‘எனக்கு மட்டும் சந்தோசமா மதுரா ஒன்னிய அனுப்ப?’ என மனதிற்குள் கேட்டவன் அவளிடம் கேட்டால் அதையே பிடித்துக்கொள்வாள் என வெளிப்படுத்தவில்லை.
‘என் மகளை நானும் கொண்டாடுவேன்’ என ஆசையுடன் காத்திருக்கும் எழில்மணியை வருந்த செய்ய பாண்டியனுக்கு விருப்பமில்லை.
“வா ப்பா….” என்று அவளை கீழே விரித்திருந்த மெத்தையும் படுக்க வைத்து தானும் சாய்ந்து அணைத்துக்கொண்டான்.
“ஒம்போன கொண்டா….” என கேட்டு ஜகாவிற்கு அழைத்தவன்,
“செத்த நேரம் அங்கினவே இருந்து பாத்துக்கடா….” என்று சொல்லிவிட்டு வைக்க அவன் முகத்தையே பார்த்துக்கொண்டு இருந்தாள் மதுரா.
“என்னப்பா? என்னப்பா செய்ய சொல்லுத?…” தவிப்புடன் ஆற்றமாட்டாமல் அவளிடம் பாண்டியன் கேட்க,
“ப்ச், போயா…” என்று மட்டும் சொல்லி சோர்வுடன் கண்ணை மூடிக்கொண்டவள் சற்றுநேரத்தில் உறங்கியும்விட்டாள்.
ஒருமணி நேரம் அவளுடன் இருந்தவன் மெல்ல மதுராவை விட்டு விலகி எழுந்து வெளியே வந்தான்.
“துர்கா, போயி மதினிக்கிட்ட இரு. நா மண்டபத்துக்கு போயிட்டு வாரேம்…” என வெளியே வர மகேஷ்வரியுடன் பேசிக்கொண்டே வடிவு தட்டுக்களை எல்லாம் எடுத்து வைத்துக்கொண்டு இருந்தார்.
“ஆமாத்தா, வந்து நேரமாச்சு. மண்டபத்துல என்னனு பாக்கனுமில்ல?…” என சொல்லியவன்,
“நீயி சாப்புட்டியா? எத்தே நீங்க?….” என இருவரையும் கேட்க,
“அப்பவே ஆச்சுய்யா….” என்றார் வடிவு.
“செரி கெளம்புதேம்…” என படியில் இறங்க,
“சாமி செத்த நில்லு….” என்ற வடிவு,
“புள்ளைய கூட்டிட்டு போவனும் அரமணி நேரத்துல…”
“ஆவட்டும்த்தா, நா மண்டபத்துல இருந்துக்குதேம்…”
“செரி, செரிய்யா. ஒனக்கு தெரியுந்தேன். இருந்தாலும் சொல்லனுமில்ல….” என்றார்.
பாண்டியன் கிளம்பிவிடவும் அடுத்த அரைமணி நேரத்தில் மதுராவை எழுப்பி புடவை மாற்ற சொல்லிய மகேஷ்வரியை பார்த்ததும் புன்னகையுடன் தலையசைத்தாள் மதுரா.
“என்னடா டல்லா இருக்க?….” மகேஷ் கேட்கவும்,
“அப்படியா தெரியுது? என்னவோ சரியா தூங்காததால இருக்கும்….” என சமாளித்தாள்.
“ஓகே, கிளம்பி வா…” என்று சொல்லி செல்ல மதுராவும் உடை மாற்றி வர அவளின் முந்தானையில் அரிசி தேங்காய், பழங்கள், வெற்றிலை, பாக்கு எல்லாம் வைத்து மடி நிரப்பப்பட்டு வழியனுப்பி வைத்தனர்.
“செரித்தா என்னத்துக்கு உசும்புத? நாளைக்கே போயி பார்த்துட்டு வருவோம் நாம. அப்பறம் புள்ளை பிறக்கும் போது போக போற. அம்புட்டுத்தான?….” என காந்திமதியை ஜகா அணைத்துக்கொள்ள,
“என்னனோன்ட்டு இருக்குடா சகா. அழுவ கூடாது. ஆனா தண்ணி வருது பாரு…” என சொல்லிய காந்திமதி கண்ணீரை துடைத்தவன்,
மதுராவை பிரிந்து இருக்கமுடியாத வருத்தத்தை நெஞ்சத்தில் அமிழ்த்திக்கொண்டு அவளுக்கு குடும்பத்தினர் விடை கொடுக்க நாயகியின் வீட்டிற்கு சென்றாள் மதுரா.
