வந்திருந்த உறவினர்கள் அனைவரும் உணவருந்த சென்றிருக்க வீட்டில் கூட்டம் குறைந்திருந்தது.
மதுராவின் வளைகாப்பு சொக்கநாதபாண்டியன் இல்லத்தில் வைத்து சிறப்பாய் நடைபெற்றது.
விசேஷத்தை வீட்டில் வைத்து தான் செய்யவேண்டும் என சொல்லிவிட்டார் காந்திமதி.
அதனால் சுபநிகழ்வை வீட்டிலும், உணவை அருகிருந்த மண்டபத்திலும் வைத்துக்கொள்ள முடிவு செய்திருந்தனர்.
திருமண புடவையில் மதுராவின் முகமெல்லாம் சந்தனம் நிறைந்திருக்க அவள் அணிந்திருந்த பொன்நகைகளுக்கு நிகராக புன்னகையும், முகத்தின் பூரிப்பும் போட்டி போட்டு ஜொலித்தது.
“நல்லநேரம் முடியறதுக்குள்ள நாம வீட்டுக்கு புறப்படனும் மகேஷ்…” என எழில்மணி நிமிடத்திற்கு ஒருமுறை மகேஷ்வரி காதில் ஓதிக்கொண்டே இருந்தார்.
“எனக்கு வர கோபத்துக்கு மதுவை இங்கயே இருன்னு சொல்லிருவேன். சும்மா இருக்க மாட்டீங்களா நீங்க?…” என்று சத்தம் போட்டார் மகேஷ்வரி.
“இல்ல நேரமாச்சே? எங்க நீ மறந்திடுவியோன்னு தான்….”
“இப்ப தான் எல்லாரும் லஞ்ச்க்கு போயிருக்காங்க. உச்சி வெயில்ல கூட்டிட்டு போக கூடாது. மூணு மணிக்கு மேல தான் போக முடியும். அதுவரை இங்க தான். இருக்கனும்னா இருங்க. இல்லைன்னா கிளம்புங்க. நாங்க கூட்டிட்டு வரோம்….” என்று சொல்லிவிட்டார்.
“இப்ப எதுக்கு நீ கோவிச்சுக்கற? நல்லநேரம் முடியறதுக்குள்ள….” என்னும் பொழுதே மகேஷ்வரி முகம் உக்கிரத்தை தாங்கியிருந்தது.
“சரி சரி, நான் போய் அங்க பந்தி எப்படி நடக்குதுன்னு பார்த்துட்டு வரேன்….” என தப்பி ஓடுவதை போல வேகமாய் செல்ல,
“யப்பா, இவரோட….” என தலையில் அடித்துக்கொண்டார் மகேஷ்வரி.
எழில்மணி ஓடியதை நின்று பார்த்துக்கொண்டிருந்தவருக்கு இப்போதே கண்ணை கட்டியது.
எப்படி இவரை வைத்துக்கொண்டு சென்னையில் மகளை பக்குவம் பார்த்துக்கொண்டு இவரையும் சமாளிக்க போகிறோம் என்று.
வளைகாப்புக்கு இடைப்பட்ட இத்தனை நாளில் எழில்மணியிடம் பேச்சுக்கள் அதிகமோ அதிகம்.
“என் பொண்ணை நான் எப்படி பார்க்கறேன்னு பாரு. என்னமோ எனக்கே பாடம் எடுக்காங்க. இருக்கட்டும் வச்சுக்கறேன். எல்லாருக்கும் அப்ப இருக்கு….” என விடாமல் புலம்பிக்கொண்டிருந்தவர் உறக்கத்திலும் கூட புலம்ப,
“நிம்மதியா தூங்க கூட விடமாட்டீங்களா? அவங்கவங்க பொண்ணை தங்கமா தாங்கினா சம்பந்தி வீட்டை தலையில வச்சு கொண்டாடுவாங்க. நீங்க என்னன்னா போட்டி போட்டுட்டு இருக்கீங்க? உங்களையெல்லாம்?….” என கத்தியிருந்தார் மகேஷ்வரி.
அதை மட்டும் மாற்றிக்கொள்ள முடியாமல் எழில்மணி தவிப்பதும் உண்மையாக இருந்தாலும் தன் பெண்ணிற்கு தான் முதன்மையாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் பெரிதாய் இருந்தது.
சிறு துளியாய் இருந்த எண்ணம் மகள் அவர்களுக்காக பரிந்து பேச பேச வெள்ளமாய் உருவெடுத்திருந்தது.
இப்போதும் இங்கு வந்ததில் இருந்து நச்சரிக்க ஆரம்பித்துவிட்டார் மகேஷ்வரியிடம்.
“எல்லாம் கேட்டுச்சுத்தா. என்னத்துக்கு சங்கட்டம்? அவகளுக்கு அவக ஆச. அம்புட்டுத்தேன். செரி வா….” என உள்ளே அழைத்து செல்ல,
“எல்லாமே நிறைவா நடந்திருச்சு. அதுவே போதும். சரி ஆரத்தி எடுத்திடலாமா?….” என்றார் மகேஷ்வரி.
