
“என்னாச்சுப்பா?….” என பதறிப்போய் மதுரா கேட்க,
“சல்லிக்கட்டு பாத்துட்டு இருந்தவரு மொதவே அச்சத்துல இருந்துருக்கார். இதுல மருதுவ வண்டில ஏத்தவும் தெரியாத்தனமா இவரும் பின்னாடி அவேங்கூட ஏறி அவனை பார்த்து பயத்துல பொத்துன்னு மல்லாந்துட்டாரு…” ஜகா சொல்ல,
“கடவுளே….” என்ற மகேஷ்வரி,
“வேற எங்கையும் அடி பட்டிருக்கா?…” என ஆராய்ந்தார்.
“எல்லா எடத்துலயும் மண்ணு மெத்திருக்கதால அடி ஒண்ணுமில்ல…” என்றதும் அவரை அழைத்து சென்றார்.
“இந்த மாட்ட அந்த பக்கம் கூட்டிட்டு போறானுங்கன்னு இங்கிட்டு சுத்தி வந்தேன். இங்கிட்டு இன்னொரு மாடு வரவும் சட்டுன்னு வண்டி பின்னால ஒளிஞ்சுக்க ஏறினா என் முன்னாடி ம்மான்னு கத்துது இது. உயிரே போயிருச்சு. என்ன நடந்துச்சுன்னு நினைக்கிறதுக்குள்ள கீழ விழுந்து மயங்கிட்டேன்….” என புலம்பினார் எழில்மணி.
அதன் பின்னர் மருதுவை பார்த்தாலே அவன் அழைத்தால் கூட பத்தடிக்கு தள்ளி சென்றுவிடுவார் எழில்மணி.
பிள்ளையை சுமக்கும் மதுராவை குடும்பம் மொத்தமும் தாங்கி பிடித்திருக்க இதோ ஐந்தாம் மாதமும் ஆரம்பித்திருந்தது அவளுக்கு.
அன்று மருத்துவமனையில் மாதாந்திர பரிசோதனைக்கு பாண்டியனுடன் வந்திருந்தாள்.
பரிசோதனை பிரதிக்காக இருவரும் காத்திருக்க அங்கே ஜகாவை பார்த்த மதுரா இப்போது வந்துவிடுவதாக பாண்டியனிடம் மருந்து வாங்கிவர சொல்லி ஜகாவை தேடி வந்தாள்.
“இங்க என்ன ஜகா?…” என்றவள் கேள்வியில் திரும்பியவன் முகமோ கோபத்தில் கனன்றது.
“ஜகா….” என்றவள் அவனின் கையை பிடிக்க,
“உனக்கு லவ் பண்ண வேற ஆளே கிடைக்கலையா? அதுக்கெல்லாம் ஒரு மூஞ்சி வேண்டாமா? யூஸ்லெஸ்…” என படுக்கையில் அழுதுகொண்டு படுத்திருந்த இன்னொரு பெண்ணை திட்டிக்கொண்டிருந்தாள் வைதேகி.