காந்திமதி அனுபவத்தை சொல்ல மதுராவும் அதனை இப்போது உணரத்தான் செய்தாள்.
தன்னால் இலகுவாக உறங்க கூட முடியாத நேரங்களில், இயல்பாக தனக்கான வேலைகளை செய்ய முடியாத சூழ்நிலைகளில் எரிச்சல் மூளத்தான் செய்தது.
இரவு நேரங்களில் பாதியில் எழுந்துவிடுபவள் அதிகாலை வரை விழித்தே இருப்பாள்.
அந்த நேரமெல்லாம் பாண்டியன் தான் பேச்சுத்துணை. லேசாய் அசைந்துவிட்டால் கூட எழுந்துவிடுவான்.
அப்போதைய பொழுதுகள் எல்லாம் அவர்களுக்கான பொக்கிஷ ஷணங்கள். பிள்ளையின் எதிர்காலத்தில் இருந்து, குடும்பத்தின் அடுத்த கட்டங்கள் வரை பேச்சுக்கள் செல்லும்.
தாயாய் தாங்கும் கணவனின் அனுசரணையில் சிற்சில உடல் உபாதைகள் கூட இரண்டாம் பட்சமாகியது மதுராவிற்கு.
மகேஷ்வரி சொன்னதை போல இரண்டு வாரத்தில் செல்லவிருந்த மருத்துவ பரிசோதனையின் பொழுது வந்துவிட்டார்.
மகளின் உடல்நிலை பற்றிய சந்தேகங்கள் எல்லாமே கேட்டு அறிந்துகொண்டவரிடம் மருத்துவர் மீனலோஷினி சொல்லியது ஒன்று தான்.
“டெலிவரி அம்மா வீட்டுல தான்னு நீங்க சம்பிரதாயம் எல்லாம் சொல்றீங்க ஓகே தான். ஆனாலும் நான் மதுராவுக்கு ரொட்டீனா பார்க்கற டாக்டர். ஏ டூ இசட் மதுராவோட ஹெல்த் எனக்கு தெரியும்…” என்றவர்,
“இங்கயும் நீங்க எதிர்பார்க்கிற பெசிலிட்டீஸ் எல்லாமே இருக்கே? டெலிவரி இங்கயே பார்க்கலாமே? ….” என்றார் அவர் இத்தனைநாள் நல்ல பழக்கவழக்கத்தில் நட்பு ரீதியில்.
“ஓகே, ப்ளைட் வேண்டாம். யூஸ்வலா ப்ளைட்ல ட்ராவல் பண்ணலாம். ஆனா மதுராவோட ஹெல்த்க்கு வேண்டாம். நீங்க ரோட் ட்ராவல் எடுத்துக்கோங்க. உடம்பு சூடாகிடாம பார்த்துக்கோங்க. சென்னை போனதும் அங்க டாக்டர் பிரேமாகிட்ட அப்பாயிண்மென்ட் வாங்கிட்டு உடனே செக்கப் போங்க…” என்றார்.
“தேங்க் யூ டாக்டர்….” என எழுந்து வந்துவிட்டார் மகேஷ்வரி.
அதுவரை மதுராவுமே எதுவும் கேட்கவில்லை அவரிடம். மகள் பேசுவாள் என பார்க்க,
“என்னம்மா என் முகத்தையே பார்த்திட்டு இருக்கீங்க?….” என்றாள் மதுரா.
“இல்ல நீ எதுவுமே கேட்கலை மது. அதான்…”
“இதுல கேட்க என்ன இருக்கு? இது சம்பிரதாயம். ஓகே. நீங்க முடிவும் பண்ணிட்டீங்க. ஓகே. நாம வளைகாப்பு முடிஞ்சு கிளம்பறோம். அதுவும் ஓகே. இதுக்கு மேல என்ன கேட்கனும்?…” என்றாள் மதுரா.