அன்றைய இரவு மதுரா சொல்லியதை போல பாண்டியனுக்கு உறங்கா இரவு தான்.
கழற்றி பாதி மடித்து உலர விரித்துவிட்டிருந்த மதுராவின் திருமண புடவையை எடுத்து அணைத்துக்கொண்டு படுத்துவிட்டான் பாண்டியன்.
அன்றைக்கே சென்று பார்க்க கூடாது என சொல்லிவிட்டதால் வீட்டிற்குள் தான் இருந்தான்.
மதுராவிற்கு அழைக்க அழைப்பும் எடுக்கப்படவில்லை. பிடிவாதமாய் அவனை தவிக்கவிட்டவள் நள்ளிரவில் அழைத்தாள்.
“என்னப்பா ஒறங்கலையா?….” என்றான்.
“ம்ஹூம். நீங்க?…” என அவனிடம் எதிர்கேள்வி கேட்க,
“இப்பத்தேன் முழிச்சேன். நீயி போன போட்டதும்….” என சொல்ல சுர்ரென்று ஏறியது மதுராவிற்கு.
“என்னை டென்ஷன் பண்ணனும்ன்னே பதில் சொல்லுவீங்களா நீங்க? நீங்க தூங்கினதை நான் நம்பனும்….” என்றவள் முறைப்பில் பாண்டியனிடம் இதழ்விரிந்த புன்னகை அவன் முகம் நிரப்பி நின்றாடியது.
அந்த புன்னகை மதுராவின் மனதை எரிச்சலூட்டியதை போல சரிசமமாக அமைதிப்படுத்தவும் செய்தது.
“ஓகே, நீங்க தூங்குங்க. குட்நைட்….”
“இல்லப்பா, செத்த நேரம் பேசுவோம்….” என்றவன் அவளுடன் பேசியபடி இருந்தான்.
மறுநாள் விடிந்தும் விடியாமல் குடும்பத்துடன் கிளம்பி நாயகியின் வீட்டிற்கு வந்துவிட அன்றைய நாள் முழுவதும் எழில்மணி மகளின் அருகே கூட செல்ல முடியவில்லை.
இடையிடையே பாண்டியனும் வந்து செல்ல, ஜகாவும் அங்கே இருக்க என நேரம் பறந்தோடியது.
மறுநாள் மருத்துவரின் ஆலோசனைப்படி ரயிலில் முதலாம் வகுப்பில் கிளம்பி சென்றனர் மதுராவின் குடும்பத்தினர்.
அவர்களுடன் சொக்கநாதபாண்டியனும், காந்திமதியும் சேர்ந்துகொள்ள மதுராவை சென்னையில் விட்டுவிட்டு அங்கிருக்கும் மருத்துவரை பார்த்து பரிசோதித்து பேசிவிட்டு தான் மதுரைக்கு புறப்பட்டான் பாண்டியன்.
கிளம்பும் முன் நாயகி தான் பார்த்துக்கொள்வதாக சொல்லி காந்திமதியிடம் சொல்ல,
“ஒன்னியவும் மகேசையும் நம்பித்தேன் விட்டுட்டு போறேம். பாத்துக்கிடு…” என கண்ணை கசக்கிக்கொண்டு கிளம்ப எழில்மணிக்கு புசுபுசுவென்று வந்தது ஆத்திரம்.
“உங்களை விட என் பொண்ணை நான் நல்லாவே பார்த்துப்பேன்….” என்றார் இறுமாப்பாக.
அதை செயலில் காட்டுகிறேன் பேர்வழி என்று மதுராவை தான் ஒருவழி செய்தார்.
“இதுவே அவங்கன்னா கேட்டிருப்ப தான நீ? சாப்பிடு, டாக்டர்கிட்ட கேட்டு தான மது குடுக்கேன். இதை எடுத்துக்கோ. அதை சாப்பிடு. வேற என்ன வேணும்?…” என்றவர் ஒருகட்டத்தில்,
“உன் புருஷன் வீட்டுல என்னை சரியா கவனிக்கலைன்னு பேச வச்சிருவ போல? அவங்க குடுத்தா வேணாம்ன்னு சொல்லுவியா நீ?….” என ஆரம்பித்துவிட்டார்.
