“ஆத்தே…” என்றவன் மேலும் பேசும் முன் இரவு உணவை எடுத்துக்கொண்டு பரமேசும் வந்துவிட்டார்.
இந்த இரு நாட்களும் அவர் தான் உணவு சமைத்து எடுத்து வருவது. வீட்டை பார்த்துக்கொள்வது என்று இருக்கிறார்.
உள்ளே வந்து கூடையை வைக்கவும் பாண்டியனும் எழுந்துகொண்டான் மதுராவின் அருகில் இருந்து.
அவர்கள் பேசட்டும் என வெளியே சென்றவன் ஜகாவுடன் அமர்ந்துகொள்ள மகேஷ்வரியும் உள்ளே வந்தார்.
அனைவரும் சாப்பிடவும் சிறிது நேரத்தில் பரமேசும் கிளம்பிவிட்டார். போகும் பொழுது சோமுவை பார்த்துவிட்டு செல்வதாக.
வடிவும் அவருடன் கிளம்பினார். மறுநாள் காலையே குழந்தையுடன் அனைவரும் வந்துவிடுவார்கள்.
அதனால் வீட்டை போய் பார்க்கவேண்டும் என நாயகியை அழைத்துக்கொண்டு கிளம்பினார்.
“என்னம்மா? என்னாச்சுன்னு இப்போ சொல்லுங்க….” மதுரா கேட்கவும் கையில் குழந்தையை வைத்து அமர்ந்திருந்த மகேஷ்வரி சோர்வுடன் புன்னகைத்தார்.
“அப்பாவுக்கு கோவம், அதான் குழந்தை பிறந்திடுச்சு தானே? கிளம்புவோம். இனிமே அங்க ஒரு பிரச்சனையும் இல்லை. அஞ்சு மாசம் மது நம்மோட இருக்கட்டும்ன்னு சொல்றார்….” என்றார் மகேஷ்.
“அதுக்கு ஒரு சண்டையா?….”
“நான் எங்க மது போட்டேன்? சும்மா இருந்தவக்கிட்ட வந்து பிரச்சனை பன்றார். கூட்டிட்டு போவோம். நார்மல் டெலிவரி தானே. ட்ராவல் பண்ணலாம். நாம பார்த்து கூட்டிட்டு போவோம்ன்னு நிக்கறார்….” என்ற மகேஷ்வரி,
“என்ன தான் நினைக்கறாரோ? அவருக்கு கொஞ்சமாச்சும் அறிவிருந்தா பிள்ளை பெத்த பொண்ணை ஒரு வாரத்துல இங்க இருந்து அவ்வளோ தூரம் அலைகழிக்க முடியுமா? பிடிவாதம் பன்றார்…”
“சரி நீங்க என்ன சொன்னீங்க? அதுவும் இவ்வளோ டென்ஷன் வேற?….” மதுரா சிரிக்க,
“டென்ஷனா, ஹாஸ்பிட்டலா போச்சு. இல்லைன்னா நல்லா வாங்கிருப்பார். நாளைக்கு வீட்டுக்கு கிளம்பனும். நீங்க நைட் வீட்டுக்கு போய் அத்தைக்கு என்ன வேணும்ன்னு பார்த்து செய்ங்கன்னேன்…”
“ஹ்ம்ம், என்ன சொன்னாங்க?….”
“என்ன சொல்லுவாரு? என் பொண்ணோட நான் இருக்க வேண்டாமா? என்னை மட்டும் போக சொல்ற? நான் இருந்து தான் எல்லாம் வாங்கி குடுத்தேனா இத்தனை வருஷம்ன்னு வெக்கமே இல்லாம கேட்கறார் இந்த மனுஷன்….”
