“இதை சொல்லிட்டு போகத்தான் வந்தேன். உங்களை எனக்கு தெரியும். அதுக்காக தான் இந்த விளக்கமும். இல்லைன்னா ஐ டோன்ட் கேர் தான்…” என சொல்லி பாண்டியனையும் பார்த்துவிட்டு செல்ல,
“என்ன ஜகா?….” என்றான் பாண்டியன் கண்டனத்துடன்.
மதுரா தான் நடந்த விஷயத்தை அவனிடம் விவரிக்க ஜகா அமைதியாக நின்றான்.
“பிடிக்கலைன்னா சொல்றதோட நிப்பாட்ட வேண்டியது தான? என்னத்து இங்க வரைக்கும் வந்தியாம்? எங்க யார்க்கிட்டையாச்சும் சொல்லிருக்கனும்…” என்று முறைக்க,
“இங்க ரொம்ப சீரியஸா இருக்காவன்னு கூப்புட்டதும் வந்துட்டேன்…” ஜகாவிற்கு ஏன் தான் வந்தோமோ என்றானது.
“செரி செரி, கெளம்பு. இங்கின இருக்க வேணா. அதாம் பேசிட்டேல. மதினிய கூட்டிட்டு கெளம்பு…” என சொல்ல,
“நீங்க?….” என்றாள் மதுரா.
“வரேம்ப்பா. நீயி கெளம்பு….” என சொல்லிவிட்டு,
“ஜகா ஒன்னோட வண்டிய எங்கிட்ட தந்துட்டு மதுராவோட ஜீப்புல கெளம்பு…” என சொல்லி அனுப்பினான்.
“அண்ணே…”
“உள்ளருக்க அந்த புள்ளையோட வீட்டுக்கு சொல்லியாச்சா?….” பாண்டியன் கேட்க,
“தெரியலண்ணே, நா கேக்கல….”
“செரி, அவக நம்பர வாங்கி எனக்கு அனுப்பு. இத்த இப்பிடியே விட்டு போனா நல்லதுக்கில்ல. பொம்பளப்புள்ள வெவகாரம். நாளப்பின்ன எங்கிட்டுனாலும் வெடிக்கும். நம்ம மேல தப்பே இல்லன்னா கூட….” என்றதும்,
“நீங்க சொல்றதும் சரி தான். நானும் இருக்கேனே?….” மதுரா கேட்க,
“வேணாம்ப்பா. பேசிட்டு வாரேம்….” என அவர்களை அனுப்பி வைத்தான்.
ஜகா வேறொரு நண்பன் மூலமாக அந்த பெண்ணின் பெற்றோர் நம்பரை வாங்கி தகவல் தந்துவிட்டு பாண்டியனுக்கும் அனுப்பி வைக்க அவர்கள் வரும் வரை பாண்டியன் மருத்துவமனையில் தான் இருந்தான்.
அவன் இன்னும் கிளம்பாததையும், அங்கேயே அந்த அறைக்கு வெளியில் இருக்கும் இருக்கையில் இருப்பதையும் பார்த்த வைதேகி என்னவென்று கேட்போமா வேண்டாமா என யோசனையில் இருந்தாள்.
அவளின் பார்வையை பாண்டியனுமே கவனித்தான். பார்க்க சாதுவாக தெரியும் பெண்ணின் நிமிர்வு பாண்டியன் முகத்தில் புன்சிரிப்பை கொண்டுவந்தது.
“ஸார்….” என அவள் வந்தேவிட்டாள் அவனருகில்.
“சொல்லுங்கம்மா….” என அமர்ந்தவாக்கிலேயே பாண்டியன் கேட்க,
“ரிப்போர்ட்ஸ் எதாச்சும் வாங்க வெய்ட் பன்றீங்களா? இல்ல டாக்டர் வெய்ட் பண்ண சொன்னாங்களா?…” என்றாள் வைதேகி.
