காந்திமதிக்கு கையும் காலும் ஒரு நிலையில் இல்லை. கிட்டத்தட்ட பறக்கும் நிலையில் தான் அவரிருந்தார்.
முதல்நாள் அதிகாலை பிள்ளை பிறந்ததில் இருந்து ஆட்டமோ ஆட்டம். பிள்ளையிடமும் தண்டட்டி உனக்கு தான் என்று சொல்லி வைக்க அவரோடு சிரித்து முடியவில்லை.
இப்போதும் பாண்டியனின் கையிலிருக்கும் கொள்ளு பேரனின் முகம் பார்க்கவும் குழந்தை கண்களை உருட்டி தன்னை பார்ப்பதை கண்டு பூரிக்கவும் என அவரின் அட்டகாசம் ஏராளம்.
மருத்துவமனையில் வேலை செய்பவர்களில் ஒருவரையும் விடவில்லை காந்திமதி.
அனைவருக்கும் இனிப்பும், மதியத்திற்கு பிரியாணியும் என விருந்தே வைத்து மருத்துவமனையை இரண்டு செய்துவிட்டார்.
“ஏத்தா கெழவி நாளப்பின்ன எம்பிள்ளைக்கும் அவென் பொறந்தன்னிக்கு கறிசோறு போடுவதான?…” என்ற ஜகாவிடம்,
“நாளப்பின்னவாக்கும்? நெனப்புத்தேன். ஏழு கழுத….” என்ற காந்திமதியின் வாயை பொத்தியவன்,
“குழந்தையை குடுங்க ஸார்…” என வைதேகி வாங்கிக்கொள்ள அவளிடம் தந்த பாண்டியன்,
“மதுரா தெரிஞ்சவக இருக்காக. போயி பாத்துட்டு பேசிட்டு வாரேம்…” என சொல்லிவிட்டு வெளியேறினான்.
“நாயகி கெழவி, வா போயி சோமுவ பாத்து போட்டு வருவோம். குடலு எறக்கமின்னு என்னமோ சொன்னாவ? வாயி மட்டும் கொறவில்ல. வா இப்பவே போயிட்டு வருவோம்…” என காந்திமதி அழைக்க இருவரும் கிளம்பினார்கள்.
வடிவு அங்கே தான் அமர்ந்திருந்தார் வைதேகி என்ன செய்கிறாள் என பார்த்துக்கொண்டு.
மதுராவை பரிசோதித்து அதனை அவளுக்கு முன்பு தொங்கிக்கொண்டிருக்கும் அட்டையில் எழுதியவள் குழந்தையை வாங்கிக்கொண்டாள்.
“என் கூட வாங்கம்மா. குழந்தைக்கு வெய்ட் பார்த்துட்டு உங்ககிட்ட குடுக்கறேன்…” என வைதேகி சொல்ல வடிவு மெதுவாய் எழுந்துகொண்டார்.
“நீயி இருத்தா, நா போறேம்…” என்ற ஜகா,
“அவகளுக்கு கால் நோவு. அதேம், நா வாரேம். வாங்க…” என்றான் வைதேகியிடம்.
“ஏன் என்னாச்சு?….” என்ற வைதேகி ஜகாவிடம் குழந்தையை தந்துவிட்டு வடிவின் அருகே சென்று காலை பார்த்தாள்.
“வீங்கி இருக்கே? எங்கயும் இடிச்சதா?…” என அதனை தொட்டு பார்க்க,
“ஆத்தே, இருக்கட்டும்த்தா…” என சொல்லிய வடிவு காலை நகர்த்திக்கொண்டு,
“ஏலே சகா…” என்றார் மகனை.
“அத்தை, இது அவங்க ட்யூட்டி தான். சங்கடப்படாதீங்க….” என்ற மதுரா,
“இந்த தரை அத்தைக்கு ஒத்துக்கலை. அதான் அப்படி இருக்கு…” என வைதேகியிடம் கூறினாள்.
“வெந்நீர்ல கால் வைங்கம்மா. சரியாகிடும். இதுக்கு ஆயின்மென்ட் எழுதி தரேன். போட்டுக்கோங்க….” வைதேகி வடிவிடம் சொல்ல,
“ஆனா அதுவரைக்கும் சுருக்குன்னு குத்திட்டே இருக்குமே? நான் குடுக்கறேன். சூடு பறக்க அதை தேச்சு விடுங்க….” என்றவள் எழுந்து குழந்தையை வாங்க ஜகாவிடம் கை நீட்ட,
“நான் தூக்கிட்டு வரேன்…” என்றான் ஜகா.
