காந்திமதியும், வடிவும் வந்திறங்கினார்கள். இருவரையும் பார்த்தவன் தனக்கு சொல்லியதை போல யாரேனும் சொல்லியிருக்க கூடும் என நினைத்து உள்ளே வர,
“வடிவுதேம் பயந்துக்கிட்டே கெடந்தா மவேன்கிட்ட எங்க ஒளறி வெப்போமோன்னுட்டு. ரெண்டுநாளு பேசாம வெரதங்கணக்கால பொழுத ஒட்டுனோம். அதுவும் இந்த சிறுசுக சகா, துருக்காக்கு கேக்க கூடாதேன்னு அடக்கி அடக்கி ரகசியமா பேசி. ஒரே சிரிப்புத்தேன்….” என்று சொல்லி சிரித்தார் காந்திமதி.
“பாட்டி என்கிட்ட கூட சொல்லலை நீங்க? சொல்லாம கிளம்பனும்னு தானே சொன்னேன். உங்களை யார் சொல்ல சொன்னா?…” என மதுரா நாயகியிடம் சொல்ல எதார்த்தமாக வடிவு வெளிப்பக்கம் பார்க்க அங்கே இவற்றை கேட்டபடி நின்றிருந்தான் பாண்டியன்.
“யாத்தே எத்தே….” என காந்திமதியின் கையை வடிவு சுரண்ட,
“கம்மின்னிருத்தா….” என மருமகளின் கையை தடுத்தவர்,
“நல்ல சோலி பாத்த நீயி. இல்லன்னா அங்கின இருந்துக்கிட்டு எங்களுக்குமில்ல வெறுக்குன்னு கெடக்கும். இங்கினனா வந்து போயி இருக்க வாகா போச்சு. இனி ஒரே சந்தோசந்தேன்….”
காந்திமதி ஆடாத குறையாக குதூகலத்தில் பூரித்து பேசிக்கொண்டிருந்தார் பேத்தியை தொட்டு தடவிக்கொண்டு.
“எத்தே….” என வடிவு காந்திமதியின் கையை பிடித்து இழுத்து திருப்பிவிட பேரனை பார்த்தவர் சட்டென சமாளித்தார்.
“வாயா ராசா, இப்பத்தேன் வாரியா? வண்டிச்சத்தம் ஒன்னும் அம்புடலையே?…” என கேட்டு,
“நம்ம அழகரு இல்ல அவேந்தேன், மதுர ப்ளேனுல பேத்தியா வந்து எறங்கிருக்கான்னு தாக்கல் சொன்னியான். அதேம் ஒரு எட்டு பாத்துட்டு போவலாமின்னு வந்தேம்…” என்றார்.
“பாட்டி ட்ரெயின்ல வந்தோம்….” என்ற மதுராவின் பேச்சில் காந்திமதி அரைகுறையாக கேட்க,
“எனக்கு ஒத்த வார்த்த சொல்லிட்டு வரத்தான கெழவி?….” என கேட்டபடி பாண்டியன் அருகே வந்தான்.
“எங்க நீங்க வந்த வேகத்துல எதிர்க்க மருதுவே நின்னாலும் தெரியுமாக்கும்?…” என்று சொல்லவும் அசடுவழிய காந்திமதி பேரனை பார்க்க முறைப்புடன் அவன் மதுராவின் அறை நோக்கி சென்றான்.
செல்லும் பொழுது அவனின் பார்வை எழில்மணியை சுட்டுவிட்டு சென்றது. அவரிடம் எதுவும் பேசவில்லை பாண்டியன்.
மதுராவிடம் சமாதானம் செய்தாலும் அந்த சூழ்நிலையில் மனைவிக்கு எத்தனை கஷ்டம் என வேதனையாக இருந்தது.
அதனை உள்ளடக்கியபடி தான் இருந்தான். ஏதேனும் கேட்க ஆரம்பித்து பேசி வார்த்தைகள் விபரீதமாகி விட்டால்?
நிச்சயம் நிதானம் இழந்துவிடுவான் தான். அது அவனுக்கே தெரிந்தது. எத்தனை முறை தான் இப்படி பொறுத்து போய்க்கொண்டே இருக்க என ஒருபுறம் சலிப்பாகவும் இருந்தது.
உள்ளே சென்றவன் அறையின் கதவை அடைத்துவிட்டு கட்டிலில் படுத்துக்கொண்டான்.
