அவனை விலக சொல்லியவள் ஒரு கையால் கழுத்தை சுற்றி தன் முகம் நோக்கி இழுத்து இன்னொரு கையால் அவன் மீசையை முறுக்கி விட்டாள்.
“எனக்கு எந்த ரிஸ்ட்ரிக்ஷனுமில்லை. இப்ப சும்மா ஆறு வித்தியாசம் பார்க்கறேன்….” என விலகாமல் பதில் தர,
“யாருக்காம்?….”
“வேற யாருக்கு? உங்களுக்கும் உங்க பிள்ளைக்கும் தான். வித்தியாசம் எல்லாம் இப்ப எதுவும் தெரியலை. ஆனா இந்த சின்ன நண்டும் உங்க மாதிரி மீசை வளர்ப்பானா? அதான் யோசிச்சேன்…”
“ஏன், ஏன் தெரியலையாம்?…” என்றவனும் தொட்டிலை பிரித்து மகனை பார்க்க,
“ப்ச், தூங்கறான்ல. அதை விடுங்க. ஆமா….” என்றவளை பேச விடாமல் விரல் கொண்டு வார்த்தைகளை நிறுத்தியவன்,
“அதுக்கு மொத நா ஒன்னு சொல்லுதேம்….” என்றான்.
“பேசாதன்னு சொல்ல இந்த விரல் தான் கிடைச்சதாமாம் சொக்கருக்கு?….” என்றவள் கேள்வியில்,
“யாத்தே….” என அவள் தோளில் தன் தலையை சாய்த்துக்கொண்டவன்,
“கம்மின்னிருப்பா. பேச விடேம்….” என்று சொல்ல மதுராவின் உடல் சிரிப்பில் குலுங்கியது.
“இப்பிடியே போன அடுத்த வருசத்துல இன்னொன்னுக்கு தொட்டி கெட்டனும். பாத்துக்கிடு. ஒனக்கு தாங்காது…”
“பொண்டாட்டிய தவிர மத்த எல்லாத்தையும் தூக்குங்க சொக்கா. போனில இருந்து பிராடு பண்ணவன் வரைக்கும்….” என்று சொல்லியவளை எழுப்பி கைகளில் தூக்கிக்கொள்ள,
“இதெல்லாம் சேர்த்தியே இல்லை. நான் ஒத்துக்கமாட்டேன்…” என்று அவனை இன்னுமே சீண்டிவிட்டு அவனின் சேஷ்டைகளில் இதமாக, பதமாக குளிர் காய்ந்தாள் மதுரா.
மறுவாரம் சொந்தங்கள் புடைசூழ பிள்ளையுடன் தாயையும் புகுந்தவீட்டினர் அழைத்துக்கொள்ள அதற்கு மறுநாள் எழில்மணி காலையில் இருந்தே பரபரப்பாகிவிட்டார்.
“டிக்கட் கூட என்னை போட வேண்டாம். நானே போடறேன்னு சொல்லிட்டார் மாப்பிள்ளை. எல்லாம் பேசறவிதமா பேசினா நடக்கும். என்னமோ பூச்சாண்டி காமிச்சீங்க. நீங்களே பேசிக்கோங்கன்னு. பார்த்தீங்களா?….” என காலரை தூக்கிவிட்டுக்கொண்டு பெருமையோ பெருமை.
“நினைப்பு வேற எல்லாருக்கும். நான் பேசமாட்டேன்னு நினைச்சீங்களே. எப்படி பேசினேன் பார்த்தீங்களா?….” என்று காதில் புகை வர வைக்கும் அளவிற்கு தீட்டிவிட்டார்.
“ப்ளைட்க்கு நேரமாகிருச்சு. இன்னும் காணும். பேசாம நாம அவங்க வீட்டுக்கே போய் மதுவையும், பேரனையும் கூட்டிட்டு கிளம்புவோமா?…” என நிலைகொள்ளாமல் தவித்தார்.
“இதுக்குத்தான் நானே பொறுப்பை எடுத்துக்கனும். பிள்ளையை பிரிஞ்சு இருப்பாரே. அவரே கூட்டிட்டு வரட்டும்ன்னு விட்டா, வாட் இஸ் திஸ்?…” என்று வேறு ஒரு எரிச்சல் வேறு பந்தாவாக.
அதற்குள் ஜகா முனியாண்டியுடன் வந்துவிட்டான் இன்னொரு காரை எடுத்துக்கொண்டு.
“எங்க மது?….” என்று எழில்மணி காரில் மகள் இல்லாததை பார்த்து கேட்க,
“ஹ்ம்ம்…” என்று மட்டும் சொல்லிவிட்டு காரில் ஏறிக்கொள்ள மீனாட்சியம்மன் கோவிலில் சென்று நிறுத்தினான்.
“ஒரு பூசைய போட்டுட்டு போவத்தான. வாங்க….” என்று அவன் இறங்கி செல்ல,
“இப்ப இது தேவையா? அங்க ப்ளைட்டை நமக்காக நிப்பாட்டி வைப்பாங்களா? என்ன மகேஷ்?….” என சலிப்புடன் உள்ளே செல்ல மகள், பேரன், மருமகன் அனைவரும் இருந்தனர். சாமியை கும்பிட்டவர் பேரனை கையில் அங்கேயே வாங்கிக்கொண்டார்.
