“அத்தோட வெளக்கெண்ண ஒடம்புக்கும் குளிர்ச்சி. சூட்ட தணிக்குததுக்கும் ஆவும். இந்நேரத்துக்கு ரொம்ப அவசியந்தேம்…” என்றும் கூறினார்.
எழில்மணி அப்போதும் மகேஷ்வரியை பார்க்க அவருக்கு சமாதானம் செய்வதற்குள் விழி பிதுங்கியது.
“இதெல்லாம் எப்பவோ வழக்கொழிஞ்சு போச்சு. நிறைய வைத்தியங்கள் இருக்கு. எனக்குமே தெரியாது. டெய்லி மது போன்ல சொல்லும் போது கேட்டுப்பேன். அத்தையும் சொல்லுவாங்க. அதனால தெரியும்…” என்றவர்,
“இத்தனை பயம் எதுக்கு உங்களுக்கு? யாரோ எவளோ ஆன்லைன்ல இதை தான் நீங்க செய்யனும்ன்னு சொன்னா கண்ணை மூடிட்டு என்ன ஏதுன்னு கேட்காம செய்வீங்க. ஆனா அனுபவப்பட்ட மனுஷங்க சொன்னா எவ்வளோ கேள்வி?…” என பேசினார் மகேஷ்வரி.
அதன் பின் மதுரா ஒரு வலைதள பதிவுகளை, வீடியோக்களை காண்பித்து அதற்கும், தான் செய்வதற்குமான ஒற்றுமைகளை, உணவுகளை எல்லாம் காண்பித்து சொல்லிக்கொண்டிருந்தாள்.
“இவ்வளோ எக்ஸ்ப்ளைன் பண்ணனுமா நீ? என்ன மது?….” என்றார் மகேஷ்வரி.
சற்று நேரத்தில் பாண்டியனும் உணவிற்கென்று வந்துவிட எழில்மணி வாயை பசை போட்டதை போல மூடிக்கொண்டார்.
வந்ததுமே பாண்டியன் சாப்பிட்டபடி மதுரா என்ன செய்தாள், என்ன உண்டாள் என்று விடாமல் கேட்டு தெரிந்துகொண்டான்.
“செவ்வெளனி கொண்டாந்துட்டேன். ஒருமணி நேராம் போவட்டும். வீசி தாரேம்…” என்று சொல்ல,
“ரெண்டுமணி நேரம் போகட்டும். என்னால சுத்தமா குடிக்க முடியாது….” என்ற மதுரா அப்போதே பாதி உணவில் திணற ஆரம்பித்திருந்தாள்.
“ஆவலன்னா வை ப்பா. என்னத்துக்கு செரமப்படுத?….” என்றவன் இலகுவாக அவளின் தட்டில் இருந்ததை தனக்கு எடுத்துக்கொள்ள எழில்மணி அன்று தான் இதனை முதல்முதலாக கவனித்தார்.
“போயி செத்த சாஞ்சு ஒக்காரு. நடக்காத மூச்சு வாங்க போவுது…” என்று சொல்ல மதுரா அங்கிருந்த மர நாற்காலியில் சாய்ந்து அமர்ந்திருந்தாள்.
இலகுவான பருத்தியிலான சுடிதார் தான். ஆனால் அதற்குள் வியர்த்து ஊற்றி இருந்தது அவளுக்கு.
“அடுத்த செக்கப் எப்போ தம்பி?….” மகேஸ்வரி கேட்க,
“இன்னும் ரெண்டுவாரம் இருக்குங்கத்தே. என்ன விசயமா கேட்டீங்க?…” என்றான் பாண்டியன்.
“இல்லை, இந்த தடவை நானும் வரலாமான்னு பார்த்தேன். ஏனா ஏழாம் மாசம் வளைகாப்பு போட்டுட்டு ப்ளைட்ல போக முடியுமா, இல்லை கார் ட்ராவல் ஓகேவான்னு கேட்கனுமே?…” என்றார் மகேஷ்வரி.
தலையை மட்டும் ஆட்டிக்கொண்டவன் அமைதியாக, வேகமாக உண்டு முடித்து கை கழுவிவிட்டு மதுராவை பார்த்தான்.
“நான் இல்லப்பா…” என தோளை குலுக்கிக்கொண்டவள் உதட்டை பிதுக்க,
“உங்களோட இனிமே நான் மதுரைக்கே வரமாட்டேன். இந்த பாடா? சாப்பிட்டதும் படுத்தா மது இருக்கற நிலைமைக்கு பிள்ளை நெஞ்சுக்கு ஏறிக்கும். விவரம் புரியலைன்னா பேசாம இருக்கனும். பொண்டாட்டிக்கு பார்த்திருந்தா தானே பிள்ளைக்கு வரும் போது என்னன்னு தெரியும்….”