மகேஷ்வரியாலும் அவரை கட்டுப்படுத்த முடியவில்லை. கூடவே இருந்து பார்க்கிறேன் என மதுராவை அங்குமிங்கும் அசையவிடவில்லை.
உரிமை போராட்டத்தில் மகளின் உடல்நிலையோடு மனநிலையும் பாதிக்க அவற்றையும் யாரிடமும் சொல்லவில்லை.
முகம், பின்கழுத்து எல்லாம் கருமை படர்ந்திருக்க வந்த பதினைந்தாம் நாளே சாப்பிடும் உணவுகள் எல்லாம் உண்டதும் வயிற்றுக்குள் செல்லாமல் விடாமல் வெளியேறிக்கொண்டே இருக்க பயந்து போய் மருத்துவமனைக்கு சென்றனர்.
“என்ன பார்த்துக்கிட்டீங்க பொண்ணை? மாசமாயிருக்கற பொண்ணுக்கு எவ்வளோ பிரஷர்? விட்டிருந்தா பிபி வந்திருக்கும்…” என டாக்டர் பிடித்து வாங்கிவிட்டார் எழில்மணி, மகேஷ்வரியை.
“உங்க பொண்ணு பயங்கர ஸ்ட்ரெஸ்ல இருக்காங்க. என்னவோ சொல்ல முடியாம அவங்களுக்குள்ளையே வச்சு கஷ்டப்படுத்திக்கறாங்க….” என சொல்லவும் மகேஷ்வரி எழில்மணியை கண்டனப்பார்வை பார்த்தார்.
“டாக்டர் நான் என் பொண்ணை நல்லா தான் பார்த்துக்கிட்டேன்….” என அவர் சொல்ல,
“என்ன பார்த்தீங்களோ? இங்க வந்த அன்னைக்கு இருந்ததுக்கும் இன்னைக்கும் எவ்வளவு வித்தியாசம்?…” என்று சொல்ல மகேஷ்வரிக்கு புரிந்தது.
“நான் பார்த்துக்கறேன் டாக்டர்….” என மகளிடம் விரைந்தார்.
கையில் செலெய்ன் ஏறிக்கொண்டிருக்க சாய்ந்து அமர்ந்திருந்தாள் மதுரா. எப்போதும் பட்டென்று பேசிவிடுபவள் இந்த உடல்நிலையில் மௌனமாய் இருக்க,
“இப்ப எப்படியிருக்கடா மது?….” என்றார் மகேஷ்வரி.
தாய் கேட்டதும் பளிச்சென்று ஒரு புன்னகை. முகத்தில் இருந்ததே தவிர கண்களை எட்டவில்லை. பின்னே வந்த எழில்மணி,
“மதும்மா, என்னடா? என்னாச்சுடா? உனக்கு ஏதாவது வேணும்னா அப்பாக்கிட்ட சொல்லு…” என்று கேட்டவருக்கு பயத்தில் வியர்த்து போனது.
“நீங்க கொஞ்சம் பேசாம இருங்க….” என்ற மகேஷ்,
“ஊருக்கு போவோமா மது?….” என கேட்டு மகளை ஆழமாக பார்க்க,
“ம்மா….” என்ற மதுரா தாயை கை நீட்டி அருகே அழைத்து அவரின் நெஞ்சில் சாய்ந்துகொண்டாள்.
“மகேஷ், என்ன பேசற நீ?….” எழில்மணி குதிக்க,
“மூச், உங்களை கேட்கலை நான். நானும் என் பொண்ணும் கிளம்பறோம். இந்த அட்மாஸ்பியர் என் பொண்ணு ஹெல்த்க்கு சரிவராது. அவ்வளோதான்….” என்று சொல்லி,
“வெளில இருங்க, நான் பேசனும் என் பொண்ணுக்கிட்ட….”
“அவ எனக்கும் பொண்ணுதான் மகேஷ்….” என்றார் பாவமாக.