“எங்களோட கார்ல வா மது. எதுக்கு ஜீப்ல?…” என மகளை அழைக்க,
“இருக்கட்டும் ப்பா. நான் அவங்களோடவே வரேன்….” என்றதும் எழில்மணி கையிலிருந்த குழந்தை அழ ஆரம்பித்தான் தகப்பனிடம் செல்லவேண்டும் என.
“மூணுமாசத்துலையே அப்பா அப்பான்னு இவன் பன்றதை பாரேன். என் பொண்ணும் இப்படித்தான் இருந்தா…” என மகளையும் பார்த்துக்கொண்டு சொல்ல,
“குடுங்கப்பா, இல்லைன்னா ரொம்ப அழுவான்…” என்று வாங்கிக்கொண்டாள் மதுரா.
எழில்மணி பேசினால் பேசட்டும் என்பதை போல இப்போதெல்லாம் கண்டுகொள்வதில்லை.
எழில்மணியும் இன்னும் சிறிது நேரம் தானே? வைத்திருக்கட்டும் என்று சொல்லி கிளம்ப ஏர்போர்ட் வந்து சேர்ந்தார்கள்.
பேரனையும், மகளையும் அழைத்துக்கொண்டு செல்வதற்கு விடைகொடுக்கலாம் என எண்ணி எழில்மணி பேச ஆரம்பிக்கும் முன்,
“செரி முனியாண்டி வண்டிய எடுத்துட்டு போ. நாங்க கெளம்புதோம்…” என பாண்டியன் சொல்லவும் டாட்டா காட்ட கையை உயர்த்தியிருந்த எழில்மணி அதிர்ச்சியில் கையை அப்படியே உயர்த்தியவாக்கில் நின்றுவிட்டார்.
“செரிங்கய்யா…” என முனியாண்டியும் பவ்யமாக தலையசைத்துவிட்டு செல்லவும்,
“போவலாம்…” என்ற பாண்டியன் மதுராவை பார்க்க,
“அப்பா என்ன நின்னுட்டீங்க?….” என்றாள் மதுரா அவர் நின்ற தோரணையை பார்த்து.
“கட்சில எதுவும் நிக்க போறாகளா மாமோவ்?….” என்ற ஜகா,
“நா வேணா தூக்கிட்டு போவவா?….” என எழில்மணி இடை நோக்கி குனிய,
“என்ன?….” என சுதாரித்து விலகினார்.
“டேய் வாடா….” என சிரித்தபடி பாண்டியன் முன்னே நடக்க,
“தெரியாதே. இது சர்ப்ரைஸ் போல? எனக்கு ரொம்ப சந்தோஷம்….” என்றவர் காந்திமதி, துர்கா, நாயகியுடன் முன்னே நடக்க,
“முனியாண்டிய வேணா ஒங்களுக்கு தொணைக்கு வர சொல்லட்டுமா மாமோவ்….” என்றான் ஜகா.
யாருக்கும் பதில் சொல்லவில்லை. அமைதியாக அமர்ந்தவர் சென்னை வரும் வரை பேசவில்லை யாருடனும்.
என்னவோ தன் வீட்டிற்கு செல்வதை போலவே தெரியவில்லை. அவர்கள் வீட்டிற்கு தன்னை அழைத்து செல்வதாகவே வழி நெடுகிலும் உணர்ந்தார் எழில்மணி.
ஊர் சென்ற இரு நாட்கள் அமைதியாகவே கழிந்தது. அங்கே எழில்மணி வீட்டில் இருக்கும் பொழுதுகள் எல்லாம் பேரன் அவரிடமே தான் இருந்தான்.
யாரும் அவரின் நெருக்கத்தை துளியும் விலக்கவில்லை. ஆனால் எழில்மணிக்கு தான் முழுநேரமும் பேரனுடன் இருக்க வாய்க்கவில்லை.
வேலை, கம்பெனி என்று அலைந்து திரிபவர் வீட்டில் இருக்கும் நேரம் குறைந்திருந்தது.
இன்னும் பாண்டியனும், ஜகாவும் அங்கே தான் இருந்தனர். இருவரும் வெளியே சென்று வருவதும், என்னவோ தனியாக பேசுவதுமாக இருக்க மதுராவை கூட அழைத்து கேட்டுவிட்டார் என்னவென.
“அவங்களே சொல்லுவாங்கப்பா. சொல்லட்டும்….” என மதுராவும் சொல்லிவிட நான்காம் நாள் விஷயம் தெரியவந்தது.
“மது, மகேஷ். பார்த்தீங்களா அந்த ஆள் சிக்கிட்டான். நம்மளை ஏமாத்தினவன் சிக்கிட்டான். இப்ப தான் போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து போன் வந்துச்சு….” என சந்தோஷத்தில் கூத்தாடியவர்,
“பணமெல்லாம் இருக்குமா? இல்லை கரைச்சிருப்பானா? எனக்கு தெரியலையே. பணம் மட்டும் இருந்தா மொத்தமா உன் புருஷன்கிட்ட குடுத்து கடனை அடைச்சிருவேன். அப்பத்தான் எனக்கு நிம்மதி….” என்று சொல்லி பெருமூச்சு விட்டவர்,