“பதிலுக்கு கேட்க வேண்டியது தானேம்மா? இத்தனை வருஷம் வாங்கி தரலை. இப்பவாவது வாங்கி குடுங்கன்னு….” மகள் எடுத்து கொடுக்க,
“அதுக்குள்ள மாப்பிள்ளை வந்திட்டார். நீங்க பார்த்தவரைக்கும் போதும், என் பொண்டாட்டி என புள்ளையோட எங்கயும் வரமாட்டான்னு சொல்லிட்டு என்னை கூட்டிட்டு வந்துட்டார். அதான் இன்னும் கோபத்துல இருக்கார்…” என மகேஷ்வரி இப்படியே புலம்ப என நேரம் சென்றது.
மறுநாள் காலை மருத்துவமனையிலிருந்து நேராக நாயகியின் இல்லம் சென்றனர்.
இரு நாட்களாக மருத்துவமனையில் குழந்தையை அவர்கள் குளிக்க வைத்தது தான்.
அதனால் வீடு வரும் பொழுதே எல்லாம் தயாராக இருந்தது. மதுராவிற்கு சுக பிரசவம் என்பதனால் உணவில் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லை.
காரமின்றி எடுத்துக்கொள்ள அறிவுறுத்தினர். சத்தாக சாப்பிட வேண்டும். மற்றபடி எல்லாம் எடுத்துக்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டனர்.
வந்ததுமே பிள்ளையுடன், மதுரா, பாண்டியன் இருவருக்குமே ஆலம் சுற்றி திருஷ்டி கழித்து உள்ளே அழைத்து வரப்பட,
குழந்தை பாண்டியனின் கையில் இருக்க பேரனை தான் தூக்கி வைக்க முடியாமல் தொட்டிலில் போட சொல்லியவர்,
“ஆமா புது தொட்டில் வாங்கிட்டு வந்தேனே? எங்க?….” என்றார்.
“அதை பிரிக்கவே இல்லை. உள்ள இருக்கு….” மகேஷ் சொல்ல,
“என்னது? நான் போய் பிரிக்கறேன்….” என்ற எழில்மணியை பிடித்து நிறுத்திய காந்திமதி,
“புள்ளய மொத பாட்டியோட பட்டு சீலையிலதேம் தொட்டி கட்டி போடனும். அதுல அவேன் மழ பெஞ்சதும் கழட்டிட்டு ஒன்னோட கதரு வேட்டில தொட்டி கெட்டனும். இல்லன்னா பருத்தி சீலையில கெட்டனும். அதுவரைக்கி கம்மின்னிரு…” என்ற காந்திமதி எழில்மணி கையை எடுத்து அவரின் வாயில் வைத்துவிட்டு சென்றார்.
“மகேஷ்….” என எழில்மணி கத்த அதை கண்டுகொள்ள அங்கே யாருமில்லை.
“இல்ல இல்ல, நாயகி, நீயி போத்தா. சூடு பொறுக்கலன்னு பச்சத்தண்ணிய கலந்துக்காம…” என்று நாயகியுடன் மதுராவை அனுப்பியவர் குழந்தையை குளிக்க வைக்க அமர்ந்தார்.
அவருடன் மகேஷ்வரியும், வடிவும், பரமேசும் இருந்தார்கள். சற்று தள்ளி பாண்டியன் நிற்க, எழில்மணியும் வேடிக்கை பார்க்க என்று வந்துவிட்டார்.
பிள்ளையை தேய்த்து இங்குமங்கும் திருப்பி தலைக்கு ஊற்றி, தலையை பதமாக உருட்டி, மூக்கில் தண்ணீர் எதுவும் போயுள்ளதா என வாய் வைத்து உறிஞ்சு எடுத்து அதனை துப்பிவிட்டு மீண்டும் தண்ணீர் ஊற்றினார்.
“கைய, கால நல்லா உருவுங்கத்தே. அப்பத்தேன் சுளுக்கெடுத்தாப்புல புள்ளைக்கு சொவமா இருக்கும். நல்லா ஒறங்கும்…” என்றார் வடிவு.
பேசிக்கொண்டே காந்திமதி லாவகமாக குழந்தையை தலைகீழாக தொங்க விடவும் எழில்மணிக்கு உயிரே போய்விட்டது.