“ஆமாத்தா, அது ஒன்னுதேம் இருக்கு. எடுத்து முடிச்சிட்டு சீலைய மாத்த சொல்லு. பொறவு பொறப்பாடு வரைக்கி உள்ள செத்த சாஞ்சு நிமுக்கட்டும்….” என்றார்.
மதுராவிற்கு ஆரத்தி எடுக்கப்பட மகேஷ்வரி சபையில் வைத்திருந்த இலகுவான மெல்லிய பட்டுப்புடவையை எடுத்து வந்தார்.
“மது சேரி மாத்திட்டு இரு. போறப்போ கூப்பிடறேன். இல்லன்னா இன்னும் டயர்டாகிடும் உனக்கு….” என்றார்.
“ஏன்ம்மா இந்த சேரிலையே இருக்கேனே?…” என்றாள் மதுரா தான் கட்டியிருக்கும் தன் திருமண புடவையை காண்பித்து.
“தெரியாமலா எடுத்துட்டு வந்திருப்பேன் நான். இது சம்பிரதாயம் மது. வளைகாப்பு உன் கல்யாண சேரில இருந்தாலும் கிளம்பும்போது புது புடவை தான் மாத்திக்கனும். நம்ம வழக்கம் தான் மது…” என்றார் மகேஷ்வரி.
“ஓகே, நான் மாத்திடறேன். இந்த நகை எல்லாம் கழட்டிடவா?….”
“அதுக்குன்னு இம்புட்டுக்காடி? ஒரு வளவி கடையே வெக்கலாமாட்டு இருக்கே?….” என்றார்.
“ஆமா, ஒவ்வொருத்திக்கு ஒரு டசனு வளவின்னா? எம்புட்டு பேரு இருக்காளுங்க. குடுக்காட்டி சிரிச்சு போடுவாளுக. ரவைக்கு பலகாரத்த வேற எடுத்து வெக்கனும்….”
துர்கா அசால்ட்டாக சொல்லியபடி எடுத்துவைத்த வளையல்களை பத்திரமாக அட்டைபெட்டியில் வைத்து நாளிதழ்களை கிழித்து போட்டு ஒன்றை ஒன்று உரசி உடையாமல் கவனமாக அடுக்கி முடித்தாள்.
“இத்த நம்ம ரூமுல வெக்குதேம். என்னனோன்னு தூக்கி கடாசிடாதத்தா….” என எச்சரிக்கை வேறு தாய்க்கு.
“அத்த நா பாத்துகிடுதேம். சொல்லுதத கேளுடி….” என அனுப்பினார் வடிவு.
அதற்குள் மகேஷ்வரி மதுராவின் அறையிலிருந்து வெளியே வர பார்த்துவிட்டார் வடிவு.
“ஒன்னியத்தான் இப்ப தேடுனேன். இந்த மனைய எடுக்கத்தான? இல்ல நேரமாவனுமா?…”
“இல்லை அண்ணி. எடுத்திடலாம். மதுவும் உள்ள போயாச்சே….”
“அப்ப நீயே எடுக்குதியா?…” என வடிவு தயங்கி கேட்க,
“வாங்க சேர்ந்தே எடுத்து வைப்போம். இதுல என்ன இருக்கு? அதுக்கு முன்னாடி மதுராவுக்கு வகை சாதத்தை ஒரு தட்டுல போட்டு குடுக்கனும். வேணும்ன்னு கேட்டா….”
“புள்ள ஒழுங்கா சாப்புடலையோ?….” என சமையலறை உள்ளே சென்ற வடிவு பெரிய தட்டில் இலையை விரித்தார்.
“சாஸ்திரத்துக்கு ஒவ்வொரு ஸ்பூன் தானே குடுத்தோம். அதான் பசிக்குது போல? வாங்கிட்டு வர சொன்னா….”
“ஆமாமா, கூட்டத்துக்குள்ள வயிறார சாப்புட்டாலும் கண்ணடிதேன்…” என்றவர் எல்லாவற்றிலும் சிறிது சிறிதாய் எடுத்து வைத்து இன்னொரு இலையால் மூடி மகேஷிடம் நீட்டினார்.
“கொண்டு போய் குடு. நா இத்த மூடி வெச்சிட்டு வாரேம்…” என்றார்.
“எங்க அம்மாவை காணும்? கொஞ்சம் முன்னாடி தான் பார்த்தேன்?….” காந்திமதியை கேட்க,
“மண்டபத்துக்கு போயிருப்பாக. இங்கன இல்லன்னா அங்கன. வருவாக…” என சொல்ல தலையசைத்துவிட்டு மதுராவின் அறைக்குள் நுழைந்தார் மகேஷ்.
“இன்னும் புடவை மாத்தலையா நீ? சொல்லிட்டு தானே போனேன்?….” மகேஷ் கேட்க,
“நான் மாத்திக்கறேன்ம்மா, இதுல எல்லாம் இருக்கா?….” என எடுத்து பார்த்தவள்,
“கத்தரிக்கா கூட்டு இருந்ததே எங்கம்மா?…” என கேட்க சிரிப்பு தான் வந்தது மகேஷ்வரிக்கு.