“நான் ஒன்னும் வச்சுக்க போறதில்லை. உங்களுக்கு பேபியை வெய்ட் மிஷின்ல சரியா வைக்க தெரியாது. குடுங்க….” என்றாள் சிறிது அதட்டல் கலந்து.
உண்மை தானோ என நினைத்தபடி குழந்தையை ஜகா நீட்ட அதனை ஆசையுடன் வாங்கினாள் வைதேகி.
அவளின் முகத்தில் தெரிந்த பிரியத்திலும், குழந்தையை வாங்கிய பாங்கையும் கவனித்த ஜகாவை மதுராவும் கவனித்தாள்.
“ம்க்கும்….” மதுரா குரலை செரும,
“மதினிக்கு அந்த தண்ணிய எடுத்து குடேம் சகா….” வடிவு சொல்லவும்,
“அதெல்லாம் வேண்டாம் த்தை. சும்மா தான்….” என்றவள் ஜகாவை பார்த்து புருவங்களை உயர்த்த,
“நீங்க வேற?….” என சொல்லி சிரித்தபடி வைதேகியுடன் சென்றான்.
“சண்டையா? என்னாச்சு பாட்டி?….” மதுரா பதறி போனை எடுக்க மகேஷ்வரி எடுக்கவில்லை.
“என்ன பன்றாங்க அப்பா?….” என மதுரா டென்ஷனுடன் இருக்க ஜகா வந்துவிட்டான்.
“எங்க ஜகா குழந்தை?….” என்ற மதுராவிடம்,
“அண்ணே வராரு மதினி…” எனும் பொழுதே குழந்தையுடன் பாண்டியனும், உடன் மகேஷ்வரியும் வந்தார்.
“புள்ளைக்கு எடை எல்லாம் சரியாத்தேன் இருக்காம். சுவமா இருக்கான்னு சொன்னாக….” என்ற பாண்டியன் தன் மகனை உச்சி முகர்ந்தான்.
தகப்பனின் கன்னத்தில் பிஞ்சு விரல் கொண்டு குழந்தை உரச மெய்மறந்து அதில் சிலிர்த்து போயிருந்தான்.
பாண்டியனின் முகத்தின் மகிழ்ச்சியை கண்டவர்கள் சத்தம் காட்டாமல் மெல்ல வெளியேற,
“எல்லாரும் போயாச்சு. மிஸ்டர்.சொக் என்னையும் கொஞ்சம் பார்க்கலாம்….” என்றாள் மதுரா.
“ஒதைக்க போறேம் மதுரா. சொல்லாதங்கேம்ல….” என்றவன்,
“செரி சொல்லிக்கப்பா…” என்றும் உடனே கண்சிமிட்டி கூற,
“கையில பிள்ளை இருக்கேன்னு பார்க்கிறேன். இல்லைன்னா எதையாச்சும் எடுத்து வீசிடுவேன். இந்த போனிய எங்க? அதுக்கு ஒரு வேலை வரமாட்டிக்கே?…” என முறைக்க,
“என்னவாம் ப்பா….” என குழந்தையுடன் மனைவியின் அருகே அமர,
“குழந்தை அழுதுச்சாம்….”
“மதுரா குழந்தையாப்பா?….”
“அப்பப்பா, பேசி மயக்கறது. பையன் வரவும் என்னை எல்லாம் கண்ணுலையே பார்க்கறதில்லை….” என முறுக்கிக்கொள்ள,
“செரி ஒன்னிய மட்டும் பாக்குதேம். அம்புட்டுத்தான?….” என்றவன் ஒற்றை காலை மடித்து அமர்ந்து குழந்தையை நெஞ்சோடு வாகாய் அணைத்துக்கொண்டவன் மதுராவின் முகத்தில் பார்வையை பதித்திருந்தான்.
மீசைக்கடியிலான புன்னகை அவளிடம் கண்ணாம்பூச்சியாட்டம் ஆடி பார்க்க சில நொடிகள் அசராமல் அவனை பார்த்தவள்,
“இதுக்கும் மேல நான் பார்ப்பேன். என்கிட்ட வேண்டாம். என்னை நேரா பார்க்காம திருட்டு பார்வை பார்த்தவர் தான நீங்க?….”
“நானா எப்பப்பா?….”
“அன்னைக்கு, பம்பு செட்ல….” மதுரா கண் சிமிட்டி சொல்ல,