“என்ன பன்றீங்க நீங்க? பிறந்து மூணு நாளைக்குள்ள பிள்ளையை தலைகீழா தொங்கவிட்டு. குடுங்க. குடுங்க என் பேரனை. நீங்க ஒன்னும் குளிக்க வைக்க வேண்டாம்…” என கத்தி கூப்பாடு போட மதுரா குளித்துவிட்டு நைட்டியுடன் வெளியே வந்தாள்.
“அப்பா என்னாச்சு?….” என அவரை பிடித்து நிறுத்த,
“முதல்ல பிள்ளையை வாங்கு நீ….” என்னும் பொழுதே குழந்தையின் பின்பகுதியில் லேசாய் தட்டிய காந்திமதி இப்போது நேராக பிடித்துக்கொண்டார்.
அந்த வாளியின் கடைசி தண்ணீரை போனியில் நிறைத்து பேரனுக்கு தலையை சுற்றி மூன்றுமுறை திருஷ்டி எடுத்து கீழே ஊற்றிவிட்டு பிள்ளையை தூக்கி போட்டு பிடித்தார் காந்திமதி.
மதுராவிற்கும், மகேஷ்வரிக்கும் இது ஏற்கனவே சொல்லியிருந்தாலும் நேரில் பதட்டமாக இருந்தது.
ஆனாலும் அவர்களுக்கு தெரியாததா என தைரியத்துடன் நிற்க எழில்மணி ஒவ்வொன்றிக்கும் அலறினார்.
“வடிவு அத போயி கொண்டா….” என்ற காந்திமதி அங்கேயே பிள்ளையை நன்றாக துடைத்து கண்ணுக்கு கண் மை, பொட்டு இட்டு சாம்பிராணி காண்பிக்க இன்னொருபக்கம் நாயகி மதுராவிற்கு காண்பித்தார்.
பிள்ளை மேலெல்லாம் மஞ்சளை தாண்டிய பிள்ளைக்கான வெண்மை நிற பவுடர் பூசப்பட்டது.
“எவ்வளோ போடறீங்க குழந்தைக்கு? பிள்ளை முகமே சரியா தெரியலை….” அடுத்ததாக எழில்மணி குதிக்க,
அவரின் கையில் ஒரு பட்டு புடவையும், சுளகும் இருந்தது. எதற்கு என தெரியாமல் எழில்மணி பார்க்க,
“மகேசு சொளகுல சீலைய விரித்தா….” என்றவர் அதில் குழந்தையை அலுங்காமல் வைத்தார்.
தன் கையில் வாங்கிக்கொண்டவர் சூரியனை நோக்கி மூன்று முறை தூக்கி காண்பித்து இறக்கினார்.
“என் பேரன்…” என ஒவ்வொரு முறை தலைக்குமேல் பிள்ளையை தூக்கி இறக்க எங்கே விழுந்துவிடுவானோ என பயந்தார் எழில்மணி.
“விழுவவெல்லாம் மாட்டியான் எம்பேரென். சொளகுல வெக்கிதப்பவே குளிச்சதுல தூக்கத்துக்கு சொக்கிட்டியானே….” என்று சிரித்தவர்,
“தூக்கிக்கத்தா….” என மதுராவிடம் தரவும் அவள் பிள்ளையை அள்ளி நெஞ்சில் சாய்த்துக்கொண்டார்.
“ராசா, இந்த சீலைய தொட்டியா கட்டுப்பா….” என சுளகில் வைத்திருந்த மகேஷ்வரியின் பட்டுப்புடவையை பாண்டியனிடம் நீட்ட வீட்டின் நடுவில் புடவையை கட்டி தொட்டில் ரெடியானது.
அந்த தொட்டிலுக்குள் குழந்தைக்கு அழுத்தாத வகையில் பருத்தியினாலான இலகுவான மெல்லிய புடவையை மெத்தை போல் வைத்து தொட்டியில் இட்டனர்.