“இன்னும் எவ்வளோ நேரம் பாட்டி இதை கூட்டனும்?….” என்றாள் மதுரா.
முகமெல்லாம் வியர்வை முத்துக்கள் அரும்பி இருக்க இடுப்பில் கையை வைத்தபடி நின்றிருந்தாள்.
காலையில் தலைக்கு குளித்திருந்தவள் கூந்தல் விரிந்திருக்க முகம், கை கால்கள் எல்லாம் அரப்பூவும், கஸ்தூரி மஞ்சளுமாக சந்தனத்துடன் மணம் பரப்பியது.
தலைக்கு குளித்ததற்கு கூந்தலில் சாம்பிராணி காட்டப்பட்டிருக்க, அதில் உறக்கம் வேறு கண்களை சுழற்றிக்கொண்டு வந்தது.
படுத்துவிட்டால் தலையில் நீர் கோர்த்துக்கொள்ளுமே என தூங்காமல் இருக்க இப்படி வேலைகளை ஏவிக்கொண்டு இருந்தார் காந்திமதி.
“இன்னும் நாலு இழுப்பு, அம்புட்டுத்தேம்….” என்ற காந்திமதி மதுராவின் திணறலில்,
“செரி முடியலன்னா விடுத்தா. நாளைக்கி பாத்துக்கிடுவோம்…” என அவள் கையில் இருந்த பெருக்குமாரை வாங்க முயன்றார் அவர்.
பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்த எழில்மணிக்கு புசுபுசுவென பொங்கிக்கொண்டு வந்தது.
அடுத்த மாதம் வளைகாப்பு. அதை பற்றி பேசுவதற்கு என்று வந்திருந்தார்கள் மகேஷ்வரியும், எழில்மணியும்.
வந்ததில் இருந்து மகள் செய்யும் சிறு சிறு வேலைகள் அவரின் கோபத்தீயை பற்ற வைத்திருந்தது.
மகேஷ்வரிக்கு அவை எல்லாம் பெரிதாய் தெரியவில்லை. அதுவும் மகளின் முகத்தில் தெரிந்தது சோர்வும், அயர்வுமே தவிர பிடித்தமின்மை இல்லை.
“என்ன மகேஷ், இப்படி வேலை பார்க்கறா என் பொண்ணு. நாம வரும் போது என்னன்னா அந்த கருத்த மாட்டுக்கு வைக்கோல் எடுத்து போடறா. கீழ உக்காந்து எந்திக்கிறா. இப்ப வாசலை கூட்டிட்டு இருக்கா?….”
எழில்மணி மனைவியிடம் ஆரம்பித்துவிட்டார் தனது அகம்பாவத்தை. மகளை என்னவோ கொடுமை படுத்துவதாக நினைத்து.
“ஏன் இந்த வேலை எல்லாம் செஞ்சா இப்ப என்ன குறைஞ்சு போகுமாம்? அவளே இஷ்டப்பட்டு செய்யறா. உங்களுக்கு என்ன?…” என்றார் மகேஷ்வரி.
“நீ எல்லாம் என்ன அம்மா? இதை நீ கேட்கனும்…”
“என்ன கேட்கனும்? இதெல்லாம் சின்ன சின்ன பயிற்சி. சுகமா குழந்தை பெத்துக்க இதெல்லாம் இருக்கே….” என்றார்.
“என்ன இருக்கு? ஆன்லைன்ல எவ்வளோ இன்ஃப்லூயன்ஸர்ஸ் இருக்காங்க இதுக்குன்னு ட்ரெயின் பண்ண? அவங்க சொல்லித்தர எக்ஸர்சைஸ் செஞ்சாலே போதுமே?…” என்றவர் மேல் அத்தனை கோபம் வந்தது.
அங்கே வைத்து ஒவ்வொரு முறையும் எழில்மணியை பேச விருப்பமில்லாத மகேஸ்வரி,
“உங்களுக்கு கஷ்டமா இருந்தா உங்க மககிட்ட இதை சொல்லுங்க…” என்று முடித்துக்கொண்டார் மகேஷ்வரி.
மதுராவுடன் அவளின் கையை பிடித்துக்கொண்டு வந்த காந்திமதி எழில்மணி முகத்தை பார்த்ததுமே கண்டுகொண்டார்.
“அவளுக்கே முடியல. வந்ததுல இருந்து பார்க்கறேன், வேலை பார்த்துட்டே இருக்கா என் பொண்ணு. சுகப்பிரசவம் ஆகனும்ன்னா அதுக்கு நிறைய உடற்பயிற்சி இருக்கு. அதை விட்டுட்டு….” என்றவரை இடக்காக முறைத்த காந்திமதி,
“ஒம்மவ இப்ப என்ன ப்ளைனா ஓட்டிட்டு வந்தா? இப்ப அவ பாத்ததுக்கு பேரு என்னவாம்?…” என்றார்.
“வேலை பார்க்கறா என் பொண்ணு…” அழமாட்டாத குறையாக எழில்மணி மீண்டும்.
“ஒம்பொண்டாட்டி, ஒங்கம்மா பாக்காத வேலையா இங்க ஒம்மவ பாத்துட்டா?…” என்ற காந்திமதி,
“ஏம்த்தா?….” என்றார் மதுராவிடம்.
“அதானே? நீங்க கேளுங்க பாட்டி….” என்ற மதுரா,
“அப்பா காசை வாங்கிட்டு இதையே தான் வேற மாதிரி சொல்லி தராங்க. அவங்களை தப்பு சொல்லலை. வீட்டுலையே இந்த மாதிரி சின்ன சின்னதா நான் செய்யும் போது எனக்கும் ரிலாக்ஸா இருக்கு. விடுங்களேன்…” என்றாள் மதுரா.