எழில்மணிக்கு என்னவோ போலிருந்தது மருமகனின் பாராமுகம். ஏதேனும் கேட்டிருந்தால் கூட பேசியிருக்கலாம்.
தானாக பேசவும் முடியவில்லை. அன்றைய ஆவேச பேச்சுக்கள் தான் இன்றும் ஞாபகத்தில் நிற்க மௌனமாகி போனார்.
“என்ன ஒன்னும் சொல்லாம போறாங்க?…” மதுரா கேட்க,
“அதெல்லாம் வாகா வீட்டுக்குள்ள வச்சு பேசுவான். இங்கின எல்லாம் காட்ட மாட்டியானே?….” காந்திமதி சோகம் போல சொல்ல மதுரா சிரித்துவிட்டாள்.
“ஆனாலும் உங்களுக்கு ரொம்ப அசால்ட்டு பாட்டி. இதை ரொம்ப மிஸ் பண்ணேன் தெரியுமா?….” என அவரை அணைத்துக்கொள்ள,
“நானுந்தேம் ராசாத்தி. ஒனக்கு ஒரு கொறையும் வராது சாமி…” என பேத்தியை கொஞ்சி தழுவினார் காந்திமதி.
வடிவும் மருமகளின் தலையை வருடிவிட வெகுநேரம் அவர்களுடன் தான் அமர்ந்து வாய் ஓயாமல் பேச்சுக்கள்.
இடையிடையே ஆர்ப்பாட்டமான சிரிப்புகளும் என மதுராவின் சிறகுகள் விரிந்ததை போலிருந்தது.
முகம் மலர்ந்து இருக்க அதுவே தனி அழகை கொடுத்திருந்தது மதுராவிற்கு. இதனை கண்கொட்டாமல் பார்த்து அமர்ந்திருந்தார் எழில்மணி.
தான் என்ன தவறினோம், எங்கே இடறினோம் மகளை கவனிப்பதில், இந்த சிரிப்பை கொண்டுவருவதில் என்று யோசனையில் இருக்க அது அவரின் வார்த்தையாகவே அனைவரும் கேட்கும்படி வந்துவிட்டது.
“ஒன்னிய சொல்லி தப்பில்ல, ஒம்புத்தி. புள்ளைய நல்லா பாக்கனுமின்னு எந்த தகப்பனுந்தேம் நெனப்பான். அத்த தான் நீயும் நெனைக்கனும். அத்த விட்டுட்டு நீயி மட்டுந்தேன் நல்லா பாக்கன்னு சொல்ல வெக்க இதென்னய்யா பந்தயமா? கிறுக்காலே ஒனக்கு?…” என்றார் காந்திமதி எழில்மணியிடம்.
அவர் அதிர்ந்து மகளை பார்க்க மதுரா எதுவும் சொல்லவில்லை. நாயகி தான் சொல்லியிருந்தார்.
எல்லாம் இங்கே நிறைக்கப்பட பேச்சுக்கள் குறைந்து சீரான சுவாசங்கள் ஆசுவாசமாய் அடைக்கலாமாகியிருந்தது அவர்கள் அருகாமை கூட்டில்.
உறங்கி எழுந்து பாண்டியன் வெளியே வர எழில்மணி பேச முயன்றார் மருமகனிடம்.
“அப்பத்தா இவரு ஒன்னொன்னா செய்யுவாரு, அம்புட்டுக்கும் நா ஆமாச்சாமி போட ஆவாது. ஒவ்வொருக்காவும் இத்தே சோலிதேம். பேச நாளாவும். சொல்லி வெய்யி…” என்றுவிட்டான் முகம் கூட பார்க்காமல்.
அன்று இரவே ஜகாவும், துர்காவும் வந்துவிட வீடே கலகலப்பாய் இருந்தது. மதுராவை விட்டு செல்ல மனமின்றி வெகுநேரம் அங்கிருந்தனர்.
மறுநாள் காலை எழில்மணி எழுந்து வெளியே வந்தவர் கண்களை கசக்கியபடி கீழே இறங்கினார்.
“இந்த கண்ணாடிய எங்க வச்சேன்னு தெரியலையே? என்ன அது மசமசன்னு?….” என அதனருகே சென்றவர் கையை நீட்டவும் ஈரமாய் என்னவோ பிசுபிசுப்பாக விரலில் ஒட்டியது.
“மகேஷ், அந்த கண்ணாடியை கொண்டா….” என கேட்டு முடிக்கும் முன் ‘ம்மா’ என வெப்பமூச்சுக்காற்றின் வேகத்தில்,