“சொல்லாம கிளம்பிட்டோம்ன்னு திட்ட போறார். இதுல ஹாஸ்பிட்டல்ல இருந்ததும் நாம சொல்லலை…”
“சொல்லிடுவேன் ம்மா. பதற வைக்க வேண்டாமேன்னு சொல்லலை. அதனால என்ன?…” என்று சொல்ல அறைக்குள் நுழைந்திருந்தான் பாண்டியன்.
“வாங்க தம்பி….” என்றவர் அவர்களுக்கு தனிமை கொடுத்து விலகி செல்ல,
“டோர் லாக் பண்ணுங்க சொக்கரே…” என இலகுவாக கூறினாள் மதுரா.
அப்போது தான் அவளின் உடல் மாற்றமும், முகமும் சோர்ந்திருப்பதே தெரிந்தது.
கையில் வேறு செலெய்ன் ஏற்றிய இடத்தில் சிறு பிளாஸ்திரி ஒட்டியிருக்க அதனை எடுத்து பார்த்தான்.
“என்னடி இது?….” என கோபத்துடன் கேட்க,
“ஏன் வந்தன்னு கேட்பீங்கன்னு நினைச்சேன்? இல்லையா?…” என சொல்லியவள் பின்னால் சாய்ந்துகொண்டாள்.
“என்னிய கோவப்படுத்தாதப்பா. என்ன செஞ்சிச்சு? இத்த எங்கிட்ட சொல்லல? சொல்லாம பொறப்பாடு வேற? அங்கன என்னாதாச்சும் சண்டை போட்டியா? போன்ல கூட ஒன்னும் அம்புடலையே? என்னப்பா?….” என்றான் மதுராவின் முகம் நிமிர்த்தி பாண்டியன்.
“என்ன என்னப்பா? போயிருங்க. அப்படியே இங்க என் புருஷன் என்னை காணுமேன்னு தவிச்சு போய் வர சொல்லி கெஞ்சினாரு, நானும் அங்க சண்டை போட்டு கிளம்பி வந்திருக்கேன். நல்லா சொல்லிடுவேன்….”
பாண்டியனின் பேச்சில் அதற்கு மேல் மதுரா கத்த திறந்திருந்த கதவின் வழி வெளியே சத்தம் கேட்டது.
“மகேஷ், சண்டை போடறாங்களா?…” என எழில்மணி அங்கே ஓட பார்க்க,
“அவங்க பேசிப்பாங்க. உங்க வேலையை நீங்க பாருங்க…” என்றவர் வடிவுக்கு போன் செய்துவிட்டார்.
இதற்கு மேல் சொல்லாமல் இருக்க முடியாதென. வந்து அரைமணி நேரம் ஆகவில்லை.
யாரின் மூலம் தெரிந்ததோ பாண்டியன் வந்திருந்தான். இப்போதும் அமைதியாக இருக்க முடியாதே?
மதுரா கிளம்பும் முன்பே பிடிவாதமாக யாருக்கும் சொல்லவேண்டாம் என சொல்லியிருந்தாள் மகேஷ்வரியிடம்.
“சொன்னா உங்கப்பா பாவம், உங்கம்மா என்ன நினைப்பாங்க. நீ அங்கயே இருன்னு சொல்லுவாங்க. உங்களுக்கு சரின்னா போன் பண்ணுங்க. நானும் இங்கயே இருந்திடுவேன்…” என்று சொல்லிவிட,
“சொல்லாம கிளம்பினோம்ன்னா சங்கடப்படமாட்டாங்களா? நம்மக்கிட்ட கலந்துக்கவே இல்லைன்னு. இது ஒன்னும் பர்மிஷன் இல்லை மது. நமக்கு இங்க இருக்கறதை விட ஊர் பிடிச்சிருக்கு, புறப்படறோம். அதானே?…”
“அதுகூட வேண்டாம்ன்னு சொல்றேன். உங்க மருமகன் இப்பவே அப்பா இடத்துல இருந்து யோசிக்கிறாராம். பெத்தவங்க நாம நாளைக்கு இதே மாதிரி ஒரு சூழ்நிலைக்கு வருவோம். அதனால அட்ஜஸ்ட் பண்ணிக்கோன்னு சொல்றார். கேட்கமாட்டார்….” என்றாள் அழுத்தமாக.
