சாய்ந்த வேகத்தில் பின்னால் நகர்ந்து எழுந்து உள்ளே ஓட அதற்குள் மகேஷ், ஜகா, நாயகி மூவரும் வெளியே வந்தனர்.
“என்னங்க, என்னாச்சு? கண்ணாடி போடாம ஏன் வெளில நடந்தீங்க? எப்படி கீழ விழுந்திருக்கீங்க?….” என்று அதனை போட்டுவிட,
“அத யார் இங்க கொண்டுவந்தா? மகேஷ் அதுதான் என்னை தள்ளி விட்டுச்சு….” என அவர் இப்போது நன்றாக பார்க்க மீண்டும் மருது ‘ம்மா’ என அவரை அருகே அழைத்தான்.
வாயில் எச்சில் ஒழுக அசைபோட்டபடி தலையை ஆட்டியவன் முன்னங்காலை தரையில் தேய்த்து முன்னே வர பார்த்தான்.
“ச்சீ, இதை தான் தொட்டேனா? கையில ஒட்டிக்கிச்சு…” என தன்னுடையில் துடைத்தவர் முகம் அசூயையில் மாற,
“ஒன்னும் கொறையாது. மருது மதினிய பாக்கனுமின்னான்னு கூட்டியாந்தேம். என்னவாம்?…” என்ற ஜகா மருதுவின் அருகே செல்ல அப்போது தான் வெளியே வந்த மதுராவை பார்த்த மருது துள்ள ஆரம்பித்திருந்தான்.
“இருடா, வாராக…” என்று ஜகா வருட,
“மருது, எப்படிடா இருக்க?….” என அவனருகே சென்றாள் மதுரா.
“போகாத மது. மது அப்பா சொல்றேன்ல….” என்ற பேச்சுக்கள் எங்கே மதுராவிற்கு கேட்க.
ம்மா, ம்மா என பாசத்துடன் குழந்தையாய் குழைந்து நிற்கும் அந்த முரட்டுக்காளையின் கண்ணில் கூட இத்தனை நாள் அவளை பாராத ஏக்கம்.
“மருது, ஷூப், எதுக்கு குதிக்கிற? அமைதியா உட்கார்….” என மதுரா சொல்லவும் சட்டென உடலை மடித்து அமர்ந்துவிட்டவன் அவளை அழைத்துக்கொண்டே இருந்தான்.
“இந்தாங்க மதினி….” என மர நாற்காலியை தூக்கி வந்து போட்ட ஜகா,
“நீங்க கெளம்பினதுல இருந்து ஒரே அனத்தல்தேம். அடங்கவே இல்ல. கெழவிதேம் போயி காமிச்சிட்டு வர சொல்லுச்சு. அதேம் வாக்கிங் போறப்ப கூட்டிட்டு வந்தேம்…” என்றான்.
“மாட்டுக்கு வாக்கிங்?…” எழில்மணி பல்லை கடிக்க,
“உள்ள போய் முதல்ல குளிங்க. இப்படியா எப்ப பார்த்தாலும் மண்ணுல உருண்டு புரண்டு வரது?….” மகேஷ்வரி தலையில் அடித்துக்கொண்டார்.
அதன் பின்னர் இரு நாட்களுக்கு ஒருமுறை மருது கூட அங்கே வந்துவிடுவான் மதுராவை பார்க்க.
தினமும் மூன்று நேரமும் பாண்டியன் மதுராவை பார்த்துவிட்டு செல்ல வடிவும், காந்திமதியும் தினமும் பகலில் நாயகியின் வீட்டில் வந்து இருந்தனர்.
எழில்மணியால் பத்து நாட்கள் மட்டுமே அங்கே இருக்க முடிந்தது. அதன் பின்னர் அவர் கிளம்பிவிட மதுராவின் உடல்நிலையில் இப்போது இன்னும் நல்ல முன்னேற்றம்.
மதுரை மருத்துவமனையில் வைத்தே பிரசவம் என உறுதியாகி இருந்தது. வைதேகிக்கு அதில் அத்தனை சந்தோஷம்.
தனது மொபைல் நம்பரை மதுராவிற்கும், பாண்டியனுக்கும் தந்திருந்தாள். அவர்களதையும் வாங்கிக்கொண்டாள்.
“ஏதாவது அவசரம்ன்னா எனக்கு கூப்பிடுங்கக்கா….” என சொல்லியிருந்தாள் வைதேகி.
இதற்கிடையில் இருமுறை பொது இடத்தில் வைத்து வைதேகி ஜகாவை பார்த்திருக்க அவளை முறைத்தபடி தான் கடந்திருந்தான் ஜகா.
“சரியான சண்டைக்காரர் போல. எப்ப பாரு உர்ருன்னு….” என்றவண்ணம் தான் அவன் மீதான அவளின் எண்ணம்.
அப்போதும் எழில்மணி டெலிவரி மட்டுமாவது சென்னையில் வைக்கலாமா என ஒருவார்த்தை மகேஷ்வரியிடம் கேட்க,
“இங்கினதேம் எம்புள்ள பொறக்கனும்….” என சொல்லிவிட்டவன்,
“என்னன்னாலும் ஒங்கப்பாவ எங்கிட்ட வந்து பேச சொல்லுப்பா….” என்று பாண்டியன் எழில்மணி காதுபடவே சொல்லிவிட அவர் எங்கே வாய் திறக்க?
வாரம் ஒருமுறை வந்துவிடுவார் எழில்மணி. அதற்குமேல் அவர்களை பார்க்காமல், தனியே இருக்க முடியவில்லை.
மகளுக்கு எப்போதடா பிள்ளை பிறக்கும் என தவித்து பார்த்துக்கொண்டு இருந்தார்.