அப்பட்டமான குற்றசாட்டுடன் மகேஷ்வரி சொல்ல எழில்மணி முகத்தை பரிதாபமாக வைத்துக்கொண்டார்.
“உன்னை உன்னோட அம்மா பார்த்துக்கிட்டாங்க. என் அம்மாவும் தான். அதான் எனக்கு தெரியலை. தெரியலைன்னா சொல்ல வேண்டியது தானே? இப்ப நீ ஏன் இவ்வளோ டென்ஷனாகற?….” என ஒன்றும் பேசாததை போல கேட்டு வைக்க,
“வாய திறந்தாலே வம்பு தான். பிரச்சனை தான். இனிமே பேசுங்க. நான் இங்கயே இருந்துடுவேன். சென்னை பக்கமே வரமாட்டேன்….” என்று சொல்லிவிட்டார் மகேஷ்வரி முடிவாக.
எங்கே செய்தாலும் செய்துவிடுவாரோ என எழில்மணி மௌனமானாலும் அவரின் வாயே அவருக்கு எதிரியாக இருந்தது.
பேச வேண்டாம் என நினைத்தாலும் அதை செயல்படுத்தும் முன் வார்த்தைகள் வந்து விழ அவராலும் தன்னை எப்படி கட்டுப்படுத்த என்று புரியாமல் முழிக்கத்தான் செய்தார்.
“சாப்பிட்டா எந்திக்கலாம். இல்லன்னா விளக்கெண்ணெய் ஆம்லேட் போட சொல்லவா? உங்களுக்கு எல்லாம் மார்னிங் குடிக்கிற அரை ஸ்பூன் தேங்காய் எண்ணெய்க்கே தூக்கி போடும். பார்த்து….” என மிரட்டல் போல சொல்லவும் எழில்மணி எழுந்துவிட்டார் போதும் என.
“என்னத்தா அவேன இந்த போடு போடுத?….” காந்திமதிக்கு அப்படி ஒரு சிரிப்பு.
“இவரை வேற என்னதான்ம்மா செய்ய? அவரா பேச கூடாதுன்னு நினைச்சாலும் அவர் வாய் கேட்கறதில்லை….” என்று சிரிப்புடன் அலுத்துக்கொண்டார்.
“செரி விடு, அவேன் கொணந்தாம் நமக்கு தெரியுமே? பேசமட்டும் பேசட்டும் த்தா….” என்று சொல்ல,
இவர்கள் பேசிக்கொண்டிருக்க மதுராவுடன் பாண்டியன் வெளியே வந்திருந்தான்.
அவர்கள் சென்று சில நிமிடங்களில் இன்னும் மகளை உள்ளே வர காணவில்லை என எழில்மணியும் வெளியே வர மதுரா மருதுவுடன் நின்றிருந்தாள்.
“இவந்தான் என்ன செய்ய போறியான்னு தெரியல மதுரா. ரொம்ப தேடுவான் ஒன்னிய…” என பாண்டியன் சொல்ல,
“சொக்கருக்கு இந்த தேடல், நினைப்பு இதெல்லாம் இல்லை போல? மருதுவுக்கு மட்டும் தானா?…” என தன் அருகில் தலையை நீட்டியபடி வாயசைத்த மருதுவின் திமிலை பிடித்துக்கொண்டு கேட்டாள் மதுரா.
எழில்மணிக்கு பயந்து வந்தது மகள் இப்படி அதன் அருகே நிற்பதை கண்டு. குட்டிபோட்ட பூனையாய் இங்குமங்கும் அவர் தூரத்திலே தலையை பிடிப்பதும், காதை இழுப்பதும், காலை தரையில் உதைப்பதுமாக தள்ளாடிக்கொண்டிருந்தார்.
“இந்த பொண்ணும் புரியாம போய் நிக்குது. அவரும் கூடவே கூட்டிட்டு வச்சிருக்காரே. லேசா தலைய சிலுப்பினா என்னாகும்? ஐயோ….” என நெஞ்சடைப்பதை போலிருக்க பார்த்து நின்றவருக்கு வியர்த்தது.
சத்தம் போட்டு கூப்பிடவும் முடியாமல், கூப்பிடாமல் இருக்கவும் முடியாமல் அவஸ்தையில் நின்றார்.