அதற்குள் வடிவு மதுராவிற்கு நீர் மோரில் சீரகத்தை தாளித்து போட்டு கொண்டுவந்து தந்தார்.
முகத்தில் அத்தனை உஷ்ணம். அதற்கு மேல் பேசாமல் எழில்மணி வாயை மூடிக்கொண்டார்.
“மொத மத்தியான சாப்பாட்ட முடிப்போம். எந்தி. அதுக்கு பொறவு மத்தத பேசிக்கிடுவோம்…” என்று உள்ளே அவர்களை அழைத்துக்கொண்டு செல்ல,
“நான் வேற ட்ரெஸ் மாத்திட்டு வரேனே? வேர்த்திருச்சு….” என மதுராவும் அறைக்குள் செல்ல,
“மேலுக்கு தண்ணி என்னவும் ஊத்திக்காதத்தா. துண்டை நனைச்சி நல்ல புழிஞ்சி மேல தொடச்சுக்கோ. வேர்த்ததோட தண்ணிய விட்டீனா சளி கட்டிக்கும்…” என சொல்லியே அனுப்பினார் காந்திமதி.
வடிவும் உணவுகளை எடுத்து டேபிளில் வைத்திருக்க மதுராவும் வந்துவிட்டாள் உடை மாற்றி.
மகேஷ்வரி, எழில்மணிக்கு வைத்துவிட்டு மதுரா வரவும் அவளுக்கு உணவை கொஞ்சமாக வைத்திருக்க,
“என்ன மது, சரியா சாப்பிடமாட்டியா நீ?….” என எழில்மணி கவலையாய் பார்த்தார் மகளை.
“ப்பா, என்ன இது? என்னால ஒரே நேரம் இவ்வளோ சாப்பிட முடியாது. அதான் கொஞ்சம் கொஞ்சமா பிரிச்சு சாப்பிடறேன். இப்ப சாப்பிட்டு இன்னும் கொஞ்ச நேரம் போக சாப்பிடுவேன்…” என்று மதுரா சொல்லும் பொழுதே எழில்மணிக்கு மூக்கை நெருடும் ஒரு நெடி.
வடிவு சூடாக முட்டை ஆம்லெட்டை கொண்டுவந்து மதுராவின் ப்ளேட்டில் மட்டும் வைக்க,
“என்ன இது? என்னவோ ஸ்மெல் வருதே?….” என்ற எழில்மணி,
“என்ன மது, இதை எல்லாம் சாப்பிடுவியா நீ?….” என முகம் சுளித்தார்.
“சத்தியமா நான் என்ன பேசுவேன்னே தெரியாதுங்க. வாயை மூடிட்டு சாப்பிட்டு எழுந்திரிங்க….” என மகேஷ்வரி சொல்லிவிட்டார் கோபத்துடன்.
“என்ன பேசுவ நீ? என் பொண்ணு இப்ப மாசமா இருக்கா. சுத்தமா, வாசமா, ருசியா தான சமைச்சு குடுக்கனும். இது என்னவோ வாடை வருதே?….” என சொல்ல அதற்குள் மதுரா ஆம்லெட்டை எடுத்து சாப்பிட்டு தண்ணீரை குடித்துவிட்டாள்.
“மது, என்னடா, நீ ஏன் சாப்பிட்ட?….” எழில்மணி பதற வடிவிற்கு சிரிப்பு தான் வந்தது.
“என்னது விளக்கு போடற எண்ணெய்ல ஆம்லேட் போட்டீங்களா? என்னம்மா நீங்க? கொஞ்சமும் ஹைஜீன் வேண்டாமா? அதுவும் இப்ப இருக்கற நிலமையில குடுத்திருக்கீங்க?….” என்று குதிக்க ஆரம்பித்தார் எழில்மணி.
“இப்ப எதுக்கு கத்தறீங்க நீங்க?…” என சத்தம் போட்டார் மகேஷ்வரி.
“என்ன பேசற மகேஷ்? சாதாரண மனுஷங்க விளக்கெண்ணெய் குடிக்கிறதே ஸ்டமக் வாஷ்க்கு. கர்ப்பிணி பொண்ணை குடிக்க வைக்கிறது எல்லாம்….” என்றவரை பார்த்து பல்லை கடித்தார் மகேஷ்வரி.
“அப்பா, இதுவும் அந்த ரீசன் தான். இந்த நேரம் மோஷன் ப்ராப்ளம் எதுவும் வந்துட கூடாதுன்னு இதை அப்பப்ப செஞ்சு சாப்பிட குடுப்பாங்க. அப்பறம் இன்னொன்னு சொல்லுவாங்களே. அத்தை எனக்கு தெரியலை….” என்றாள் மதுரா தன் தந்தையிடம் ஆரம்பித்து மாமியாரிடம் கேள்வியாக.
“அதெல்லாமில்ல, ஒன்னுமாவாது. சின்ன சின்ன கை வைத்தியந்தேம் இதெல்லாம்….” என்ற வடிவு,
“ஒம்பதாம் மாசம் இதவே கடுங்காப்பில இனிப்பு சேக்காம பாதிக்கு பாதி வெளக்கெண்ண கூட காப்பிய ஆத்தி குடிக்க சொல்லுவோம். மாசத்துல ரெண்டுவாட்டி குடிச்சா வவுத்துல அடப்பில்லாம உள்ள புள்ள சுளுவா இருக்கும். அம்மாவுக்கும் ஒடம்பு கனக்காம காத்தா இருக்கும். அதுக்குத்தேன்…” என்றார்.