மதுராவின் பிடிவாதத்தை மாற்ற முடியவில்லை மகேஷ்வரியால். இரண்டொரு முறை சொல்லி பார்த்துவிட்டு,
“இதுல மட்டும் அப்பாவும் பொண்ணு ஒன்னு. என்னவோ போங்க…” என்று கிளம்பியாகிற்று.
இப்போது மதுராவின் சத்தம், பிரஷர் வைத்துக்கொள்ள கூடாதென ஏற்கனவே மருத்துவரின் அறிவுரை வேறு என மகேஷ்வரிக்குமே ஒருநிமிடம் பயம் தான்.
ஆனாலும் மருமகன் பார்த்துக்கொள்வார் என வடிவுக்கு அழைக்க காந்திமதி தான் போனை எடுத்தார்.
“என்னத்தா சொவமா வந்து சேந்தாச்சா?…” என கேட்கவும் மகேஷ்வரிக்கு தூக்கிவாரிபோட்டது.
“ம்மா….” என அவர் திணற,
“ஆத்தே ஒளறிப்புட்டேனா? மறந்துக்க மறந்துக்க…” என சொல்லியதில் சிரித்துவிட்டவர்,
“உங்களுக்கு எப்படி தெரியும்? யாரும் பார்த்துட்டு சொன்னாங்களாம்மா?….” என்றார் மகேஷ்வரி.
“பொறவு, எம்மருமவக்கிட்ட சொல்லாம இருந்தா எனக்கு கஞ்சி எறங்குமாக்கும். அதேம் சொல்லிப்போட்டேன். செரி நாங்க பொறப்பட்டு வாரோம். வைய்யி போன….” என வைத்துவிட்டார் காந்திமதி.
நாயகியை மகேஷ்வரி பார்க்க அவர் இதனை கவனிக்காததை போல மரிக்கொழுந்துவிடம் வேலை வாங்கிக்கொண்டிருந்தார்.
மதுரா எல்லாம் சொல்ல சொல்ல பாண்டியனுக்கு எழில்மணியை நினைத்து கோபிப்பதா, வருந்துவதா என்றே தெரியவில்லை.
அதிலும் இப்படி கவனிக்கிறேன் பேர்வழி என மதுராவை பற்றி யோசிக்காமல் செய்ததில் மனது திடுக்கிட்டது.
“எங்கிட்ட சொல்லிருந்தா நானே வந்து கூப்பிட்டிருப்பேனில்ல? ஏம்ப்பா?….” என அவளருகே அமர்ந்தான்.
“கிழிச்சீங்க. உங்களை நம்பி இதை வேற சொல்லனுமா? போயிருங்க….” என சொல்லும் பொழுதே கண்ணில் நீர் கட்டியது.
“ஒவ்வொருதடவையும் அப்பா குடுக்கறதை மறுக்கவும் முடியாம, லாஸ்ட்டா ஹாஸ்பிடல் போறதுக்குள்ள நான் பட்டபாடு. என் கோபமெல்லாம் உங்க மேல தான்….” என பல்லை கடித்துக்கொண்டு சொல்ல கண்கள் ரத்தமாய் சிவந்துவிட்டது.
உடல் ஒருபக்கம் அவளை வாட்ட மனது அதற்கு மேல் வாட்டியது. அதிலும் பெற்று வளர்த்த நான் முக்கியமில்லையா என கேட்டு நின்றவரிடம் சட்டென முகம் காண்பிக்க முடியவில்லை.
மற்ற நேரமானால் எடுத்து சொல்லியிருக்க கூடும். இந்த நிலையில் உடலும் மனதுமே ஒத்துழைக்கவில்லை.
“நீங்க போக சொல்லியாச்சு. அவங்க என்னன்னா என்னை விட யாரும் உன்னை பார்த்துக்க முடியாதுன்னு படுத்தி எடுத்தாச்சு. ரெண்டுபேரும் நல்லா பன்றீங்க…”
“செரிப்பா, இப்ப என்ன? அதேம் வந்துட்டியே. வா போவலாம்….” என்றான் பாண்டியன்.
“எங்க போக? நான் எங்கயும் வரமாட்டேன். அதுவும் பிள்ளைக்கு ஒருவயசு முடியற வரைக்கும் அங்க வரவேமாட்டேன்…” சிறுபிள்ளையின் பிடிவாதம் மதுராவிடம்.
“நீயி பெரிய புள்ளப்பா. என்னத்துக்கு அடம் பண்ணுத?….” என்றவன் அவளின் தோளில் கை போட,
“அப்போ அதுவும் நான் செய்ய கூடாதா?….” என்றாள் மதுரா.