“அதெல்லாமில்லம்மா. உள்ளார இருக்க பொண்ணோட வீட்டுக்கு தாக்கல் சொல்லிருக்கோம். அவக வாரவரைக்கி இருக்கேம். இருந்து பேசிட்டு போவனும்….” என பாண்டியனும் சொல்ல,
“சரிங்க ஸார்…” என்றவள் தயங்கி நின்று பின் நகரவும்,
“ஒன்னிய ஒன்னும் நெனைக்கலம்மா. நீயி சோலிய பாரு. பொறவு இன்னொன்னு சொல்லனும், எந்தம்பிய பேசிட்டன்னுதேம் சட்டுன்னு மூஞ்சிய காமிச்சிட்டேம். மத்தபடிக்கி நீயி சரியாத்தேன் பேசிருக்க….” என சொல்லியவன் மேல் மதிப்பு பெருகியது.
“தேங்க்ஸ் ஸார், நானும் ஹாஸ்பிட்டல்ல எல்லார்கிட்டயும் எல்லாம் அப்படி இருந்ததில்லை. அந்த வார்த்தை மரியாதை குறைவா தோணுச்சு. அதான் டக்குன்னு உஷ்ணப்பட்டுட்டேன்….”
பாண்டியனின் அழுத்தமான கேள்வியில் அந்த பெண்ணின் பெற்றோர் மட்டுமல்லாது அந்த பெண்ணும் அதிர்ந்து பார்த்தனர்.
“ஸாரி ஸார். நான் முதல்லையே சொன்னேன் இவ தான் கேட்கலை. இப்படி பண்ணிட்டா…” என பாண்டியன் பேச்சிலேயே தோழி பெண் மிரண்டு பின்வாங்க,
“ஆருக்கிட்ட என்ன சோலி பாக்கோமின்னு வெவரம் வேணும். இந்த ஒருவாட்டி கம்மின்னு போறேம். மறுக்கா எதாச்சும் கோளாறு பண்ணுன. அம்புட்டுதேன்….” என நாக்கை மடித்தவன் எச்சரிப்பில் அந்த பெண் தலை குனிந்தாள்.
“பாத்து சொல்லுங்க….” என்றவன் அங்கிருந்து கிளம்பிவிட்டான்.
வைதேகியுடன் பேச்சுக்கொடுத்ததில் மெல்ல அந்த பெண்ணின் விஷயமும் தெரியவர அப்படித்தான் இருக்குமென்ற அனுமானம் உண்மையாகவும் இருந்ததில் இப்போது இன்னுமே நிம்மதி.
அன்றிரவும் வீடு வந்தவன் சாப்பிட்டு முடித்து வெளியில் கொட்டகை பக்கம் நடந்துகொண்டே மதுராவிடம் விஷயத்தை தெரிவிக்க,
“என்ன ஒரு வில்லத்தனம். நான் கூட நிஜமா பண்ணிருச்சோனு ஒருநிமிஷம் பாவப்பட்டுட்டேன்…” என்றாள் மதுரா தலையில் அடித்துக்கொண்டு.
“என்னனோ மனசுக்கு ஒப்பவே இல்லப்பா. அதேம் அங்கன இருந்தேம். பெத்தவக வாரதுக்குள்ள என்னன்னு பாக்கலாமின்னு நெனச்சா அந்த டாக்டரா வந்து பேச்சு குடுத்துச்சு. கப்புன்னு புடிச்சிக்கிட்டேன்….”
“நீயி என்னிய போட்டு பாக்கலாம்ன்னு பாக்காதப்பா….” என புன்னகைத்தவன் மீசையை பிடித்து மேல் நோக்கி தூக்கியவள்,
“எங்க அந்த சிரிப்பை? பிடிச்சு குழம்பு வச்சிடறேன் இன்னைக்கு…” என்றாள்.
“செரி ஏழாம் மாசத்துல வளப்பூட்டாமே? என்ன சொல்லுத? ஒனக்கு செரியா?….” என கேட்கவும்,
“ஒம்பாதாவது போட்டுக்குவோமே? ஏன் ஏழு? எங்கப்பா எப்படா என்னை சென்னைக்கு கூட்டிட்டு போவோம்ன்னு வெய்ட் பண்ணிட்டிருக்காங்க. அங்க போனா போரடிக்கும். நான் மட்டும் இருக்கனும்…”