“ஊஃப் உன்கிட்ட பேசினேன் பாரேன்?….” என்று மகேஷ்வரி தலையை பிடித்துக்கொள்ள,
“என்கிட்ட என்ன பேசி? உங்க மாப்பிள்ளையே எனக்கு டெய்லி கிளாஸ் எடுக்கறார் உங்கப்பா பாவம், ஒரு அப்பாவா, அம்மாவா இப்ப நீ யோசிக்கனும். அவங்களுக்கும் ஆசை இருக்குமேன்னு சொல்லி என் மைண்ட் ஃபுல்லா இதை ஸ்டோர் பண்ணிட்டு இருக்கார்….”
மதுரா சொல்லவும் அந்த பாவனையில் சிரிப்புடன் மகேஷ்வரி தூரத்தில் நின்றிருந்த பாண்டியனை பார்த்தார்.
எதற்கு இந்த புன்னகை என தெரியாமல் பாண்டியனும் மதுராவை பார்க்க மனைவி நொடிபொழுதில் சிறு கண் சிமிட்டலும், ஒன்றுமில்லை என்னும் உதட்டசைப்பிலும் அவனை கிறங்கடித்தாள்.
“என்ன வந்து என்ன செய்யுதா பாரு….” என்றான் திணறலுடன் சொக்கநாதபாண்டியன்.
“நானா கூட இருக்கலாம். ஏன்ம்மா? வாங்க கிளம்புவோம்…” என்று வெளியே வர எதிரே வைதேகி வேகமாய் உள்ளே நுழைந்தாள்.
“ஹாய் டாக்டர். இப்ப தான் வரீங்களா? இன்னைக்கு டாக்டரோட உங்களை பார்க்கலையே?…” மதுராவே அவளை நிறுத்தி பேச,
“அக்கா நீங்க கிளம்பிட்டீங்களா? இன்னைக்கு ஒரு முக்கியமான வேலை. ஹாஃப் டே பர்மிஷன் சொல்லியிருந்தேன். இப்பதான் வரேன். செக்கப் முடிஞ்சதா?…” என்றாள் வைதேகி.
இலகுவாக வைதேகி எதோ ஞாபகத்தில் அக்கா என்று அழைத்திருக்க மதுராவிற்கு மறுக்க தோன்றவில்லை.
அன்று ஜகாவை விரும்புகிறேன் என்ற பெண்ணின் உறவுமுறை உரிமையை வெட்டி விட்டவளுக்கு இதனை அப்படி செய்ய மனதில்லை. வைதேகியை பிடித்தது.
“ஆமா, முடிஞ்சது. நீங்க இல்லைன்னதும் நான் கூட வேற செக்ஷன்ல இன்னைக்கு ட்யூட்டி போலன்னு நினைச்சேன்…” என மதுரா சொல்ல,
“அடுத்த செக்கப் இந்த தேதி தானே? அன்னைக்கு கண்டிப்பா பார்ப்போம்…” வைதேகி சிரிப்புடன் சொல்ல,
“ஆனா இங்க இல்லையே, அடுத்த செக்கப் சென்னையில தான்….” என்ற மதுரா,
“சொல்ல மறந்துட்டேன். இவங்க என்னோட அம்மா….” என மகேஷ்வரியை அறிமுகப்படுத்தி அவரிடம் வைதேகியையும் அறிமுகம் செய்தாள்.
சற்று தள்ளி நின்றிருந்த பாண்டியனும் இவற்றை கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தான் பேசி முடித்து வரட்டும் என.
“அப்போ இங்க டெலிவரி இல்லையா? இருந்தா நான் பார்த்துப்பேன். பேசாம இங்கயே பாருங்க. நம்ம ஹாஸ்பிட்டல் பெஸ்ட் ஹாஸ்பிட்டல்க்கா. நான் சொல்லனுமா என்ன?…” வைதேகி கேட்க,
“டாக்டராச்சே. உங்க ஹாஸ்பிட்டலை விட்டு குடுப்பீங்களா? ஜஸ்ட் ஃபார் ஃபன்…” என்ற மதுரா,
“டெலிவரி அம்மா வீட்டுல தானே? அதான் கிளம்பறேன். இப்போ என்ன அதுக்கப்பறம் பார்த்துட்டா போச்சு. நீ நம்ம ஊர் சைட் தானாமே? என் வீட்டுக்காரர் சொன்னார்….” என்றதும் பாண்டியனை திரும்பி பார்த்தாள் வைதேகி.