தகப்பனிடம் காண்பிக்கமுடியாத ஆற்றாமை எல்லாம் கணவனிடம் கொட்டி தீர்த்துக்கொண்டு இருக்க அவளின் இறுக்கம் உணர்ந்தவன் அணைத்துக்கொண்டான்.
“ப்ச், இதுக்கொண்ணும் குறைச்சல் இல்லை. நான் அவ்வளோ ஈஸியா போய்ட்டேன்ல மிஸ்டர்.சொக்….” வேண்டுமென்றே அவனிடம் சொல்ல,
“மதுரா….”
“அப்படித்தான் சொல்லுவேன் மிஸ்டர்.சொக்….”
“செரி, சொல்லிக்க. ஆத்திரம் தீருமட்டும் சொல்லுப்பா. அம்புட்டுத்தான?….” என சட்டென அவள் வழிக்கே வந்தான்.
“உங்களை எப்படித்தான் மடக்கறது நான்? சத்தியமா தெரியலை…” என்றவள் அவனின் மீசையை பிடித்து வலிக்க இழுத்து இதழில் ஒற்றி எடுத்தாள்.
“போதுமாப்பா…” என கண்கள் சிரிக்க பாண்டியன் கேட்கவும்,
“வரேன் இருங்க….” என்று மதுரா எழுந்து வெளியே வர நாயகி போட்டு தந்த காபியை எடுத்துக்கொண்டு வந்த மகேஷ்வரியிடம்,
“ம்மா ஒரு பேச்சு இருக்கே? பாட்டி கூட சொல்லுவாங்க அடிக்கடி. தடுப்பு, உள்ள புகுந்துக்கறது, கோலம்ன்னு. உங்களுக்கு தெரியுமா?….” என்று கேட்க நாயகியும் வந்துவிட்டார்.
எழில்மணி என்ன நடக்கிறது என வேடிக்கை பார்க்க வயிற்றை தாங்கிக்கொண்டு கேள்வியுடன் நின்ற மனைவியை பார்த்து பாண்டியனும் புன்னகையுடன் நின்றான்.
“காபி குடிங்க தம்பி….” என்றார் மகேஷ்வரி பாண்டியனிடம் வந்து அதனை நீட்டி.
“சொல்லுங்க பாட்டி. கேட்கறேன்ல?….” என்று மதுரா நிற்க,
“என்னத்துக்குத்தா இப்ப?….” என கேட்கவும்
“இவருக்கு அதை சொல்லனும். நான் ஒன்னு நினைச்சா இவர் ஒன்னு பன்றார்…” என்று சொல்ல காபி குடித்தவனுக்கு புரையேற தலையை தட்டிக்கொண்டவன் அடக்கப்பட்ட புன்னகையுடன் போனுடன் வெளியே சென்றான்.
“இன்னைக்கு அந்த போனியை குடுங்க. இவர் தலையை பிளந்துடறேன்….” என்று முமுணுமுணுப்பு வேறு அவன் மதுராவை கடந்து செல்கையில்.
எல்லாவற்றிக்குமே அவள் ரசிக்கும் புன்னகையை கொடுத்து மனைவியின் கோபத்தை குளிர்வித்தான்.
“மயங்கிடவே கூடாது. இன்னொருதடவை சிரிச்சா பேசிக்கறேன்….” என்ற மகளை ஆச்சர்யமாக தான் பார்த்தார் மகேஷ்வரி.
“என்னம்மா?….” தாயிடம் கேட்க,
“இல்லை மது, எவ்வளோ கோவம் வருது? ரொம்ப பொசஸிவ் கூட உனக்கு. அழகா இருக்கு….” என கன்னம் வழித்து கொஞ்சிக்கொள்ள,
“தாய் கண்ணு பெருங்கண்ணு. மொத புள்ளைக்கு சுத்தி போடனும். மரிக்கொழுந்து உப்பு, மொளகாவ எடுத்துட்டு வா….” என்று சொல்லி பேசிக்கொண்டிருக்க பாண்டியன் வெளியே சென்றான்.
அன்றைக்கு மதுரையில் முக்கியமான வேலை இருக்க அவற்றை ஒற்றி வைத்து மறுநாள் பார்க்க வருவதாக பேசிக்கொண்டிருக்க ஆட்டோ சத்தம் கேட்டு திரும்பி பார்த்தான்.