“அப்பா ப்ளீஸ், என்னால முடியலை….” என மதுராவே சொல்ல,
“அப்பா என்னடா பண்ணேன்? சொல்லு. உனக்கு என்ன வேணும்? ஆமா நீ சாப்பிட்டு ரொம்ப நேரமாச்சே…” என்றார் நேரத்தை பார்த்துவிட்டு.
“வெளில இருங்களேன்….” என்று மகேஷ் சத்தம் போட்டார். எழில்மணி வெளியேறவும்,
“என்னடா? அம்மாக்கிட்ட சொல்றதுக்கு என்ன?…” என கேட்டு,
“ஊருக்கு போகனும்ன்னா சொல்ல வேண்டியது தானே?…” என மகளின் முகத்தை புடவையால் துடைத்தார்.
“இல்ல ம்மா, டெலிவரி அம்மா வீட்டுல தான். அதோட உங்களுக்கும் என்னோட இருக்கனும்னு ஆசையா இருக்குமே? எனக்கும் தான் ம்மா. ஆனாலும். நான் எப்படி சொல்லுவேன்?…” என மதுரா அயர்வுடன் கண்ணை மூட,
“ஓகே, ரிலாக்ஸ். நீ எதுவும் சொல்ல வேண்டாம். சரியா?…” என முதுகை வருடி சில நொடிகள் அவளை அமைதிப்படுத்தினார்.
“முதல்ல எனக்கு உன் சந்தோஷமும், ஆரோக்கியமும் தான் முக்கியம் மது. அங்க மட்டும் என்ன? நம்ம வீடு அங்க இருக்கே? அங்க இருந்துப்போம். அவ்வளோ தானே? இதுக்கு போய் ஸ்ட்ரெஸ் எடுத்துப்பியா நீ?….”
“அப்பா? அப்பா ரொம்ப ஆசைப்படறாங்க ம்மா….”
“எப்ப இருந்து நீ இப்படி யோசிக்க ஆரம்பிச்ச மது? இது உன்னோட ஹெல்த் மட்டுமில்லை, உன் வயித்துல இருக்கற குழந்தையோட ஆரோக்கியம் சம்பந்தப்பட்டது. எதுவும்ன்னா உன் வீட்டுக்கு யார் பதில் சொல்ல?…” என்றார் மகேஷ்.
“அப்போ போலாமா?….” புன்னகையுடன் கேட்க,
“இப்பத்தான் என் பொண்ணுக்கு சிரிப்பு கண்ணை தொட்டிருக்கு. சியரப் மது…” என நெற்றியில் முத்தமிட்டவர்,
“எப்பவும் போல என் பொண்ணு மதுவாவே இரு. அப்பத்தான் சரியா யோசிப்ப. ஏற்கனவே அத்தையும் டெலிவரி அங்க வச்சு பண்ணலாம்ன்னு சொல்லிட்டே இருந்தாங்க. அதுதான் முறைன்னு. இப்ப தானா அமைஞ்சிருச்சு…” என்றார் சந்தோஷத்துடன்.
சொன்னதை போல மகளை கூட்டிக்கொண்டு ரயிலில் வந்ததை போலவே கிளம்பி சென்றார்கள் அலங்காநல்லூர் நோக்கி.
எழில்மணியிடம் மருத்துவரை வைத்தே பேச வைத்து கிளம்ப வைத்திருந்தார் மகேஷ்வரி.
“ஊருக்கா?…” சண்டையிட்டவரிடம்,
“உங்களோட அதீத அன்பும் கூட என் பொண்ணை கஷ்டப்படுத்துது. தேவைக்கு அதிகமா செஞ்சு பார்த்துக்கறதும் ஒருவித இம்சை தான். நீங்க அப்படியெல்லாம் செஞ்சா தான் பாசமா இருக்கிறதா அர்த்தமா? மருமகன் வீட்டோட என்ன போட்டி?….” என்றவர்,
“உங்க உரிமையை, பாசத்தை காட்டவேண்டிய இடம் இது இல்லை. பிள்ளை பிறக்கவும் கூட்டிட்டு போய் வச்சுப்போம். அப்பவும் நான் தான் நல்லா பார்ப்பேன்னு இந்த தடவை செஞ்சமாதிரி செஞ்சா இருக்குது உங்களுக்கு….” என எழில்மணியை எச்சரித்திருந்தார் மகேஷ்வரி.