பாண்டியன் இன்னும் உறங்க செல்லாமல் அங்கேயே சிறிது நேரம் நின்றவன் மனதில் தோன்றிய யோசனையை அலசி பின் முடிவு செய்துவிட்டு உள்ளே சென்றான்.
மறுநாள் பாண்டியன் சொல்லியதன் பெயரில் அந்த இடத்திற்கு வைதேகியின் அப்பாவை வர சொல்லும்படி தகவல் கூற அழைத்தான் ஜகா.
பேசியது வைதேகி அல்லாமல் அவளின் அப்பாவாக இருக்க அவரிடம் சொல்லிவிட்டு வைத்தவன்,
“என்கிட்ட பேசமாட்டாளாமா?….” என்றொரு சிடுசிடுப்பு.
மாலை மூன்றுமணி போல பாண்டியன் ஜகாவை அழைத்துக்கொண்டு தனது புல்லட்டில் செல்ல வைதேகியும், அவளின் தந்தையுமான நெல்லையப்பனும் அங்கே காத்திருந்தனர்.
அவர்களின் வயற்காடு அது. அங்கே பம்புசெட்டின் அருகில் இருக்கும் கொட்டகையில் வண்டியை நிறுத்திவிட்டு இறங்கி நிற்க இவர்கள் வருகையை கண்டு வைதேகியின் அண்ணன் செந்தில் வேகமாய் அவ்விடம் வந்தான்.
அதற்குள் மேலும் இரண்டு வண்டிகள் வந்து நிற்க அதிலிருந்து நான்கு ஆட்களும் வந்தனர்.
“என்னய்யா யாரு இவகல்லாம்?….” என புதியவர்களை பார்த்து செந்தில் கேட்டுக்கொண்டே பாண்டியனை பார்த்தான். உடனே தனது லுங்கியை கீழிறக்கிவிட்டான்.
“ஐய்யா என்ன இம்புட்டு தொலவு? என்னவும் சேதிங்களா?….” என உள்ளுக்குள் எழும்பிய பதட்டத்தை மறைத்துக்கொண்டே கேட்டான்.
மதுரையில், அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு சொக்கநாதபாண்டியனை, அவன் குடும்பத்தை தெரியாதவரும் இருக்க முடியுமோ? செந்திலுக்கும் நன்றாகவே தெரிந்திருந்தது.
அதுவும் உறவுக்காரரான சோமு, அழகர் வேறு இருக்க இன்னும் அதிகமாகவே செந்திலுக்கு தெரிந்திருந்தது.
“எல்லாம் நல்லசேதிதேம் செந்திலு. மாமா ஒங்கிட்ட சொல்லலியோ இன்னும்….” என பாண்டியன் கேட்க ஜகாவுமே என்னவென பார்த்தான்.
வைதேகி அவன் புறம் திரும்பவுமில்லை. அமைதியாக வந்தவர்களுக்கு சேர்களை எடுத்து போட்டு சீவப்பட்டிருந்த இளநீரை தந்துகொண்டு இருந்தாள்.
“இவங்கலாம் யாருன்னு தெரியலைங்களே?….” பாண்டியனிடம் கேட்ட செந்தில் நெல்லையப்பனையும் பார்த்துக்கொண்டான்.
“வைதேகிக்கும், எந்தம்பி ஜகாவுக்கும். ஒனக்கு தெரியுமில்ல. எந்தம்பி வக்கீலுன்னு. பேசி முடிச்சாச்சு. நாள் குறிக்கிதது ஒன்னுதேம் சோலி…” என்றவன்,
“நீங்க அளக்கத்தான? என்னத்துக்கு இங்கினவே நிக்கிதீக?…” என கேட்டான் பாண்டியன் வந்திருந்தவரிடம்.
“என்னவும் சந்தேகமின்னா செந்தில கூட்டிக்காங்க. அவேனுக்கு எல்லாந்தெரியும். எம்புட்டு எடமின்னு…” என்று சொல்லிய பாண்டியன் செந்திலிடம் போ என தலையசைக்க அவன் நெல்லையப்பனை பார்த்தான்.
“அதெல்லாம் பொறவு நடக்கும். என்னமாச்சு பேசனுமின்னா பேசு. நாங்க அங்கின நிக்கிதோம்….” என்று சொல்லி அவர்களுக்கு தனிமை கொடுத்து விலகி சென்றான் சொக்கநாதபாண்டியன்.
“போடா போடா….” என நடந்துகொண்டே பாண்டியன் சிரித்தான்.
“இதுக்கு நாங்க என்ன சொல்லுததுன்னே தெரியலைங்க தம்பி….” என சந்தோஷமும், கண்ணீருமாய் விம்மியவர் கையை பிடித்தவன்,
“ஒறவுக்குள்ள இதென்ன மாமோவ் கைய ஒசத்திக்கிட்டு. இந்த சம்பந்தம் இல்லன்னாலும் நா இத்த பைசல் பண்ணிருப்பேன். நாயம்ன்னு ஒன்னு இருக்குல….” என பேசியபடி அவருடன் நடந்தான்.
இங்கே ஜகாவுக்கு சந்தோஷத்தில் முகம் பூரித்து விகசித்தது. வைதேகியின் முகமே சொல்லியது அவளுக்கும் இதில் பரிபூரண சம்மதம் என்று.
“இப்ப நா என்னவேணா பாடலாந்தான?….” என்று ஜகா கேட்கவும் அவனை முறைத்து பார்த்தாள் வைதேகி.
என்னவோ கேக்க போகிறான் என எண்ணியபடி இருக்க இப்படி கேட்டு வைக்கவும் எதிர்பார்ப்பு புஸ்சென்று போனது.
“இன்னும் கல்யாணமாகலை, ஞாபகம் இருக்கட்டும்…”
“சரி, அத்த விடு. என்ன புடிச்சுத்தான் சரின்னியா நீயி?….” என கேட்க,
“அதெல்லாமில்லை. எங்கப்பா யாரை கை காமிச்சாலும் அவங்களை தான் கல்யாணம் பண்ணனும்ன்னு இருந்தேன். உங்களை காமிக்கவும் சரின்னு சொன்னேன்….” நிஜமாகவும் அதுதான் காரணமாக இருந்தது.
“செரி, இப்ப என்ன? நீ ஒங்கப்பாவுக்காவ செரின்னு. நா ஒனக்காவத்தேன் கலியாணம் செய்ய போறேம்….” என சொல்லியவன் சுவற்றில் சாய்ந்து நின்றான்.
“ராங்கி உனக்கு எப்படி ப்ரப்போஸ் பண்ண?….” என அவளிடமே கேட்டு வைக்க அதுவரை முறைப்பும், விரைப்புமாய் நின்றவளுக்கு வெட்கத்தை மறைக்க முடியவில்லை.
தூரத்தில் நிற்பவர்கள் மேல் ஒரு கண் இருக்க இருவரும் எதிர் எதிர் திசையில் தள்ளி நின்றாலும் விழிகளால் அணைத்து நின்றனர்.