மருத்துவர் கொடுத்திருந்த தேதியும் நெருங்கி இருக்க இதோ மருத்துவமனையில் ஒரு அறையில் அனுமதிக்கப்பட்டிருந்த மதுரா பழச்சாறு அருந்திக்கொண்டிருந்தாள்.
இடுப்பில் கைவைத்து பாண்டியன் முறைப்புடன் இருக்க நாயகியும், காந்திமதியும் வாயில் கை வைத்து, கைகளை கட்டாத குறையாய் தலையை தொங்கபோட்டு அமர்ந்திருந்தனர்.
வடிவும், மகேஷ்வரியும் டாக்டர் என்ன சொல்வாரோ என்று நின்றிருக்க, அருகில் ஜகாவும், சற்று தள்ளி வைதேகியும், அவளுடன் ஒரு நர்ஸும்.
“இப்படி வர வலி எல்லாம் சூட்டுவலின்னு கைமருந்து குடுத்து அமத்திட்டா எங்க நார்மல் டெலிவரி பன்றது?….” என்றார் டாக்டர் மீனலோசினி.
“இப்ப இருக்கற சாப்பாட்டு முறை, பொண்ணுங்களோட உடல்நிலை மாற்றம்ன்னு வலி காணுறதே இல்லை. வலி இல்லைன்னு டக்குன்னு சிசெஷன் பண்ணிட்டு போறாங்க. நீங்க என்னன்னா வந்த வலியையும் விரட்டிருக்கீங்க?….” என்றார் பள்ளி சிறுவர்களை மிரட்டுவதை போல.
“அது சூட்டுவலிதேம்…” நாயகி சொல்ல,
“யத்தா கம்மின்னிரு. என்னத்தயாச்சும் சொல்லாம?….” காந்திமதி நாயகியை பிடித்து அடக்கிவிட்டார்.
“இருக்கட்டும்மா, இப்பதான் வலி கண்டாலும் அதுக்குன்னு ஊசி, ஜெல்ன்னு மருந்து இருக்கு வலியை கூட்ட. தேதி நெருங்கிட்டதால அதை பயன்படுத்திக்கலாம். இப்படி எல்லாத்துக்கும் நீங்க மருந்து குடுத்தா எப்படி?…” என்றார் மீனலோஷினி.
“இந்த வெவரம் தெரியாதுல. அதேம் புள்ள வவுத்து நோவுன்னதும் வடிகஞ்சில கடஞ்ச வெண்ணைய போட்டு ஆத்தி குடுத்தோம். சீரகத்த பொரிச்சு போட்டோம்…” என சொல்ல மீனலோசினிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.
“மதுரா இங்கயே இருக்கட்டும். குழந்தையோட மூவ்மென்ட் ரொம்ப நல்லா இருக்கு. நாங்க மானிட்டர் பண்ணிட்டே தான் இருப்போம். நாளைக்கு வரை பார்க்கலாம். நார்மல் டெலிவரிக்கு கண்டிப்பா வாய்ப்பிருக்கு….” என்று நம்பிக்கையுடன் என்றார்.
சொக்கநாதபாண்டியனும் தலையசைத்து ஆமோதித்தபடி மீனலோஷினி என்ன சொல்ல போகிறார் என பார்த்தான்.
“தப்பா நினைக்காதீங்கம்மா. நீங்க குடுக்கற மருந்துல தப்பில்லை. இந்தமாதிரி நேரத்துல கை வைத்தியம் ரொம்பவே நல்லது தான். ஆனா எல்லா நேரமும் அது மட்டுமே சரி இல்லை….” என மீனலோஷினி சொல்ல,
“இன்னைக்கு வலிக்கும் போது ஒடனே ஒங்கள கூப்புடுதேம். சொவமா பெக்க வெச்சி குடுத்துருத்தா. அந்த மீனாச்சியா ஒன்னிய நெனச்சு கேக்குதேம். அத்தமட்டும் செஞ்சு குடுத்துட்ட எந்தண்டட்டி ஒனக்குத்தேம்….”
காந்திமதி பாட்டியின் பேச்சில் மீனலோஷினி சிரித்துவிட, அவரிடம் தலையசைத்து வெளியேறிவிட்டார்.
“அமேஸிங் பாட்டி…” என்று வைதேகியும் புன்னகையுடன் வெளியேற,
“அமேசா? இந்த புள்ள என்ன அந்த காட்ட பத்தி எங்கிட்ட பேசுது?…” என தாடையில் கைவைத்து காந்திமதி கேட்க,
“ஹைய்யோ பாட்டி முடியல….” என வயிற்றை பிடித்துக்கொண்டு சிரித்துவிட்டாள் மதுரா.
“அடங்கமாட்டியா கெழவி நீயி….” என பாண்டியன் சத்தம் போட,
“இங்கருந்து போறப்ப ஒவ்வாய நா தெக்கல, பாத்துக்கிடு கெழவி. இந்த தண்டட்டிய மருத வரைக்கி ஏலம் போடுத நீயி. இருந்தாத்தான….” என தண்டட்டியை பின்பக்கமாக இழுத்து பிடித்தவனோடு வம்பு செய்ய ஆரம்பித்துவிட்டார் காந்திமதி.
“ஒத்த தண்டட்டிய வெச்சிக்கிட்டு ஊருப்பட்ட குசும்பு….” பாண்டியன் மதுராவிடம் சொல்ல அனைவருக்குமே மனம் நிறைந்த புன்னகை.
அன்றிரவே மதுராவிற்கு மீண்டும் வலியெடுக்க அதிகாலை ஆண்மகவை பெற்றெடுத்தாள் சொக்கனின் மதுராள்.